Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

1948 குடியுரிமை பறிப்பு - கரிநாள் ! - முடிச்சுகளை கட்டவிழ்ப்போம்! - என்.சரவணன்

சுதந்திர இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட முதல் உத்தியோர்கப்பூர்வ சட்டம் குடியுரிமைச் சட்டம் தான். 1948 இலிருந்து தான் சட்டபூர்வமாக தேசிய இன ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது. 

1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு ஒரு புறம் சுதந்திரம் கொடுக்கப்பட்ட வேளை மறுபுறம் இந்திய வம்சாவளி மக்களிடம் இருந்த சுதந்திரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு நாடற்ற அனாதைகளாக ஆக்கப்பட்டார்கள். 1948 இல் குடியுரிமை பறிப்பும், அது போல வாக்குரிமை பறிப்பும் வேக வேகமாக மேற்கொள்ளப்பட்டது தற்செயல் அல்ல. அதற்கான முன் தயாரிப்புகள் என்ன, முன்கதைச் சுருக்கம் என்ன என்பதையும், நாடற்றவர்களாக ஆக்கப்பட்ட அந்தக் கொடூரம் நிகழ்ந்த விதத்தைப் பற்றியும், அதன் விளைவுகளைப் பற்றியும் பதிவு செய்யும் முயற்சியே  இக்கட்டுரை.

மேலும் குடியுரிமை பறிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? என்ன நடந்தது என்பது என்பது பற்றி இன்று தொடரும் குழப்பகரமான தகவல்களைக் கொண்ட விவாதங்களுக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கும் நோக்கில் இது ஆக்கப்பட்டது.

இந்திய தொழிலாளர்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சிக்கு ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாறு உண்டு. அவர்களின் மீதான இனச்சுத்திகரிப்புக்கு பின்புலமாக அமைந்த கருத்துருவாக்கச் செயற்பாடு பல வடிவங்களில் வளர்ச்சியுற்று வந்திருக்கிறது. அதன் நீட்சியாகவே சிங்கள தேசியவாத தலைவர்கள் இதற்கான சந்தர்ப்பம் பார்த்திருந்தார்கள் என்று கருத முடிகிறது.

ஆரம்பம்

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் தொழிலாளர்களைத் தொற்றுநோய்த் தடுப்பு முகாமில் சிறிது காலம் தடுத்து வைத்திருப்பது அன்றுவழமையாக இருந்தது. இதற்கான முழுச் செலவையும் அரசாங்கமே ஏற்று வந்தது. இச் செலவை அரசாங்கம் தொடர்ந்து பொறுப்பேற்க வேண்டுமா என்பது பற்றி ஆராய்ந்து சிபார்சு செய்வதற்காகக் குழுவொன்றை 1925 ஒக்ரோபர் 3ந் திகதி அன்றைய ஆளுநர் நியமித்தார். தொற்றுநோய்த் தடுப்பு முகாமை அமைப்பதற்கும் பேணுவதற்குமான செலவை அரசாங்கமும்; தொழிலாளர்களின் உணவுக்கான செலவை அவர்களை வேலைக்கு அமர்த்தவுள்ளவர்களும் ஏற்க வேண்டும் என்று அக்குழு சிபார்சு செய்தது. டீ. எஸ். சேனநாயக்க முதன் முதலில் சட்ட நிருபண சபைக்கு 1923ம்ஆண்டு மேல் மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆளுநர் நியமித்திருந்த மேற்படி குழுவில் சேனநாயக்காவும் ஒரு உறுப்பினர். அவர் இந்தச் சிபார்சை ஏற்கவில்லை. முழுச் செலவையும் தொழிலாளரை வேலைக்கு அமர்த்தப் போகின்றவர்களே ஏற்க வேண்டும் என்று தனியாகச் சிபார்சு செய்தார். இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு வழங்கப்படும் இது போன்ற சலுகைகள் காரணமாகவே அவர்கள் கூடுதலான எண்ணிக்கையில் வருகின்றார்கள் எனத் தனது தனியான சிபார்சு அறிக்கையில் டீ. எஸ். சேனநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

இந்திய வம்சாவளியினர் மீது டீ. எஸ். சேனநாயக்க கொண்டிருந்த வெறுப்பைப் பற்றி தனியாக பட்டியலிட்டு பதிவு செய்ய முடியும்.

1931 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழு சர்வசன வாக்குரிமை இலங்கை மக்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட போது மலையக மக்களும் ஏக காலத்தில் அந்த வாக்குரிமையை பெற்றார்கள். 1931 இல் வகுப்பு வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கிய போதிலும் டீ. எஸ். சேனநாயக்கவின் தலைமையிலான அமைச்சரவை இந்திய வம்சாவளி வாக்காளர்களின் எண்ணிக்கையை நிர்வாக நடவடிக்கை மூலம் குறைப்பதில் ஈடுபட்டது.

ஏ.ஈ.குணசிங்கவுடன் டீ.எஸ்.சேனநாயக்க

04.03.1941 அன்று இரண்டு இரண்டு விசேட மசோதாக்கள் அரசாங்க சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. ஒன்று குடிவரவைக் கட்டுப்படுத்தும் மசோதா. மற்றது நாட்டில் வாழும் இலங்கையரல்லாதவர்களை தனியான பதிவேட்டில் பதிவு செய்வதற்கான மசோதா (Registration of Non Ceylones Bill). இவ்விரு மசோதாக்களினதும் சூத்திரதாரி டீ.எஸ். சேனநாயக்க. இந்திய வம்சாவளியினரின் வருகையைத் தடுப்பதும் ஏற்கனவே வந்தவர்களைத் தனிமைப்படுத்துவதும் இவ்விரு மசோதாக்களினதும் நோக்கம்.

இந்தியத் தொழிலாளர்கள் தொடர்பாக இந்தியாவுடனான முறுகல் நிலையை தொடர்ந்து பேணி வந்த சேனநாயக்கா அந்த விவாதத்தின் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

"இலங்கைக்கு வரும் தொழிலாளர்கள் ஏழைகள்.. மேலும் தோட்டக்காரர்களின் அடிமைகள். அவர்களுக்கு நாளொன்றுக்கு 20, 30 அலது 40 சதங்களே ஊதியமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி குழந்தைகள், மனைவிகள் அனைவரும் இங்கு அடிமையாக இருக்க வேண்டும், இவர்கள் திரும்பி செல்வதற்கென பணத்தை சேமிக்க இயலாது...

"...தங்கள் மக்களுக்கு உரிமை கோரும் மகத்தான இந்தியா. பணக்கார முதலாளிகளின் தேவைக்காக துரதிஷ்டமான முறையில் மக்களை அனுப்பிவைத்த மகத்தான இந்தியா. இந்த மக்கள் வயதான மற்றும் வேலை செய்ய முடியாத வரை தீவை விட்டு வெளியேற முடியாது. அப்படியிருந்தும் இந்த மக்களுக்கு அவர்களின் உரிமைகளை வழங்க வேண்டும் என்று இந்தியா சொல்கிறது... இந்திய வணிகர்கள் இங்கு வந்து தங்கள் விருப்பத்துக்கு வியாபாரம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த உழைப்பாளிகள் அடிமைகளாக்கப்பட்டனர். இதுவா ஒப்பந்தம் - அவர்கள் அதை ஒப்பந்தம் என்று அழைத்தால் – சுயமரியாதையுள்ள மக்களாக அவர்களை ஆக்க முடியுமா? இதை அவர்கள் கௌரவமானது என்கிறார்களா?

இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்திருப்பதால், அவர்கள் தங்கள் நாட்டவர்களை அடிமைகளாக வேறு நாடுகளுக்கு அனுப்புகிறார்கள் என்றால் அதற்கு நாமும் சம்மதிக்க வேண்டுமா...?"

என்றார்

இந்த விவாதத்தின் போது ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆற்றிய உரையானது அவரின் வாழ்க்கையில் ஆற்றிய சிறந்த உரை என ராஜன் ஹூல் குறிப்பிடுகிறார். 

இம் மசோதாக்களுக்கு 29 பேர் ஆதரவாகவும் 12 பேர் எதிராகவும் வாக்களித்தனர். கே.நடேச ஐயர் (ஹற்றன்), எஸ். வைத்திலிங்கம் (தலவாக்கலை), ஜீ.ஜீ. பொன்னம்பலம் (பருத்தித்துறை), ஆர்.ஸ்ரீ.பத்மநாதன் (மன்னார்), எஸ்.நடேசன் (காங்கேசன்துறை), எச்.ஆர். பிரீமன் (அநுராதபுரம்) ஆகிய தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும் ஆறு நியமன உறுப்பினர்களுமே எதிர்த்து வாக்களித்தவர்கள்.

இரு மசோதாக்களும் இரண்டாவது வாசிப்புக்குப் பின் நிலையியற் குழுவுக்கு அனுப்பப்பட்டன. அங்கிருந்து சபைக்குத் திரும்பவில்லை.

இருபதாம் நூற்றாண்டின் முதல் அரை நூற்றாண்டு இலங்கை - இந்திய உறவில் செல்வாக்கு செலுத்தும் தொடர் காரணியாக இந்திய வம்சாவளியினரின் பிரச்சினைகள் தான் இருந்தன என்பதை நாம் விளங்கிக் கொள்தல் அவசியம்.

மேற்படி விவகாரம் தொடர்பாக இந்தியாவில் மேல் மட்டத்தில் கடும் உரையாடல்கள் நிகழ்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அன்றைய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் போஸ்மன் (G.S.Bosman) 1941 செப்டம்பரில் பர்மா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்துவிட்டு நவம்பர் 22ஆம் திகதி சமர்ப்பித்த அறிக்கை மிகவும் முக்கியமானது. பல பக்கங்களைக் கொண்ட விரிவான அறிக்கையும் அது தொடர்பான கடிதப் பரிமாறலையும் “The council of State Debates Volume II, 1941” என்கிற அறிக்கையில் காணக் கிடைக்கிறது. 

இலங்கைக்கு அவர்களின் குழு கொழும்பில் 1941ஆம் ஆண்டு செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 21 வரை 17 நாட்கள் தங்கியிருந்து பதினைந்து சந்திப்புகளை மேற்கொண்டுள்ளனர். அரசாங்க தரப்பினரை மட்டுமன்றி இந்திய மக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடியதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஏன் இந்த பீதி

இந்திய வம்சாவளி மக்களை அநாதரவான நிலைக்குத் தள்ள அவர்களுக்கு இருந்த காரணங்கள் இவை தான்.

இந்தியத் தொழிலாளர்களின் பெருக்கம் பற்றி இனவாதிகள் கொண்டிருந்த பயத்தின் காரணமாக அரசியல் அதிகாரத்தை நோக்கி இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிரான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது.

இடதுசாரி இயக்கங்களின் தளமாக மலையகம் ஆகியிருந்தது. இந்தியவம்சாவளி தொழிலாளர்கள் இடது சாரி இயக்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளால் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அரசாங்க சபையில் இடதுசாரிகள் இதனால் பல பிரதிநிதிகளைக் கொண்டிருந்தார்கள். இடதுசாரிகள் பிரதான எதிர்க்கட்சியாக ஆகியிருந்தார்கள். இலங்கையில் பாராளுமன்றம் “வலதும் – இடதும்” என்று வரலாற்றில் அடையாளம் காணப்பட்ட தருணம் அது. அதுபோல் இந்திய வம்சாவழித் தமிழர்களின் வாக்காளார்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து வந்தமையானது சிங்களத் தலைவர்களுக்கு மேலும் பீதியைக் கிளப்பியது. 1928 இல் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 100,000 ஆக உயர்ந்தது, 1936 இல் அது 145,000 ஆக ஆனது. 1938 இல் அதுவே 170,000 ஆக உயர்ந்தது. அடுத்த ஆண்டே 1939 இல் சுமார் 250,000 வாக்காளர்கள் மதிப்பிடப்பட்டிருந்தார்கள். பாராளுமன்றத்தில் மொத்த 95 உறுப்பினர்களில்  20 உறுப்பினர்கள் இடதுசாரிக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள்.

மலையகப் பிரதேசங்கள்` இடதுசாரிகளின் களங்களாக அமைந்ததில் ஆச்சரிமில்லை அதுவரை மலையக வாக்குகளால் பெரும்பலனை அடைந்தவர்கள் இடதுசாரிகளே. 1931, 1936, 1941, 1947 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மலையக வாக்குகளால் இடதுசாரி இயக்கங்களுக்கு பிரதிநிதிகள் தெரிவாகினர். இடதுசாரிகளின் தொழிற்சங்கங்கள் வலுவாக மலையகத்தில் தான் இயங்கின. அவர்களின் தொழிற்சங்க களமாக மட்டுமல்ல அரசியல் களமாகவும் மலையகம் தான் இருந்தது. மலையகத் தொழிலாள வர்க்கத்துடன் பணியாற்றித்தான் தம்மை உருவாக்கி, பலப்படுத்திக்கொண்டார்கள். பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதனை இடதுசாரிகள் எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள் என்பது உண்மை தான் ஆனால் அவர்கள் செயலில் இறங்கவில்லை. பாராளுமன்ற உரைகளுடன் தம்மைச் சுருக்கிக் கொண்டனர். அவர்கள் பாராளுமன்ற வரம்புக்குள் கூட போராடவில்லை. பிரஜாவுரிமை பறிக்கப்பட்டதன் அரசியல் நட்டத்தை உண்மையில் அவர்கள் தான் அனுபவித்தார்கள். அவர்கள் ஏற்கனவே மலையகத்தில் பெற்ற தேர்தல் வெற்றி அதன் பிறகு அவர்களால் எட்டமுடியாது போனது. வாக்குரிமை இழப்பு அவர்களைத் தான் நேரடியாகத் தாக்கியது.

எதிர்காலத்தில் இடதுசாரித் தலைமையில் ஒரு கூட்டரசாங்கம் ஆட்சியமைக்கும் சாத்தியங்கள் கூட புலப்பட்ட காலம். அப்படி ஒரு இடதுசாரி கூட்டரசாங்கம் அமைக்கப்படுவதாயின் அதில் அங்கம் வகிக்கக் கூடிய நட்பு சக்திகளாக அவர்களுக்கு மலையக மக்களின் தரப்பே இருந்தது என்றால் அது மிகையில்லை. அப்பேர்பட்ட ‘மலையகத் தொழிலாளர் வர்க்கப்’ பிரிவினரின் பலத்தை நிரந்தரமாக இல்லாது செய்துவிட்டால் நீண்ட காலத்துக்கு ஆட்சிசெலுத்தும் வல்லமையை இடதுசாரிகள் இழந்துவிடும். ஐ.தே.க வெற்றிபெற்றுவிட முடியும் என்பது டீ.எஸ்.சேனநாயக்கவின் எண்ணமாக இருந்தது இயல்பே. குடியுரிமை பறிக்கப்பட்டு மூன்றாண்டுகளில் நடத்தப்பட்ட 1952 தேர்தலில் சேனநாயக்கவின் அந்தக் கணிப்பு பலித்ததை காணலாம். 

7 இலிருந்து 2 ஆக குறைந்த பிரதிநிதித்துவம்

1938இல் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமை மறுப்பு ஒரு சட்டமாக வந்தது. இதனால் 1939 ஆம் ஆண்டு 2,25,000 ஆக இருந்த இந்திய வாக்காளர்களின் தொகை 1943இல் 1,68,000 ஆக குறைந்தது. இலங்கையின் அரசுத் துறை ஏனைய துறையில் பணியாற்றியவர் 1936இல் 36 சதமாக இருந்தது. இது 1939இல் 19 சதமாகவும், 1941இல் 12 சதமாகவும் படிப்படியாக குறைக்கப்பட்டது.

1947 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 225,000 இந்திய வம்சாவழித் தமிழர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தனர். மலையகத்திலிருந்து வென்ற எட்டுப் பேரும் மொத்தமாக பெற்ற வாக்குகள் 78,817 வாக்குகள் தான். இந்திய வம்சாவளியினரின் மூன்றில் இரண்டு 146,183 வாக்குகளும் இடதுசாரிகளுக்கு தான் அளிக்கப்பட்டது. 

1952 மே 24, 26, 28, 30ஆம் திகதிகளில் இரண்டாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் இடம்பெற்றது. 1947 தேர்தலில் மலையகத்தின் தமிழ் பிரதிநிதிகளாக 7 பேர் அங்கம் வகித்தனர். ஆனால், 10 லட்சம் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதால் 1952 -ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கும்,வாக்களிப்பதற்குமான உரிமையை இழந்தததனால் இருவரை மட்டுமே அனுப்பமுடிந்தது. இத்தேர்தலில் நுவரெலியா தேர்தல் தொகுதியில் இரத்தினமும் (842 வாக்குகள்), அப்புத்தலையில் கே.சிவசாமி (94 வாக்குகள்) ஆகிய இரு இந்தியத் தமிழர்கள் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தனர். எஸ். வைத்திலிங்கம் நியமன உறுப்பினராகத் தெரிவானார். 

மலையக மக்களை அரசியல் ரீதியாக பழிவாங்கி இத்தேர்தலின் மூலம் முடக்கினர். அவர்களை அநாதரவான நிலைக்குத் தள்ளியது சிங்கள ஆளும் வர்க்கம். இலங்கையின் பொருளாதாரத்தின் பிரதான முதுகெலும்பாக பெருந்தோட்டம் இருந்தது. அதை தாங்கி, சுமந்து, பேணி தொடர் வருமானத்தை ஈட்டித் தந்த அந்தத தொழிலாளர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்பட்டதால் அம்மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பற்றியோ, அரசியல் அபிலாசைகள் பற்றியோ பிரநிதிநிதித்துவ சபையில் குரலெழுப்பும் வாய்ப்பற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.

ஒரு புறம் மலையக மக்களுக்கு ஐந்து பிரதிநிதிகள் இல்லாது போனது. அதே வேலை ஐ.தே.கவுக்கு ஐந்து ஆசனங்கள் அதிகரித்தன. அதாவது 47 இலிருந்து 52 ஆக உயர்ந்தது.  சுதந்திர இலங்கையின் முதலாவது எதிர்க்கட்சித் தலைமையை வகிக்கும் வாய்ப்பை இலங்கையின் இடதுசாரித் தலைமைகளுக்கு இருந்தது. ஆனால் இடதுசாரிகள் எதிர்க்கட்சித் தலைமையை ஏற்க உடன்படவில்லை. முதலாளித்துவ அரசாங்கத்தில் பணியாற்ற மாட்டோம் எனவும் அதற்கு விளக்கமளித்தனர். ஆயினும் ஒரு முற்போக்கான மாற்று அரசாங்கத்தை அமைப்பவர்களுக்கு உதவி செய்யத் தாம் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தனர்.  அதன் பின்னர் 1950 யூன் மாதம் கலாநிதி என்.எம்.பெரேரா எதிர்க்கட்சித் தலைவராக தெரிவானார். 

அதுபோல மலையக மக்களுக்கான பிரதிநிதிகளும் கணிசமான அளவு பாராளுமன்றத்தில் இடம் பிடித்திருந்தார்கள். அவர்கள் வலதுசாரி தலைவர்களை சார்ந்திருப்பதை விட இடதுசாரிகளுக்கே நெருக்கமானவர்களாக இருந்தார்கள். இந்த கூட்டு ஐ.தே.க உள்ளிட்ட வலதுசாரி தேசியவாத சக்திகளுக்கு சவாலானதாகவே இருந்தது. வளர்ந்து வந்த சிங்கள தேசியவாத சக்திகளால் பெருந்தோட்டப் பகுதிகளில் செல்வாக்கு செலுத்த முடியவில்லை. அவர்கள் தேர்தல்களும் வெற்றி பெற முடியவில்லை.

மத்திய மலைநாட்டுக் காடுகளை வளமாகவும், இலங்கையின் பொருளாதாரத்துக்கான அடிப்படைகளும் மலையக மக்களால் ஆக்கப்பட்டுவிட்டது. இனி புதிதாக அதனை வளப்படுத்தத் தேவையில்லை. இனி வளப்படுத்தியவற்றை ஆக்கிரமித்து, அவர்களை விரட்டிவிட்டு அந்த இடத்துக்கு சிங்களவர்களை நிரப்புவது தான் ஒரே தேவை.

