Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

ஜனாதிபதி தேர்தல்களின் பிரதிபலிப்புகள் - விக்டர் ஐவன்


யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர் அந்த யுத்தத்தினை முன்னின்று நடாத்திய வீரர்கள் இருவருக்கிடையிலான பாரிய போட்டியொன்றாக 2010 ஆம் ஜனாதிபதி தேர்தலை குறிப்பிடலாம். குறித்த தேர்தலின் ஊடாக யுத்தகளத்தில் நின்று தலைமைத்துவம் வழங்கிய சரத் பொன்சேகா தோற்கடிப்பட்டு யுத்தத்திற்காக அரசியல் தலைமை வழங்கிய மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவானார். எனினும் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தனக்கு எந்த விதத்திலும் நிகராக கருத முடியாத பொலன்னறுவப் பிரதேசத்தவர் ஒருவரிடம் தோற்றுப் போனார்.

பல காலம் இருந்து வந்த உள்நாட்டு யுத்தத்தின் முடிவு, போர் வீரர்கள் மூவரை உருவாக்கியிருந்தது. மஹிந்த ராஜபக்ச, ஜெனரால் சரத் பொன்சேகா, கோத்தாபய ராஜபக்ச என்பதாக அவர்கள் மூவரையும் முறையே குறித்திக் காட்டலாம். ஜெனரால் பொன்சேகா மஹிந்த ராஜபக்சவிடம் தோல்வி கண்டார். மஹிந்த ராஜபக்ச மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வி கண்டார். இந்த முறை ஜனாதிபதித் தேர்தல் ஊடாக மூன்றாவது போர் வீரரான கோத்தாபய ராஜபக்சவின் பலம் பரிசீலனைக்கு உற்படுத்தப்படுகின்றது.

சுமார் முப்பதாண்டு காலமாக நடைபெற்றுவந்த உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக நீண்டகாலமாக இடம்பெற்றுவந்த நாசகார கலவரங்கள் தேசத்தையும் சமூகத்தையும் உச்ச அளவில் பாதிப்படையச் செய்திருக்கின்றன. இவ்வாறு மிகவுமே பாரதூரமான பாதிப்புககளுக்கு உள்ளாகியிருந்த தேசத்தையும் சமூகத்தையும் மீள்கட்டியெழுப்பும் திறன்கள் ஆளும் கட்சிகளிடம் இல்லாத நிலையில் நாடு பாரியதொரு பின்னடைவைச் சந்திக்கும் என்பதாக கடந்த காலங்களில் குறிப்பிட்டிருக்கின்றேன். இது குறித்து அன்றைய காலகட்டங்களில் வாய்மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் குறிப்பிட்டதுடன் 2011 ஆம் ஆண்டில் ஒரு புத்தகம் ஊடாகக்கூட விடயங்கள் குறித்து எனது கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றேன்.

சரத் பொன்சேகா.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜக்சவுக்கு எதிராக சரத் பொன்சேகா கலமிறக்கசப்படுவார் என்பதனை அவரது பெயர் முன்மொழியப்படுவதற்கு முன்னதாகவே நான் அறிந்திருந்தேன். இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆவள் எனக்கிருந்துவந்தது. எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என்னை தொலைபேசியில் அழைத்த ஒரு சந்தர்ப்பத்தில் இது குறித்து அவரிடம் வினவினேன். ஜெனரால் சரத் பொன்சேகா அடுத்த தேர்தலில் உங்களை எதிர்த்து போட்டியிடுவது குறித்த உங்களது அபிப்பிராயம் என்ன? என்பதாக அவரிடம் கேள்வி எழுப்பினேன்.

ஜனாதிபதி எனது கேள்வி குறித்த அவரது ஈடுபாட்டடினை உணர்த்திய போதிலும் ஜெனரால் சரத் பொன்சேகா தனக்கு எதிராக போட்டியிடுவார் என்ற நம்பிக்கை அப்போது அவரிடம் இருக்கவில்லை. முப்படைகளின் தலைவர்களும் அவர்களது மனைவியர்களும் ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் தன்னுடன் பகலுணவு அருந்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அவர்களுக்கு ஏதும் பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில் என்னிடம் குறிப்பிடலாம் அல்லது சிறாணியிடம் குறிப்பிடலாம். முப்படைத் தலைவர்களுக்கு ஒரு சிறந்த அங்கீகாரத்தினை நான் வழங்கியிருக்கின்றேன். வெளிநாட்டிலிருந்து இலங்கை வருகின்ற அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்கின்ற விருந்துகளில் கூட அவர்களைக் கலந்துகொள்ளச் செய்கின்றேன். என்பதாக குறிப்பிட்டுவிட்டு சரத் பொன்சேகா எனக்கெதிராக தேர்தலில் போட்டியிடுவார் என்பதாக நான் நம்பவில்லை என்றார்.

அதற்கு சில தினங்களின் பின்னர் ஜனாதிபதி தொலைபேசி ஊடாக என்னைத் தெடர்புகொண்டார். “நீங்கள் ஒரு விசித்திரமானவரல்லவா” என்பது போன்ற ஒரு வார்த்தையை அன்று குறிப்பிட்டதாக எனக்கு நினைவில் இருக்கின்றது. ஜெனரல் சரத் பொன்சேக்கா தேர்தல் போட்டியிடுவது குறித்து நான் அவரிடம் வினவியதைத் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக கோத்தாபய ராஜபக்ச மற்றும் புலனாய்வுத் துறை பொறுப்பதிகாரிகள் என்பவர்களிடம் வினவியிருக்கின்றார். சரத் பொன்சேகா போட்டியிடுவது குறித்து அவர்கள் எவருமே அறியாதிருந்திருக்கின்றனர். ஜெனரால் சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சரியாகத் தெரிந்து கொண்டதன் பின்னரே என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டிருகின்றார். “சரத்பொன்சேகா போட்டியிடுவது குறித்து கோத்தா அறிந்திருக்கவுமில்லை புலனாய்வுப் பிரிவு அறிந்திக்கவுமில்லை எனினும் விக்டர் ஐவனுக்கு தெரிந்திருக்கின்றது” என்பதாக கூறி அன்றைய தொலைபேசி உரையாடலின் இறுதியில் குறிப்பிட்டார்.

நான் அந்த உரையாடலை அத்துடன் முடித்துக்கொள்ள விடாமல் இன்னுமொரு கேள்வியை அவரிடம் முன்வைத்தேன். படைத்தலைவர் என்ற அடிப்படையில் யாரேனும் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதானால் அதற்கான அனுமதி ஜனாதிபதியினால் வழங்கப்பட்டால் மாத்திரமே குறித்த நபருக்கு தேர்தலில் போட்டியிட முடியுமாக அமையும். எனவே சரத் பொன்சேகாவுக்கு தேர்தலில் போட்டியிட நீங்கள் அனுமதியினை வழங்குவீர்களா என்பதாக அவரிடம் வினவினேன். “ஆம் அவருக்கு அனுமதி வழங்குவேன் அவர் வெற்றிபெற்றால் இறைவனின் பாதுகாப்பு எனக்கு கிடைக்க வேண்டும், நான் வெற்றி பெற்றால் இறைவனின் பாதுகாப்பு அவருக்கு கிடைக்கவேண்டும்.” இது ஜனாதிபதி தந்த குறுகிய பதிலாகும். தான் முகம்கொடுக்கவிருக்கும் சவால்களைப் பொருட்படுத்தாது பொன்சேகாவுக்கு போட்டியிட அனுமதி வழங்கியமையானது அவர் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

2010 ஜனாதிபதி தேர்தல்
உள்நாட்டு யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவருவதில் ஜெனரால் பொன்சேகா பாரிய பங்களிப்புச் செய்தவராவார். இது தொடர்பில் நான் அவர் மீது மரியாதை வைத்திருந்த போதிலும் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த உடனேயே ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடுவது குறித்து நல்லபிப்பிராயம் என்னிடம் இருக்கவில்லை. மிலிடரி மனப்பாங்கு யத்தம் தொடர்பான பணிக்கு தேவையானதொரு விடயம் என்ற போதிலும் அரசியல் தலைவர் ஒருவருக்கு மிலிடரி மனப்பாங்கு இல்லாமல் ஜனநாயக மனப்பாங்கு இருத்தல் வேண்டும் என்பதாக கருதுகின்றேன். சரத் பொன்சேகா என்பவர் போன்ற ஒருவர் நாட்டின் தலைவராக வேண்டுமெனில் அவர் ஜனநாயக அரசியலில் சில காலம் ஈடுபட்டு அதன் உடாக ஜனநாயக மனநிலையை உருவாக்கிக் கொண்டதன் பின்னர் தான் நாட்டின் தலைவராவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பதே எனது கருத்தாக இருந்தது. இது தொடர்பான எனது நிலைப்பாட்டினை அன்றைய காலப்பகுதியில் வெளிப்படுத்தியதுடன் அன்று நாட்டில் பின்பற்றிவந்த கணிப்பீட்டு முறைகளைத் தாண்டி இந்த இருவரது போட்டியில் மஹிந்த ராஜபக்ச இலகுவான வெற்றியைப் பெற்றுவதற்காள அதிக வாய்ப்புகள் இருப்பதாக எனது அனுமானத்தினையும் வெளியிட்டிருந்தேன்.

2010 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடாது யுத்தத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த அரசியல் தலைவரின் வெற்றிக்காக தமது பங்களிப்பினை வழங்கியிருக்க முடிந்திருப்பின் அதன் ஊடாக நாட்டுக்கு நலன்கள் ஏற்பட்டிருக்க காரணமாக அமைந்திருக்கும். இதன் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சி கூட பல நலன்களை ஈட்டிக்கொண்டிருக்கும். அன்று யுத்தத்தினை வெற்றி கொண்டதன் விளைவாக மஹிந்த ராஜபக்ச நாட்டுமக்களின் மத்தியில் பெற்றிருந்த நன்மதிப்பின் அளவுக்கு ஏற்ப அவரை தோல்வியடையச் செய்வதற்கான இயலுமையை ஐக்கிய தேசியக் கட்சி அன்று பெற்றிருக்கவில்லை. இந்த நிலையைப் புரிந்துகொண்டு யுத்தத்தின் வெற்றிக்கு செய்கின்ற மரியாதையொன்றாக கருதி குறித்த தேர்தலில் தமது சார்பில் அபேட்சகர் ஒருவரை கலமிறக்காது மஹிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக பங்களித்து அதற்கு பகரமாக அரசியல் சீர்திருத்தமொன்றைக் கோரியிருப்பின் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கி வீழ்ச்சியடையாமல் இருந்திருக்கும். அத்துடன் பலமான பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி ஒன்றையும் தன்வசம் தக்கவைத்துக்கொள்ள முடியுமாக அமைந்திருக்கும். அவ்வாறு நடந்திருக்குமாயின் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்பவற்றிற்கிடையிலான வைராக்கிய நிலை வளர்ச்சி காணாது எதிர்க்கட்சி கோருகின்ற அரசியல் சீர்திருத்தத்தினை கொடுக்க வேண்டிய நிலை மஹிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்டிருக்கும். இந்த ஒட்டு மொத்த நடவடிக்கைகளின் பிரதி பலானக அடக்குமுறை ஆட்சி முறைக்கு பதிலாக சுமூகமான ஆட்சிமுறை ஒன்று ஏற்பட்டிருக்கும் என்பதுடன் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கி வீழ்ச்சி கண்டிராமலும் இருந்திருக்கும்.

2010 ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருடனான சந்திப்பொன்றின் போது எனது எண்ணப்பாடு குறித்து அவரிடம் தெரிவித்தேன். திஸ்ஸ அத்தநாயக்கவும் கலந்துகொணட அந்த சந்திப்பில் நான் கூறிய விடயங்களை கவனமாக செவிமடுத்துவிட்டு “ அது குறித்து அந்த அளவிற்கு நாம் சிந்திக்கவில்லை” என்பதாக ரனில் விக்ரமசிங்க பதிலளித்தார்.

பொன்சேகாவிடம் பழிதீர்த்துக்கொள்ளல்
தேர்தல் முடிவுகளை கேட்பதற்காகவென நான் பொதுவாகவே தூக்கம் துறப்பதில்லை. 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது நேர காலத்தோடு நித்திரைக்குச் சென்று அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து தேர்தல் முடிவுகளுக்கு காதுகொடுத்தேன். தேர்தல் குறித்த கரு ஜயசூரியவின் கருத்து என்ன என்பதை அறிந்துகொள்வதற்காக காலை 5.00 மணியளவில் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அந்த அழைப்புக்கு அவரிடமிருந்து அதிர்ச்சியானதொரு பதில் கிடைத்தது. ஜெனரால் பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டல் பாதுகாப்புப் படையினரால் சுற்றிவலைக்கப்பட்டுள்ளதாகவும் இரவு அங்கு தங்கியிருந்தவர்களில் பலர் அவ்விடத்தைவிட்டும் சென்று விட்ட நிலையில் பொன்சேகாவை தனிமையில் விட்டுச் செல்ல முடியாத நிலையில் தான் அங்கேயே தங்கியிருப்பதாக கரு ஜயசூரிய குறிப்பிட்டார். இது தொடர்பில் ஜனாபதியுடன் கதைக்கவில்லையா என நான் அவரிடம் கேட்டதற்கு, ஜனாதிபதி அறியாத நிலையில் இவ்வாறான ஒரு விடயம் நடைபெற முடியாது என்பதால் தான் ஜனாதிபதியுடன் இது தொடர்பாக கதைக்கவில்லை என்பதாக அவர் குறிப்பிட்டார். அதன் பின்னர் இன்னும் சிலருக்கு அழைப்பெடுத்து குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விடயங்களை அறிந்துகொண்டேன்.

அன்றைய தினம் ஜனாதிபதியின் தொலைபேசிக்கு அழைப்பெடுப்பது அவ்வளவு எளிதான காரியமாக அமையாது என்பதனால் காலை 7.00 மணியளவில் காஞ்சனா ரத்வத்தைக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டேன். அதிஷ்டவசமாக காஞ்சனா ரத்வத்தை அந்த நேரம் ஜனாதிபதியின் அருகிலேயே இருந்தார். தொலைபேசியை ஜனாதிபதியிடம் வழங்குவதாகவும் குறிப்பிட்டார். “ நீங்கள் பாரிய தேர்தல் வெற்றியொன்றினைப் பெற்றுக்கொண்ட போதிலும் வெளிநாட்டு ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக அந்த வெற்றிகள் குறித்து குறிப்பிடப்படவில்லை. மாறாக எதிர்த்துப் போட்டியிட்டவர் சிறைப்பிடிக்கப்பட்டதாகவே செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன” என்பதாக தெரிவித்தேன். அந்த தகவல் ஜனாதிபதிக்கு மகிழச்சியை ஏற்படுத்துவதாக இருக்கவில்லை என்பதுடன் குறித்த நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக பல காரணங்களைக் குறிப்பிட்டார். தேர்தல் நடைபெற்ற தினத்தன்று இரவு வேளையில் சரத் பொன்சேகா இராணுவத் தலைவர்கள் பலருடனும் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும் குறித்த தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றிபெற்றிருந்தால் தன்னை கைது செய்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். தொலைபேசி உரையாடலின் முடிவில் சரத்பொன்சேக்காவை அந்த இடத்தை விட்டு செல்லுமாறு அவருக்கு அறிவுறுத்துமாறு என்னிடம் வேண்டினார்.

ஜெனரால் பொன்சேகா குறித்த தினமன்று கைதுசெய்யப்படாத போதிலும் பின்னரான ஒரு தினத்தில் கைதுசெய்யப்பட்டு உயர்ந்தபட்ச அழுத்தத்திற்கு உற்படுத்தப்பட்டார். குறித்த தேர்தலில் ஜெனரால் பொன்சேகா வெற்றி பெற்றிருந்தால் மஹிந்த ராஜபக்வின் நிலையும் இதற்கு சமனான அல்லது இதனையும் விட பயங்கராமான விதமாகவே இருந்திருக்கும் என்பதாகவே நினைத்திருந்தேன்.

கோத்தபய ராஜபக்ச
மஹிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு முதலாவது வெற்றியைப் பெற்றுக்கொண்டது முதல் தேல்வியடைந்த வருடமான 2015 ஆம் ஆண்டு வரையான 10 வருட காலப்பகுதியில் ஜனாதிபதிக்கு மாத்திரமே இரண்டாம் நிலையாகும் அடிப்படையிலான பலத்தினைக் காண்பித்த ஒரு நபராக கோத்தாபய ராஜபக்சவை அடையாளப்படுத்தலாம்.

சீ.ஏ. சந்திரபிரேம என்பவரால் எழுதப்பட்ட கோத்தாபயவின் யுத்தம் என்ற புத்தகத்தில் காணப்படும் தகவல்களுக்கு அமைய கோத்தாபய கெடெட் அதிகாரியாக 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இலங்கை இராணுவத்தில் இணைந்திருக்கின்றார். இராணுவப் பயிற்சிகளை நிறைவு செய்ததன் பின்னர் 1972 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாவது லுதினனாக பதவி நியமனம் பெறுகின்றார். வடமராச்சி சண்டையின் போது இரண்டு படையணிகளின் கட்டளைத் தளபதிகளாக டென்சில் கொப்பேகடுவ மற்றும் கேர்னல் விஜேவிமலரத்ன கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் கேர்னர் விமலரத்ன தலைமையிலான அணியில் கமான்டராக கோத்தாபய செயற்பட்டிருக்கின்றார். அதன் பின்னர் ஜே.வீ.பீயின் இரண்டாவது கலவரத்தின் போது மாத்தளை மாவட்ட பாதுகாப்பு இணைப்பாளராகவும் செயலாற்றியுள்ளார். விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது பாதுகப்புப் படையணி பாரிய தோல்விகளைச் சந்தித்து வந்த காலப்பகுதியில் லுதினன் கேர்னல் பதவியிலிருந்த நிலையில் பாதுகாப்புப் படையிலிருந்து ஓய்வு பெற்று ஐக்கிய அமெரிக்காவுக்கு சென்றிருக்கின்றார். அமெரிக்காவின் கெலிபோனியா மாகாணத்தில் மவூன்ட் ரோயல் சட்டக் கல்லூரியில் கணனி நிர்வாகியாக சேவையாற்றிக்கொண்டிருந்த போது 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தனது சகோதரருக்கு உதவுவதற்காக மூன்று மாத விடுமுறையில் இலங்கை வருகின்றார். குறித்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதனைத் தொடர்ந்து கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படுகின்றார்.

வெள்ளை மற்றும் கருப்பு பக்கங்கள்.
அந்தக் காலப்பகுதியில் பாதுகாப்புப் படையானது மிகவும் வீழ்ச்சியடைந்த நிலையிலேயே காணப்பட்டது. தொடரான தோல்விகள் படையினரின் மனநிலையைப் பெரிதும் பாதித்திருந்ததுடன் போதுமான மனித வளங்களும் ஆயூதங்களும் கிடைக்காத நிலை காணப்பட்டது. பாதுகாபப்புப் படையினது இந்த நிலையைப் போக்கி வெற்றிகரமாக யூத்தமொன்றை மேற்கொள்ளும் அளவில் பாதுகாப்புப் படையினைப் பலப்படுத்திய பெருமைக்குரியவர் கோத்தாபய ராஜபக்சவேயாவார்.

கோத்தாபயவிடம் ஒளிவீசும் ஒரு பக்கம் இருந்தது போலவே இருளான இன்னொரு பக்கமும் காணப்பட்டது. பாதுகாப்பு தொடர்பான விசாலமான அதிகாரங்களை தன் வசம் வைத்திருந்த காலப்பகுதியில் மிகவும் பயங்கரமான சம்பவங்கள் சிலவும் நடந்தேரின. யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் யுத்த களத்தில் ஏற்பட்ட பயங்கரமான நிகழ்வுகள் குறித்து நான் இங்கு குறிப்பிடவில்லை. எனினும் யுத்தத்துடன் தொடர்பில்லாத அப்பாவி மக்கள் கொலை செய்யப்படல், கடத்திச் சென்று காணாமலாக்கிவிடல், தெரிவு செய்யப்பட்ட சிலரை பயங்கரமான முறையில் தாக்குதல் போன்ற பல சம்பவங்கள் அந்த காலப்பகுதியில் நிகழ்ந்திருகின்றன.

அவற்றில்
(1) கொழும்பு அதிபாதுகாப்பு வலயத்தில் ஊடகவியாளரான தராகி என அழைக்கப்படும் தர்மரத்ன சிவராம் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்துவிடல் (2005 ஏப்ரல் 28).

(2) திருக்கோணமலை கடற்கரையில் அரட்டையடித்துக்கொண்டிருந்த மாணவர்கள் 5 பேர் கொலை செய்யப்படல் (2006 ஜனவரி 02)

(03) தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா ரவிராஜ் கொழும்பு அதிபாதுகாப்பு வலயத்தினுல் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்படல்.(2006 நவம்பர் 10)

(04) நேஷன் பத்திரிகையின் ஊடகவியலாளர் கீத் நோயார் கடுமையாக தாக்கப்படல் (2008 மே 22)

(05) சிரச ஊடக நிறுவனம் தாக்கப்படல் (2009 ஜனவரி 07)

(06) சன்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் லசன்த விக்ரமதுங்க கொலைசெய்யப்படல் (2009 ஜனவரி 08)

(07) ஊடகவியலாளர் பொத்தல ஜயந்த கடத்திச்செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்படல் (2010 ஜனவரி 24)

(08) பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாகச் செய்யப்படல். (2010 ஜனவரி 24)

(09) முன்னிலை சோசலிசக் கட்சியின் மாணவர் செயற்பாட்டாளர்களான லலித் வீரராம், குகன் முருகநாதன் ஆகியோர் காணாமலாக்கப்படல்.

(10) செல்லப்பிராணியான நாய் ஒன்றை ஏற்றி வருவதற்காக வெறும் விமானம் ஒன்றை பயன்படுத்தியது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளரிடம் தொலைபேசி ஊடாக வினவிய பெட்ரிகா ேஜன்ஸ் என்ற ஊடகவியலாளருக்கு மோசமான வார்த்தகளைப் பிரயோகித்து ஏசுதல் மற்றும் பயமுறுத்தல் என்பன அவற்றில் பிரதானமானவை.

பொத்தல மற்றும் பெட்ரிகா
பொத்தல ஜயந்த மீதிருந்த அச்சுறுத்தல் தொடர்பில் அவரது கோரிக்கைக்கு இணங்க சுதந்திர ஊடகவியாளர்கள் அமைப்பின் பிரமுகர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிக்கொண்டிருந்த வேளையிலேயே பொத்தல ஜயந்த கடத்தப்பட்டு தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார். அன்று குறித்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்தவன் நானாவேன்.

நாங்கள் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிக்கொண்டிருக்கும் போது பொத்தல ஜயந்த கடப்பட்ட விடயத்தினை அமைச்சர் டலஸ் அலகபெறும ஊடாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்படுகின்றது. இந்த செய்தியைக் கேட்டவுடன் ஜனாதிபதி அதிர்ந்துபோனது மாத்திரமன்றி கோபமடையவும் செய்தார். ஜனாபதியின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் சில விடயங்கள் நிகழ்வதாக அவரது உடலசைவுகள் எமக்கு உணர்த்தியது.

பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச தனக்கு துசன வார்த்தைகாளால் ஏசி அச்சுறித்தியது தொடர்பிலான தனது அனுபவங்களை பெட்ரிகா என்னுடன் பகிர்ந்துகொண்டார். குறித்த சம்பவம் நிகழ்ந்ததற்கு அடுத்த தினம் அல்லது அதற்கு அடுத்த தினம் அப்போது ஜனாதிபதியின் ஊடக செயலாளராக கடமையாற்றிய பந்துல ஜயசேகர (தற்போது சிரச நிறுவனத்தில் பணியாற்றுகின்றார்) என்னைத் தொடர்புகொண்டு தெரிவு செய்யப்பட்ட எழுத்தாளர் சிலருக்காக ஜனாதிபதி மாளிகையில் இராப் போசன விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எனக்கு அழைப்பு விடுத்தார். மேற்படி அசிங்கமானதொரு நிகழ்வுக்கு பின்னர் நடைபெறுகின்ற இராப் போசன விருந்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பில்லை என்பதாக நான் அவருக்கு பதிலளித்தேன்.

சிறிது நேரத்தின் பின் பந்துல மீண்டும் தொடர்புகொண்டார். நான் கூறிய விடயங்களை அவர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டதாகவூம் குறித்த இராப் போசன விருந்தில் கட்டாயமாக கலந்துகொண்டு குறித்த விடயம் சம்பந்தமாக தன்னிடம் கதைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்ததாக குறிப்பிட்டார். நான் குறித்த நிகழ்வில் பங்குகொள்வதாக குறிப்பிட்டேன்.

இராப் போசன விருந்து
நான் குறித்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மாளிகையின் கீழ் மாடிக்குச் சென்று ஆசனமொன்றில் அமர்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் கோத்தபயவும் அங்கு வருகை தந்து நான் அமர்ந்திருந்த ஆசனத்துக்கு அருகில் இருந்த ஆசனமொன்றில் அமர்ந்துகொண்டார். மேல் மாடிக்குச் சென்ற போது கூட நான் அமர்ந்திருந்த ஆசனத்திற்கு அருகில் இருந்த ஆசனமொன்றிலேயே அமர்ந்துகொண்டார். குறித்த நிகழ்வில் ஜனாபதி உற்பட சன்டே டய்ம்ஸ், தி அய்லன்ட், டேலிமிரர், லங்காதீப போன்ற பத்திரிகைகளின் ஆசிரியர்காளான சிங்க ரத்னதுங்க, பிரபாத் சகபந்து, சம்பிகா லியானாரச்சி, சிறி ரணசிங்க ஆகியோரும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் பந்துல ஜயசேகர ஆகியோரும் குறித்த நிகழ்வில் பங்குகொண்டனர்.

அங்கு மதுபானம் பரிமாரப்பட்ட போது ஜனாதிபதி வைன் குவளை ஒன்றைப் பெற்றுக்கொண்டார். காரமான மதுபான வகைகள் இருந்த போதிலும் நானும் ஒரு வைன் குவளையையே கையில் எடுத்துக்கொண்டேன். எனது அந்த தெரிவைக் கண்ணுற்ற ஜனாதிபதி “ விக்டர் நீங்கள் காரமான மதுபானத்தையல்லவா பொதுவாக தெரிவுசெய்வீர்கள் ஏன் இந்த மாற்றம்” என்பதாக அனைவருக்கும் கேட்கும் விதத்தில் என்னிடம் கேள்வி எழுப்பினார். “ சிந்தனையை நல்ல நிலையில் பேணிக்கொள்ள வேண்டிய தருணங்களில் நான் வைன் மாத்திரம் தான் எடுத்துக்கொள்கின்றேன்” என அதற்கு பதிலாக குறிப்பிட்டேன்.

மது பரிமரலுடன் நடைபெற்ற அரட்டைகளுக்கு இடையே பத்திரிகை எழுத்தாளர்கள் என்ற அடிப்படையில் நாம் இங்கு அழைக்கப்பட்டதன் நோக்கம் என்ன என்பதாக ஜனாபதியிடம் வினவினேன். ஏதும் கூறுவதற்கான விடயங்கள் இருப்பின் அவற்றைக் கூறுமாறு ஜனாதிபதி என்னைக் கேட்டுக்கொண்டார். உங்களது சகோதரரிடம் ஒர ஊடகவியலாளர் தொலைபேசி ஊடாக விபரம் கேட்டபோது அவர் கடுமையான வார்த்தைகளால் தூற்றப்பட்டிருக்கின்றார் என்பதைக் கூறி அவருக்கு இத்தகைய அதிகாரம் எங்கிருந்து வந்தது என்பதாக கேட்டு எனது விமர்சனத்தையும் முன்வைத்தேன். கோதாபயவின் முகம் இருண்டு போயிருந்ததுடன் அவர் எதுவுமே பேசவில்லை. நான் பேச ஆரம்பித்து சிறிது நேரத்தில் அவர் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றுவிட்டு சிறிது நேரத்தில் மீண்டும் வந்து எனக்கருகிலேயே அமர்ந்துகொண்டார். கோத்தாபய அந்த இடத்தை விட்டு சென்ற பொது “இந்த பிரச்சினையைப் பொறுத்த வரை கோதாவின் பக்கம் பிழை இருக்கின்றது” என்பதாக தனது அருகில் இருந்த டேலிமிரர் ஆசிரியரிடம் ஜனாபதி கூறுவது எனக்கு கேட்டது.

இராப் போசனத்திற்காக சாப்பாட்டு மேசைக்கு சென்றதன் பின்னர் அடுத்தவர்கள் உணவு உண்டு முடிப்பதற்கு முன்னர் எனது உணவை முடித்துக்கொண்டு அங்கிருந்த அனைவரையும் நோக்கி “பாதுகாப்புச் செயலாளரின் பிரச்சினை குறித்து என்னைத் தவிர வேறு எவரும் பேசவில்லை. சில நேரம் அவ்வாறு நடப்பதற்கு நான் அங்கிருந்தது காரணமாக அமையலாம். அதனால் நான் இல்லாத நிலையில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்காக சந்தர்ப்பமளித்து நான் இங்கிருந்து விடைபெறுகின்றேன்” எனக் கூறி ஜனாதிபதி உற்பட அங்கிருந்த அனைவரிடமும் விடைபெற்று சென்றுவிட்டேன்.

2014 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அலுத்கமவில் நடைபெற்ற முஸ்லிம்கள் மீதான தாக்குதல் குறித்து “நான் கோத்தாபயவின் நிழலாவேன்” என்ற தலைப்பில் அது குறித்து எழுதியிருந்தேன். குறித்த சம்பவங்கள் தொடர்பில் எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அங்கு நடைபெற்ற பயங்கரமான செயற்பாடுகளுக்கும் கோத்தபயவுக்கும் சம்பந்தம் இருந்திருக்கும் என்று நான் நம்பியதன் காரணமாகவே அந்த கட்டுரையை எழுதினேன். கோத்தாபயவின் மகிழ்ச்சிக்கு காரணமாக அமைந்திராத மேற்படி இரண்டு சம்பவங்கள் தொடர்பிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த விதமான அச்சுறுத்தல்களும் கோத்தாவிடமிருந்து எனக்கு வரவில்லை என்பதனையும் குறிப்பிடுகின்றேன்.

கோத்தாபயவின் காலத்தில் நடந்த அனைத்து சம்பவங்கள் குறித்தும் அவர் பொறுப்பேற்க வேண்டும் என்பதாக நான் கருதவில்லை. எனினும் அரசியலுடன் தொடர்புடைய மேற்படி பிரச்சினைகளுக்கு அவர் நேரடியாகவோ வேறு முறைகளிலோ சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதாக எண்ணுகின்றேன். அவை பாதுகாப்பு அதிகாரிகளின் சுயதேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் என்பதாக கருத முடியாது.

அப்படியான குற்றச்சாட்டுகள் இருக்கின்ற ஒருவர் குறித்த குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுதித்துக்கொள்ளும் வரை பெயரளவிலேனும் ஒரு நாட்டின் தலைவராக தகுதியானவரல்ல. அவ்வாறான குற்றச்சாட்டுகள் இருக்கின்ற ஒருவர் குறித்த பதவிக்கு போட்டியிடுவது கூட பொறுத்தமான ஒன்றல்ல.

ராவயவில் வெளிவந்த கட்டுரையில் மொழிபெயர்ப்பு

மலையக அரசியலில் நேருவின் வகிபாகம் - என்.சரவணன்

“தேர்தலுக்குப் பிறகு இலங்கையில், ஒருவித பதற்றம் குறைந்து வருவதாகத் தெரிகிறது . அங்குள்ள இந்தியர்களின் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. ஆனால் தற்போதைய இலங்கை அரசாங்கம் ஒரு தீர்வை நோக்கி ஏதாவது செய்ய விரும்புகிறது என்பதற்கு சில அறிகுறிகள் தெரிகின்றன. இலங்கையில் உள்ள இந்தியர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது பற்றி இந்திய மக்கள் அறிகின்ற போது வினையாற்ற தலைப்படுகிறார்கள். அது இயல்பானதே. எங்கள் அரசியல்வாதிகள் அதையிட்டு உக்கிரமான உரைகளை ஆற்றி வருகிறார்கள். நமது பத்திரிகைகளும் கடுமையாகவே எழுதிவந்திருக்கின்றன. இது எனக்குத் தவறான அணுகுமுறையாகத் தெரிகிறது. நாம் நமது கவனமான அணுகுமுறையை இழந்துவிடக்கூடாது. இலங்கை இந்தியாவின் முனையில் ஒரு சிறிய தீவு. கலாச்சார ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் இது கிட்டத்தட்ட இந்தியாவின் ஒரு பகுதியாகும். புத்தரின் நாடாக இருப்பதால் சிங்களவர்கள் இந்தியாவை தங்கள் புனித பூமியாகப் பார்க்கிறார்கள். ஆனால் இந்த பெரிய ராட்சத நாட்டைப் பற்றி அவர்கள் சற்று பயப்படுவதால் அவர்களைத் தவறான அணுகுமுறைக்கு வழிவகுக்கிறது. நாங்கள் அவர்களை அச்சுறுத்தினால், அவர்களின் பயத்தை மட்டுமே அதிகரிக்கிறோம். எனவே தான் நான் அச்சுறுத்துகின்ற மொழியில் பேசுவதைத் தவிர்த்துக்கொள்கிறேன். அவர்கள் முறையற்ற முறையில் நடந்து கொண்டாலும் கூட அவர்களுடன் நட்பாக இருக்க முயற்சிக்கிறேன்.”
05.07.1952 இல் நேரு எழுதியது

கிட்டத்தட்ட மூன்று தசாப்த காலமாக (1930களில் இருந்து - 1960கள் வரை) இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினையில் முக்கியமான வகிபாகத்தை ஆற்றிய இந்தியத் தலைவர் நேரு. இப்பிரச்சினை குறித்து அவரது குறிப்புகள், ஆவணங்கள், கடிதங்களில் “இலங்கை – இந்தியப் பிரச்சினை” என்கிற பதத்தையே பயன்படுத்தியிருக்கிறார் என்றால்; அந்தளவுக்கு இலங்கை இந்திய உறவைத் தீர்மானிக்கிற பிரதான சிக்கலாக இந்திய வம்சாவளியினரின் பிரச்சினை இருந்திருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

இலங்கைக்கு முதன் முதலாக மகாத்மா காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்துக்கென நிதி சேகரிப்பதற்கான பயணத்தை மேற்கொண்டார். அதன் அங்கமாக 1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு மகாத்மா காந்தி நிதி திரட்டுவதற்காக வந்தார். இது அரசியல் ரீதியான விஜயமல்ல. 1927 ஆம் ஆண்டு நவம்பர் 12ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த காந்தி மூன்று வாரங்கள் தங்கியிருந்து கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மாத்தளை, பதுளை, காலி, சிலாபம், ஹட்டன் உட்படப் பல முக்கிய இடங்களுக்கு விஜயம் செய்தார். அப்போது தான் இலங்கையில் வாழும் இந்தியர்களின் நிலைமையை அவர் நேரில் விளங்கிக் கொண்டார். இந்தியர்களின் பிரச்சினைகளுக்கு உரியத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க தமது பாத்திரத்தை வழங்க வேண்டும் என்கிற அக்கறை அப்போது அவருக்கு ஏற்பட்டிருந்தது.
புதிதாக சுதந்திரம் கிடைத்த இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்கவை 7 October 1948 அன்று இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு லண்டன் விமானநிலையத்தில் வரவேற்றபோது
நேரு இலங்கைக்கு ஏழு தடவைகள் வந்திருக்கிறார்.