1946 ஆம் ஆண்டு மலையகத்தில் 400 ஏக்கர் காணியை இனவாதிகள் பலாத்காரமாக பறிக்க எடுத்த முயற்சியின் விளைவாக நேவ்ஸ்மியர் (KINAVESMIRE) போராட்டம் ஆரம்பமானது. அது இந்தியாவில் இருந்து நேரு தலையிடுமளவுக்கு பெரிதானது. இங்கிலாந்தின் கோமறைக் கழகம் (Privy council) இறுதியில் மலையகத் தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்திருந்தது. 01.07.1947 அன்று அரச சபையில் நேவ்ஸ்மியர் சிக்கல் குறித்து உரையாற்றிய சேனநாயக்க “இது பத்தாண்டுகளாக இழுபறிபட்டுவரும் பிரச்சினை” என்றார். இந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள் அந்த நிலத்திற்கு உரித்துடையவர்கள் அல்லர் என்றும் அவர்களுக்கு உள்ளூர் கிராம சபைகளின் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்குக் கூட வாக்குரிமை அற்றவர்கள்” என்றும் வாதிட்டார். இறுதில் இதே சேனநாயக்க தான் பிரதமரானதும் முதலில் ஒட்டுமொத்த மக்களின் குடியுரிமையை பறித்தெடுக்கின்ற கைங்கரியத்தை செய்து முடித்தார். 


பிரித்தானிய குடியுரிமைச் சட்டம்

பிரித்தானியர் சுதந்திரம் வழங்குவதற்கான தீர்மானத்தை எட்டியவேளை அதற்கான பல தரப்பட்ட முன்னேற்பாடுகள் நிகழ்ந்தன. நாட்டின் நிர்வாக, சட்ட முகாமைத்துவ விடயங்களிலும் அவர்கள் முன்னேற்பாடான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்கள். அரசியலமைப்பு சீர்திருத்தம் அதில் முக்கியமானது. அதுபோல அடிப்படைச் சட்டங்களிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள். பிரித்தானியாவிடமிருந்து இலங்கையை பூரணமாக விடுவிக்கத் தயாராக இருக்கவில்லை. டொமினியன் அந்தஸ்துள்ள ஒரு நாடாகவே பேணுவதற்கான ஏற்பாடு தான் அது.

காலனித்துவ காலத்தில் இலங்கையர்கள் அனைவரும் பிரித்தானிய முடிக்குரிய பிரஜைகள் தான். பிரித்தானிய முடிக்கு கீழ் இருந்த கனடா 1946 இல் தனியான கனேடிய குடியுரிமையை அறிமுகப்படுத்தியது. 1947 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டு முடிவின் பிரகாரம் பிரித்தானிய முடியின் கீழ் இருந்த அவுஸ்திரேலியா, கனடா, இலங்கை, இந்தியா நியூஃபவுண்ட்லாந்து, நியூசீலண்ட், பாகிஸ்தான், தெற்கு ரொடீசியா (Southern Rhodesia), தென்னாபிரிக்க யூனியன் என்பவற்றுக்கு சுயாட்சி டொமினியன் அந்தஸ்தை வழங்க தீர்மானித்தது.

1948 ஆம் ஆண்டு பிரித்தானிய குடியுரிமைச் சட்டம் (British Nationality Act of 1948) பிரித்தானியாவில் கொண்டுவரப்பட்டது. பிரித்தானியா உள்ளிட்ட அதன் காலனித்துவ நாடுகளுக்கும் அமுலாகும் வகையில் அச்சட்டம் கொண்டுவரப்பட்டது. 1947 -1951 க்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் மேற்படி நாடுகள் தமது நாடுகளில் குடியுரிமைச் சட்டங்களை அமுல்படுத்தின. 

  • ஆஸ்திரேலியா - 26 ஜனவரி 1949
  • கனடா - 1 ஜனவரி 1947
  • இலங்கை - 1 ஜனவரி 1949
  • இந்தியா - 26 ஜனவரி 1950
  • நியூஃபவுண்ட்லாந்து - 31 மார்ச் 1949
  • நியூசிலாந்து - 1 ஜனவரி 1949
  • பாகிஸ்தான் - 13 ஏப்ரல் 1951
  • தென்னாப்பிரிக்கா - 2 செப்டம்பர் 1949
  • தெற்கு ரொடீசியா - 1 ஜனவரி 1950
  • இங்கிலாந்து - 1 ஜனவரி 1949


பிரித்தானியாவின் கீழ் இருந்த காலனித்துவ நாடுகள் சுதந்திரம் பெற்றாலும். டொமினியன் நாடுகளாக பிரித்தானியாவின் கைக்குள் தான் இருந்தன. அவை படிப்படியாக டொமினியன் அந்தஸ்திலிருந்து விடுவிக்கப்பட்டன. இந்தியா மூன்றே ஆண்டிகளில் அதாவது 1950 இல் விடுவிக்கப்பட்டாலும், இலங்கை விடுவிக்கப்படுவதற்கு 28 ஆண்டுகளானது. அதாவது 1972 ஆம் ஆண்டானது.

மேற்படி காலனித்துவ நாடுகளில் இந்த குடியுரிமைச் சட்டத்தின் படி பிறப்பால் ஒருவர் குடியுரிமை பெற முடியும் என்கிற சட்ட விதி அறிமுகப்படுத்தபட்டாலும் 5(1)(d) விதியின் பிரகாரம் அது மட்டுபடுத்தப்பட்டது. பிறப்பால் குடியுரிமையாதல் என்பது இலங்கைக்கு மாத்திரம் விதிவிலக்கானது. அது வேறெதற்காகவும் இல்லை, இந்திய வம்சாவளியினரை இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்ட அரசியல் நெருக்கடிகளின் விளைவே.

வேறெந்த நாட்டிலும் இல்லாத கடுமையான பிரஜாவுரிமைச் சட்டம் இலங்கையில் கொண்டுவரப்பட்டது. சில நாடுகளில் அந்நாடுகளில் பிறந்தவர்களுக்கு கிடைத்து விடுகிறது. சில நாடுகளில் குறிப்பிட்ட சில காலம் வாழ்ந்தாலே கிடைத்துவிடுகிறது. சில நாடுகளில் தாம் குடியேறிய நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வதாக ஒப்புதல் அளித்துவிட்டாலே கிடைத்துவிடுகிறது. ஆனால் இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக வாழ்ந்து, எப்போதோ இந்தியாவுடன் தொடர்பிழந்துபோய்விட்ட லட்ச்சக்கணக்கான மக்களுக்கு, அதுவும் ஏற்கெனவே இதே நாட்டில் பிரஜாவுரிமை அனுபவித்தவர்களிடம் இருந்து அந்த உரிமை வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டது.

ஒருவர் தன்னை இலங்கைப் பிரஜை என்பதை நிரூபிக்க தனது தந்தை அல்லது தந்தைவழிப் பாட்டன் இலங்கையில் பிறந்தவரென்பதை நிரூபித்தாக வேண்டும். அவர் இலங்கைக்கு வெளியில் பிறந்திருந்தால் தந்தையும், தந்தையின் தந்தையும், முப்பாட்டனும் இலங்கையில் பிறந்ததற்கான சான்றுகளை சமர்ப்பித்தாக வேண்டும். இந்திய வம்சாவளியினர் பலர் அப்போது பிறப்புப் பதிவை மேற்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. ஏன் இலங்கையில் கூட 1895இலிருந்து தான் பரப்பைப் பதிவு செய்வது கட்டாயமாக ஆக்கப்பட்டது. அதுவரை பிறப்புப் பதிவு அந்தளவு முக்கியமாக கருதப்பட்டதில்லை.

இந்த நிலையில் இலங்கை உள்ளிட்ட நாடுகள் சுதந்திரமடையும் வாய்ப்புகள் நெருங்கிக்கொண்டிருந்தன. எதிர்கால டொமினியன் இலங்கையின் பிரஜைகள் யார் என்பதை வரையறுக்கும் தேவை பிரித்தானியருக்கு அவசியப்பட்டது. அது போல இலங்கையின் சுதேசிய தலைவர்களும் அப்படி பிரஜைகளை வரைவிலக்கணப்படுத்தும் போது இந்திய வம்சாவளியினரை இலங்கையில் இருந்து விரட்டியடிக்கும் வேலையையும் செய்யத் துணிந்தார்கள். இதன் விளைவு தான் பிரஜாவுரிமைச் சட்டம்.

குடியுரிமைச் சட்டத்தின் உள்ளடக்கம்

20 ஓகஸ்ட் 1948ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டம், 15 நவம்பர் 1948இல் இது சட்டமாக அமுலுக்கு வந்தது.

இதன்படி  வம்சாவழி சட்டம், பதிவு சட்டம் என 2 முறையை வைத்தனர். வம்சாவழியாக பல நூற்றாண்டுகளாக இங்கேயே உள்ளோம் என்பதை தமிழர், சோனகர்கள் ஆதாரங்களுடன் நிருபித்தால் அவர்களுக்கு வம்சாவழி சட்டம் பொருந்தும். பதிவு சட்டம் என்பது இந்தியாவிலிருந்து வந்து தோட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கானது. அவர்கள் 1948 நவம்பர் 15க்குள் இலங்கையில் பிறந்திருக்க வேண்டும், அதற்கு முன்பு இரண்டு தலைமுறையினர் இலங்கையில் வாழ்ந்திருக்க வேண்டும் அதற்க்கான சான்றுகளை காட்டி பதிவுக்கு மனு செய்யவேண்டும். அரசாங்கம் முடிவு பண்ணினால் மட்டுமே அவர்களுக்கு குடியரிமை வழங்கப்படும் என்று வரையறுக்கப்பட்டது.

1928 டொனமூர் கமிஷன் இலங்கையில் வாழும் இந்தியர்களில் 50 வீதமானோர் இலங்கையில் பிறந்தவர்கள் என்கிறது. அன்று இலங்கையில் 626,123 பேர் இந்தியர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தார்கள். 1938 ஜாக்சனின் அறிக்கைப்படி 60 வீதமானர்கள் இலங்கையில் பிறந்தவர்கள் என்றது. 1946இல் சோல்பரி அறிக்கை 80 வீதமான இந்தியவம்சாவளியினர் இலங்கையில் பிறந்தவர்கள் என்றது. இந்த மூன்று அறிக்கைகளும் இந்திய வம்சாவளியினர் இலங்கையில் பூரண உரிமைகள் அனுபவிக்க உரிமையுடையவர்கள் என்பதை உறுதிப்படுத்தியிருந்தன.

இந்திய வம்சாவளித் தமிழர்களில் பலர் தமக்கு முன் இரண்டு மூன்று தலைமுறையினர் இலங்கையில் பிறந்திருந்தாலும் கூட அதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இருக்கவில்லை. பெரும்பாலானவர்கள் ஆஸ்பத்திரிகளில் பிறந்ததில்லை. அப்படியான கிட்டிய ஆஸ்பத்திரிகள் கூட தோட்டங்களில் இருக்கவில்லை. அத்தாய்மாரை லயன்களில் இருந்து தூர இடங்களுக்கு அழைத்துச் சென்று மகப்பேறு பார்க்கும் அளவுக்கு வசதியான பாதைகளோ, போக்குவரத்து வசதிகளோ கூட கிடையாது. ஆகவே அன்று லயன்களில் பிறந்தவர்களே பலர். அப்படிப் பிறந்தவர்களுக்கு சரியான பதிவுகள் கூட இருக்கவில்லை. சுதந்திரத்துக்குப் பின்னர் வரை சில தசாப்தங்களுக்கு இத்தகைய நிலை தான் நீடித்திருந்தன. பதிவுகளை உருதிசெய்யாததனால் 7 லட்சம் வரையான இந்திய வம்சாவழித் தமிழர் நாடற்றவர் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். 1949 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் இல. 48 இன் மூலம் அவர்களது வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தின் பிரகாரம் 5,000 பேர் மட்டுமே குடியுரிமைக்குத் தகுதி பெற்றார்கள். ஏழு லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் அதாவது சனத்தொகையில் 11 வீதத்தினருக்கு குடியுரிமை புறக்கணிக்கப்பட்டு நாடற்றவர்களாகினர். இது இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர். தமிழர்களின் சனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள்.

டீ.எஸ்.சேனநாயக்க : பிரதான சூத்திரதாரி

சுதந்திரத்துக்கு முதல் ஆண்டு அதாவது 1947 ஆம் ஆண்டு. இலங்கையில் பொதுத்தேர்தல் நடந்தது. ஆங்கிலேயர்கள் இலங்கையை விட்டுப் போவதற்கு தயார் ஆவதற்கு முன்னர். இலங்கைக்கு. ஒரு நிலையான ஆட்சியை நிறுவி விட்டு போவதற்காக அந்த தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த காலப்பகுதியில். ஒரு கட்சி அரசியல் என்பது அவ்வளவு பலமாக இருக்கவில்லை. இலங்கைக்கான ஒரு தேசிய கட்சியின் தேவை அப்போது உணரப்பட்டது இந்த தேவையை உணர்ந்ததே சேனநாயக்க அப்போதைய முக்கியமான. அரசிய கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு கட்சியை உருவாக்க முயற்சித்தார்.  

இதன்படி டி எஸ். சேனநாயக்க பல அமைப்புகளையும் கட்சிகளையும்;  குறிப்பாக இனக் கட்சிகளையும், பிரதேச கட்சிகளுக்கும்; இந்த புது கட்சியை தொடங்குவதற்கு அழைப்பு விடுத்தார்.  பல கட்சிகள் இவ்வழைப்பை ஏற்றுக்கொண்டன.

இதைப் பற்றி பிற்காலத்தில் ஜே ஆர் ஜெயவர்த்தனவின் ஊடக செயலாளராக இருந்த எஸ்.பியசேன தனது “மூன்று நாடுகளில் ஏழு தசாப்தகால ஊடக அனுபவம் " என்கிற சிங்கள நூலில் இப்படி  குறிப்பிடுகிறார்.

“1946 டி டி.எஸ். சேனாநாயக்க தனிக் கட்சியொன்றை ஆரம்பிபதர்காக சிங்கள மகா சபைத் தலைவர் எஸ்.டப்லியு.ஆர்.டி. பண்டாநாயக்கவுக்கும், தேசிய காங்கிரசின் தலைவர் ஜார்ஜ் ஈ. த சில்வாவுக்கும், வடக்கு மாகாணத்தை சேர்ந்த அருணாச்சலம் மகாதேவா, எஸ். நடேசன், மற்றும் ஜெகநாதன் தியாகராஜா ஆகிய அரசாங்க சபை உறுப்பினர்களுக்கும் முஸ்லிம் லீக்கின் தலைவர் டீ.பி. ஜாயா சோனகர் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.ஏ. ராசிக் போன்றோருக்கு விடுத்த அழைப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டனர் அதன் பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சியை அவர்கள் தோற்றுவித்தனர்.”

அதற்கடுத்த 1947 ஆம் ஆண்டு யூலை மாதம் 23ஆம் திகதி சோல்பரி திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட முதலாவது இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 1947 இல் நடத்தப்பட்டது. ஜூலை 23 முதல் ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வரையில் 19 தினங்கள் இந்நாட்டின் முதலாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிகப் பெரும் சவாலாக இருந்த சக்தி இடதுசாரிக் கட்சிகளே.

அப்போது டீ.எஸ்.சேனநாயக்க பற்றிய பெரிய அளவில் தனிநபர் பிம்பம் ஊதிப் பெருபிக்கபட்டு இருந்த சூழல் என்பதால் அவர் தலைமையிலான ஐ.தே.கவுக்கு பெரும் ஆதரவு கிடைக்கும் என்று நம்பப்பட்டது. அன்றைய லேக் ஹவுஸ் பத்திரிகைகள் ஐதேகவுக்கு ஆதரவாகவும், இடதுசாரிகளுக்கு பாதகமாகவும் செய்திகள் வெளியிட்டன.

ஆனால் அது பலிக்கவில்லை. யூலை 23 அன்று முதல் பத்து தொகுதிகளில் நடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே ஐ.தே.க வென்றது. நான்கு தொகுதிகளில் லங்கா சமசமாஜக் கட்சி வென்றது. கொம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் சுயேச்சை வேட்பாளர்கள் எஞ்சிய மூன்று தொகுதிகளில் வென்றார்கள். முதலாவது நாள் தேர்தலிலேயே ஐ.தே.கவின் கனவு கலைந்தது. ஏனைய தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து கலக்கமுற்றது.

1947 ஆகஸ்ட் 26 தினமின பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் இப்படி குறிப்பிடபடுகிறது...

“இதுவரை வெளியான முடிவுகளின் படி இடதுசாரிக் கட்சிகள் நான்கு அல்லது ஐந்து ஆசனங்களை கைப்பற்றிய போதும் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான பலமான கூட்டை உருவாக்க இயலும் எனக் கருத முடியாது. அதுபோல அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட இடதுசாரிகளும் அரசியலில் ஆளுமை மிக்கவர்களாகவோ, மக்கள் சேவையில் பிரசித்தி பெற்றவர்களாகவோ இல்லை. முதல் நாள் தேர்தல் முடிவுகளை வைத்து இத்தகைய கணிப்பை கூற முடியாவிட்டாலும் இனி வரும் தேர்தல் முடிவுகளும் இதுபோன்றே இருக்குமாயின் எதிர்காலத்தைப் பற்றி கணிப்பது ஒன்றும் கடினமில்லை....” 

தேர்தல் காலத்தில் இத்தகைய ஒரு பீதியைக் கிளப்பி விடுவதன் மூலம் இடதுசாரிகளின் வெற்றி வாய்ப்பின் மீதான எச்சரிக்கையை அப்பத்திரிகை செய்தது.

இறுதியில் 95 ஆசனங்களில் ஐ.தே.கவால் வேல முடிந்தது 42தொகுதிகளில் மாத்திரம் தான். இன்னும் சொல்லப்போனால். இத்தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு அறுதிப் பெரும்பான்மையை ஐ.தே.க பெறத் தவறி இருந்தது. இன்னும் சொல்லப் போனால் மொத்தத்தில் எதிர்க்கட்சிகளே அதிக ஆசனங்களைக் கொண்டிருந்தன. இதோ தேர்தல் முடிவுகள்.

  • ஐக்கிய தேசிய கட்சி - 42
  • லங்கா சமசமாஜ கட்சி - 10
  • தமிழ் காங்கிரஸ் - 07
  • இலங்கை இந்தியர் காங்கிரஸ் - 06
  • போல்ஷெவிக் லெனினின்ஸ்ட் கட்சி - 05
  • இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி - 03
  • தொழிலாளர் கட்சி - 1
  • சுயேச்சை – 21

இந்தத் தேர்தல் முடிவுகள் டீ.எஸ்.சேனநாயக்கவுக்கு பேரிடியாக இருந்தது. அது மட்டுமன்றி வென்ற 42 ஆசனங்களில் 8 பேர் பண்டாரநாயக்கவின் சிங்கள மகா சபையைச் சேர்ந்தவர்கள். 

இந்த நிலையைப் பற்றி கலாநிதி கே.எம்.டி.சில்வா இப்படி குறிப்பிடுகிறார். 

டீ.எஸ்.சேனநாயக்கவுக்கு அன்று இருந்த செல்வாக்கு காரணமாக சிங்கள மக்கள் அதிகமாக ஐ.தே.க.வுக்கே ஆதரவு வழங்குவார்கள் என்று நம்பிய போதும் அக்கட்சிக்கு பலமாக இருந்தது எஸ்.டபிள்யு.பண்டாரநாயக்கவும் அவரின் சிங்கள மகாசபையுமே. 95 ஆசனங்களில் 42 ஆசனங்கள் ஐ.தே.க வென்றாலும் அதில் அதிகமானோர் பண்டாரநாயக்கவின் சிங்கள மகா சபையை சேர்ந்தவர்களும் அவருக்கு கிட்டிய ஆதரவாளர்களுமே. 

இந்த நிலையில் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பான்மை பலத்தை திரட்ட வேண்டிய நிர்ப்பந்தம் டீ.எஸ்.சேனநாயக்கவுக்கு ஏற்பட்டது. 

ஆட்சி அமைப்பதற்கு வேறு தரப்புகளும் இதே வேளை முயற்சிகளை செய்தன. அப்படி முயற்சி செய்தவர்களில் ஒருவர் குருநாகலை தொகுதியில் தெரிவான எச்.ஸ்ரீ.நிஸ்ஸங்க. கொழும்பில் இருந்த அவரின் ‘யமுனா இல்லத்தில்’ இதற்கான ஒரு சந்திப்பை அவர் ஒழுங்கு செய்தார். அங்கு தேர்தலில் தெரிவான பலர் ஒன்று கூடினார்கள். இறுதியில் அவர்கள் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவை பிரதமராகக் கொண்ட அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று ஏகோபித்த முடிவை எடுத்தார்கள். இதில் தமிழ் உறுப்பினர்கள் உடன்படவில்லை.

இந்தக் குழுவினர் பண்டாரநாயக்கவை சென்று சந்தித்து; உங்களுக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது என ஆளுநரிடம் சென்று தெரிவியுங்கள் என்று கோரினார்கள். இடதுசாரிகளின் ஆதரவையும் அவருக்காக திரட்டித் தருவதற்கான வேலைகளை தாம் செய்வதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் பண்டாரநாயக்க எடுத்த எடுப்பில் இந்த யோசனையை நிராகரித்தார். எனது கட்சி ஐ.தே.க. எனது தலைவர் சேனநாயக்க; அவர் அரசாங்கத்தை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகையில் நான் அவரை மீறி அரசாங்கத்தை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என அந்த யோசனையை மறுத்து விட்டார். அந்தக் குழு பெரும் ஏமாற்றத்துடன் வெளியேறி பண்டாரநாயக்கவை திட்டித் தீர்த்தது.

இதனைத் தொடன்று சேனநாயக்க கட்சிகளையும் சுயேட்சை உறுப்பினர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். தமிழ் காங்கிரசையும் அழைத்தார். தமிழ் காங்கிரஸ் அவ்வழைப்பை நிராகரித்து விட்டது. அடுத்ததாக அவர் இலங்கை இந்தியர் காங்கிரசை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். தொண்டமானும், ஜோர்ஜ் மோத்தாவும் இணைவது குறித்து பரிசீலிக்கத் தயார் என்று கூறிய போதும் ஐ.தே.க வில் இருந்த ஏனைய உறுப்பினர்கள் இலங்கை இந்தியர் காங்கிரசை இணைத்துக் கொள்வதற்கு மறுப்பு தெரிவித்தன. அது ஒரு கட்சி இல்லை என்றும், தொழிலாளர்களின் சங்கம் மட்டுமே என்று அவர்கள் வாதிட்டார்கள். (மலல்கொட)

அடுத்ததாக வடக்கை சேர்ந்த சுயாதீன தமிழ் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேரம் பேசலின் படி சி.சுந்தரலிங்கம், சிற்றம்பலம் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும் சில தமிழ் உறுப்பினர்களையும் சிங்கள உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டார், மேலும் சோல்பரி திட்டத்தின் பிரகாரம் ஆளுனரால் நியமிக்கப்பட்ட 6 உறுப்பினர்களையும் சேர்த்துக் கொண்டு அரசாங்கத்தை அமைத்தார் சேனநாயக்க. ஏ.ஈ.குணசிங்கவும் இணைந்துகொண்டார். இணைந்து சுயாதீன உறுப்பினர்கள் இவர்கள் தான்.

  • சீ. சுந்தரலிங்கம் (வவுனியா)
  • சீ. சித்தம்பலம் (மன்னார்)
  • ஆல்ஃப்ரட் தம்பியா (ஊர்காவற்துறை)
  • வீ. நல்லையா (கல்குடா)
  • எஸ். யூ. எதிரிமன்னசிங்கம் (பத்திரிப்பு)
  • விக்டர் ரத்தநாயக்க (தெணியாய)
  • எச்.ஆர்.யூ. பிரேமச்சந்திர (கடுகண்ணாவ)
  • கே.வி.டி. சுகததாஸ் (வேலிமட)

இவ்வாறு ஆட்சி அமைத்துக் கொண்ட போதும் டீ.எஸ்.சேனநாயக்கவுக்கு எதிர்கால அரசியல் குறித்த பீதி கலையவில்லை. எதிர்கால ஐதேகவின் இருப்புக்கு சவாலாக இருக்கக் கூடிய சக்திகள் குறித்து கணிக்கத் தொடங்கினார் சேனநாயக்க.

இந்தத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுக்கு 18 ஆசனங்கள் கிடைத்திருந்தன. இலங்கை இந்தியர் காங்கிரஸ் 6 ஆசனங்களை வென்றிருந்தது. அது மட்டுமன்றி இலங்கை இந்தியர் காங்கிரஸ் இருபது தொகுதிகளில் விரிவடைந்திருந்தது. அந்தத் தொகுதிகள் வர்த்தகத் தோட்டங்களைக் கொண்டவை. எதிர்காலத்தில் இந்த இரு சக்திகளும் ஒன்று சேர்ந்தால் அது ஐ.தே.கவின் இருப்புக்கு பெரும் சவாலாக அமைந்து விடும் அபாயம் உண்டென கருதினார் சேனநாயக்க.

இந்த இரு சக்திகளின் பலத்தை உடைக்கும் உடனடித் தேவை இங்கிருந்து தான் தொடங்கியது. இதற்காக சேனநாயக்க அதே வருடம் 28,29,30 மார்ச் 1947 இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும் இலங்கைப் பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்கவுக்கும் இடையில் இந்திய வம்சாவளியினர் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்தன. அது தோல்வியில் முடிந்தது. இப்பேச்சுவார்த்தையின் போது ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் உடன் இருந்தார். இலங்கையில் இருக்கும் இந்தியர்களில் எவருக்கு குடியுரிமை வழங்குவது, என்ன தகுதிகளின் அடிப்படையில், அவர்களில் கணிசமானோரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இயலுமா? அது எவ்வாறு என்பது குறித்து பேசப்பட்டன. ஆனால் இந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை,.

இதற்கிடையில் தேர்தல் முறைப்பாடு காரணமாக கண்டி, கம்பளை ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடத்த வேண்டி ஏற்பட்டது. இந்த இரு தொகுதிகளிலும் ஐ.தே.க தோல்வியைத் தழுவியது. இந்த இரு தொகுதிகளிலும் ஐ.தே.க தோல்விக்கான பிரதான காரணம் இந்த இரு தொகுதிகளையும் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் ஐதேகவுக்கு எதிராக வாக்களித்தது தான் என்பதை விளங்கிக் கொள்கிறார் சேனநாயக்க. எனவே இனி ஒரு முடிவெடுத்தாக வேண்டும் என்கிற முடிவுக்கு வருகிறார் சேனநாயக்க. இதைப்பற்றி கே.எம்.டி.சில்வா இப்படிக் குறிப்பிடுகிறார்.

“1947 தேர்தல் முடிவுகளின் மூலம் இடதுசாரிகள் குறித்து தனக்கு இருந்த சந்தேகத்தை உறுதி செய்து கொண்டார் சேனநாயக்க. அத்தேர்தலில் தோட்டத் தொழிலாளர்களும் ஐதேகவுக்கு எதிராகவே வாக்களித்திருந்தார்கள். இலங்கை இந்தியர் காங்கிரஸ் போட்டியிடாத இடங்களில் இடதுசாரிகளுக்கோ அல்லது இடதுசாரி சாய்வுள்ளவர்களுக்கோ அவர்கள் வாக்களித்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துகொண்ட இலங்கை இந்தியர் காங்கிரஸ் உறுப்பினர்கள் எப்போதும் இடதுசாரிகளுக்கே ஆதரவளித்தார்கள்.”

இடதுசாரிகளின் பலத்தை ஒரேயடியாக பலவீனப்படுத்துவதற்கு இந்திய வம்சாவளியினரின் இருப்பை அசைத்தாலே போதும் இந்த இரு சக்திகளும் வீழ்ந்து விடுவார்கள் என்று கணித்தார் சேனநாயக்க. இதற்காக அவர் கையாண்ட முக்கிய உத்திகளில் ஒன்று தேர்தல் தொகுதி எல்லைகளை மறுநிர்ணயம் செய்வது. குறிப்பாக தொழிலாளர் வர்க்க வாகுகளைக் கொண்ட கொழும்பில் உள்ள தொகுதிகளின் எல்லைகளை மாற்றி தொழிலாளர்களின் தெரிவுப் பலத்தை பலவீனப்படுத்தல். இரண்டாவது வழிமுறை தான் குடியுரிமை சட்டத்தைக் கொண்டு வந்து இந்தியத் தொழிலாளர்களை மைய அரசியலில் இருந்து நீக்கம் செய்வது.

1947 தேர்தலில் மலையகத்திலிருந்து வெற்றி பெற்றவர்கள்

அத்தேர்தலின் மூலம் கீழ்வருவோர் மலையகத்திலிருந்து தெரிவானார்கள்.

  • நுவரெலியா எஸ்.தொண்டமான் (9386),
  • தலவாக்கலை சி.வி.வேலுப்பிள்ளை (10645),
  • கொட்டக்கல தொகுதி கே.குமாரவேல் (6722),
  • நாவலப்பிட்டி தொகுதி கே.ராஜலிங்கம் (7933),
  • மஸ்கெலியா தொகுதி ஸ்ரீ.ஆர்.மோத்தா (9086),
  • அலுத்நுவர தொகுதி டீ.ராமனுஜம் (2772),
  • பதுளை (இரட்டையர் தொகுதி) எஸ்.எம்.சுப்பையா (2,7121)

மத்துரட்ட தொகுதியில் இலங்கை இந்தியர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்.சோமசுந்தரம் 3,572 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். ஹப்புத்தளைத் தொகுதியின் வாக்காளர்களில் 57% வீதத்தினர் தமிழர்கள். இலங்கை இந்திய காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.ஏ.நடேசனும் சுயேச்சை வேட்பாளர் ஏ.ஆர்.செங்கமாலியும் ஒரே தொகுதியில் போட்டியிட்டு தமிழ் வாக்குகளை பிளவடையைச் செய்ததால் இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஜே. ஏ. ரம்புக்பொத தெரிவாகினார். அதன் பின்னர் 11.31.1950இல் நடைபெற்ற மஸ்கெலியா தொகுதிக்கான இடைத்தேர்தலில் இ.இ.காங்கிரஸ் வேட்பாளராகக் களம் இறங்கிய ஏ.அஸீஸ் 11,343 வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினரானார்.

சோல்பரி

18.12.1944 பிரித்தானிய அரசாங்கம் சோல்பரிப் பிரபுவின் தலைமையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான விசாரணை ஆணைக்குழுவை இலங்கைக்கு அனுப்பியது. 07.04.1945 வரை அவர்கள் இலங்கையில் இருந்து விசாரணைகளை மேற்கொண்டார்கள்.

சோல்பரி யாப்பை 1945 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் திகதியன்று அரசாங்க சபையில் நிறைவேற்றப்பட்டது. எதிர்ப்பே இல்லாமல் அதனை நிறைவேற்றிவிடவேண்டும் என்று டீ.எஸ்.சேனநாயக்க மிகவும் பிரயத்தனப்பட்டார். எப்படியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அது நிறைவேற்றபாட்டாக வேண்டும். குறிப்பாக சிறுபான்மை இனங்களின் தலைவரை அவர் சரிகட்ட அதிக பேராசை கொண்டிருந்தார்.

இறுதியில் 57 பேரில் 51 பேரின் ஆதரவுடன் சோல்பரி யாப்பு நிறைவேற்றப்பட்டது. தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கி, மலே, ஐரோப்பியர் என அனைவரும் இதற்கு ஏகோபித்த ஆதரவைக் கொடுத்தனர். இதில் சிறுபான்மை இனத்தவர்கள் “எனக்கு ஒரு வாய்ப்பைத் தாருங்கள் நான் உங்களுக்கு நல்லது செய்கிறேன்” என்கிற டீ.எஸ்.சேனநாயக்கவின் உத்த்தரவாதத்தை நம்பினர். ஆனால் அதை எதிர்த்து மூவர் வாக்களித்திருந்தனர். அதில் இருவர் இந்திய வம்சாவளியினர். ஒருவர் நடேசய்யர், மற்றவர் ஐ.எக்ஸ்.பெரைரா.  வைத்தியலிங்கம் இந்தியாவில் இருந்தார். எதிர்த்த மூன்றாவது நபர் சிங்களவர். அவர் விஜயானந்த தஹாநாயக்க (பிற்காலத்தில் சிறிது காலம் இலங்கையின் பிரதமராக பதவி வகித்தவர்.). 

இங்கிலாந்துக்கு சோல்பரி யாப்பு தொடர்பான பரிந்துரைகளைப் பற்றி உரையாடப் போயிருந்த ஜி.ஜி.பொன்னம்பலம் திரும்பி வருமுன்னரே இது நிறைவேற்றியாகிற்று. ஜி.ஜி.யின் தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் கட்சியின் முடிவுக்கு எதிராக சோல்பரி யாப்பை ஆதரித்திருந்தனர். அப்படி ஆதரித்த மூவரை கட்சியை விட்டு விலக்குவதாக காங்கிரஸ் அறிவித்திருந்தபோதும் அது சுத்த பம்மாத்து என்கிற அர்த்தத்தில் அன்றைய ஈழ கேசரி “கீழ்படியாத மூவர் : தமிழ்க் காங்கிரஸின் நடவடிக்கை!” என்கிற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

“... ஸ்ரீ நடேசன் இப்போது சில மாதங்களுக்கு முன்னதாகவே தமிழ்க் காங்கிரஸை விட்டு விலகி விட்டார். ஸ்ரீ தியாகராஜா இம்மாதம் 13ந் திகதி ராஜினாமாச் செய்துவிட்டார். ஸ்ரீ இராஜகுலேந்திரனின் இராஜினாமாக் கடிதம் ஆங்கிலத் தினசரி ஒன்றில் காணப்பட்டது. இந்த அழகில் நேற்று முன் தினம் கூடிய காங்கிரஸ் நிர்வாகசபை குறித்த மூவரையும் நீக்கியிருப்பதும் ஒரு புதுமை தான்.” 

சோல்பரி யாப்பை எதிர்த்த இந்தியர் பிரதிநிதிகள் இருவரும் இந்தியத் தோட்டத் தொழிலாளிகளின் நலன்களின்பால் இருந்து தான் இதை எதிர்த்தார்கள் என்பது ஒரு வரலாற்றுப் பதிவு தான். அதை டீ.எஸ்.சேனநாயக்காவும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை.

சோல்பரி யாப்பை நிறைவேற்றிய பின்னர் இந்திய வம்சாவளி மக்களை விரட்டும் பணிகள் ஆரம்பமாகும் என்று அன்றைய அரசியலை உணர்ந்த பலரும் அறிந்தே வைத்திருந்தார்கள். 

சோல்பரி பிற்காலத்தில் வருந்தி எழுதிய கடிதம்

குடியுரிமை பறிப்பின் பின் பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது 30.04.1964 திகதியிடப்பட்ட செ.சுந்தரலிங்கத்துக்கு சோல்பரி ஒரு ஒரு கடிதத்தை எழுதினார். பிற்காலத்தில் அக்கடிதம் செ.சுந்தரலிங்கம் எழுதிய “ஈழம்: சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பம்” (“Eylom: Beginning of the Freedom Struggle; Dozens Documents”  by C Suntherlingham) என்கிற நூலில் வெளியிடப்பட்டது. அதில் 


“நான் முன்மொழிந்த அரசியல் யாப்பில் சிறுபான்மையினருக்காக போதுமான பாதுகாப்பு இருப்பதாகவே தெரிந்தது. ஆனால் அரசியல் யாப்பின் 29வது சரத்து எதிர்பார்த்தளவு பலனளிக்கவில்லை என்பதும் உண்மையே...

இந்திய வம்சாவளி தமிழ் தொழிலாளர்களின் நிலைமை கவலையைத் தருகிறது. இந்தளவு பெருந்தொகையான ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாக்குரிமையை இல்லாது செய்தது வருந்தத்தகது. தமது பிரதேசத்தில் நிரம்பியிருக்கிற மக்கள் கூட்டத்தினருக்கு வாக்குரிமை இருப்பது கண்டி பிரதேச மக்களுக்கு பெறும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது. ஆனால் அந்த தமிழ் மக்களுக்காக மட்டும் நான்கு அல்லது ஐந்து தனி ஆசனங்களை ஒதுக்கியிருந்தால் இன்னும் நியாயமான தீர்வாக இருந்திருக்கும். அவர்கள் எந்த பிரதேசங்களில் வாழ்கிறார்கள் என்பது முக்கியமல்ல. எப்படியிருந்தபோதும் நான் குறிப்பிடுவது வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்கள் பற்றியதே...

உங்களுக்காகவும் உங்கள் இனத்தவர்களுக்காகவும் நான் மிகவும் வருந்துகிறேன். எற்றுக்கொள்ளக்க்கூடிய ஒரு தீர்வை என்னால் வழங்க முடியுமென்றால் நான் மகிழ்ச்சியடைவேன்.” 

இது ஒரு முக்கியமான படம். இலங்கை பல்கலைகழக நிகழ்வில் சோல்பரி பிரபு, சேர் ஐவர் ஜென்னிங்ஸ் ஜவஹர்லால் நேரு, லெஸ்டர் பியர்சன் ஆகியோரைக் காணலாம்

1946 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் பிரகாரம் இந்திய வம்சாவளி மக்களின் எண்ணிக்கை 780,000 ஆக இருந்தது. அது மொத்த சனத்தொகையில் 11.7% வீதமாகும். இலங்கையின் சனத்தொகையில் இரண்டாவது சனத்தொகை கூடிய இனமாக இருந்தார்கள். 1948 இல் குடியுரிமை பறிக்கப்படுவதற்கூடாக 1949 ஆம் ஆண்டு வாக்குரிமையையும் இழந்தார்கள்.

இந்திய தோட்டத்தொழிலாளர்களின் எண்ணிக்கை:

Source: Economic Review (Colombo), Vol. V, March 1980; Fries and Bibin (1984: 195).

* (1978): Statistical Abstract of Ceylon 1970-71/ Statistical Pocket Book of DSRSL (1978). என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது

இதில் உள்ள கொடுமை என்னவென்றால் சக சிறுபான்மை மக்களான முஸ்லிம் இனத் தலைவர்களும் வாக்குரிமையை பறிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இதேவேளை இதனை எதிர்த்து வாக்களித்த 32 பேரில் 21 பேர் சிங்களவர்கள் என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும். இதைப் பற்றி செல்வநாயகம் தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டில் உரையாற்றியபோது இப்படிக் கூறினார்.

“பல தமிழ்ப் பிரதிநிதிகளும் முஸ்லிம் பிரதிநிதிகளும் மலைநாட்டுத் தமிழ் மக்களின் உரிமைகளைப் பறித்த, சிக்னலா அரசாங்கத்தின் கொடிய சட்டத்தை, ஆதரித்து வாக்களித்தார்கள். நாம் கூறிய தீர்க்கதரிசன வாக்குப்போல, இன்று கல்லோயாவின் கீழ் – கல்முனைப் பகுதியில் – முஸ்லிம்  - தமிழ்  மக்களுக்கு அடி விழுகின்றது. இது நிற்க, இந்த ஏழு, எட்டு லட்சம் தமிழ் மக்களின் பிரஜா உரிமை பறிபோனதுடன் நிற்கவில்லை. இன்று அவர்க்களின் வாக்குரிமையும் பறிபோய்விட்டது. மத்திய, ஊவா மாகாணங்களில் தற்போது தயாரித்த வாக்குரிமை இடாப்புகளில், மலைநாட்டுத் தமிழ் – முஸ்லிம் மக்களின் பெயர்களெல்லாம் அகற்றப்பட்டுள்ளன. வரப்போகும் தேர்தலில், தற்போது மத்திய - ஊவா மாகாணங்களிலிருந்து ஜனப்பிரதிநிதிகள் சபைக்கு வந்திருக்கும் தமிழ் – முஸ்லிம் பிரதிநிதிகள் எட்டுப்பேரில், ஒருவரும் தெரிந்தெடுக்கப் படமாட்டார்கள். இதுவா ஜனநாயகம்? இதுவா அரசாங்க நீதி?”

இந்திய, பாகிஸ்தானிய குடியுரிமை சட்டம்

இந்திய, பாகிஸ்தானிய குடியுரிமை சட்டம் (Indian Residents Citizenship Act) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது இச்சட்டத்தில் தலைப்பில் பாகிஸ்தான் என்பது இருக்கவில்லை. இந்த மசோதா அதன் மூல வடிவத்தில் “இந்திய குடியிருப்பளார் மசோதா என்றே அறியப்பட்டது. பிரதமர் டி.எஸ். சேனாநாயக்க அதன் பின்னர், ஜனவரி 20, 1949 அன்று பாராளுமன்றத்தில் சட்டமூலத்தில் "இந்தியன்" என்ற வார்த்தையின் பின்னர் "பாகிஸ்தானி" என்ற வார்த்தையைச் சேர்த்துக்கொள்வதற்கான திருத்தத்தை முன்வைத்தார். "பாகிஸ்தானி" என்ற வார்த்தையைச் சேர்த்ததற்கு சேனநாயக்க அளித்த விளக்கம் என்னவென்றால், இந்திய பாகிஸ்தானியப் பிரிவினைக்குப் பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டதால், "பாகிஸ்தானி" என்று வகைப்படுத்தப்படும் எந்தவொரு நபரையும் இந்த சட்டத்துக்குள் சேர்க்க வேண்டியது அவசியம் என்பதால் நான் இந்த சட்டத்தை "இந்திய, பாகிஸ்தானிய குடியுரிமை சட்டம்" என்று குறிப்பிடுவேன். என்றார்.

இந்த நிகழ்வு நிகழ்ந்து சுமார் 70 ஆண்டுகள் கடந்தும் கூட இன்னமும் இச்சட்டத்தை யார் ஆதரித்தார்கள் எதிர்த்தார்கள் என்கிற சர்ச்சை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் ஆதரித்தார் என்கிற வாதமும், அவர் ஆதரிக்கவில்லை எதிர்த்தார் என்கிற வாதமும் தொடர்ந்து வருகிறது. இக்கட்டுரையின் பிரதான நோக்கங்களில் ஒன்று அந்த சர்ச்சைக்கு ஆதாரபூர்வமாக முடிவுக்கு கொண்டுவருவது என்பது.