நேருவின் முதல் பயணம்
19-20.டிசம்பர் 1927 - நேருவின் முதல் விஜயம். இரு நாட்கள் மட்டுமே தங்கியிருந்தார்.

இரண்டாவது பயணம்
23 ஏப்ரல் 1931 அன்று இலங்கை வந்து 22 மே வரை ஒரு மாத காலம் தங்கியிருந்தார். துணைவி கமலாவோடும், மகள் இந்திரா காந்தியோடும் அவர் வந்திருந்தார். இந்த விஜயம் பற்றி அவரின்  சுயசரிதையில் இப்படி எழுதுகிறார்.
“எனது வைத்தியர்கள் என்னை ஒரு மாற்றத்துக்காக எங்கேயாவது போய் ஓய்வெடுக்கும்படி வலியுறுத்தினார்கள். இந்தியாவில் அப்படி ஒரு ஓய்வெடுக்க அரசியல் சூழல் ஒத்துழைக்காத. அருகாமையிலுள்ள நாடு இலங்கையே கமலாவையும், இந்திராவையும் அழைத்துக்கொண்டு நான் இலங்கை சென்றேன்.”
காந்தி 28.07.1924 அன்று நேருவுக்கு எழுதிய கடிதத்தில்
“சகல பணிகளையும் உடனேயே நிறுத்திவிட்டு முழுமையான ஓய்வை எடுங்கள். குறைந்தபட்சம் இலங்கைக்குச் சென்றால் வித்தியாசமான சூழலை அனுபவிப்பீர்கள்” என்கிறார்.
இலங்கை வந்திருந்த நேரு அரசியல் மற்றும் பொதுப் பணிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கும்படி ஆலோசனை கூறப்பட்டிருந்தபோதும் அவரால் அப்படி இருக்க முடியவில்லை. அவர் சில சுற்றுப்பிரயாணங்களையும் ஓய்வையும் மேற்கொண்டார். நுவரெலியாவில் தங்கியிருந்தார். கண்டி, அனுராதபுரம் உள்ளிட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குப் பயணித்தார்.

அன்று முற்போக்கு பாத்திரத்தை ஆற்றியிருந்த யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் அழைப்பின் பேரில் அவர் அகில இலங்கை யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் அங்குரார்ப்பண கூட்டத்தில் கலந்து கொண்டார். இது கொழும்பில் - வெள்ளவத்தை பிளாசா திரையரங்கத்தில் நிகழ்ந்தது. அரசசபைத் தேர்தலைப் பகிஷ்கரிக்கும் படி யாழ்ப்பாணத்தில் பெரும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருந்த காலம் அது. அந்த பகிஷ்கரிப்பின் பின்னணியில் நேருவின் பங்கு இருந்ததாகத் தென்னிலங்கையில் குற்றச்சாட்டு இருந்த நிலையில் இந்த வெள்ளவத்தைக் கூட்டத்தை நேரு அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டை மறுப்பதற்குப் பயன்படுத்திக்கொண்டார்.யாழ்ப்பாணத்திலும் அவர் வாலிபர் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டார். அங்கே அவர் யாழ்ப்பாணத்தில் சர்வஜன வாக்குரிமைக்கு எதிராகவும் தொழிலாளர்களுக்கு எதிராகவும் சில தலைவர்கள் உள்ளனர் என்று குற்றம் சாட்டினார். இந்தியத் தொழிலாளர்கள் குறித்து போதிய அக்கறை செலுத்தப்படாதது குறித்தும் தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினார். யாழ்ப்பாண இளைஞர்களை நோக்கி
“இளைஞர்கள் செயல் வீரர்களாக இருந்தாலேயொழிய அவர்கள் வெறுமனே பேசிக் கொண்டிருப்பதில் பயனற்றதாகி விடும்” என்றும் எச்சரித்திருக்கிறார்.
நேரு தனது சகோதரி கிருஷ்ணா நேரு ஹூத்சிங் என்பவருக்கு யாழ் விஜயத்தைப் பற்றி எழுதிய கடிதத்தில் இப்படி குறிப்பிடுகிறார்:
“வட முனையிலிருக்கும் யாழ்ப்பாணத்துக்கு நாம் புகையிரதம் மூலம் சென்றோம். அங்குப் பிரமாண்டமான வரவேற்பு எங்களுக்கு அளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத் தமிழரது மிக ஆக்ரோஷமான இளைஞர் குழுக்களினதும் மையமாக விளங்குகிறது. அங்கே எங்களுக்கு நிறையக் கருமங்கள் செய்யவிருந்தன. அயல் பிரதேசங்கள் எங்கும் மோட்டார் வாகனத்தில் சுற்றித்திரிந்து, கடலில் குளித்து இந்தியாவை நோக்கி நீந்தினோம். இந்தியா 16 மைல் தொலைவிலேயே உள்ளது.”
1939ஆம் ஆண்டு இலங்கை வந்திருந்த போது எடுக்கப்பட்ட படம், இதில் பிற்காலத்தில் இந்தியாவின் பிரதமராக ஆன நேருவுடன், பிற்காலத்தில் இலங்கையின் பிரதமர்களாக ஆன மூவர் டீ.எஸ்.சேனநாயக்க, டட்லி சேனநாயக்க, பண்டாரநாயக்க ஆகியோரும் உள்ளனர்.
மூன்றாவது பயணம்
1939 யூலை 15-25 வரையான நாட்கள் இலங்கையில் தங்கியிருந்தார்.இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் பிரச்சினைகளைக் கவனிப்பதற்காக மகாத்மா காந்தியின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை வந்திருந்தார்.

இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிராக தொடரப்பட்டு வந்த நெருக்கடிகள் காரணமாக அப்போதைய இந்திய  வம்சாவளி பிரதிநிதிகளான வைத்தியநாதனும், பெரய்ராவும் இந்த நிலைமைகள் குறித்து மகாத்மா காந்தியிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதன் விளைவாக ஏற்பாட்டின் பேரில் 1939 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு மகாத்மா காந்தியின் சிறப்புப் பிரதிநிதியாக  இலங்கைக்கு வந்தார். நேரு இலங்கை வந்து டீ.எஸ்.சேனநாயக்க போன்றோருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் போதிய திருப்தியளிக்காத நிலையில் இந்திய  வம்சாவளி மக்களின் நலன்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

நேருவின் இந்த விஜயத்தின் போது இங்குப் பல அமைப்புகள் சாதி அமைப்புகளாகப் பிளவுபட்டு இயங்கி வந்ததை அடையாளம் கண்டார். அவ்வமைப்புகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார் நேரு.

இலங்கை வாழ் இந்தியர்களின் பிரச்சினைகளை அவர்களே சுயமாகத் தீர்த்துக்கொள்ளும் வகையில் ஒரு அரசியல் இயக்கத்தின் தேவையை அவர் வலியுறுத்தினார். அதன் விளைவு தான் “இலங்கை இந்தியர் காங்கிரஸ்” என்கிற இயக்கத்தின் தோற்றம். 25-07.1939 ஆம் ஆண்டு இது தொடக்கப்பட்டது.  பாரத் சேவா சங்கம் நாடார் மகாஜன சங்கம், பாண்டிய வேளாளர் சங்கம், ஹரிஜன சேவா சங்கம் என்பவற்றின் இணைவே இலங்கை இந்தியர் காங்கிரஸ். அதன்படி மலையக மக்களுக்கான முதன் முறை ஒரு அரசியல் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டுச்  சரியாக இவ்வருடத்துடன் 80 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதன் ஸ்தாபகப் பொதுச்செயலாளராக இராஜலிங்கம் நியமிக்கப்பட்டார்.

காந்தி, நேரு ஆகியோரின் இலங்கை விஜயத்தின் போதெல்லாம் அவர்களைச் சந்தித்து வரவேற்பளித்தவர் அவர். அவர்களின் ஆசியுடனேயே பொதுச்செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. தனது பேச்சை உரைபெயர்ப்பதற்கு இராஜலிங்கத்தையே நேரு அழைப்பார்.

இலங்கை -இந்திய காங்கிரஸ் ஆரம்பத்தில் தோட்டத் தொழிலாளர்களையும் இலங்கை முழுவதும் வாழ்ந்த நகரச் சுத்தி தொழிலாளர்களையும் சாதியின் பெயரில் ஏற்க மறுத்தது. இந்திய மேட்டுக்குடி அதிகாரத்துவ அரசியலையே முதலில் முன்னெடுக்க தலைப்பட்டார்கள்.

பின்னர் கொழும்பு 04. பொன்சேகா பிளேஸ், சீயன்னா என்ற செட்டியார் வீட்டில் அமரர் நேரு தலைமையில் பெரிய விவாதமே இடம் பெற்றது. நேருவின் தலையீட்டால் இறுதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பெருந்தொகை தொழிலாளர் வர்க்கத்தை ஒன்று கலக்கச் செய்யாமல் அரசியல் தலையீடு செய்ய முடியாது என்பது குறித்து அங்கு விரிவான உரையாடல் இடம்பெற்றது.

1948 ம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இலங்கை-இந்தியன் காங்கிரஸின் பெயர் மாற்றப்பட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மாறியது.

இந்த இயக்கம் தான் 02.05.1954 இல் கம்பளையில் நடந்த  14வது மாநாட்டில் வைத்து “இலங்கை ஜனநாயகக் காங்கிரஸ்” என்றும், பின்னர் அது பிளவடைந்து 1954இல் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் காங்கிரஸ் என்பவை உருவாகி தனித்தனியாக இயங்கத் தொடங்கிய வரலாற்றை அறிவீர்கள்.

1940இல்“வாழ்விடத் தெரிவு பிரஜைகளைப் பதிவு செய்தல்” சட்டத்தை கொண்டு வந்தது இலங்கை அரசாங்கம். இச்சட்டத்தின் மூலம் மலையகத் தமிழர்கள் தாங்கள் எந்தப் பகுதி மற்றும் குடியிருப்புகளில் தங்கி வாழ்கின்றனர் என்பதைப் பதிவு செய்தல் வேண்டும். அது மட்டுமல்லாது அவர்களின் நடமாட்ட விஸ்தரிப்பும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் சில விதிகள் கடுமையாக்கப்பட்டு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

உருள வள்ளித் தோட்ட ஹர்த்தால்
1946 ஆம் ஆண்டு அன்றைய காணி, விவசாய அமைச்சராக இருந்தவரும் பின்னர் இலங்கையின் முதலாவது பிரதமராக ஆன டீ.எஸ்.சேனநாயக்க நேவ்ஸ்மியர் (KINAVESMIRE) தோட்டத்தில் உள்ள தொழிலாளர்களை விரட்டிவிட்டு அங்கு சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்தினார். “நேவ்ஸ்மியர் ஜனபதய” என்கிற குடியேற்றம் உருள வள்ளித் தோட்டத்தையும் உள்ளடக்கியது. கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டையில் அமைந்துள்ளது இந்த உருள வள்ளித்த் தோட்டம். இந்த குடியேற்ற அக்கிரமத்தை எதிர்த்து மலையகத்தில் நிகழ்ந்த பெரும் ஹர்த்தால் போராட்டம் குறித்து அறிந்த நேரு இலங்கைக்குத் தனது கண்டனத்தையும், தீர்வுக்கான அழுத்தத்தையும் கொடுத்தார்.

இந்த ஹர்த்தால் பெரியளவு பேசப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும்வரை இந்த ஹர்த்தால் பங்களித்திருந்தது. நேரு இது தொடர்பில் “த இந்து” பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இப்படி குறிப்பிடுகிறார்.
“...இலங்கை அரசாங்கத்தின் இந்த குடியேற்றத்திட்டம் ஒன்றும் மோசமில்லை. அதுவொரு நல்ல திட்டம். அந்தத் திட்டத்தை நான் எதிர்க்கவில்லை. ஆனால் இந்த திட்டத்தில் இந்திய வம்சாவளியினர் புறக்கணிக்கப்படுகிறார்கள். எந்தவொரு ஒழுங்கான மாற்று எற்பாடுமின்றி பெருந்தொகை மக்களை அந்த நிலங்களிலிருந்து எந்தவொரு அரசாங்கமும் வெளியேற்ற முடியாது.
...ஒரு மாதத்துக்கு முன்னர் பொது வேலைநிறுத்தம் அங்குள்ள இந்தியர்களின் தொழிற்சங்கத்தால் தொடக்கப்பட்டது. பெரிய அளவிலானோர் கலந்துகொண்ட அந்த அமைதியான ஹர்த்தால் நீண்டகாலத்துக்குப் பேசப்படக்கூடிய வகையில் குறிப்பிடத்தக்கதொரு ஹர்த்தால்.
இந்தியர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையில் கசப்பை நாம் உருவாக்கிக்கொள்ளக் கூடாது. இந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் ஹர்த்தால்கள் தொடர்பில் இலங்கைக்கு பாரிய அழுத்தம் கொடுப்பது இந்தியாவுக்கு மிகவும் எளிதானது, ஏனெனில், கணிசமான அளவு இலங்கையின் பொருளாதாரம் இந்தியாவில் தங்கியிருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக இலங்கை வாழ் இந்திய பிரஜைகளின் எண்ணங்களையும் மீறி சமீபத்தில் இலங்கை எதிர்கொண்ட நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவ இந்தியா உணவு அனுப்பியது. எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் இலங்கைக்கு ஒரு பெரிய அண்ணன் - அளவிலும் மற்றும் பொருளாதார நிலையில் பெரியவர்கள்...
ஆறு வருடங்களுக்கு முன்னர் அங்கு சென்றிருந்த போது கூட அவர்களோடு சண்டை பிடிக்கவோ, எச்சரிக்கவோ இல்லை. மாறாக நல்லெண்ணத்தையே வெளிக்காட்டினேன். ஆனால் இலங்கையில் இன்று நடப்பவை என்னை எரிச்சலடையச் செய்கிறது....”

நேருவின் இந்த நேர்காணல் வெளிவந்தது 4 நாட்களின் பின்னர் (14.07.1946)  நேருவின் தொடர்பாளர் அரியநாயகத்துக்கு எழுதிய கடிதத்திலும் இந்தப் போராட்டம் பற்றியும், உரிய வசதிகள் அவர்களுக்குச் செய்து கொடுக்கப்படாமல் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற விடக்கூடாது என்பதையும் அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.

01.07.1947 அன்று அரச சபையில் நேவ்ஸ்மியர் சிக்கல் குறித்து உரையாற்றிய சேனநாயக்க இது பத்தாண்டுகளாக இழுபறிபட்டுவரும் பிரச்சினை என்றார். இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள் அந்த நிலத்திற்கு உரித்துடையவர்கள் அல்லர் என்றும் அவர்களுக்கு உள்ளூர் கிராமிய குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்குக் கூட வாக்குரிமை அற்றவர்கள் என்றும் வாதிட்டார்.

நேவ்ஸ்மியர் பிரச்சினை இலங்கை இந்திய உறவில் இந்தக் காலப்பகுதியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தவே செய்திருக்கிறது.

நேரு 30.09.1046 அன்று பொதுநலவாய திணைக்களத்தின் செயலாளருக்கு இது குறித்து எழுதியதுடன் அக்கடிதத்தில் இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிராக இலங்கை குற்ற வழக்கு தொடுத்திருப்பதன் அதிருப்தியையும் வெளியிட்டதுடன் இலங்கைக்கு இது குறித்து ஒரு தந்தியை அனுப்புமாறு அச் செயலாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அங்கிருந்து வெளியேறாத தொழிலாளர்கள் மீது குற்றவியல் வழக்குத் தொடுத்தது அரசாங்கம். தீர்ப்பு தொழிலாளர்களுக்கு பாதகமாகவே அமைந்தது. பின்னர் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் ஒருவரான சின்னசாமி செல்வநாயகம் பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்தார். அத் தீர்ப்பின்படி  செல்வநாயகத்தின் மீதான் தண்டனையைத் தள்ளுபடி செய்தது. சிங்கள பௌத்த பேரினவாதம் மலையக மக்களின் எதிர்கால வாழ்வைக் குழிதோண்டிப் புதைக்க இந்தப் போராட்டமே அவர்களைத் தூண்டியிருந்தது.

நான்காவது பயணம்
1950 ஜனவரி 8-15 வரையான நாட்களில் தங்கியிருந்த அவர் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்தார். ஜனவரி 12 அன்று இலங்கைப் பல்கலைக்கழகத்தில் முக்கிய உரையொன்றையும் ஆற்றினார்.

ஐந்தாவது பயணம்
1954 ஏப்ரல் 27-மே 03வரை அவர் தங்கியிருந்தார். கொழும்பில் 28 ஏப்ரல் முதல் மே 2 வரை நடந்த தென்னாசிய அரச தலைவர்களின் மாநாட்டில் அவர் கலந்துகொண்டார்.
 நேருவின் 1957ஆம் ஆண்டு விஜயத்தின் போது “ஜெயந்தி மாவத்தை” என்கிற வீதியைத் திறந்து வைத்தபோது
18.05.1957  பிரதமர் பண்டாரநாயக்கவினால் அனுராதபுரத்திலுள்ள புத்தர் சிலை காண்பிக்கப்பட்ட போது... இந்த சிலை அவரை எந்தளவு பாதித்தது என்பது பற்றி அவரது குறிப்புகளில் உள்ளன
இலங்கையில் புத்த ஜெயந்தி கொண்டாட்டங்களையிட்டு 18.05.1957 அன்று அனுராதபுரத்தில் புத்தர் சிலையைத் திறந்து உரையாற்றிய நேரு. அருகில் பிரதமர் பண்டாரநாயக்கவும், இந்திரா காந்தியும்.
ஆறாவது பயணம்
1947 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் பிரதமரான பின்னர் நேரு தனது மகள் இந்திராவுடன் இலங்கை விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயம் 1957 மே 17-20 திகதிகளில் நிகழ்ந்தது. இலங்கைப் பிரதமரின் சிறப்பு அழைப்பின் பேரில் புத்த ஜெயந்தி கொண்டாட்டங்களுக்காக வந்திருந்த அவர் மகள் இந்திராவையும் அழைத்துக்கொண்டு அனுராதபுரத்துக்கு இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்கவுடன் உற்சவங்களுக்காகச் சென்றார். கண்டிக்கும் இந்தப் பயணத்தில் சென்றிருந்தார்.

இது ஒரு அரசியல் மற்றும் ஆன்மீக விஜயமாக அமைந்தது. புத்த ஜயந்தியின் 2500 ஆண்டைக் கொண்டாடும் முகமாக நேருவுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்தது. இதன் போது அனுராதபுரத்திற்கு விசேட ரயிலில் பயணம் செய்த நேரு, அங்கு ஜயந்தி மாவத்தை எனும் புதிய நகரத்தையும் திறந்து வைத்தார். அங்கு தான் புத்த ஜயந்தி நிகழ்வின் பிரதான நிகழ்வுகள் எற்பாடாகியிருந்தன.

ஏழாவது இறுதிப் பயணம்
1962 ஒக்டோபர் 13-16 வரையான விஜயமே இலங்கைக்கான அவரின் இறுதி விஜயம். “பண்டாரநாயக்க நினைவு ஆயுள்வேத ஆராய்ச்சி நிலையத்தை” திறந்துவைப்பதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். இந்திய வம்சாவளியினர் பற்றிய பிரச்சினைகளைப் பற்றி இரு தரப்பு புரிதலை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டார்.

நேருவின் காலப்பகுதியில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினருக்குக் குறைந்தபட்சம் இருந்த பாதுகாப்பு அதன் பின்னர் அற்றுப்போனது என்பது உண்மையே. இதே காலப்பகுதியில் இலங்கை இந்திய வம்சாவளியினரின் வாக்குரிமையைப் பறித்து, பிரஜாவுரிமையும் பறித்து, நாடற்றவர்களாக்கி, அரசியல் பிரதிநிதித்துவத்தை மோசமாக இல்லாமல் செய்து, சிங்களக் குடியேற்றங்களைத் தோட்டங்களில் மேற்கொண்டு அவர்களை விரட்டியடித்ததும் நிகழ்ந்தது. இந்தியாவின் பொறுமையை அதிகமாக சோதித்த காலம் காலம் இது. இலங்கையைப் பகைத்துக்கொள்ளாமலும் அதே வேளை காரியங்களை நிதானமாகவும், இராஜதந்திரமாகவும் அணுகவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

நேருவின் காலப்பகுதியில் நேருவுக்கும் இலங்கை பிரதமர் கொத்தலாவலவுக்கும் இடையில் நிகழ்ந்த ஒப்பந்தத்தின் பின்னணியை இந்த வரிசையில் பதிவு செய்வது அவசியம்
புகைப்படத்தில் கொத்தலாவலவுக்கு அடுத்ததாக இருப்பவர் நேரு
"நேரு – கொத்தலாவல" ஒப்பந்தப் பின்னணி
இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் குடியுரிமை பற்றிய பிரச்சினையைப் பற்றி 1953ஆம் ஆண்டு லண்டனில் ஒரு பேச்சுவார்த்தை நிகழ்ந்தது. 1953 யூன் மாதம் 3-9 வரையான நாட்களில் லண்டனில் நிகழ்ந்த பொதுநலவாய நாட்டுத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த போதே நேருவும், டட்லியும் இந்தப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டிருந்தனர். அதன்படி இந்தியா 3 லட்சம் பேரை ஏற்க வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு இலங்கை குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் பேசப்பட்டது. இதில் 3 லட்சம் மக்களை கட்டாயமாக நாடு கடத்த நேரிடும்  என்றும் டட்லி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை அன்று நேரு ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை.

17.10.1953 அன்று பிரதமர் நேருவிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. இந்திய-இலங்கைப் பிரச்சினைகள் குறித்து சேர் ஜோன் கொத்தலாவலவுடன் உரையாடுவதற்கான அழைப்பு அது. அதன்படி 1954 ஜனவரி சந்திக்கலாம் என்று முடிவானது.

இந்தக் காலப்பகுதியில் இந்திய வம்சாவளியினரின் பிரச்சினையை “இந்திய இலங்கை பிரச்சினை” என்றே இரு நாட்டுத் தலைவர்களும் விழித்தார்கள். நேருவின் கடிதத்தில்

“It is possible that Sir John might visit Delhi some time in the future for a discussion of the lndo-Ceylonese problem.” (17.10.1953 கடிதத்தில்) என்கிறார்.