முடிச்சு அவிழ்ப்பு : ஜி.ஜி.பொன்னம்பலத்தின் வகிபாகம்

ஜி.ஜி.பொன்னம்பலத்தின் வகிபாகம் பற்றி இன்று வரை பெருத்த விவாதம் தொடர்ந்து வருகிறது. அவர் இந்திய வம்சாவளியினருக்கு ஆதரவாகவா அல்லது எதிராகவா இயங்கினார் என்பதே இந்த இரு பக்க வாதங்களின் சாராம்சமாக இருக்கிறது.

இந்த விவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதாயின் 1948 / 1949க்குள் இயற்றப்பட்ட நான்கு சட்டங்களையும் இறுதி வரை ஜி.ஜி யின் வகிபாகத்தையும் ஈற்றில் எதில் இது நிறைவானது என்பது வரை நோக்குவது அவசியம்.

த.இளங்கோவன் “மலைநாட்டுத் தமிழருக்கு துரோகம் இழைத்தது யார்?” என்கிற தலைப்பில் 1970 இல் எழுதிய நூல் பல பொய்களையும் திரிபுகளையும் கொண்ட ஒரு நூல்.  மலயகத்துக்காக ஜி.ஜி.பொன்னம்பலம் நிறையவே பாடுபட்டதாகவும், பிரஜாவுரிமைச் சட்டத்தை ஆதரித்து வாக்களிக்கவில்லை என்று புனைகிற ஒரு சிறு நூல். 1970 ஜனவரியில் அது வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இருந்த திரிபுகளை அதற்குப் பின்னர் பலரும் அம்பலப்படுத்திவிட்டார்கள். ஆனாலும் இன்றும் ஜி.ஜி.பொன்னம்பலத்தை பாதுகாக்க முனைகிற பலரை நாம் கண்டு கடந்துதான் வருகிறோம்

அதன் பின்னர் மிகச் சமீபத்தில் ஜி.ஜியின் பேரனும் தமிழ் தேசியமக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை , அதே கருத்தை அவர் தொலைகாட்சி நேர்காணல்களிலும் வெளிப்படுத்தியிருந்த இக்கருத்துக்கள் எல்லாமே ஜி.ஜி குற்றமற்றவர் என்று நிரூபிப்பதற்கான எத்தனங்களே. ஆனால் அச்சட்ட மூலங்களில் உள்ள சாதகமான அம்சங்களை மாத்திரம் எடுத்து மற்ற உண்மைகளை மூடி மறைக்கும் கைங்கரியத்தையும் நம்மால் காண முடிகிறது.

.சாராம்சத்தில் மூன்றாவதாக கொண்டு வரப்பட்ட இந்திய பாகிஸ்தானிய குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக அரசாங்கத்துக்கு சாதகமாக வாக்களித்தமைக்கு காரணம் அது குறைந்தபட்சமென்றாலும் அம்மக்களுக்கு குடியுரிமையை வழங்கிவிடும் என்று கருதினதால் தான் என்று வாதிடுகின்றனர்.

உண்மையில் என்ன நடந்தது?

“சிங்கத்தின்” கால்களில்

ஜே..எல்.பெர்னாண்டோ “மூன்று பிரதமர்கள்” என்கிற தனது நூலில் தனது நேரடி சாட்சியமாக சொல்வதென்ன? 


“பொன்னம்பலத்துக்கு அமைச்சுப் பதவியின் மூலம் அரசாங்கத்துக்குள் கொண்டு வருவதற்கு அப்போதைய இளம் அரசியல் தலைவர்களாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, டட்லி ஆகியோர் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். பொன்னம்பலம் போன்ற பேச்சாற்றல் மிக்க ஒருவர்; அன்றைய இடதுசாரி சக்திகளை எதிர்கொள்ளும் முதல்தர விவாதக்காரராக  இருப்பார் நம்பினர். இதைப் பற்றி டீ.எஸ்.சேனநாயக்க்கவிடம் இவர்கள் பரிந்துரைத்தபோதும் அவர் அதனை செவிசாய்க்கவில்லை. பொன்னம்பலத்திற்கு அமைச்சரவை பதவியை வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சிகளுக்கும் டி.எஸ்.சேனாநாயக்க செவிசாய்க்கவில்லை. சேனநாயக்கவிடம் மன்றாடுமாறு என்னை அந்த இளைய குழுவினர் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. சேனநாயக்கவும் இவ்வாறான முயற்சிகளை அனுமதித்தார். ஆனால் இறுதிவரை அதற்கான கதவுகளை திறக்கவில்லை.

பத்திரிகைகளும் இதனை மோப்பம் பிடிப்பதில் மும்முரமாக இருந்தன. ஒரு பிற்பகல் பிரதமர் சேனாநாயக்கவைச் சந்திக்கும்படி எனக்கு கூறப்பட்டது. அலரிமாளிகைக்கு சென்று பிரதமரைக் கண்டேன். பொன்னம்பலத்துக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவிருக்கிறதா என்று நான் கேட்டதற்கு, சேனாநாயக்கவின் மறைமுகமான பதில் "நீங்கள் உட்காருங்கள், பார்க்கலாம்" என்றார். சில நிமிடங்கள் கழிந்தன, முன் வாசலுக்கு ஒரு மோட்டார் கார் வரும் சத்தம் கேட்டது. எங்களைக் கண்டுகொள்ள வேண்டாம் என்று எச்சரித்து சேனநாயக்கா தனது அறையை விட்டு வெளியே சென்றார். காரின் கதவு மூடப்பட்டதையும், கார் விலகிச் செல்வதையும் கேட்டதும் நானும் என்னோடு வந்திருந்த எனது நண்பரும் வராண்டாவுக்கு வந்து பிரதமரின் விசுவாசியான கரோலிஸைப் பார்த்து, "என்ன நடந்தது?" என்று கேட்டேன். அந்த பதில் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பதில். "சேர், அந்தத் தமிழன் ‘சிங்கத்தை’ விழுந்து கும்பிட்டுச் சென்றான்" என்று கரோலிஸ் கூறினார். சேனநாயக்கா வராந்தாவிற்கு வெளியே வருவதைப் பார்த்த பொன்னம்பலம், கீழே குனிந்து உள்ளூர் பாணியில் பிரதமருக்கு வணக்கம் செலுத்தியதையே அவர் விவரித்தார்.

சமகால அரசியல் விவகாரங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கரோலிஸின் பார்வையில், "சிங்கையா" (சிங்கம்) இறுதியில் வெற்றிபெற்றது.

பின்னர் புதிய அமைச்சரின் பதவிப் பிரமாணத்திற்காக சேனநாயக்காவும் பொன்னம்பலமும் கவர்னர் இல்லமான இராணி மாளிகைக்கு சென்றிருந்தார்கள் என்று நான் யூகித்தேன், மேலும் செய்தியாளர்களையும் பத்திரிகை புகைப்படக் கலைஞர்களையும் இராணி மாளிகையின் வளாகத்திற்கு விரைந்து செல்லும்படி லேக் ஹவுஸுக்குத் தகவல் கொடுத்தேன்.

பின்னர், சேனநாயக்காவை நான் சந்தித்தபோது, அவரின் முன்னாள் அரசியல் எதிரியான பொன்னம்பலம் எப்படி வணங்கினார் என்பதை நானும் எனது நண்பரும் பார்த்த கதையைப் பற்றி கூறினேன். அந்த சம்பவத்தை நான் செய்தித்தாள்களில் விவரிக்க மாட்டேன் என்று என்னிடம் வாக்குறுதி வாங்கிக்கொண்டார் சேனநாயக்கா. பொன்னம்பலம் தனக்கு பக்கபலமாக இருந்தவேளை, அவரது அந்த நடத்தை பற்றி அவருக்கு நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்று சேனநாயக்க கருதினார்...”

குடியுரிமைச் சட்டத்தின் மீதான விமர்சனங்களைத் தொடர்ந்து அதன் எதிர்ப்பைக் குறைப்பதற்காக மேலும் அடுத்த இரண்டு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் ஒன்று தான் இந்திய - பாகிஸ்தான் குடியுரிமை சட்டம். இந்த சட்டத்தின் பிரகாரம் ஏழு ஆண்டுகளுக்கு மேல் வசித்திருப்பவர்களுக்கு குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாற்றப்பட்டது உண்மை தான். அப்படி மாற்றப்பட்டது சாதகமான விடயம் என்பதால் தான் அதற்கு ஆதரவாக ஜி.ஜி பொன்னம்பலம் வாக்களித்தார் என்பது தான் பொன்னம்பலம் தரப்பில் இன்றும் வைக்கப்படும் ஒரே ஒரு வாதம். ஆனால் வாய்ப்பைக் கூட அம்மக்கள் மேற்கொள்ள முடியாதபடி அதை வரையறுத்ததை பொன்னம்பலம் தரப்பு வசதியாக மறைத்து விடுகிறது.

அதாவது இந்த விண்ணப்பங்கள் இரு வருடங்களுக்குள் செய்தால் மாத்திரமே அவர்கள் பிரஜாவுரிமை பெற முடியும். அதற்குப் பின்னர் எந்த விண்ணப்பமும் செல்லுபடியாகாது. நினைத்துப் பாருங்கள் 70 ஆண்டுகளுக்கு முன்னர் லயன் காம்பராக்களிலேயே குழந்தையைப் பெற்றுக்கொண்டு பிறப்பு அத்தாட்சியைக் கூட ஒழுங்காக பதியாத பேண இயலாத ஒரு சமூகம்; குடியுரிமை விண்ணப்பத்துக்கான தஸ்தாவேஜூக்களை இத்தனை வேகமாக எவ்வாறு சமர்ப்பித்துவிட முடியும். அவற்றை அத்தனை இலகுவாக பெறுவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் தான் அவர்களுக்கு இருந்ததா?

அதுமட்டுமன்றி 1949ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5 ஆம் திகதியிலிருந்து இரண்டாடுகளுக்குள் என்று தீர்க்கமான திகதியை நிர்ணயித்தது அந்த சட்டம்.

அப்படிப்பட்ட ஒரு சட்டத்தை எதிர்க்க வேண்டாமா? ஆனால் அதனை ஆதரித்து விட்டு அதனை இன்றும் நியாயப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் பொன்னம்பலம் தரப்பினர்.

அவ்வாறு அவர்கள் அதனை விண்ணப்பிக்க முடியாத நிலையில்; இறுதியில் எட்டு லட்சம் பேர் தமது குடியுரிமையை இழந்தார்கள். உலக வரலாற்றில் இத்தகைய ஒரு அவலம் எங்கும் நடந்து இருக்காது.

செல்வநாயகம், வன்னியசிங்கம், சிவபாலன் ஆகியோர் தமிழ் காங்கிரசிலிருந்து வெளியேறியது ஜி.ஜி.பொன்னம்பலத்தின் முதல் இரு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாட்டோடு அல்ல. மாறாக ஜி.ஜி பொன்னம்பலம் அதன் பின்னர் டிசம்பர் 10 அன்று நிறைவேற்றப்பட்ட இந்திய (பின்னர் பாகிஸ்தானியும் சேர்த்துக்கொள்ளப்பட்ட) குடியுரிமை சட்டம். அதன் பின்னரான சட்டங்கள் மற்றும் அரசாங்கத்துடனான அமைச்சுப் பதவிக்கான பேரம்பேசல் போன்ற செயல்களால் தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் நான்கு பேரும் சேர்ந்து அச்சட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தாலும் அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுத்தான் இருந்திருக்கும். ஏனென்றால் அச்சட்டம் 20அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனால் மலையகத் தமிழர்களால் அதிக நம்பிக்கை வைக்கப்பட்டிருந்த ஒரு கட்சி தமது அமைச்சு பதவிக்காக ஒரு இனத்தின் நாசத்துக்கு துணைபோனது வரலாற்றின் கருப்பு பக்கங்களில் ஒன்று. மேலும் தமிழ் காங்கிரஸ் அந்த அநீதியை எதிர்த்து மலையக சக்திகளுடன் சேர்ந்து ஒரு அழுத்தக் குழுவாக இயங்கியிருக்க முடியும். அதைச் செய்யவில்லை.

இந்திய பாகிஸ்தானிய குடியுரிமை சட்டமானது முன்னைய குடியுரிமை சட்டத்திலிருந்து பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை என்று ஆய்வாளர் எல்.எல்.டீ.பீரிஸ் தனது நூலில் நிறுவுகிறார். 

இதன் மூலம் அம்மக்கள் ஒரு சான்றிதழை எங்கும் எடுத்துச் செல்ல வற்புறுத்தப்படுகின்றனர். அதை அவர்கள் அடிக்கடி வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இத்தகைய சான்றிதழ்கள்; வேலை, நேர்காணல் மற்றும் கடன்கள், வீட்டுத் திட்டங்கள், அடையாள அட்டைகள் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்கப்பட வேண்டும். பெரும்பாலும், இந்தச் சான்றிதழ்கள் இந்தியத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நேர்மையான குடிமகனா அல்லது “கள்ளத்தோணியா” (சட்டவிரோதமாக குடியேறியவர்) என்பதை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. 

பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது சட்டம் இலங்கை (பாராளுமன்றத் தேர்தல்கள்) திருத்தச் சட்டம், எண். 1949 ஆம் ஆண்டின் 48. பிரஜைகளாக இல்லாத நபர்கள் எந்தவொரு வாக்காளர் பதிவேட்டிலும் தங்கள் பெயரை உள்ளிடவோ அல்லது தக்கவைக்கவோ முடியாது என்று இந்தச் சட்டம் வகுத்தது, இலங்கைக் குடியுரிமையைப் பெறுவதில் வெற்றிபெறாதவர்களும் திறம்பட உரிமையற்றவர்கள் என்ற யதார்த்தத்தை உறுதிப்படுத்துகிறது.

இந்த பாராளுமன்ற விவாதம் ஒன்றல்ல மூன்று விவாதங்களை நோக்க வேண்டும்

  1. 20.08.1948 குடியுரிமை சட்டம் (Citizenship Bill) – ஜீ.ஜீ. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் உள்ளிட்ட தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்கிறார்கள். மொத்தம் 53 பேர் ஆதரவாகவும் 35 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர். ஆனால் அடுத்த இரண்டைப் பாருங்கள்
  2. 25.08.1948 குடிவரவு குடியகல்வு சட்டம் (The Immigrants and Emigrants Bill) – இதில் எஸ்.ஜே.வி செல்வநாயகம் உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்களும் மலையக உறுப்பினர்களான தொண்டமான், சி.வி.வேலுப்பிள்ளை உள்ளிட்டோரும் எதிர்த்து வாக்களிக்கின்றனர். இதிலும் மொத்தம் 53 பேர் ஆதரவாகவும் 35 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.
  3. 10.12.1948 இந்திய பாகிஸ்தான் குடியிருப்போர் சட்டம் (Indian and Pakistani Residents Citizenship Bill) – இந்த இறுதி சட்டத்தைத் தான் ஜி.ஜி.பொன்னம்பலம் அரசாங்கத்துடன் சேர்ந்து ஆதரவு வழங்கி அதனை நிறைவேற்ற உதவுகிறார். மொத்தம் 52 பேர் ஆதரவாகவும் 32 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.

முதல் இரு சட்டங்களுக்கு ஆதரவு வழங்கிய வர்த்தக மற்றும் வாணிப அமைச்சர் சி.சுந்தரலிங்கம் கூட இறுதியில் மனம் திருந்தி இந்த சட்டத்தின் அநியாயத்தை எதிர்த்து 14 டிசம்பர் 1948 அன்று அமைச்சரவைப் பதவிலிருந்தும் அரசாங்கத்திலிருந்தும் விலகினார். அவர் இந்திய பாகிஸ்தானிய குடியுரிமை சட்ட வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. சீ.சுந்தரலிங்கம் அன்றைய வாக்கெடுப்பின் போது மெதுவாக சபையை விட்டு நழுவியவர். அச்சட்டத்துக்கு ஆதரவாக அன்று வாக்களித்தது தவறு என உணர்ந்து இச் சட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது (1948 டிசம்பர் 10) சுந்தரலிங்கம் சபையிலிருந்து வெளியேறினார். அன்றே பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க அவரிடம் அதற்கு விளக்கம் கோரியதும் சுந்தரலிங்கம் தனது அமைச்சர் பதவியை இராஜனாமாச் செய்தார். பிற்காலத்தில் அவர் 1964ஆம் ஆண்டு ஈழநாடு, சிலோன் டெயிலி மிரர் ஆகிய பத்திரிகைகளுக்கு தொடராக எழுதிய கடிதங்களின் தொகுப்பை கடந்த 2016ஆம் ஆண்டு அவரது பேரன் “பாட்டனின் கடிதங்கள்” (Grandfather’s Letters) என்கிற தலைப்பில் ஒரு நூலாக வெளிக்கொணர்ந்தார்.

இது மட்டுமன்றி 20.10.1949 இல் பாராளுமன்ற தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு (Parliamentary Elections Amendment (Franchise)) இடதுசாரிக் கட்சிகள், மலையகக் கட்சிகள், எஸ்ஜே.வி செல்வநாயகம் உள்ளிட்டோர் எதிர்த்து வாக்களித்திருக்க ஜி.ஜி.பொன்னம்பலம் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார். குடியுரிமை உள்ளவர்களுக்கே தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உண்டு என்பது சட்டமாக்கப்பட்டது. தேர்தலில்  குடியுரிமையை இழந்திருந்த மக்கள் இந்த சட்டத்தின் மூலம் வாக்குரிமையையும் இழந்தார்கள் என்பதையும் கவனியுங்கள்.

இடதுசாரிகள்

இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்த சக்திகள் இடதுசாரிகள் தான். கலாநிதி என்.எம்.பெரேரா தலைமையிலான ரொஸ்கியவாத லங்கா சமசமாஜக் கட்சி, கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா போல்ஷ்விக் லெனினிஸ்ட் கட்சி, பீற்றர் கெனமன் தலைமை தாங்கிய கொம்யூனிஸ்ட் கட்சி என்பன இதனை எதிர்த்து பாராளுமன்றத்தில் வாதிட்டன. சட்டத்தின் முதலாவது கோட்பாட்டையே மீறி உதாசாசீனம் செய்கிற ஒரு சட்டம் என்று கூறி மிகப் பிரபலமான சிங்கள தேசியவாதியாக அறியப்பட்ட எச்.ஸ்ரீ.நிசங்க இம்மசோதாவை எதிர்த்தார். 

இந்த வாக்களிப்பை இன்னோர் வகையில் சொல்வதாயின் வர்க்க அடிப்படையில் அளிக்கப்பட்டன என்றால் அது மிகையில்லை என்று குமாரி கலாநிதி ஜெயவர்த்தன குறிப்பிடுகிறார். 

கலாநிதி என்.எம்.பெரேராவின் உரையில் இப்படிக் கூறினார்

“இந்த இனவாதம், ஹூஸ்ரன் சாம்பலினுடனும், அடொல்ப் ஹிட்லருடனும் இறந்துவிட்டதாகவே நான் நினைத்திருந்தேன். தீர்க்கதரிசனம் வாய்ந்த அரசியல்வாதி எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் எவரேனும் இந்த வகையான ஒரு மசோதாவை ஆதரிக்க வேண்டுமென எங்களைக் கேட்பார்கள் என நான் நம்பவில்லை. மீதி உலகத்திலிருந்து ஒதுங்கி நாம் கடவுளாற் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், நாங்கள் மாத்திரமே இந்த நாட்டின் பிரஜைகளாக இருக்க உரிமை உடையவர்கள் என்று கருதுவோமானால் நாம் முன்னேறவே முடியாது.”  

இந்த விவாதத்தின் போது பீட்டர் கெனமன் இப்படி ஒரு வேடிக்கையான விபரத்தையும் வெளிபடுத்தினார்.

“இதில் கோரப்படும் சான்றுகளின் அடிப்படையில் பார்க்கப்போனால் மதிப்புக்குரிய பிரதமர் திரு டீ.எஸ்.சேனநாயக்க அவர்கள் கூட இலங்கைப் பிரசையாக ஆக முடியாது. ஏனெனில் அவரது தந்தை இலங்கையில் பிரந்ததர்கான சான்றை அவரால் கூட சமர்ப்பிக்க முடியாது.” என்றார்.


குடியுரிமைப் பிரச்சினையிலிருந்து ஆரம்பமான தமிழ்த் தேசிய அரசியல்

இலங்கையின் தேசிய பிரச்சினையாக தேசிய இனப்பிரச்சினை ஆனதை நாமறிவோம். ஆனால் தமிழ்த் தேசியப் பிரச்ச்சினைகளுக்கு முத்தாய்ப்பாக இருந்த பிரச்சினை குடியுரிமை பிரச்சினை தான். இலங்கையின் தமிழ்த் தேசியவாதத்துக்கு சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேல் தலைமை தலைமை தாங்கிய தமிழரசுக் கட்சியின் தோற்றமும் இங்கிருந்து தான் ஆர்மபமானது. அதுபோல இலங்கையின் தமிழ்த் தேசியத் தலைவராக அக்காலத்தில் தலைமை கொடுத்த எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அத்தகைய தலைவராக உருவானது இந்த குடியுரிமைப் பிரச்சினைக்கு ஊடாகத் தான்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ்தாபக தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம்  கியூ.ஸி. அவர்கள் அதன் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அவ்வாரம்ப மாநாட்டில்,  செல்வநாயகம் அவர்கள் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையில் தெட்டத் தெளிவாக தமிழ் காங்கிரசிலிருந்து விலகியதற்கான காரணம் பிரஜாவுரிமைச் சட்டத்தை அது ஆதரித்தது தான் என்று விளக்குகிறார். அது மட்டுமன்றி இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினையை தமிழ் மக்களின் மையப் பிரச்சினையாக எடுத்தியம்புகிறார். அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் நமக்கு ஏற்பட்ட இன்னல்களே என்கிறார். இந்தியா வந்து உதவும் என்று அம்மக்கள் எதிர்பார்க்கவில்லை. அவ்வுதவியை நாம் தான் செய்ய வேண்டும். அது இக்கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் இடம்பெறுதல் வேண்டும் என்றார். “இன்று அவர்களுக்கு நாளை எங்களுக்கு” என்று அவர் நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டபோது தனது உரையில் அழுத்தமாகக் கூறினார். அதே கோஷத்தை தீர்க்கதரிசனமாக அவர் இந்த காலத்தில் பல இடங்களில் தெரிவித்து வந்தார். இதோ அப்பேச்சில் இந்திய வம்சாவளி மக்கள் பற்றிய பகுதிகள். 

1948ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில், அரசாங்கம் இந்தியப் பிரஜா உரிமைச் சட்டமொன்றைப் பிரதிநிதிகள் சபையிற்கொண்டுவந்தது இச்சட்டத்தை இலங்கை, இந்தியக் காங்கிரசும் புதுடெல்லியிலுள்ள இந்திய அரசாங்கமும் எதிர்த்து வந்தன. இது, தமிழ்க் காங்கிரசின் அமைப்பு விதிகளிலும் அதன் மகாநாடுகள் பலவற்றிலும் வற்புறுத்தப்பட்ட - அடிப்படையான கொள்கைகளுக்கு முரண்பட்டதாயிருந்தது. அன்றியும், ஐந்து வருஷங்கள் இலங்கையில் வசித்த இந்தியர்களுக்குப் பிரஜாவுரிமை பெறுவதற்காகவும், அவர்களுடைய பிறவுரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும் உழைப்பதற்காக, இலங்கை, இந்தியக்காங்கிரசுக்குத் தமிழ்க்காங்கிரஸ்த் தலைவர் கைச்சாத்திட்டுத், தேர்தற் காலத்தில் வாக்களித்திருந்தார். எதைப்பெறுவதற்கு உழைப்பதாக இவர் வாக்களித்திருந்தாரோ, அதைப் பாராளுமன்றத்திற் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் மறுத்தது. அவரும் தமிழ்க் காங்கிரஸ் பிரதிநிதிகள் சிலரும் இதனை ஆதரித்தனர். இதிலிருந்து தமிழ்க்காங்கிரஸ் தலைவரும் பிரதிநிதிகள் சிலரும் உரிமைப் போரைக் கைவிட்டுவிட்டன ரென்பது தெட்டத்தெளிவாக விளங்கிவிட்டது. இதன் பயனாக , தமிழ்க் காங்கிரஸ் பாராளுமன்ற அங்கத்தவர்கள், இரு கட்சியினராகப் பிரிந்தனர். முன்கூறியபடி, ஒரு பகுதியினர் - தங்கள் தேர்தற்காலக் கொள்கையைக் கைவிட்டுவிட்டனர். மற்றப் பகுதியினராய - உங்கள் முன்நிற்கும் நாங்கள் - தேர்தற்காலக் கொள்கையைக் கடைப்பிடித்து. உரிமைப் போரைத் தொடர்ந்து நடத்தத் தீர்மானித்திருக்கின்றோம்....

இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களில், அரைப் பங்கினரைப் பிரஜாவுரிமை யற்றோராகச் செய்யும் ஒரே நோக்குடன், அரசாங்கம் பிரஜாவுரிமைச் சட்டங்களை நிறைவேற்றியிருக்கின்றது. அந்நியர்களுக்கு எதிராகவே இச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றனவென்று வெளிக்குக் கூறிக்கொள்கின்றனர். இது ஒரு போலி நியாயமாகும். இலங்கையின் மத்திய பாகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஏழு லட்சம் தமிழ்த் தொழிலாளர்களுடைய பிரஜாவுரிமையைப் பறிப்பதே இச்சட்டங்களின் உண்மை நோக்கமாகும். இவர்களுள்ளே பெரும்பாலானோர் வேறு நாட்டையே அறியமாட்டார்கள், அவர்களெல்லோரும் இந்தியர்களல்லர்; இலங்கையர்களே. தமிழ்பேசும் மக்களாக இருப்பதே அவர்களுடைய ஒரே ஒரு குற்றம். அரசியல் அதிகாரம் எண்ணுத் தொகையினையே பொறுத்திருக்கின்றது. இந்த மலைநாட்டுத் தமிழர்களைச் சேர்த்து எண்ணினாலும், இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் அரசியலதிகாரம் அற்றவர்களாக இருக்கின்றார்கள். 

இவர்களுள் மலைநாட்டுப் பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்களை நீக்கிவிட்டால் எஞ்சியிருக்கும் தமிழ் பேசும் மக்கள், தொகையில் மிகவும் குறைந்த அரசியல் அநாதைகளாய் விடுவார்கள். இது போதாதென்று, இந்த மலைநாட்டுத் தமிழ்த் தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்குச் சட்டம் இயற்றிவிட்டார்கள். இது கொடுமையிற் கொடுமையாகும். அரசாங்கத்தின் நோக்கம், இந்நாட்டில் வசிப்பதற்குப் பூரண உரிமையுடைய இம்மக்களை இந்நாட்டைவிட்டுத் துரத்துவது; அல்லது அவர்களைப் பலவந்தமாகத் துரத்துவது; அல்லது அவர்களைப் பலவந்தமாகச் சிங்களம் பேசும் மக்களாக மாற்றுவதுதான் என்பது எவருக்கும் எளிதிற்புலனாகும்....

மலைநாட்டில் வாழும் தமிழ்த் தொழிலாளர்களுடைய நிலைமையானது, இங்கு கூறிய தாழ்த்தப்பட்டோருடைய நிலையிலும் பார்க்கக் கேவலமானதாய் இருக்கின்றது. அவர்கள் அரசியலில் தீண்டாதவர்களாய் விட்டார்கள். அவர்களுக்குப் பிரஜாவுரிமை இல்லாமலிருப்பது மாத்திரமன்றி, தமக்கென ஒரு நாடுமற்ற அகதிகளாகவு மிருக்கின்றார்கள். ஏனைய தமிழ் பேசும் மக்கள் இவர்களுக்கு வந்திருக்கும் இன்னலைத் தங்களுக்கு வந்ததாகவே கருதுதல் வேண்டும். அவர்கள் உதவிக்கு எதிர்பார்ப்பது இந்தியாவையல்ல ; சுதந்திரம் விரும்பும் இலங்கை வாழ் மக்களிடமிருந்தே அவ்வுதவி வருதல் வேண்டும். இவ்விரண்டு விஷயங்களும் - நீங்கள் ஆரம்பிக்க வந்திருக்கும் இக்கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் இடம் பெறுதல் வேண்டும்....

ஏழு லட்சம் தமிழ் பேசும் மக்கள் அரசியலில் பகுபற்றுவதற்கு வழியில்லை. இதுவுமின்றி, இப்பிரிவிவினருக்குக் கல்வி வசதியில்லை. தம்மைச் சுற்றிலுமிருக்கும் கிராமத்திற் குடியேறுவதற்கு உரிமையில்லை. இன்னும் பல இடையூறுகளுக்குட்பட்டு வாழும் இம்மக்கள், உண்மையாய் அரசியல் அனாதைகள்.

எதற்காக இப்படியெல்லாம் அரசாங்கம் செய்கிறது? தமிழ் மக்களின் அரசியல் பலத்தைக் குறைப்பதற்காகவல்லவா? அவர்களின் எண்ணிக்கையை அறுக்கச் செய்வதற்காகவல்லவா? எம்மினம் இப்படி அழிந்து போவதற்கு மாற்று மருந்து உண்டா? இல்லையா?...

அரசியற் துறையில் ஓர் இனம் அழியாமலிருப்பதற்குப் பல ஏதுக்கள் தேவை. இவற்றுள் ஒன்று, அந்த இனத்தின் எண்ணுந் தொகை குன்றாமலிருப்பது. இன்னுமொன்று, அந்த இடம் வசிக்கும் புரதேசம் பறிபோகாமலிருப்பது...

இங்கே இன்னொன்றையும் கவனத்திற் கொள்ளவேண்டும். செல்வநாயகம் தேர்தல் வெற்றியை இலக்கு வைத்து இந்த பிளவை மேற்கொள்ளவில்லை. வைத்து, அல்லது வாக்கு வங்கியை இலக்கு வைத்து இந்திய வம்சாவளி மக்களுக்காக குரல் கொடுத்தார் என்றோ கூட கூற முடியாது. ஏனென்றால் அவரின் தேர்தல் களமோ, வாக்குக் களமோ மலையகம் இல்லை. அவரும் அவரின் கட்சியும் வடக்கு கிழக்கில் தான் களமமைத்து இருந்தது என்பதையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும். இந்திய வம்சாவளி மக்களின் பால் வடக்கு கிழக்கு மக்களின் சிரத்தையையும், அக்கறையையும் குவிக்கவைத்தன் பின்னால் உள்ள நேர்மையான பிரக்ஞையை எவரும் சந்தேகித்து விட முடியாது.

தமிழரசுக் கட்சி தொடக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் அதாவது 1951 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாடு திருகோணமலையில் நடத்தப்பட்டபோது அங்கே பிரதான உரையாற்றிய செல்வநாயகம் அவர்கள் இந்திய வம்சாவளி மக்கள் பற்றி இப்படித் தொடக்குகிறார்...

“இவ்விஷயத்தில், நடப்பது என்னவென்று ஆராய்வோம். கடந்த ஒரு நூற்றாண்டில், இலங்கையில் சுமார் 7, 8 லட்சம் தமிழ் மக்கள் வந்து குடியேறினார்கள். சர்வதேச அரசியல் நீதியின்படி, இந்த 7, 8 லட்சம் தமிழ் மக்கள், இங்கு நிரந்தரமாய் இருக்கும் தமிழ் மக்களோடு ஒன்றுகூடி வாழ்வதற்கு உரிமையுண்டு. சிங்கள அரசாங்கம் இதற்கு முக்கு விரோதமான சட்டங்களையும் நடைமுறைகளையும் நடாத்தி வருகிறது. சிங்கள ஆட்சி உற்பத்தியான 1947 ஆம் ஆண்டின் பின், இந்த 7,8 இலட்சம் மலைநாட்டுத் தமிழ் மக்களின் பிரஜா உரிமை பரிபோகச் சட்டங்கள் ஏற்பட்டன. இச்சட்டங்களில் முதலாவதை, ஜனப்பிரதிநிதிகள் சபையில் விவாதிக்கும் நேரத்தில் நான் கூறினேன் : ‘குடியேறிய இந்தியத் தமிழ் மக்களுக்கல்ல, நிரந்தரமாய் வாழும் இலங்கைத் தமிழ் மக்களாகிய எங்களுக்கே இந்த அடி. இன்று அவர்களுக்கு நாளை எங்களுக்கு.”

இந்த உரையில் முழுக்க முழுக்க இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை, வாக்குரிமை பற்றியதாகத் தான் இருக்கிறது. அதை ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரச்சினையாக அவர் பார்க்கிறார். அது எதிர்காலத்தில் நிகழக்கூடிய அனைத்து தமிழ் மக்களின் மீதான அநியாயங்களுக்கான ஒத்திகையாகப் பார்க்கிறார். எச்சரிக்கிறார். தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால வருடாந்த மாநாட்டுத் தீர்மானங்களும் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளைத் தாங்கித் தான் தீர்மானங்களாகவும், தலைமை உரைகளாகவும் இருந்திருக்கின்றன. தமிழரசுக் கட்சியின் மாநாட்டு மலர்களும் இதற்கு சிறந்த சாட்சிகள். மாநாட்டுத் தீர்மானங்களில் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளுக்கான கோரிக்கைகள் பிரதான இடத்தைப் பிடித்திருந்தன. அதன் பின்னர் தான், மொழிப் பிரச்சினை, குடியேற்றப் பிரச்சினை, அதிகாரப் பரவலாக்கம் போன்ற கோரிக்கைகள் சேர்ந்துகொண்டன.

மஸ்கெலியா நாடாளுமன்ற உறுப்பினர் கடுமையான வாதப் பிரதிவாதங்களை முன்வைத்தார். அவரது வாத பிரதிவாதங்கள் அன்றைய இந்திய வம்சாவளி மக்களின் வாழ்வியலை, இந்திய வம்சாவளி மக்களின்  அறியாமையை, இலங்கை  சட்டம் என்றாலே என்னவென்று புரியாத நிலையை, சட்டப்பதிவுகள், நிர்வாக நடைமுறைகள்  என்றால் என்னவென்றே அறியாத நிலையை எடுத்து இயம்பியது. அத்துடன் கல்வி கற்காத இந்திய வம்சாவளி மக்களின் நிலையையும், இந்திய வம்சாவளி மக்கள் தொழில் அடிமைகளாக வைத்துக்கொள்ளப்பட்டு இருந்தார்கள் என்பதையும் தெளிவாக எடுத்து இயம்பியது.

மஸ்கெலியா நாடாளுமன்ற உறுப்பினர் மோத்தா மேலும் சில கேள்விகளை சபையில் உள்ளவர்களிடம் கேட்டிருந்தார்.

இந்த சபையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் இலங்கை இலங்கையின் பூர்வீக குடிகள் என்பதை உறுதிப்படுத்த முடியுமா? என்பது முக்கியமான  மஸ்கெலியா நாடாளுமன்ற உறுப்பினரின் வாத பிரதிவாதமாக  அமைந்தது.

அத்துடன் சேனநாயக்க  அவர்களின் இரட்டை வேடத்தை துயிலுரிக்கும் முகமாக கடந்த 1930 களின் பிற்பகுதியிலும், 1940 களின் முற்பகுதியிலும் இந்திய மக்களை ஆவலாக அழைத்து வந்ததையும் இந்த மக்களை கொண்டு இறப்பர் தொழிலுக்கு பயன்படுத்தியதையும் சுட்டிக்காட்டி பேசினார். 

1928 களில் இந்திய மக்களை இங்கே அழைத்து வரவேண்டாம் என்று தாம் முரண்பட்டு நின்றதையும் மஸ்கெலியா நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காடினார். 

அத்துடன் இந்த சபையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் மீதான இனவாதத்தை தூண்டும் பேச்சுக்களை பேசும் நபர்கள்  அனைவரும் தென்னிந்திய நாட்டில் இருந்து வந்தவர்களே என்ற வாதத்தையும் மஸ்கெலிய உறுப்பினரால் சுட்டிக் காட்டப்பட்டதுடன் நீங்கள் வங்காள நாட்டை சார்ந்தவர்கள் இல்லை என்றும் வாதிட்டார்.

மகாவம்சத்தில் இந்நிகழ்வு பற்றி

இலங்கையின் வரலாற்றை நீண்ட காலமாக; உத்தியோகபூர்வமாக பதிவு  மரபை உலகில் இலங்கை மட்டுமே கொண்டிருக்கிறது. இதுவரை கி.மு ஐந்தாம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 2010 வரை சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேல் எழுதப்பட்டு வந்திருக்கிறது. இவை அனைத்தும் மொத்தம் 6 தொகுதிகளைக் கொண்டது. இதில் நான்காவது தொகுதி 1936 முதல் 1956 வரையான காலப்பகுதியின் வரலாற்றை பதிவு செய்திருக்கிறது. 1948 ஆம் ஆண்டு குடியுரிமை பறிப்பு நிகழ்வும் இந்த நான்காம் தொகுதிக்குள் தான் அடங்கியிருக்கிறது. அந்தத் தொகுதியில் இதைப் பற்றி அதிகளவு விபரங்கள் தரப்படவில்லையாயினும்; சொல்லப்பட்டவை என்ன என்பதையும் இங்கே பதிவு செய்தல் இந்த நூலுக்கு வலுச் சேர்க்கும்.

“1948 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் விளைவாக இந்திய வம்சாவளியினரின் வாக்குரிமை பறிபோனதுடன் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் உரிமையும் அவர்களுக்கு இல்லாது போனது.” 

அதே நூலில் இன்னொரு இடத்தில்...

“அமைச்சர்கள் தமது கொள்கைகளை செயற்படுத்தும் போது ஏற்கெனவே ஒப்புக்கொண்ட அமைச்சரவை சம்பிரதாயங்களுக்கு புறம்பாக நடந்துகொண்ட சந்தர்ப்பங்களும் ஏற்பட்டன. கொள்கை ரீதியான சிக்கல் ஏற்படின் கூட்டுப்பொறுப்பு கொள்கையின் படி அமைச்சரொருவர் அப்பொறுப்பில் இருந்து விலகி விடுவதே இந்த நாட்டின் அமைச்சரவை முறையின் படி ஆரம்பத்திலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் டீ.எஸ்.சேனநாயக்கவின் அமைச்சரவையில் முதன் முதலாக விலகியவர் வர்த்தக அமைச்சராக இருந்த சீ.சுந்தரலிங்கம். குடியுரிமைச் சட்டம் பற்றி அவர் கொண்டிருந்த கொள்கையே இதற்கு காரணமாக இருந்தது. ஆனாலும் அமைச்சரவையில் இருந்து இவ்வாறு விலகியதால் சேனநாயக்க அரசாங்கத்தின் நிலைப்பாடுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.”

மகாவம்சத்தின் இந்த பதிவின் படி தமிழர் தரப்பின் எந்த நிர்பந்தத்தாலும் குடியுரிமைபறிப்பது என்கிற அரசின் கொள்கையை மாற்ற முடியாமல் போனது என்று திட்டவட்டமாகக் கூறுகிறது. சுதந்திர இலங்கையின் அமைச்சரவையில் இருந்து முதலாவது விலகல் குடியுரிமைப் பிரச்சினையால் தான் நிகழ்ந்தது என்பதை மகாவம்சம் பதிவு செய்கிறது.

குடியுரிமை அடிப்படை உரிமை

முடிவாக, “குடியுரிமை என்பது அடிப்படை உரிமை” என்று  உலக அளவில் ஐ.நா.வின் மனித உரிமைகள் சாசனம் அதே 10.12.1948 அன்று பாரிஸ் நகரில் பிரகடனப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த அதே நாள் இங்கே எட்டு லட்சம் மக்கள் குடியுரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக ஆக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த மனித உரிமைகள் சாசனத்தின் 15வது பிரிவில் தான் “குடியுரிமை என்பது அடிப்படை உரிமை” என்று பிரகடனப்படுத்தியது.

குடியுரிமைப் பறிப்பின் மூலம் இம்மக்கள் நாட்டையும் இழந்தார்கள், குடியுரிமையையும் இழந்தார்கள், வாக்குரிமையை இழந்ததன் மூலம் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் வாய்ப்பையும், உரிமையையும் இழந்தார்கள். பெரும்பாலான தோட்டத்தொழிலாளர்களை நாடற்றவர்களாகவும் வாக்குரிமையற்றோராகவும், ஈற்றில் சட்டவிரோதக் குடியேறிகளாகவும் மாற்றிவிட்டன இச்சட்டங்கள். அவர்கள் தொழில் நிமித்தம் இலங்கையில் வந்து தங்கி தொழில் பார்த்துவிட்டு நாடு திரும்பலாம் என்கிற நிலைக்கே ஆளாக்கப்பட்டார்கள். அடிப்படை உரிமைகளை பலவற்றை தொடர்ந்தும் அனுபவிப்பதற்கான கதவுகள் இதனூடாக அடைக்கப்பட்டன.