அந்தளவு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிரதான “பிரச்சினை”யாகத் தான் இது சூடு பெற்றிருந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

இந்த ஒப்பந்தம் குறித்து கொத்தலாவல தனது சுயசரிதையில் (1956) இப்படி எழுதுகிறார்.

“துரதிர்டவசமாக அந்நிய முதலாளிகள் எங்கள் செலவிலேயே பெருமளவு எங்கள் நிலங்களைக் கொண்டு பொருளீட்டியுள்ளனர் . எங்கள் அனுமதியின்றி இந்திய தொழிலாளர்களை இறக்குமதி செய்திருக்கின்றனர்.

இலங்கையிலிருக்கும் 9 லட்சம் இந்திய பிரஜைகளைக் குறைக்காவிட்டால் எங்கள் மக்கள் பிச்சையெடுப்பதிலிருந்தும், இலங்கையர் என்கிற அடையாளத்தை இழப்பதிலிருந்தும் மீட்க முடியாத அபாயம் இருக்கிறது.

இந்தியத் தொழிலாளர்களை நாடு கடத்தவேண்டும் என்று அன்றைய அரசாங்க சபையின் தலைவர் சேர் பாரொன் ஜெயதிலக்கவுடன் உரையாடினேன். அவர் அதனைக் கண்டுகொள்ளவில்லை. பின்னர் திறைசேரிக்குப் பொறுப்பான பிரிட்டிஷ் அதிகாரியான எச்.ஜே.ஹுக்ஸ்ஹம் (H. J.Huxham) என்னுடைய திட்டத்துக்கு ஆதரவளித்தார்.  14 வருடகாலமாக சாத்தியமாகாத எனது திட்டத்தை நான் பிரதமாரானதும் நேரு/கொத்தலாவல ஒப்பந்தத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டேன்.”

இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொள்வதற்கான குழுவில் முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்காவும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்கவும் இருந்தார்கள்.

18.01.1954 அன்று செய்துகொள்ளப்பட்ட நேரு - கொத்தலவால ஒப்பந்தத்தின்படி 1955 ஆம் ஆண்டுக்குள் இந்திய வம்சாவளி மக்களைப் பதிவு செய்வதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டது. ஆனால் மலையக தமிழ் மக்களுக்கு பிரஜா உரிமை வழங்க இலங்கை அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாது, நேரு காலமான பின்பு, இந்திய வம்சாவளியினரை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்புவதிலேயே இலங்கை கவனமாக இருந்தது.

சிங்களவர்களாக மாற வேண்டும்?
நேரு-கொத்தலாவல ஒப்பந்தத்தின் பிரகாரம் மலையகத் தமிழர்கள் சிங்களம் கற்று சிங்களவர்களோடு ஒன்று கலந்திட வேண்டும் என்று ஒரு ஏற்பாடு இருந்ததாக இன்றும் பல சிங்கள தேசியவாதிகள் எழுதியும், பேசியும் வருகிறார்கள்.  இது பற்றி பலர் கட்டுரைகளையும், நூல்களையும் சிங்களத்தில் வெளியிட்டுள்ளனர். அவர்களில் ஹரிச்சந்திர விஜேதுங்க முக்கியமானவர்.

அவர் எழுதிய நூல்களில் ஒன்று “நேரு - கொத்தலாவல ஒப்பந்தத்தை அமுல்செய்” (නේරු-කොතලාවල ගිවිසුම ක්‍රියාත්මක කරමු - 1993) என்கிற நூல். இந்த நூல் அடிப்படையில் இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிராக எழுதப்பட்ட வன்மம் நிறைந்த நூல். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியர்களை விரட்டும் கருத்தை மீள அரசியல் தளத்தில் பேசுபோருளாக்கியவர்.

இதே கருத்தை மேலும் பலர் இன்னமும் எடுத்துச் செல்கின்றனர். ஆனால் ஒப்பந்தத்தில் அப்படி ஒரு ஏற்பாடும் இல்லை என்பது தான் உண்மை.

நேருவும் இலங்கையும் (Nehru and Sri Lanka) என்று 2002 இல் வெளியான ஒரு நூலில் இலங்கையுடன் அவர் மேற்கொண்ட பெரும்பாலான ஆவணங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. அதில் நேரு-கொத்தலாவல ஒப்பந்தம் மட்டுமன்றி அதனோடு சம்பந்தப்பட்ட இன்னும் பல கடிதங்களும், இந்திய அரசாங்க அறிக்கைகளும் உள்ளடங்கியுள்ளன. அதில் எங்கும் இப்படி ஒரு ஏற்பாடு பற்றி குறிப்பிடப்படவில்லை.

மலையகத் தமிழர்கள் தமது நிலங்களையும், தொழில் வாய்ப்புகளையும் பறித்துக்கொண்டார்கள் என்கிற புனைவையும் ஐதீகத்தையும் தொடர்ச்சியாகப் பரப்பி வந்ததில் இன்று வரை அவர்களுக்கு எதிரான பாரபட்சமும் வெறுப்புணர்ச்சியும் பல்வேறு வடிவங்களில் நீடிக்கவே செய்கிறது.

நேரு இலங்கை இந்திய வம்சாவளி மக்களை மீள இந்தியாவுக்குத் திரும்பி வருவதை மறுத்தார் - எதிர்த்தார் என்கிற ஒரு பொதுக் குற்றச்சாட்டு இன்றும் உண்டு. ஆனால் அவர் இந்த விடயத்தில் சரியான தூரநோக்குடன் தெளிவாகவே இருந்தார் என்று தோன்றுகிறது.

இலங்கையிலுள்ள இந்திய வம்சாவழி மக்களைப் பற்றிய பிரச்சினை இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது பிரதமர் நேரு இப்படிக் கூறினார். (9-4-1958).

"இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினை இலங்கை அரசாங்கத்தின் பிரச்சினையாகும். ஏனென்றால் இந்த மக்கள் இந்தியாவின் குடிமக்கள் அல்லர். இவர்கள் இலங்கைக் குடிமக்களே. இது அவர்களின் பிரச்சினை. நம்முடைய பிரச்னை அல்ல. இலங்கையிலேயே பிறந்து அங்கேயே பல ஆண்டுகளாக வாழ்ந்த மக்களை அங்கிருந்து வெளியேறி இந்தியாவுக்குச் செல்லுமாறு கூறுவது ஏற்க முடியாதது. இதை ஓர் அரசியல் பிரச்சினையாகவோ, தகராறாகவோ கருதாமல் மனிதாபிமானப் பிரச்சினையாகக் கருதவேண்டும்.''

நேரு உயிருடன் இருக்கும் வரை அந்த ஒப்பந்தம் உரியபடி நடைமுறைப்படுத்தாது காலம் தாழ்த்தப்பட்டது.

1963 இல் சிறிமா சீனாவுடன் செய்துகொண்ட கடற்படை ஒப்பந்தம் இந்தியாவை முகம் சுளிக்கச் செய்தது. இந்திய – சீன எல்லைச் சண்டையிலும் சீன ஆதரவு நிலைப்பாட்டை இலங்கை எடுத்திருந்தது. இந்தியாவின் எதிரியைத் தனது காலடியிலேயே கொண்டு வந்து சேர்த்தது போன்ற சம்பவங்களால் இலங்கையை சரிகட்டும் தேவை இந்தியாவுக்கும் இருந்தது.

1963ஆம் ஆண்டு இரு பிரதமர்களுக்கிடையே ஒரு சந்திப்பை ஏற்படுத்த வேண்டும் என்று ஸ்ரீமாவோ பண்டாநாயக்க நேருவுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் நேரு 27.05.1964 அன்று மாரடைப்பால் இறந்து போனார். அதனைத் தொடர்ந்து புதிய இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரிக்கும் ஸ்ரீமாவோ பண்டாநாயக்காவுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. 22.10.1964 இல் சிறிமாவும் டி.பி.இலங்கரத்ன, பீலிக்ஸ்.ஆர்.டி.பண்டாரநாயக்க, என்.கியூ.டயஸ் ஆகிய அமைச்சர்களுடன்  இந்தியாவுக்கு விரைந்தார். ஒருவார காலம் அவர்கள் தங்கியிருந்து தொடர் பேச்சுவார்த்தை நடத்தி 29.10.1964 இல் செய்துகொள்ளப்பட்டது தான் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம்.

இந்திய வம்சாவளியினரை இந்தியாவுக்கு திருப்பியனுப்பிவிடும் நோக்கத்தை சட்டப்பூர்வமாக நிறைவேற்றிக்கொள்ள இலங்கை அரசு தொடர்ந்து செய்துவந்த நச்சரிப்பில் தான் அந்த ஸ்ரீமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம் உருவானது. யாரையும் கட்டாயப்படுத்தி இந்தியாவுக்கு திருப்பியனுப்பக்கூடாது என்கிற நிலைப்பாடு கொண்டிருந்த நேரு 1964ல் காலமானதையடுத்து இந்தியப் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி இந்திய வம்சாவளி மக்களைப் பொறுப்பேற்க சம்மதித்தார்.

இந்த அரசியல் அதிகார பீடங்கள் தமக்குள்ள செய்துகொண்ட இந்த உடன்பாடுகளில் சம்பந்தப்பட்ட மக்களின் எந்த அபிலாஷைகளும் கணக்கிற் கொள்ளப்படவில்லை. அரசியல் தலைவர்களால் வலுக்கட்டாயமாக இந்த உடன்படிக்கைகள் திணிக்கப்பட்டன.

மலையக அரசியல் வரலாற்றை ஆராய்பவர்கள் நேருவின் வகிபாகத்தை மேலும் விரிவாகவும், காய்தல் உவத்தல் இன்றியும் மீளாய்வுக்கு உட்படுத்துவது முக்கியம். ஏனென்றால் இந்தக் காலப்பகுதியின் முக்கியத்துவம் அப்படி.

உசாத்துணை:
  1. Gopalakrishna Gandhi - Nehru and Sri Lanka - A collection of Jawaharlal Nehru's speeches and writings covering three decades - Vishva Lekha. - Sri Lanka – 2002
  2. சாந்தசீலன் கதிர்காமர் – “யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்” – குமரன் புத்தக இல்லம் - 2012
  3. 10.07.1946அன்று The Hindu பத்திரிகையில் வெளியான நேருவின் இந்த நேர்காணலானது “Selected works of Jawaharlal Nehru - Volume 15, A Project of the Jawaharlal Nehru Memorial Fund - Published by Sujit Mukherjee – 1982” என்கிற தொகுப்பில் பிற்காலத்தில் வெளியானது
  4. “Selected works of Jawaharlal Nehru - Volume 15, A Project of the Jawaharlal Nehru Memorial Fund - Published by Sujit Mukherjee – 1982 (P – 549-550)
  5. BRITISH DOCUMENTS ON THE END OF EMPIRE - Series B Volume 2, Sri Lanka - Editor KM DE SILVA - Part 11 - TOWARDS INDEPENDENCE - 1945--1948, Published for the Institute of Commonwealth Studiesin the University of London (P-220)
  6. Selected Works of Jawaharlal Nehru, Second Series, Volume 01 - General editor, Shri S. Gopal - A Project of the Jawaharlal Nehru Memorial Fund - 1984
  7. Gopalakrishna Gandhi - Nehru and Sri Lanka - A collection of Jawaharlal Nehru's speeches and writings covering three decades - Vishva Lekha - Sri Lanka – 2002 (இந்த நூலைத் தொகுத்தவர் மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி. அவர் இலங்கையில் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக 2000-2002 காலப்பகுதியில் கடமையாற்றியவர்)
நன்றி - காக்கைச் சிறகினிலே

மொட்டு கட்சியின் தமிழ் விஞ்ஞாபனமாம்?


கோட்டாவின் மொட்டு கட்சியைச் சேர்ந்த ரிஷி செந்தில் ராஜ் whatsapp மூலம் கோட்டாவின் தமிழ் மொழியிலான விஞ்ஞாபனத்தைப் பகிர்கிறாராம்.
  1. ஏன் பொது இணைப்பொன்றை ஏற்படுத்தி பொதுவில் பகிர முடியாதா?
  2. சிங்களத்தில் வெளியிடும் போது அப்படித் தானே செய்தீர்கள்?
  3. அனைவரதும் தொலைபேசி இலக்கங்களை சேகரிப்பதன் உள்நோக்கம் என்ன?
  4. ஏன். மின்னஞ்சல் முகவரிகளைக் கேட்கவில்லை. அதில் பகிர முடியாதா?
  5. அல்லது பொது இடமொன்றில் தரவேற்றி அந்த இணைப்பைப் பகிர முடியாதா? கோட்டாவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் https://gota.lk/ சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் பகிர்ந்திருக்கிறீர்களே? பின் தமிழில் அது போல் பகிர்வதில் என்ன தடை என்ன தயக்கம்.
  6. யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய தமிழ் பகுதிகளில் தேர்தல் பிரச்சார கூட்டங்களும் முடிந்து தேர்தல் பிரச்சார முடிவுக்கு பத்தே நாள் தான் இருக்கும் நிலையில் தமிழில் வந்தென்ன வராவிட்டால் என்ன?
https://www.dropbox.com/s/lvjnrq0rkbh8zyr/Gotabaya_Tamil_Manifesto.pdf





ஈஸ்டர் படுகொலைகளில் ஜனாதிபதியின் வகிபாகம்? - என்.சரவணன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய்ந்த பாராளுமன்ற விசேட குழுவின் அறிக்கை கடந்த ஒக்டோபர் 23 அன்று வெளியிடப்பட்டதை அறிவோம். ஜனாதிபதித் தேர்தல் இதே காலத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியதும் இந்த அறிக்கையின் முக்கியத்துவம் பின்தள்ளப்பட்டுவிட்டது. ஆனால் அனைவரும் அதுவரை எதிர்பார்த்து காத்திருந்த அறிக்கை இது.

இந்த அறிக்கை முக்கியத்துவமிழக்கப்பட்டதன் பின்னால் அரசியல் காரணங்கள் உண்டு. முக்கியமாக தற்போதைய சூழலில் ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்கும் சரிகட்டுவதற்கும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் திட்டமிட்டு மேற்கொண்ட ஒரு சதியோ என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதியன்று கூடிய அமைச்சரவைக் இந்த அறிக்கையை முற்றுமுழுதாக நிராகரிப்பதாகத் தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி சிறிசேன. இதுவொரு அரசியல் அவதூறு செய்கிற ஒரு ஆவணம் என்றார் அவர். அந்த அறிக்கையை கடுமையாக விமர்சித்த அவர் அதுவொரு அமைச்சரவை ஏற்றுக்கொண்ட ஒரு ஆவணம் இல்லை என்பதைக் கருத்திற் கொள்ளுங்கள் என்றார். அந்த அறிக்கை குறித்து அமைச்சரவையில் உரையாடப்பட்டதாக மட்டும் குறிப்பிடுங்கள் என்றும் அதுவொரு மக்களை திசைதிருப்பும் ஒரு ஆவணம் என்றார்.

ஆக தனியொரு ஜனாதிபதியின் சுயவிருப்பு வெறுப்பின் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிக்கை வலுவற்றுப் போயுள்ளது. அரசாங்க அமைச்சர்களும் தேர்தல் காலமாதலால் ஜனாதிபதியோடு சமரசத்துடன் அணுகவேண்டிய காரணங்களால் ஜனாதிபதியோடு முரண்படாமல் பின்வாங்கினார்கள்.

இந்த விசாரணை அறிக்கை மிகவும் முக்கியமானது. பல கோணங்களில் தனித்தனியாக அலசும் அளவுக்கு ஏராளமான தகவல்கள் பொதிந்தது. ஜனாதிபதியின் வகிபாகத்தைப் பற்றி மட்டுமே இக்கட்டுரை ஆராய்கிறது.
தமிழில் எங்கே?
இந்த அறிக்கை ஒக்டோபர் 23 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதனை பிரசுரித்து வெளியிடும் கட்டளையும் அங்கு நிறைவேற்றப்பட்டது. அதனைப்படி மும்மொழியிலும் வெளியிடப்பட்டது. தமிழ் மொழியிலான அறிக்கை 242 பக்கங்களைக் கொண்டது. அதுபோல வாய்மொழி சாட்சியங்களை தனித்தனியாக இரண்டு பிரேத்தியக தொகுப்புகளாக வெளியிட்டிருக்கிறார்கள். முதலாவது தொகுதி 720 பக்கங்களையும், இரண்டாவது தொகுதி  655 பக்கங்களையும் கொண்டது. ஆக மொத்தத்தில் 1617 பக்கங்களைக் கொண்ட அறிக்கை இது. விசாரணையின் போது எந்தெந்த மொழியில் கேள்வி எழுப்பினார்களோ எந்தெந்த மொழியில் பதில் அளித்தார்களோ அதே மொழிகளில் தான் அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆக மூன்று மொழியும் அறிந்தவர்களால் தான் இந்த விசேட அறிக்கையை விளங்கிக்கொள்ளவோ, ஆராயவோ முடியும்.

இந்த அறிக்கையின் மிகவும் முக்கிய குறைபாடு யாதெனில் இந்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் யார் என்கிற தலைப்பில் அறிக்கையின் இறுதியில் மொத்தம் 153 விடயங்களைக் குறிப்பிட்டிருக்கிறது. அந்த 153 விடயங்களும் ஆங்கிலப் பிரதியில் மட்டும் தான் காணப்படுகிறது. அதுவும் ஆங்கிலப்பிரதியில் சிங்கள மொழியில் மட்டும் தான் காணப்படுகிறது.
பிரதிச் சபாநாயகர் சே. எம். ஆனந்த குமாரசிறியின் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த விசாரணைக் குழுவில் 
றவுப் ஹக்கீம்
ரவி கருணாநாயக்க
(டாக்டர்) ராஜித்த சேனாரத்ன
பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா
எம்.ஏ.சுமந்திரன் (ஜனாதிபதி சட்டத்தரணி)
(டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ
(பேராசிரியர்) ஆசு மாசிங்க
(கலாநிதி) ஜயம்பதி விக்கிரமரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணி
ஆகியோர் அங்கம் வகித்தனர்

இந்த விசாரணைக் குழுவின் விசேட அறிக்கை குறித்து பல விடயங்களை வெளிக்கொணர வேண்டியிருக்கிறது. ஆனால் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கை தற்போது செல்லுபடியற்றதாகப் போகப்போகிறது. அதற்கான காரணம் அமைச்சரவையில் ஜனாதிபதி இதனை நிராகரித்திருப்பது தான். எனவே இந்த அறிக்கையில் ஜனாதிபதி குறித்த பகுதிகளை இக்கட்டுரையில் முக்கியத்துவப்படுத்துகிறது. இவை அனைத்துமே அறிக்கையில் உள்ள விபரங்களே.

இலங்கையில் 2019 ஏப்பிரல் 21 ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மூன்று தேவாலயங்களிலும் மூன்று ஹோட்டல்களிளும் இடம்பெற்ற தீவிரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்பட்ட தகவல்களின் பிரகாரம், ஆகக்குறைந்தது 277 ஆட்கள் கொல்லப்பட்டதுடன் (8 தற்கொலைக்குண்டுதாரிகள் உள்ளடங்களாக) 400 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இறந்தோரிடையே ஆகக்குறைந்தது 40 வெளிநாட்டவர்கள் மற்றும் ஆகக்குறைந்தது 45 சிறுவர்கள் உள்ளடங்குவதாக அறிக்கையிடப்பட்டது. இந்த ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களை நிறைவேற்றுவதில் பின்னின்று செயற்பட்ட பிரதான சந்தேகநபராக, தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் முன்னாள் தலைவர் ஸஹ்ரான் ஹாஷிமி என்பவரை விசாரணையாளர்கள் அடையாளம் கண்டனர். 
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, அகில இலங்கை தமிரசுக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 40 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு பாராளுமன்ற

இந்த சம்பவங்களை ஆராய்வதற்கான விசேட பாராளுமன்ற குழுவொன்றின் (PSC) நியமனத்தைக் கோரும் தீர்மானமொன்று 2019 மே மாதம் 22 ஆம் திகதி வாக்கெடுப்பின்றிப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த பாராளுமன்ற விசேட குழு 2019 மே மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை 24 அமர்வுகளை நடத்தி, 55 பேரிடமிருந்து சாட்சியங்களை விசாரித்தது.

கத்தோலிக்க தேவாலயங்களும்,ஹோட்டல்களும், இந்திய துணை தூதரகமுமே தீவிரவாதிகளின் முக்கிய இலக்காக இருந்திருப்பதை பல்வேறு சாட்சியங்களில் இருந்து உறுதியாகின்றன.
சுயநலத்துக்கு நாடு பலி
இந்தத் தாக்குதல் நிகழ்த்தபடவிருக்கிறது என்கிற தகவல்கள் தெரியவந்தும் அது தொடர்பில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாதது வியப்பளிப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் ஆரம்பத்திலிருந்தே பல அரச அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகளின் சாட்சியங்களின் போது ஜனாதிபதியின் தனது பொறுப்பிலிருந்து எப்படி தவறினார் என்பது குறித்த விபரங்கள் வெளியாகின. ஆப்போதிருந்தே ஜனாதிபதி இந்த குழு தனக்கெதிராக சதிசெய்கிறது என்று குற்றம் சாட்டினார்.

கூடவே தெரிவுக்குழு பிரதமரையும், ஜனாதிபதியையும் சாட்சியமளிக்க அழைத்தது. பிரதமர் ரணில் சாட்சியமளித்த போதும் ஜனாதிபதி சிறிசேன தான் நேரடி சாட்சியமளிக்க மாட்டேன் என்று இறுமாப்போடு மறுத்தார். பின்னர் வாக்குமூலமளித்தார்.

ஓகஸ்ட் 20ஆம் திகதியன்று  18வது தடவையாக இந்த விசேட குழு கூடியபோது; ஜனாதிபதியின் சாட்சியமானது இறுதி அறிக்கை தயாரிப்புக்கு முக்கியமானது என்றும் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோருவதற்கு தீர்மானித்ததுடன் அன்றே ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருக்கிறது.

ஈஸ்டர் தாக்குதல்கள் நடந்ததும் பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் ஆகியோரை சந்திப்பதற்கு பிரதமர் அழைத்திருந்தபோதும் அவர்கள் எவரும் பிரதமரை சந்திக்காதது முக்கிய ஒழுங்கு மீறல் என்று சாட்சியமளித்திருக்கிறார் பிரதமர். அந்த சந்திப்புக்கு செல்ல வேண்டாம் என்று ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளரிடம் அறிவித்திருக்கிறார்.  அதேவேளை இந்த தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட அழைக்கப்பட்டிருந்தும்  நாட்டின் பிரதமர், பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ஆகியோரை வரவிடாமல் தடுத்தது அப்பட்டமாக பாதுகாப்பு விடயங்களை தனிப்பட்ட கட்சி சார் அரசியலுக்காக துஷ்பிரயோகம் செய்யப்பட்டிப்பதையே வெளிப்படுத்துகிறது.. குறிப்பாக ஈஸ்டர் தாக்குதல் தினத்தன்று நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்திற்கு அவர்களை வரவிடவேண்டாம் என்கிற கட்டளைகள் தேசிய பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் தரும் ஒன்றாக ஆகியிருக்கிறது.