வாக்களிக்கும் தகைமை இல்லாத ஒரு சமூகத்தின் நலனுக்காக எந்தவித சமூகநலத் திட்டங்களையும் முன்னெடுக்கும் தேவை அரசியல்வாதிகளுக்கு இருக்கவில்லை. எனவே இந்திய வம்சாவளி மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட அந்த உரிமை வென்றெடுப்பதற்கு போராடுவதற்குப் பதிலாக, ஆதரவளிப்பதற்கு பதிலாக அதையே வசதியாக தமது அரசியல் நலனுக்காக திருப்பிக் கொண்டனர். பாரபட்சங்களை எளிமையாக மேற்கொண்டனர்.

வாக்கெடுப்பு பற்றிய உண்மைகள் இதோ...

உசாத்துணை
  1. Rajan Holle & Kirupaimaar Holle, Democracy Stillborn, Lanka’s Rejection of equal rights at Independence?, an imprint ofthe Perera Hussein Publishing House, 2022.
  2. The council of State Debates Volume II, 1941, (10th November to 22 November, 1941) Government of India Press, simla. 1942.
  3. A. Jeyaratnam Wilson, Electoral Politics in an Emergent State: The Ceylon General Election of May 1970, Cambridge University Press, 1975
  4. ராஜனி திராணகம, ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம், கே. ஸ்ரீதரன், முறிந்தபனை - இலங்கையில் தமிழர் பிரச்சனை: உள்ளிருந்து ஒரு ஆய்வு – மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்) 1996
  5. BRITISH DOCUMENTS ON THE END OF EMPIRE - Series B Volume 2, Sri Lanka - Editor KM DE SILVA - Part 11 - TOWARDS INDEPENDENCE - 1945--1948, Published for the Institute of Commonwealth Studies in the University of London (P-220)
  6. மலல்கொட பந்துதிலக்க, இலங்கையின் தேர்தல் புராணம், Colombo Shega Enterprises, 2002
  7. K.M.De Silva and Howard Wriggins - J.R.Jayawardena of Sri Lanka A Political Biography, 1906-1956, Univ of Hawaii Press, 1988)
  8. ஜவஹர்லால் நேருவின் இலங்கை விஜயத்தின் போது இந்தியத் தோட்டத் தொழிலாளர்களை அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதற்காக உருவாக்கிய இலங்கை இந்தியர் காங்கிரஸ் என்கிற கட்சி ஐ.எக்ஸ்.பெரைரா, ஜீ.ஆர்.மோத்தா ஆகியோரின் தலைமையில் தான் ஆரம்பிக்கப்பட்டது.
  9. ஈழகேசரி, 18.11.1945
  10. Ce Cuntaraliṅkam, Eylom: beginnings of freedom struggle;: Dozen documents, – Arasan Printers, Sri Lanka, 1967
  11. த.இளங்கோவன், மலைநாட்டுத் தமிழருக்கு துரோகம் இழைத்தது யார்?, தமிழன் வெளியீடு, 1970.
  12. இலங்கை பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை. 10/08/23.
  13. ஜே..எல்.பெர்னாண்டோ இலங்கை சுதந்திரம் அடைகின்ற காலப்பகுதியில் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பத்திரிகையாளர். மேலும் அவர் அபோதைய அரசியல் தலைவர்களோடு நெருங்கிய தொடர்புகளை பேணிவந்ததுடன், அவர்களின் ஊடக தொடர்பாளராகவும் இருந் து வந்தவர். அவர் எழுதிய இலங்கையின் மூன்று பிரதமர்கள் (உட் கதைகள்) (Three Prime Ministers of Ceylon-An 'Inside Story') என்கிற நூல் மிகவும் பிரபல்யமானது. இதுவரை வெளிவராத பல உள் கதைகளைக் கொண்ட அவரின் நேரடி அனுபவங்களை அவர் அந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.
  14. Pieris, L. L. T. The Citizenship Law of the Republic of Sri Lanka. (Ceylon) (Colombo: Own Publication. 1974).
  15. ராஜனி திராணகம, ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம், கே.ஸ்ரீதரன், முறிந்தபனை, UTHR, 1996
  16. திருகோணமலையில் 14.04.1951 ஆம் ஆண்டு நடந்த தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டில் சா.ஜே.வே.செல்வநாயகம் ஆற்றிய உரையிலிருந்து.
  17. மகாவம்சம் – 1935 – 1956 (தொகுப்பு - கலாநிதி நந்ததேவ விஜேசேகர) –(இரண்டாம் பதிப்பு 1996), கொடகே சகோதரர்கள், கொழும்பு. (சிங்களப் பதிப்பு)
நன்றி - தாய்வீடு

1948 குடியுரிமை பறிப்பு: பி... by SarawananNadarasa

தோழர் லெனின் மதிவானத்துடனான தோழமைப் பயணம் - என்.சரவணன்

இக்கட்டுரை லெனின் தோழரின் நினைவாக தோழமைக்குரிய ஜீவா சதாசிவம் தொகுத்த 'லெனின் மதிவானம்  . இளமை . புலமை . இனிமை'  நூலில் வெளிவந்தது.

தோழர் லெனின் மதிவானம் தனது தொழில் ஆளுமைக்கு வெளியே இலக்கிய உலகில் விமர்சகராகவும், செயற்பாட்டாளராகவும் சமூக சிந்தனை மிக்கவராகவும் தன்னை பரவலாக நிலை நிறுத்தியவர். 

அவர் இலங்கை நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையிலும் வெற்றிபெற்று அரச உயர் உத்தியோகம் வரை சென்றதை அப்போது வியப்பாகத் பார்த்தார்கள். மலையகத்திலிருந்து மிகச் சிறிய எண்ணிக்கையானவர்களே இவ்வாறு அரச உயர் உத்தியோகங்களுக்கு வர முடிந்தது. இத்தகைய நிலையை எட்ட வேண்டுமாயின் மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களைவிட அதிக ஆற்றலை வெளிப்படுத்தியாக வேண்டும் என்கிற நிலை மலையகத்துக்கு உரியது.

இலங்கைக் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் உதவி ஆணையாளராக அப்படித்தான் ஆனார்.

உண்மையைச் சொல்லப்போனால் அவரின் தந்தை ஜெயராமனின் நேரடி வழிகாட்டல் இல்லாமல் வளர்ந்தவர்கள் தான் லெனினும், ட்ரொஸ்கியும்.

அதுபோல அவருக்கு நேரடி அரசியல் வழிகாட்டலும் அவரின் தந்தையால் கிடைக்கவில்லை என்றே கூறவேண்டும். தந்தையின் பராமரிப்பு அவர்களுக்கு குறைவாக இருந்தநிலையில் அவர்களை வளர்த்தவர் தாய் தான். லெனினின் தாயார் ஒரு சராசரி தாயாராகவும் இருக்கவில்லை. அவர் அதற்குமேல் எந்தளவு வழிகாட்டியாக இருந்தார் என்பதை அவ்விருவரின் வளர்ச்சியைக் கொண்டு நாம் கணிக்கலாம்.

அதேவேளை தோழர் ஜெயராமன் தனது அரசியல் வலைப்பின்னலுக்குள் இருந்த தொடர்புகளை அவர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அப்படித்தான் லெனினும் எனக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்.

தோழர் இளஞ்செழியனுடன் தோழர்கள் லெனின் மதிவானம், ட்ரொட்ஸ்கி

அது தொண்ணூறுகளின் தொடக்கம். பீபல்ஸ் பார்க் எனப்படுகிற கொழும்பு மத்திய தனியார் பஸ் நிலைய வளாகத்தில் அமைந்திருந்த பொது மலசலகூடங்களை சுத்தப்படுத்தும் கண்ராக்ட் தோழர் ஐயலு எனப்படுகிற பெருமாள் அவர்களிடம் இருந்தது. அருகில் ஒரு சின்னஞ்சிறு அறையொன்றை தனது அலுவலகமாகவும், சந்திப்பிடமாகவும் ஆக்கிக்கொண்டிருந்தார். அங்கே பல இடதுசாரி நண்பர்களும், தொழிற்சங்கவாதிகளும் சந்தித்துக்கொள்வார்கள். தோழர் ஜெயராமனை சந்திப்பதாக இருந்தாலும் அங்கே தான் பலர் அப்போது சென்று வந்தார்கள். அவர்களின் அறிமுகம் கிடைத்த காலத்தில் தான் தோழர் ஜெயராமன் அங்கே லெனினை ஒரு நாள் அறிமுகப்படுத்தினார். என்னைப் பற்றி லெனினுக்கும், லெனினைப் பற்றி எனக்கும் விரிவான அறிமுகத்தை செய்தார்.

லெனின் என்னை விட ஒரு சில மாதங்களே மூத்தவர். என்பதால் எங்கள் உரையாடல்களும் அலைவரிசையும் ஏறத்தாழ ஒன்றாகவே இருந்தது. எனக்கு மாக்சியத்தையும் மாக்சிய இலக்கியங்களையும் அறிமுக்கப்படுத்தியவர் தோழர் ஜெயராமன். அவரின் அரசியல் இலக்கிய தொடர்புகள் பலவற்றை எனக்கும் அறிமுகப்படுத்தினார். என்னை கவிதை எழுத வைத்தார். கவியரங்கு மேடைகளில் அக்கவிதைகளை பாடவைத்தார். லெனின், ட்ரொஸ்கி ஆகிய மகன்களைப் போல நானும் அவருக்கு ஒரு மகனாகவே நடத்தப்பட்டேன். வெறும் சாதாரண தரத்தோடு நான் எனது கல்வியை இடைநிறுத்திவிட்டு சமூக, அரசியல் பணிகளில் என்னை ஈடுபடுத்த தொடங்கிய காலத்தில் என்னை உயர்தரக் கல்விக்கு உந்தியவர் அவர் தான். அதுபோல எனது முதலாவது நூல் “Abbreviation 1000” 91ஆம் ஆண்டு வெளிவருவதற்கு முற்றுமுழுதான காரணமும் தோழர் ஜெயராமன் தான். அன்றைய கொழும்பு மேயர் ரத்னசிறி ராஜபக்ச தலைமையில் கொழும்பில் உள்ள பெரிய மண்டபங்களில் ஒன்றான எல்பின்ஸ்டனில் அதை வெளிக்கொணர முற்றுமுழுதாக அவர் தான் பின்னணியில் உழைத்திருந்தார். தனது பிள்ளைகள் லெனின், ட்ரொஸ்கி ஆகியோரை எனது வடிவில் பார்த்தார் தோழர் ஜெயராமன்.


தோழர் ஜெயராமனின் அரசியல், தொழிற்சங்கப் பணிகளின் காரணமாக அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கிக் கொள்பவராக இருந்தார். லெனினும், ட்ரொஸ்கியும், அவர்களின் தாயாரும் தோழர் ஜெயராமிடம் இருந்து  தூர விலகி இருந்ததற்கு இதுவே முக்கிய காரணமாக இருந்தது. தந்தையின் பராமரிப்பின்றி தம்மைத் தாமே தாயாரின் உதவியுடன் செதுக்கிக் கொண்டவர்கள் தான் லெனினும், ட்ரொஸ்கியும். 

லெனின் கொழும்பு வந்த சில சந்தர்ப்பங்களில் தோழர் இளஞ்செழியனின் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வார். அங்கே எப்போதும் தோழர் இளஞ்செழியனை சந்திக்க அரசியல், தொழிற் சங்கத் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் வந்து போவார்கள். தோழர் இளஞ்செழியனை நானும் லெனினும் வியப்பாகவே பார்த்தோம். அடிக்கடி அவரை சந்தித்துக்கொள்வோம். நிறையவே அவருடன் உறையாடியிருக்கிறோம். தோழர் இளஞ்செழியனுக்கும் லெனின் என்றால் மிகவும் பிடிக்கும். பிற்காலத்திலும் பல சந்தர்ப்பங்களில் அவரின் வளர்ச்சியைப் பெற்றி மிகவும் பெருமையாக உரையாடியிருக்கிறார்.

எவரைப் பார்த்தாலும் தோழர் என்று அழைக்கிற அந்த மாக்சியப் பண்பாட்டை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவரும், திடமாக ஊட்டியவரும் தோழர் ஜெயராமன் தான். எனவே தான் லெனினும் அவரின் தாயாரும் கூட அவர்களுக்குள் தோழர் என்று வீட்டுக்குளேயே பரஸ்பரம் அழைக்கப் பழக்கிக் கொண்டார்கள். அப்படி ஒரு வழக்கத்தை நாம் நிச்சயம் கண்டிருக்க மாட்டோம்.

நான் சரிநிகரில் பணிபுரிந்த 90களில் லெனின் உயர்கல்வி கற்றுக்கொண்டிருந்தார். அப்போது அவர் புதிய ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து பணியாற்றிக்கொண்டிருந்த காலம். தந்தை ஒரு ட்ரொஸ்கிடாக இருந்தபோதும், தோழர் இளஞ்செழியன் போன்ற அவரின் நட்புகளும் ட்ரொஸ்கிட்டுகளாக இருந்தபோதும் லெனின் அந்த அரசியல் சித்தாந்தத்துக்கு நேரெதிரான மாவோவாத அணியில் இயங்கினார். தந்தை ஜெயராமனுக்கு இது தொடர்பில் அதிருப்திகள் இருந்தபோதும் அவருடன் அரசியல் வாதம் செய்யுமளவுக்கு லெனின் வளர்ந்துவிட்டிருந்தார். அவ்வாறு அவர் மாவோவாத பாதையை பலப்படுத்தியதில் அவரோடு கொட்டக்கலை ஆசிரிய கலாசாலையில் சக விரிவுரையாளராக பணிபுரிந்த தோழர் ரவீந்திரனுக்கும் முக்கிய பங்குண்டு.


பின்னர்  2000ஆம் ஆண்டு நான் நோர்வே வந்து சேர்ந்துவிட்டதன் பின்னர் தோழர் லெனினுடன் தொடர்புகள் அற்று போனது. ஆனால் அவரின் எழுத்துக்களை நானும், எனது எழுத்துக்களை அவருமாக ஒருவரை ஒருவர் கண்கானித்துக்கொண்டிருந்தோம். அவர் அரசியல் செயற்பாட்டாளராக மட்டுமன்றி, மலையகத்தில் முன்னணி இலக்கிய விமர்சகராக ஆகியிருந்தார். குறிப்பாக அனைத்தையும் மாக்சிய நோக்கில் கட்டுடைத்து திறனாய்வுகளை முன் வைப்பதில் அவருக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டார். மலையகத்தில் இருந்து வந்த விமர்சகர்களில் ஈழத்து திறனாய்வுப் பரப்பிலும் தடம் பாதித்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் லெனின் இளம் மாக்சிய திறனாய்வாளராக மிளிர்ந்தார்.

பேராசிரியர் கைலாசபதியின் பணிகளால் மிகவும் ஈர்க்கப்பட்டிருந்த லெனின் கைலாசபதியின் திறனாய்வு அணுகுமுறைகளை கைக்கொண்டார். அவரையே தனது ஆஸ்தான வழிகாட்டியாக வரித்துக்கொண்டார். கைலாசபதியின் பணிகளை புதிய தலைமுறைக்கு வியாக்கியானம் செய்யும் பணியையும் மேற்கொண்டார்.

யுத்தம் முடிந்தபின்னர் தான் பத்தாண்டுகளுக்குப் பின்னர் 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு நான் மீளவும் பிரவேசிக்க முடிந்தது. பல தோழர்களை தேடித் தேடிச் சென்று சந்தித்தேன். அப்படி மீண்டும் எனக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்க முந்தவர்கள் தான் தோழர் லெனினும், திலக்கும். திலக் தான் லெனினுடானான மீள் சந்திப்பை ஏற்படுத்தியவர். மூவரும் ஒரே வயதைச் சேர்ந்தவர்கள், ஒரே அலைவரிசையைக் கொண்டிருந்தவர்கள் என்பதால் மலையகத்துக்கான புதிய அரசியல் செயற்பாட்டொன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டோம். பல தடவைகள் எனது வீட்டில் இதற்கான சந்திப்பை மேற்கொண்டோம். மலையகத்தின் அரசியல் முன்னெடுப்புக்கு பெரும் அவசியமாக இருப்பது ஊடகப் பலம். எனவே நாமே நமக்கான வணிக நோக்கமற்ற ஒரு ஊடகத்தை உருவாக்குவது என்கிற முடிவுக்கு வந்தோம்.

அதன் விளைவாக உருவானது தான் நமது மலையகம் (namathumalayagam.com) இணையத்தளம். Malayagam.com என்கிற இணையத்தளப் பெயரை இதற்காக வாங்கினோம். ஆனால் அந்தப் பெயர் பற்றி தோழர் லெனினுக்கு மாறுபட்ட கருத்து இருந்தது. அதற்குப் பதிலாக அவர் நமது மலையகம் என்கிற பெயரை சூட்டச் சொன்னார். உண்மையில் அவரின் திருப்திக்காகத் தான் மீண்டும் namathumalayagam.com என்கிற பெயரை வாங்கி அதையே பயன்படுத்த நேரிட்டது.

இந்தப் படத்தில் எனக்கு இடதும் வலதுமாக இருக்கிற எவரும் உயிருடன் இல்லை. தெளிவத்தை ஜோசப், பேராசிரியர் சந்திரசேகரம், லோரன்ஸ், லெனின் ஆகியோர் இரு ஆண்டுகளுக்குள் நால்வரும் மறைந்து போனார்கள்.

நமது மலையகம் இணையத்தளத்தை கிரமமாகவும், தடையின்றியும் நடத்துவதாயின் போதிய ஊடக செயற்பாட்டாளர்களையும் நம்மோடு இணைத்து கொள்ள வேண்டும் என்கிற முடிவெடுத்தோம். மலையக இளம் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி அளித்து எம்மோடு இணைக்கும் நோக்குடன் ஒரு முழுநாள் ஊடகப் பயிற்சிநெறியை கொழும்பில் மேற்கொண்டோம். நமது மலையகம் எதிர்காலத்தில் ஒரு அரசியல் சமூக செயற்பாட்டுக் களமாக மாற்றுவது என்கிற உரையாடல் வந்தபோது அது பெரும் பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்தும் என்கிற விமர்சனத்தை முன்வைத்து எம்மோடு இருந்த சிலர் வெளியேறினார்கள். ஆனால் அந்த முடிவில் உறுதியாக இருந்தவர்கள் லெனினும், திலக்கும் தான்.

2013 ஆம் ஆண்டு கொழும்பு தமிழ்சங்கத்தில் இணையத்தளத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம் நடத்தப்பட்டபோது அதன் தொடக்கவுரையை லெனின் தான் செய்தார். தலைமையுரையை தெளிவத்தை ஜோசப் அவர்களும், சிறப்புரையை பேராசிரியர் சோ.சந்திரசேகரனும் வழங்கினார்கள். இவர்கள் மூவரும் கடந்த ஓராண்டுக்குள் ஒன்றன் பின் ஒருவராக நம்மிடம் இருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டார்கள்.

சமூக நீதி, சமத்துவம், சுதந்திரம், ஜனநாயகம் போன்றவை எப்போதும் எமது பேசுபொருளாக இருந்திருக்கிறது. தலித் விடுதலை குறித்த விடயத்தில் அவரோடு ஒத்த அலைவரிசையைக் கொண்டிருந்தோம். அவருடனான ஒரு சம்பவத்தை என்றும் மறக்க முடியாது. அந்த சம்பவத்தை தலித்தின் குறிப்புகள் நூலிலும் நான் பதிவு செய்திருக்கிறேன்.

பாட நூலை மாற்றவைத்த தோழர் லெனின் மதிவானம் - என்.சரவணன்

இலங்கை அரசாங்கத்தின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட “தமிழ் இலக்கியத் தொகுப்பு தரம் 10-11” என்கிற பாடசாலைகளுக்கான பாடநூலில் தான் கண்ட ஒரு குறைபாட்டை ஒரு பெரியவர் எனது வீட்டுக்கு வந்து தனது வேதனையைத் தெரிவித்தார். அந்த நூலின் போட்டோ பிரதியொன்றைக் கொண்டு வந்து காட்டினார். அதில் உள்ளதைக் காட்டி பாடசாலை மாணவர்களிடமும் இப்படியான சாதிய வசவுச் சொல்களை அறிமுகப்படுத்துகிறார்களே என்று நொந்துகொண்டார். நான் அந்த மூல நூலைக் கண்டெடுத்தேன். இது நடந்தது 2012இல்.


கல்வி வெளியீட்டுத் திணைக்கள பிரதி ஆணையாளராக தோழர் லெனின் மதிவானம் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவரிடம் நான் “என்ன தோழர் நீங்கள் எல்லாம் இருந்தும்கூட இப்படி நடந்திருக்கிறதே. எப்படி உங்கள் பார்வையை மீறி இது நிகழ்ந்திருக்க முடியும்” என்று அவரிடம் தொலைபேசிமூலம் ஆதங்கமாக கூறினேன்.

அவர் அந்த நூலை என்னுடன் உரையாடிக்கொண்டே பார்வையிட்டார்.

"உண்மை தான் தோழர். வீராசாமி செட்டியார் எழுதிய “ஒரு பதிவிரதையின் சரித்திரம்” என்கிற கதை தானே. அதில் ‘செருப்பு தைக்கும் சக்கிலியன்’ என்கிற ஒரு வசனம் வருகிறது ” என்றார்.

ஆம் என்றேன். நூலுருவாக்கத்தின் போது தொகுப்பாளர் குழுவுடன் எதிர்கொள்ளும் ஆதிக்க சித்தாந்த சிக்கல்களைப் பற்றி நீண்ட நேரம் உரையாடினார்.

“இதை உடனடியாக மாற்ற வேண்டும் தோழர். எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? இதை உடனடியாக செய்வதற்கு ஒரு முறைப்பாடு தேவைப்படுகிறது. உடனடியாக அப்படியொன்றை எழுதி எனக்கு இன்றே அனுப்புவீர்களா” என்றார் லெனின்.

நான் ஒரு தூரப்பயணத்தில் இருந்தேன். உடனடியாக செய்வதில் சிரமங்கள் இருந்தன. நிலைமையை விளக்கி பின்னேரத்துக்குள் வீட்டை அடைந்ததும் அனுப்பி வைக்கிறேன் என்று விடைபெற்றேன்.

பின்னேரம் அவரிடமிருந்தே தொலைபேசி அழைப்பு வந்தது.

“தோழர்! வேறொருவரைக் கொண்டு அந்த முறைப்பாட்டை எழுதி எடுத்துக்கொண்டேன். நூல் விநியோகத்தை நிறுத்திவிட்டேன். புதிய பதிப்பில் மாற்றங்களை செய்ய வழி செய்திருக்கிறேன் தோழர்.” என்றார்.

தோழர் லெனின் மதிவானம் இவ்வளவு வேகமாக இயங்கியதை மிகுந்த வியப்பை அளித்தது. இப்படி ஒரு விடயத்தை மேற்கொள்ள எத்தனை காலம் செல்லும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.


அதே வருடம் ஒரு சில மாதங்களில் புதிய பதிப்பை வெளியிட்டு எனக்கும் அதன் பிரதியைக் கிடைக்கச் செய்தார். அதில் “செருப்பு தைக்கும் தொழிலாளி” என்று மாற்றப்பட்டிருந்தது. அவரின் பிரக்ஞைக்கும், வேகத்துக்கும் இது ஒரு சிறந்த உதாரணம்.

ஒவ்வொரு ஆண்டும் இலங்கை விஜயம் செய்யும் போது எங்கள் வீட்டில் எங்களின் நேசபூர்வமான சந்திப்புகள் நிச்சயம் இருக்கும். அச்சந்திப்புகளில் உடன்பாடுகளைப் போல முரண்பாடுகளைக் கொண்ட உரையாடல்களும் தலைதூக்கியிருக்கின்றன. ஆனால் அவை புலமைத்துவ மட்டத்தில் தீர்த்துக் கொள்ளும் பக்குவம் அவரிடம் இருந்தது. எங்கள் சந்திப்புகள் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடியும், உரிமையுடன் அன்பு மேலிடலுடனும் இருக்கும்.பெரும்பாலும் இரவு அவர் எங்கள் வீட்டிலேயே தங்கி விடுவார்.

அவர் விழுந்து உடல் பாகங்கள் இயங்காமல் போனதை அறிந்தபோது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் சிகிச்சையால் எழுந்துவிடுவார் என்கிற நம்பிக்கை இருந்தது. இறுதியாக இலங்கை சென்றிருந்த வேளை அவரைப் பார்ப்பதற்காக நானும் தோழர் திலக்கும் ஒன்றாக மருதானையில் அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த ஆஸ்பத்திரிக்குச் சென்றோம். அங்கே நாங்கள் எந்தக் கவலையையும் காட்டிக்கொள்ளாமல் மிகவும் உற்சாகமாக கதைத்தோம். ஆனால் அவர் எம்மோடு ஏதோ பேசுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார். அவருக்கு சொற்கள் எதுவும் வரவில்லை. தனது துணைவி அவர் சொல்லவந்ததை எமக்கு விளக்குவார் என்று எதிர்பார்த்து அவர் பக்கம் திரும்பினார். ஆனால் அவரின் துணைவியாலும் அதை புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது. அவர் சொல்ல வந்தததை சொல்ல முடியாமல் போன ஆற்றாமையால் அவரின் கண்களில் இருந்து கண்ணீர் விழுந்துகொண்டிருந்தது. அந்தக் காட்சி இன்றும் என்னை வந்து தொந்தரவு செய்யும் காட்சிகளில் ஒன்றாக ஆகிவிட்டது.

நான் வருக்காக கொண்டு சென்றிருந்த எனது “கண்டி கலவரம்” நூலை அவருக்கு கொடுத்து விட்டு, அதில் உள்ள சில பகுதிகளை வாசித்து காட்டி விளக்கினேன். எனது அடுத்த நூலின் அறிமுகக் கூட்டத்துக்கு அவர் எழுந்து வந்து உரையாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். உண்மையாகவே அப்படி எழுந்து விடுவார் என்றும் சிகிச்சை பலனளிக்கக் கூடும் என்றும் நம்பிக்கொண்டிருந்தேன்.

சிகிச்சை ஏன் பலனளிக்குதில்லை என்பதை அவரின் துணைவியும், தோழர் திலக்கும் எனக்கு விளங்கப்படுத்தியிருந்தார்கள். ஆனாலும் அவர் இப்படி வேகமாக விடைபெற்றுவிடுவார் என்பதை கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

அவரின் இழப்பை ஒரு சாதாரண இழப்பாக கடந்து போக முடியவில்லை. அவரால் நம் சமூகத்துக்கு கிடைக்க இருந்த பெரும் பணியையும் நாம் இழந்துவிட்டிருக்கிறோம்.

அவர் எனக்கு அரசியல் தோழராக, சக நண்பராக மட்டுமல்ல. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் உறவாக ஆக்கப்பட்ட சகோதரரும் கூட.

எனது அடுத்த நூலை என் சகோதரன், என் தோழன் லெனினுக்கே சமர்ப்பிக்கிறேன்.

“மலையக” தேசிய அடையாளத்தின் - பரிணாமங்களும், பரிமாணங்களும் - என்.சரவணன்

“மலையகம் 200” தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 15யூலை 2023 அன்று நடத்தப்பட்ட மாநாட்டில் ஆற்றிய உரையின் விரிவான எழுத்து வடிவம் இது. இக்கட்டுரையின் சாரம்சமே உரையின் மையமாக இருந்தது.

“தேசியம்” என்பது கட்டமைக்கப்படுவது தான். பல சந்தர்ப்பங்களில் கற்பிதமாக உருவாக்குவதற்கான அவசியமும் இனக்குழுமங்களுக்கு ஏற்பட்டுவிடுகின்றன. தேசிய உருவாக்கத்துக்கான வரைவிலக்கணங்கள் காலத்துக்கு காலம் மாற்றம் கண்டும், புதுப்பித்தும் கொண்டு வளர்ந்து வந்திருக்கிறது.ஒரு தேசிய இனத்தின் உருவாக்கம் அதுகாரத்துவத்துக்காகவும் உருவாகலாம் அதுபோல அடக்குமுறையிலிருந்து விடுவிப்பதற்காகவும் தனது தனித்துவமான அடையாள தேசியத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

இன்றைய “நவீன” உலக ஒழுங்கில் அடையாள பிரச்சினை எங்கெங்கிலும் மையைப் பிரச்சினையாக ஆகி இருக்கிறது. இலங்கையில் 1833 ஆம் ஆண்டு கோல்புறூக் சீர்திருத்தத்துக்கு ஊடாக ஒரே நாடாக்கப்டும் வரை இலங்கைக்கான ஒரு தேசியம் கூட இருந்ததில்லை. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வரை தமிழர்கள் கூட தமிழ் தேசிய இனமாக உணர்ந்ததில்லை. 80 கள் வரை முஸ்லிம்கள் கூட தனித் தேசியமாக உணரத் தள்ளப்படவில்லை. மலையகத் தேசியம் பற்றிய கருத்தும் கூட 90களில் வெளிப்பட்டது தான். இனமாக உணர்வதும் தேசியமாக உணர்வதும், ஆவதும் வேறு வேறு அரசியல் உள்ளடக்கங்களைக் கொண்டவை.

இலங்கையின் தனித்துவமான பெரும்பான்மை இன மேலாதிக்க சித்தாந்தத்தின் வளர்ச்சி ஏனைய இனங்களின் தனித்துவத்தை நிலைநிறுத்தத் தள்ளின. இறுதியில் தனக்கான தேசியத்தை கட்டமைப்பதற்கும், வடிவமைப்பதற்கும், வரைவிலக்கணப்படுத்துவதற்கும் ஒவ்வொரு இனமும் தள்ளப்பட்டன.

இந்திய வம்சாவளி மக்களை இலங்கையில் சகல அரச பதிவுகளிலும், புள்ளிவிபரத் தொகை மதிப்புகளிலும் அதிகாரபூர்வமாக இந்தியத் தமிழர்கள் (Indian Tamils) என்று அழைக்கப்பட்டாலும், வெகுஜன மட்டத்தில் தோட்டத் தமிழர்,  பெருந்தோட்டத் தமிழர், மலையகத் தமிழர், என்றெல்லாம் அழைக்கப்படுவதுண்டு. ஆங்கிலேயர்கள் ஆரம்பத்தில் கூலிகள் என்றும், இந்தியக் கூலிகள் என்றும், கூலித் தொழிலாளர்கள் என்றும் பல ஆண்டுகளாக பதிவு செய்து வந்தார்கள். அதுபோக இம்மக்களை வெறுப்புணர்ச்சிமிக்க நையாண்டியுடன் கள்ளத்தோணி, வடக்கத்தேயான், தோட்டக்காட்டான் என்றெல்லாம் கூட ஏனைய சமூகங்கள் அழைத்து வந்தனர்.

இப்போது “மலையகத் தமிழர்” அடையாளத்துக்குள், இலங்கை முழுவதும் வாழும் அனைத்து இந்திய வம்சாவளியினரையும் அடக்கும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் நடைமுறை சாத்தியங்கள் பற்றி ஆராய்வதும், அதற்கான பின்னணி வழித்தடத்தை ஆராய்வதும் இக்கட்டுரையின் நோக்கம்.

மலையகத்துக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவளியினர்; இன்னும் சொல்லப்போனால் இலங்கையில் நான்கு தேசிய இனங்களுக்கும் வெளியில் கவனிப்பாரற்று நெடுங்காலமாக வாழ்ந்து வரும் கதைகளை இலங்கையின் எந்த இலக்கியங்களும், ஆய்வுகளும் ஒழுங்காக பதிவு செய்ததில்லை.

இதன் காரணமாக ஒரு பெரும் தொழிலாளர் வர்க்கக் கூட்டம் பற்றி மலையகத்தில் கூட புரிதல் அற்ற ஒரு நிலைக்கு வந்திருப்பதை இன்று காண முடிகிறது. அது மட்டுமன்றி கொழும்பில் இருக்கும் இந்திய வம்சாவளியினர் கூட ஏதோ உயர் வர்க்க, உயர் சாதி மேட்டுக்குடி என்றும், இந்திய நலன் பேணும் மக்கள் கூட்டம் என்றும் கூறித்திரிகிற அபத்தப் புனைவுகள் அவர்களுக்கு போதிக்கப்பட்டு வந்திருக்கிறது.

உண்மைகள் பல சந்தர்ப்பங்களில் கசக்கும். இயற்கை மருந்தும் கூட பல சந்தர்பங்களில் கசக்கத் தான் செய்கிறது. ஆனால் அதை விழுங்குவது தான் நிவாரணி.

மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்கள் செறிவாக வாழக் கிடைத்ததால் இனப் பண்பாட்டையும், மரபுகளையும், கலை இலக்கியங்களையும் பேண வாய்ப்பு கிடைத்தது. அதன் வாயிலாக இன அடையாளத்தையும் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. அரசியல் தலைமைகளையும் உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பையும், கூட்டு அரசியல் அபிலாசைகளையும் கூட பேண முடிந்தது. ஆனால் மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் வாழ்ந்த இந்திய வம்சாவளி மக்கள் மலையகக் கூட்டுக்குள் இணைக்கப்படவில்லை.

செறிவாக வாழாததாலும், சிங்கள சமூகத்தினரோடு பரவலாக கலந்து இருந்ததாலும் அவர்களுக்கு என்று அரசியல் தலைமையை கட்டியெழுப்பும் வலுவற்றவர்களாக நெடுங்காலமாக இருந்திருக்கிறார்கள். இதை வாய்ப்பாக ஆக்கிக்கொண்ட சிங்களக் கட்சிகள் அவர்களை தமது அரசியல் லாபங்களுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் பயன்படுத்திக் கொண்டது. இம்மக்கள் மத்தியில் இருந்த அரிதான சமூக இயக்கங்கள், சமூக செயற்பாடுகள் எதுவும் பெரும்போக்கு இலக்கியங்களில் பதிவு பெறவில்லை. மலையக மற்றும் ஈழத்து தமிழ் இலக்கியங்களில் உரிய வகையில் பதிவுக்கு உள்ளாகவில்லை. அதன் விளைவே அம்மக்கள் பற்றிய புனைவுகளும், திரிபுகளும், ஐதீகங்களும் இன்று விரவியிருக்கின்றன. சாதாரண பாமர மக்கள் மத்தியில் மட்டுமல்ல புத்திஜீவிகள், கல்விமான்கள், அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் கூட இந்த அரசியல் குருட்டுத் தனம் மேலோங்க காரணமாக ஆகியிருக்கிறது.

ஈற்றில் மலையக அடையாளத்துக்கு கீழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்திய வம்சாவளியினரையும் இணைத்ததாக வேண்டும் என்று வலுக்கட்டாய அராஜகத்தில் குதித்திருக்கும் ஒரு சிறு கும்பலிடம் என்ன தார்மீக உரிமை இருக்கிறது  என்று இதய சுத்தியுடன் அவர்களிடம் தட்டிக் கேட்டுக்கொள்ளும்படி கேட்க வேண்டியிருக்கிறது.

சரி கடந்த காலத்தைத் தான் விடுவோம். இப்போதாவது சுயவிமர்சனத்துடன் இம்மக்களை இதய சுத்தியுடனான அரசியல் வேலைத்திட்டத்துடன் இணைக்கிறார்களா என்றால் அதையும் எவரும் வைத்த பாடில்லை. இனக் கணக்கெடுப்பு எடுக்கும் போது கணக்கை கூட்டிக் காட்டவேண்டும் என்பதற்கப்பால் கிஞ்சித்தும் இம்மக்கள் மீது அக்கறை இல்லாத கூட்டம்.

இதைப் பற்றியெல்லாம் பேசக்கூடிய அளவுக்கு கருத்து ரீதியாக தம்மை வளர்த்துக் கொள்ளும் அளவுக்கு கூட மலையகத்துக்கு வெளியில் உள்ள இந்திய வம்சாவளியினர் தமக்கான கூட்டு இருப்பை தக்க வைத்துக்கொள்ளும் பலமற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். ஈற்றில் அவர்கள்; இந்திய அடியாளும் வேண்டாம், மலையக அடையாளமும் வேண்டாம் நாங்கள் இதுவரை காலம் இருந்ததைப் போல இலங்கை தமிழர்களாகவே இருந்துவிட்டுப் போகிறோம் என்கிற பதிலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி இந்திய வம்சாவளி அடையாளத்தால் எந்தப் பயனும் இருந்ததில்லையோ அது போலத் தான் அவர்களுக்கு மலையக அடையாளத்தை ஏற்றுக்கொள்வதிலும் ஒரு பயனும் புதிதாக இருக்கப் போவதில்லை. அதற்கான நம்பிக்கை கடந்த காலங்களில் கொடுக்கப்பட்டதுமில்லை என்கிற யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

காலம் கடந்துவிட்ட ஞானம் பிறந்திருக்கிறது என்று ஒரு வகையில் ஏற்றுக்கொண்டால் கூட “இரண்டே நிமிடத்தில் நூடில்ஸ்” தயாரிப்பது போன்ற வடிவத்தில் உடனடி “அடையாள உருவாக்கத்தை” ஏற்படுத்த விளைவது சுத்தக் கோமாளித்தனம். ஒரு சமூகத்தின் கூட்டு இருப்பை ஸ்திரப்படுத்துவதென்பது ஒரு அரசியல் போக்கின் நீட்சியில் அமைவதே. அபத்தமான அவசர கும்பல்தனத்தால் ஒப்பேற்றிவிட முடியாது தோழர்களே.

இன்று இந்த உண்மைகளை எடுத்துக் கூறும் போது மலையகத்துக்கு எதிரானவர்களாகவும், ஏன் எதிரிகளாகவும் கூட குற்றம் சாட்டும் அளவுக்கு வன்மமாக இருக்கிறது.

இதைச் சொன்னால் சாதியத்தை sympathy யாகப் பயன்படுத்தி இக்கருத்துக்கு வலுச் சேர்ப்பதாக குற்றம் சுமத்திவிடக் கூடும் பயத்தின் காரணமாகவே அந்த விடயங்களை ஆழமாகப் பேச முடியாமல் இருக்கிறது.

அடையாளத்தின் வழித்தடம்

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் இந்திய வம்சாவளி மக்கள் உறுதியாக தமது வேரை இங்கே நிலைநிறுத்த முயற்சிக்கையில் பேரினவாதத் தரப்பானது அவர்கள் திரும்பிச் செல்லவேண்டிய “இந்தியர்கள்” என்றே அடையாளப்படுத்தியது. தலைமுறைகளாக இலங்கையில் வேரூன்றிவிட்டபோதும், இந்தியாவுடனான தொடர்பறுந்துவிட்டபோதும் கூட “இந்தியர்” என்கிற அடையாளத்தையே இலங்கை அரசும், சிங்களத் தேசியவாதிகளும் தந்துகொண்டிருந்தார்கள். அந்த “இந்தியர்” என்கிற அடையாளம் அவர்களை சட்டபூர்வமாக நாட்டை விட்டுத் துரத்தும் வரை பெரிய சிக்கலாக உணரப்பட்டதில்லை. ஒரு கட்டத்தில் “இந்திய அடையாளம்” தமது இருப்புக்கே அச்சுறுத்தலாகும் ஒரு காரணியாக மாறியது. தேடித் தேடி வேட்டையாடி துரத்திப்பிடித்து நாடுகடத்தப்பட்டக் காலத்தில் “இந்தியர்” என்கிற அடையாளத்தை மறைக்கப் படாதுபாடுபட்டனர் இந்திய வம்சாவளியினர். பலர் தமது “சிகப்பு பாஸ்போர்ட்” என்று அழைக்கப்பட்ட இந்தியக் கடவுச் சீட்டை மறைத்தனர், எரித்தனர், புதைத்தனர், அழித்தனர்.

இந்திய அடையாளத்தைப் பேணுவதில் இனி எந்த அர்த்தமும் கிடையாது. நடைமுறை யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு அதைக் கைவிடுவது என்கிற முடிவுக்கு வந்தவேளை; அவர்கள் அதற்கு மாற்றாக எந்த அடையாளத்தை தமக்கு சூட்டிக்கொள்வது என்கிற சிக்கலை எதிர்கொண்டனர். இலங்கையில் தமிழர் என்கிற அடையாளத்துக்கு உரியவர்களாக; ஏற்கெனவே வடக்கு கிழக்கில் பெருவாரியாக வாழும் பூர்வீகத் தமிழர்கள் இருந்தார்கள். எனவே இந்தியத் தமிழர் என்கிற பதத்துக்கு மாற்றுப் பதமாக இலங்கைத் தமிழர் என்கிற பதத்தையே ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

ஆனால் புள்ளிவிபரங்களின் படி மலையகப் பகுதிகளில் வாழ்ந்து வந்த தமிழர்களை இந்தியத் தமிழர் என்றே பதிவு செய்யப்பட்டு வந்தது.

1960களில் மலையகத்தில் நிமிர்ந்த வெகுஜன எழுச்சிக்கு இலக்கியம் முக்கிய காரணியாக இருந்தது. அந்த இலக்கிய செயற்பாட்டுத் தளம் தான் “மலையகம்” என்கிற புதிய இன அடையாளத்தையும், அதற்கொரு அரசியல் களத்தையும் ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர் என்கிற பதத்துக்கு மாற்றாக இந்திய வம்சாவளியினர் தம்மை “மலையகத் தமிழர்” என்கிற பெயரை இன அடையாளத்துக்கான பெயராக அழைக்கத் தொடங்கினார்கள். காலப்போக்கில் அதை ஏனைய அரசியல் சக்திகளும் உள்வாங்கிக்கொண்டனர்.


அரச அங்கீகாரத்துக்காக

இன்று இலங்கையில் சுமார் 17 லட்சம் சனத்தொகையைக் கொண்டு, இந்திய வம்சாவளியினர் ஒரு தனியானதும், நான்காவதுமான தேசிய இனமாகவும் வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் தனியான மொழி, கலை கலாசாரத்தையும் கொண்டு, நாடளாவிய பரந்து வாழ்ந்தாலும் மத்திய மலைநாட்டில் செறிவாக வாழ்ந்துவரும் ஒரு தனியான தேசிய இனம் என்ற உணர்வைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஒரு தனியான தேசிய இனம் என்று கூறிக் கொள்ள எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன  என்று நிச்சயமாகக் கூற முடியும்.

2015ஆம் ஆண்டளவில் புதிய “நல்லாட்சி” அரசாங்கம்; அரச அதிகாரப் பகிர்வு வாயிலாக இனங்களின் உரிமைகளுக்கு அங்கீகாரம் அளிப்பதர்காகவும், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்காகவும் அரசியல் அமைப்புக்கு ஊடாக சீர்திருத்தம் மேற்கொளவதற்கென புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்க முனைந்தது. அதற்காக அரசாங்கம் சம்பந்தப்பட்ட சகலதரப்பினரிடமிருந்தும் எழுத்துமூல ஆலோசனைகளைக் கோரியிருந்தது. பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் தமது ஆலோசனைகளை சமர்ப்பித்தன. மலையகத் தரப்பிலும் அரசியல் நிர்வாக விடயங்கள், உரிமைப் பிரச்சினைகள் , கல்வி மற்றும் சுகாதாரம், காணி ,வீட்டுரிமை போன்றன  தொடர்பாக ஆலோசனைகளை முன்வைக்கப்பட்டன.

அப்போது மலையக சிரேஷ்ட  சட்டத்தரணி இ. தம்பையா தலைமையிலான சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து ஒரு கோரிக்கையை முன்வைத்தனர்.

“மலையகம் உள்ளடங்களாக இலங்கையின் எப்பாகத்திலும் வசிக்கின்ற இந்திய வம்சாவழித் தமிழர்கள் அனைவரும் மலையகத் தமிழ் மக்கள் என்ற வரைவிலக்கணத்துக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுடன் அவர்கள் ஒரு தனியான தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்கள் சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களிலும் அவர்கள் இந்தத் தலைப்பின் கீழேயே (Upcountry Tamil People)  சுட்டிக் காட்டப்பட வேண்டும்.”

என்றனர்

அது மட்டுமன்றி இதனை ஒரு பாராளுமன்ற சட்டமாக வடிவமைத்து பாராளுமன்றில் சமர்ப்பித்து சட்ட அங்கீகாரத்தைத் தர வேண்டும் என்றும் கோரினர்.

“மலையகத் தமிழர்” என்கிற டையாளம் இலங்கை வாழ் இந்திய வம்சாவழித் தமிழர்களை இணைப்பதை விட “இந்தியத் தமிழர்கள்” என்கிற பதம் நிச்சயம் இணைக்கிறது. இன்னொரு வகையில் சொல்லப்போனால் மலையகத்தவர் என்கிற பதம் உணர்வு பூர்வமாக இணைப்பதைவிட “இந்திய வம்சாவளி” பதம் அடிப்படை விஞ்ஞானபூர்வமான யதார்த்த அடையாளத்தை உணர்வுபூர்வமாகக் கொடுக்கிறது. ஆனால் மலையகத்துக்கு வெளியில் வாழும் பலர் “இந்திய வம்சாவளி” என்கிற பதத்தைக் கைவிட்டு பல காலமாகிறது. அதை த்தொடர்ந்தும் சுமக்கத் தயாருமில்லை. இதற்கு மாற்று என்ன என்பதே கேள்வி.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினர் அனைவருக்கும் “மலையக” அடையாளத்தைக் கொடுக்க வேண்டும் என்பது மலையகத்தில் இருந்து வரும் குரல்களேயன்றி அதற்கு வெளியில் இருந்து வரும் முன்மொழிவுகள் அல்ல. மலையக அடையாளத்தை முன்மொழியும் பிரிவினர் கூட அதனைத் திநிப்பதகாக கூறுகின்ற காரனனங்கள் அபத்தமானவை.

எழுத்தாளர் சடகோபன் தனது கட்டுரையொன்றில் கூறும் போது 

“மலையகத் தமிழர்கள் முதலில் வந்து கால்பதித்த இடம் " கண்டிச் சீமை " என்ற மலையகம் தான். அங்குதான் அவர்கள் கடந்த 200 வருடங்களாக செறிந்து வாழ்கிறார்கள். மலையகம் என்பது இவர்களது தாயகம். அதன் பின்னரே தத்தமது வேலைகளின் நிமித்தம் அவர்கள் வேறு இடங்களுக்குச் சென்றார்கள் . எனவே வேறு பிரதேசங்களில் வாழ்பவர்கள் கூட தம்மை மலையகத்துடன் இணைத்துக் கொள்ள முடியும்.”(1)

இதனை ஒரு தர்க்கத்துக்கு எடுத்துக்கொண்டால் கூட இந்திய வம்சாவளியினர் முதலில் வந்தது கண்டிக்கல்ல. அவர்கள் கொழும்பு பாதை அமைப்பதற்காக கொண்டுவரப்பட்டது பெருந்தோட்டத்துறை தொடங்குவதற்கும் முன்னராகும். மேலும் மலையகத்துக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவளியினர் அனைவரும் வேலையின் நிமித்தம் வேறு இடங்களுக்குச் சென்றவர்கள் என்று கூறுவது அடுத்த அபத்தம். மலையகத்துக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவளியினரின் வருகை பூர்வீகம் வாழ்வியல் வழித்தடம் பற்றிய வெகுஜன அறியாமைக்கு அரசியல் தலைமைகள் மட்டுமல்ல இத்தகைய எழுத்தாளர்களும் இலக்கியவாதிகளும் கூட ஒரு வகையில் காரணம்.

மேலும் சடகோபன் கூறுகிறார்.

“...இதில் முக்கியமானது என்னவென்றால் இது ஒரு புவியியல் ரீதியான கோட்பாடு அல்ல. இது ஒரு அரசியல் ரீதியான கோட்பாடு அல்லது எண்ணக் கருத்தாகக் கருதப்படவேண்டும். மலையகத்தில் வாழாத வடக்கு கிழக்கு, வவுனியா,  மன்னார், முந்தல், குருணாகல், களுத்துறை, மாத்தறை போன்ற பிரதேசங்களில் வாழ்பவர்கள்கூட மலையகத்தை தமது வேர் ( ROOT ) பிரதேசமாக அங்கீகரித்து இதில் இணைந்து கொள்ள முன்வர வேண்டும்...”

என்கிறார். 

சிலவேளை மலையகத்திலிருந்து வேலைநிமித்தம் இடம்பெயர்ந்தவர்களும், சில வேளை கலவரங்களின் போது இடம்பெயர்ந்தவர்களைக் கூட அவர் கூறுகிற எண்ணக்கருவுக்கு பொருந்தலாம். ஆனால் நூற்றாண்டுக்கும் முன்னர் இலங்கைக்கு வேலையின் நிமித்தம் வரும் போதே இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் குடியமர்ந்துவிட்ட மலையகத்துடன் தொடர்பற்ற மக்களுக்கு எந்தளவு பொருந்தும் என்பதை சிந்திக்கத் தயாரற்றவர்களாக உள்ளார்கள்.

சடகோபன் வெறும் உதாரணம் தான்; இலங்கை - இந்திய வம்சாவளியினரின் பன்முக வழித்தோன்றளையும், பன்முக வழித்தடத்தையும், பன்முக அடையாளச் சிக்கல்களையும், பன்முகத் தேவைகளையும், பன்முக அபிலாசைகளையும் கட்டுடைத்துப் பார்க்கத் தவறுவதன் விளைவு தான் இவை. இலங்கையில் பெரும்பான்மைவாதத்துக்கு அகப்பட்ட நசுங்கிப்போன மக்களில் நாமும் முக்கிய அங்கம் தான். அப்படி இருக்கையில் சிறுபான்மைக்குள்ளும் சிறுபான்மையாக ஆகியிருக்கும் இன்னோர் பிரிவினரிடம் பெரும்பான்மைவாதத்தைப் பிரயோகிப்பது என்ன தார்மீகம். அவர்களின் அபிலாசைகளை அறிய இதுவரை இவர்கள் மேற்கொண்ட அக்கறை தான் என்ன? பிரக்ஞை தான் என்ன?

உலகெங்கும் கொண்டு செல்லப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள்  அந்தந்தத நாடுகளில் அந்தந்த நாட்டுப் பெயர்களை அடைமொழியாகக் கொண்டு அழைக்கப்படுகின்றனர். மலேசிய தமிழர், சிங்கப்பூர் தமிழர், மொரீசியஸ் தமிழர் அல்லது மலேசிய இந்தியர், சிங்கப்பூர் இந்தியர் என்றோ, தென்னாபிரிக்க இந்தியர் என்றோ இன்றும் அழைக்கப்படுகின்றனர் என்பதையும் கவனத்திற் கொள்க.


பெருந்தோட்டங்களுக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவளியினர்

இலங்கைக்கு இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கூலித்தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்ட போது பெருந்தோட்டத்துறை ஆரம்பிக்கப்படாத காலக்கட்டம். ஆரம்பத்தில் வந்த இந்திய வம்சாவளியினர் மத்திய மலைநாட்டுக்கு வெளியில் பல்வேறு தொழில்களுக்காக வந்தார்கள் தான்.

ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து பெருவாரியான தமிழர்கள் கட்டுமானப் பணிகளுக்காக கொண்டுவரப்பட்டார்கள். குறிப்பாக நாடளாவிய ரீதியில் கட்டுமானப் பணிகளுக்காக அவர்கள் கொண்டு வரப்பட்டார்கள். பாதைகளை அமைத்தல், பாதைகளை செப்பனிடுதல், மலைகளைக் குடைந்து பாதைகளையும், குகைகளையும் அமைத்தல் மட்டுமன்றி இலங்கையின் பல பிரதேசங்களில் உள்ள அரச காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த குளங்களை மீள் கட்டுமானம் செய்வதற்கும் இவர்கள் கொண்டுவரப்பட்டார்கள். வான்னியில் இவ்வாறு குடிஎற்றப்பட்டவர்களின் சந்ததியினர் இன்றும் உள்ளனர். இலங்கைக்கு இந்திய வம்சாவளியினரின் முதல் வருகை பெருந்தோட்டத்துறைக்காக அல்ல. மத்திய மலைநாட்டுக்கும் அல்ல. 1823 இலும் அல்ல. மாறாக முதல் வருகை பாதை செப்பனிடுவதற்காக 1817 இல் கொண்டு வரப்பட்டார்கள். அதன் பின் மேற்படி கட்டுமானத் தொழில்களுக்காக கொண்டு வரப்பட்டார்கள். அவ்வாறு கொண்டு வரப்பட்டவர்கள் மத்திய மலைநாட்டில் தங்க வைக்கப்படவும் இல்லை. மாறாக அவர்கள் பணிபுரிந்த பிரதேசங்களிலேயே குடியிருத்தப்பட்டார்கள்.

பிற்காலத்தில் இலங்கையில் உட்கட்டமைப்பு வசதிகள் விஸ்தரிக்கப்பட்ட போது, நகரசுத்தித் தொழிலுக்காக தமிழகத்திலிருந்து ஏராளமான அருந்ததியர்கள் கொண்டு வரப்பட்டு இலங்கையின் நாடளாவிய ரீதியில் சகல நகரங்களிலும் மோசமான சேரிக் குடியிருப்புகளில் குடியிருத்தப்பட்டு வேலை வாங்கப்பட்டார்கள். இன்றும் இலங்கையில் சகல நகரங்களிலும் இவர்கள் நூற்றாண்டாக நகரசுத்தித் தொழிலால குடியிருப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள்.

அது மட்டுமன்றி கொழும்பு துறைமுகத்தை ஆங்கிலேயர்கள் விரிவாக்கிய போது ஆயிரக்கணக்கான தமிழர்களும், மலையாளிகளும் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார்கள். குறிப்பாக கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட கொழும்பு வடக்கு பகுதியில் வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் இவர்கள் தான்.

தமிழ் கூலிகள் சியனே கோறளையைத் (Siyane Korale) தவிர (குறைந்தளவினரே இருந்த பிரதேசம்) நாட்டின் சகல பிரதேசங்களிலும் பெருகினார்கள்.

1911 இல் மேல் மாகாணம், தென் மாகாணம், வட மேல் மாகாணம் ஆகியவற்றில் மாத்திரம் மொத்த பெருந்தோட்ட மக்களில் சுமார் 10 வீதத்தினர் இருப்பதாக அந்த அறிக்கை புள்ளிவிபரம் வெளியிட்டிருக்கிறது. அதாவது பெருந்தோட்டத்துறையைச் சாராதவர்கள் நாடு முழுவதும் மலையகத்துக்கு வெளியில் இன்னொரு பெரும் எண்ணிக்கையைக் கொண்டிருப்பார்கள் என்பதையும் அறிதல் வேண்டும்.

ஒப்பாரிக் கோச்சிக்குப் பின்னால் அழுது புரண்டோடிய சொந்தங்கள் மலையகத்தில் இருந்து மாத்திரமல்ல கொழும்பிலிருந்தும், களுத்துறையிலிருந்தும், காலியிலிருந்தும், மட்டக்களப்பிலிருந்தும் தான்.


இரண்டாவது பெரும்பான்மை இனமாக சீனர்கள் ஆகியிருப்பார்கள்.

சூரியன் மறையாத சாம்ராஜ்யமாக இருந்த பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் பல நாடுகள் இருந்தன. சில நாடுகளில் அவர்கள் வருமானத்துக்காக மேற்கொண்ட விவசாய மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக குறைந்த கூலிக்கு ஆள் பிடித்தனர். அவ்வாறு சில நாடுகளில் குறைந்த கூலிக்கு ஆள் பிடிக்க முடியாத போது அவர்கள் தெரிவு செய்த முக்கிய இரு நாடுகள் சீனாவும், இந்தியாவும், இந்த இரு நாடுகளில் இருந்து தான் பெருமளவு கொத்தடிமைகளை ஆசை வார்த்தை காட்டி, ஏமாற்றி கூட்டிச் சென்றனர்.

கரீபியன் நாடுகளுக்கும், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், பிஜித் தீவுகளுக்கும் கரும்புத் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இந்தியர்கள் மாத்திரமல்லர், சீனர்களும் தான். அதுபோல இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் தேயிலைத் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் தென்னிந்தியர்கள் மட்டுமல்ல, சீனர்களும் தான். மலேசியாவில் அங்கிருக்கும் சுதேசிய சீனர்களுக்குப் பதிலாக இந்தியர்களைக் கொண்டு வந்தது போல, இலங்கையில் சுதேசிய சிங்களவர்களுக்குப் பதிலாக தென்னிந்தியத் தமிழர்களை தெரிவு செய்தார்கள்.

அதுமட்டுமல்ல இவர்களை கொத்தடிமைகளாக நிர்வகிப்பதென்றால் தமது சொந்த மண்ணிலிருந்து தனித்து பிடுங்கபட்டிருக்க வேண்டும் என்பது பிரிட்டிஷாரின் அணுகுமுறையாக இருந்தது. மலேசியாவில் சீனர்களை தெரிவு செய்யாமல் இருந்ததற்கான் காரணமே அவர்களின் பூர்வீகம் அருகாமையிலேயே இருந்தது தான். (2)

இலங்கைக்கு தென்னிந்தியாவில் அல்லாமல் சீனாவிலிருந்து தான் பெருந்தோட்டங்களுக்கு கூலிகளை அழைத்துவரும் திட்டத்தைக் கொண்டிருந்தார்கள் ஆங்கிலேயர்கள். 1850களில் சீனாவிலிருந்து ஒரு கூலித் தொழிலாளரை வாங்க 25 பவுண்டுகள் செலவழிந்த அதே வேளை; ஒரு இந்தியக் கூலியை வாங்க 15பவுண்டுகள் போதுமானதாக இருந்திருக்கிறது. (3)

இலங்கையின் சுதந்திரத்துக்கு ஈராண்டுக்கு முன்னர் தான் 1946இல் குடிசன மதிப்பு வெளியானது. இரண்டாம் உலக யுத்த நெருக்கடி காரணமாக 1941 ஆம் ஆண்டு எடுக்க வேண்டிய குடிசன மதிப்பு தான் இவ்வாறு ஐந்தாண்டுகள் கழிந்து வெளியானது. இந்த அறிக்கையில் இந்தியத் தமிழர்களின் சனத்தொகை 780,589 என்று குறிப்பிடப்படும் அதேவேளை சீனர்களின் சனத்தொகை 497 பேர் என்கிற குறிப்புகளும் உள்ளன. இவர்கள் நகரங்களில் சிறு கடைகளையும், சிற்றுண்டிச் சாலைகளையும் நடத்தி வந்தவர்களாகத் தான் இருந்தார்கள்.

கசந்த கோப்பி கொத்தடிமைகள் (Bitter berry Bondage) நூலை எழுதிய டொனோவன் மொல்ட்றிச் (Donovan Moldrich) அந்த நூலில் இலங்கையில் சீனத்  தொழிலாளர்களை கொண்டு வருவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் குறித்து தனியான அத்தியாயத்தை எழுதியுள்ளார். டச்சு காலத்திலும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சீனர்களைப் பற்றியும் குறிப்புகளை எழுதியுள்ள அவர் ஆங்கிலேயர் காலத்தில் என்னென்ன பணிகளில் அவர்கள் அமர்த்தபட்டிருந்தார்கள் என்கிற விபரங்களையும் தருகிறார். (4)

19ஆம் நூற்றாண்டின் முற் பகுதியில் காலியில் கோட்டைக்கு அருகே சிறிய சீனர்கள் வாழ்ந்த ஒரு காலனி ஒன்றும் இருந்தது என்றும் பூந்தோட்ட பராமரிப்பில் வல்லவர்களாக அவர்கள் இருந்ததால் அப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள் என்றும் அந்நூலில் குறிப்படப்பட்டுள்ளது.

கண்டியைக் கைப்பற்றிய காலத்தில் கவர்னராக இருந்தவர் சேர் ரொபர்ட் பிரவுன்றிக். (Sir Robert Brownrigg). முதலாவது இலங்கை ரெஜிமென்டின் கப்டனாக இருந்த எல்.டி, புஷ்ஷ (Capt. L. De Bussche) “கண்டி மாகாணம் இந்த சொர்க்கத்தின் ஆசனமாக ("the scat of paradise") ஆகப்போவதால் அதை மேற்கொள்வதற்கு சிறந்த தொழிலாளர்கள் தேவை என்றும் அதற்கு திறன்மிக்கவர்களாகவும், அமைதியானவர்களாகவும் இருக்கக் கூடியவர்கள் சீனர்களே என்கிற கருத்தை முன் வைத்தார். சீனர்கள் சிங்களவர்களை விட பொருத்தமானவர்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே அக்கேப்டன் ஜாவாவில் பணிபுரிந்த போது சீனர்களின் வினைத்திறனைக் கண்டவர். ஆனால் ஆளுநர் பிரவுன்றிக் அதை மறுத்துவிட்டார். அவருக்கு பின் வந்த ஆளுநர் எட்வர்ட் பார்ன்சும் அக் கேப்டனின் முன்மொழிவை ஏற்கவில்லை. சீனர்கள் சனத்தொகையை மட்டுமே அதிகரித்துக்கொண்டு இருக்கப் போகிறார்கள் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. (5)

பின்னர் சீன தேயிலை இலங்கையில் பயிரிடத் தொடங்கிய போது தேயிலை உற்பத்தியில் கைதேர்ந்த சீனர்களையே அதில் ஈடுபடுத்துவதே சரியானது என்கிற கருத்து தொடர்ச்சியாக உரையாடப்பட்டது. ஆனால் இறாத்தல் தேயிலை உற்பத்தி செய்வதற்கு 5 பவுண்டுகள் வரை செலவாகலாம் என்று கணித்ததன் பின்னர் அந்த யோசனையை மொரிஸ் வோர்ம் (Maurice Worms) கைவிட்டார். லாபத்தை ஈட்ட கடினம் என்கிற முடிவுக்கு வந்தார்கள்.

டொரிங்டன் (Torrington) ஆளுநராக வந்த போது சீனர்களை பெருந்தோட்டங்களுக்கு மட்டுமன்றி வடக்கு, வட மத்திய, வட மேற்கு மாகாணங்களில் நெல் பயிர்ச்செய்கையிலும் ஈடுபடுத்துவதற்கான சாத்தியங்களை ஆராய பணித்தார். 

ஹொங்காங்கில் வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த ஜோன்சன்; டொரிங்டனுக்கு இது பற்றிய தனது அபிப்பிராயத