தமக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்களை 11.04.2019 அன்றே ஜனாதிபதிக்கு அறிவித்துவிட்டதாக புலனாய்வுத் துறை தெரிவித்தது. 

பாதுகாப்புத்துறையும் புலனாய்வுத் துறையும் அரசியல்மயமாக்கப்பட்டதன் விளைவு குறித்து இந்த அறிக்கையில் 1.6 என்கிற பகுதியில் விளக்கப்படுகிறது

நாட்டின் தலைவர்களும் பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் மா அதிபர், முப்படைத் தளபதிகள், புலனாய்வுப் பிரிவின் தலைவர் உள்ளிட்டவர்கள்  கூடும் வாராந்தம் பாதுகாப்பு கவுன்சில் கடந்த ஆண்டு ஒக்டோபர் 26 அரசியல் நெருக்கடிக்குப் பின்னர் ஜனாதிபதியால் கூட்டப்படவில்லை. 2019 பெப்ரவரியில் மாத்திரம் ஒரு தடவை கூட்டப்பட்டிருக்கிறது.

மேலும் பாதுகாப்பு கவுன்சில் உட்பட நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஒக்டோபர் 26க்குப் பின்னர் பிரதமரை ஜனாதிபதி எதிலும் சம்பந்தப்படுதவுமில்லை, தொடர்புகொள்ளவுமில்லை.

தேசிய பாதுகாப்புச் சபை (NSC) ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்பு செய்யலாளரினார் கூட்டப்படுகிறது. யுத்த காலத்தில் வாராந்தம் கூட்டப்பட்ட இச்சபை யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அவ்வப்போது தான் இடம்பெற்றிருக்கிறது. 

ஏப்ரல் 4 ஆம் திகதியே “அதி இரகசியம்” (Top Secret) “அதி முன்னுரிமை” (Top Priority)  என்கிற வகைப்படுத்தப்பட்டு பாரதூரமான தன்மையி உடைய புலனாய்வுத் தகவல் கிடைத்திருக்கிறது. ஏப்ரல் 9 நடந்த கூட்டத்தில் புலனாய்வுப் பிரிவு தலைவர் இதனை ஏனையோருடன் பகிரவில்லை. அதே அன்று இது குறித்த கடிதங்கள் புலனாய்வு கட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் அனுபப்பட்டுள்ளதுடன் இராணுவம், அரசியல் தலைமை என்பவற்றுடன் பகிரப்படவில்லை. இதற்கிடையில் ஏப்ரல் 16 ஜனாதிபதி வெளிநாட்டுச் சுற்றுலாவுக்காக நாட்டிலிருந்து வெளியேறுகிறார். அதே நாள் காத்தான்குடி பாலமுனை பகுதியில் டெட்டனேட்டர் மூலம் ஒரு மோட்டார் சைக்கிள் வெடிக்க வைக்கப்படுகிறது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மேலதிக அக்கறையை செலுத்துகிறார் புலனாய்வுத்துறை பணிப்பாளர். ஆனால் அவர் இது குறித்து கிழக்கு மாகாண பொலிஸ் மா அதிபருக்கு தெரிவித்திருக்கவில்லை. ஜனாதிபதியும் நாட்டில் இல்லாத நிலையில் பிரதமர் அல்லது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கவனத்துகோ கொண்டு வரப்படவில்லை.

ஜனாதிபதி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும்போது குறைந்தபட்சம் தனக்குப் பதிலாக இன்னொரு பதில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிக்கத் தவறியிருக்கிறார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்த அவசரகால நிலைமையின் போது உரிய கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு உரிய அரசியல் தலைமை இல்லாதது பெரும் குறைபாடு.
அதிகாரக் குவிப்பும் பொறுப்பின்மையும்
தாக்குதல்கள் நடக்கப்போவது குறித்து அறியக்கிடைத்த புலனாய்வுத் தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகள் மத்தியில் பகிரப்பட்டிருக்கிற போதும் பாதுகாப்பு அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. அப்போது அவர் நாட்டில் இருந்தார். தாக்குதல் நடந்த அன்று அவர் நாட்டில் இருக்கவில்லை.  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதிக்கு உரிய தகவல்களை அறிவிக்கத் தவறியதாக இவ்வறிக்கை குற்றம் சாட்டியது. பின்னர் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கைது செய்யப்பட்டு இன்னமும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவது தெரிந்ததே.

அரச புலனாய்வுச் சேவை (SIS) தலைவர் சில வேளைகளில் ஜனாதிபதியை சந்திப்பதற்காக மூன்று மணித்தியாலங்கள் வரை காத்திருக்க நேரிட்டிருந்ததையும் ஜனாதிபதியை தான் சந்திப்பதற்கான வாய்ப்புகளும் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி பிரதான நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய பிரதான அரசியல் தலைவர்களை விலக்கி வைத்தமை பாதுகாப்பு சீர்குலைவு என்கிறது இந்த அறிக்கை. ஜனாதிபதியின் செல்வாக்குட்டிருப்பதும், அவர் பாதுகாப்பு கட்டமைப்புகளின் தொடர்பாடல் மார்க்கங்களை நலிவடையைச் செய்திருப்பதும் பாதுகாப்புத் துறையின் பலவீனத்துக்கு காரணமாக ஆகியிருகிறது.

2018 ஆம் ஆண்டு ஜனாதிபதி வர்த்தமானியின் மூலம் பொலிஸ் துறையை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்தார். ஒக்டோபர் 26 சதிக்கிளர்ச்சியின் போது இதன் பாதகமான விளைவு வெளிப்பட்டது. ஜனாதிபதி அளவுக்கு மீறிய அதிகாரங்களை தனக்கு கீழ் கொண்டு வந்த போதும் அவற்றை முறையாக நிர்வாகம் செய்யவில்லை என்ரும் அறிக்கையில் இருந்து அறியக் கிடைக்கிறது. ஜனாதிபதியின் விருப்பு வெறுப்புக்கமைய தேசிய பாதுகாப்பு சபையை தொலைநோக்கில்லாமல் இயக்கியததானது அதன் செயற்திறனையும், வினைத்திறனையும் பாதித்திருக்கிறது.

மேலும் கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களை உரிய வகையில் பாதுகாப்போடு தொடர்புடைய அங்கங்கள் தமக்கிடையில் பரிமாறி, தேசிய பாதுகாப்புச் சபையைக் கிராமமாகக் கூட்டி உரிய கட்டளைகளைப் பிறப்பித்து  நடவடிக்கையில் இறங்கியிருந்தால் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தவிர்க்கப்பட்டிருக்கும் என்பதை வாக்குமூலங்கள் சுட்டிக்காட்டுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மலல்கொட அறிக்கை
இன்னொன்றையும் இங்கு குறிப்பிடவேண்டும், இந்த விசாரணைக் குழுவுக்கு முன்னர் இந்தத் தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியால் ஏப்ரல் 22 அன்று முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித மலல்¬கொட தலைமையில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செய¬லாளர் பத்¬ம¬சிறி ஜயமான்ன ஆகியோரைக்கொண்ட குழுவை நியமித்தார். இந்தக் குழுவில் ஜனாதிபதியும் வாக்குமோலம் வழங்கினார். இந்தக் குழு யூலை 10 அன்று 140 பக்கங்களைக் கொண்ட தமது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது. இந்த அறிக்கையிலும் ஜனாதிபதி மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்ததைக் கவனிக்க வேண்டும். விஜித் மலல்கொடவும் இந்தத் தெரிவுக்குழுவின் முன் அவர்களின் ஆணைக்குழு விசாரணை குறித்து ஓகஸ்ட் 20 அன்று வாக்குமூலம் வழங்கி இருந்தார்.

முழு உலகையும் உலுக்கிய இந்தத் தாக்குதல் சமபவம் குறித்து ஜனாதிபதி தனது கௌரவப் பிரச்சினை காரணமாகவும், பிரதமருடனான தனிப்பட்ட அரசியல் குரோதம் காரணமாகவும் தாக்குதலுக்கு முன்னரும், தாக்குதலுக்கு பின்னரும் தனது கடமையிலிருந்து மீறியிருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டிய போதும் ஜனாதிபதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதபடி அரசியலமைப்பு சட்டம் அவருக்கு வாய்ப்பையும், சலுகையையும் வழங்கியிருக்கிறது. ஆனால் அதிகாரிகள் மட்டுமே இன்று தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்கள். ஜனாதிபதியும் தன மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை இலகுவாக மறுத்துவிட்டு அதிகாரிகளின் மீது பழியை சுமத்திவிட்டு தப்ப முற்படுவதையே நாம் காண்கிறோம்.
ஜனாதிபதி தப்பலாமா?
இந்த அறிக்கையை புறக்கணிக்கும் அளவுக்கு இந்த குழுவோ, அல்லது குழுவின் விசாரணை நடவைக்கைகளோ, குழுவில் இருந்தவர்களோ அரசியல் பாரபட்சத்துடன் நடத்து கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம் சுமத்த முடியாது. இந்த குழு பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, அதுவும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கக் கூடிய வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட குழு. விசாரணைகள் அத்தனையும் பகிரங்கமானவை. சகல ஊடகங்களுக்கும் விசாரணைகளை அவதானிக்க வழிசெய்யப்பட்டதுடன், அத்தனையின் காணொளியும் நேரடியாக காண்பிக்கப்பட்டன. அவை இன்னமும் பகிரங்கமாக யூ டியூப் போன்ற தளங்களில் மீண்டும் மீண்டும் பார்க்க வழிசெய்யப்பட்டிருக்கின்றன. இப்படி ஒரு சம்பவத்தை முன்கூட்டியே தடுத்திருக்க கூடிய சக்திகள், வழிகள் பற்றி ஆராயப்பட்டு இனிமேலும் நிகழாமல் இருப்பதற்கான வாய்ப்புகளையும் சுட்டிக்காட்டுகின்றன. ஜனாதிபதி மட்டுமன்றி மேலும் பலரும் இதில் எவ்வாறு காரணகர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள் என்பது குறித்து வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் உறுப்புரை 33 ஏ வின் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்குப் பொறுப்புகூற கடமைப்பட்டவர். அப்படியிருக்கும் போது சட்டபூர்வமாக அமைக்கப்பட்ட பாராளுமன்ற விசாரணைக்குழுவின் அறிக்கைக்கு அவர் பதிலளிப்பதும், விதந்துரைப்புகளை நிறைவேற்ற வழிசெய்வதும் அவரின் பொறுப்பு. மாறாக அவர் தனது தவறுகளை மூடிமறைப்பதற்காக நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களை காவுகொடுப்பது முற்றிலும் அராஜகம். அநியாயம்.

இப்படி ஒரு முக்கிய விசாரணையை நாட்டின் பொது மக்களும், அரசியல் சக்திகளும், சர்வதேசமும் வேண்டியிருந்தன. அதனை முறையாக மேற்கொண்ட ஒரு குழுவின் இறுதி அறிக்கையை தன்னிச்சையாகயும், தற்றுணிவிலும் நிராகரித்த ஜனாதிபதியை கண்டிக்க தண்டிக்க என்ன பொறிமுறை உண்டு?

நன்றி - தினக்குரல்

அறிக்கைகளை இங்கிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்
https://www.parliament.lk/uploads/comreports/sc-april-attacks-report-ta.pdf
https://www.parliament.lk/uploads/comreports/sc-april-attacks-report-evidence-vol1.pdf
https://www.parliament.lk/uploads/comreports/sc-april-attacks-report-evidence-vol2.pdf
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates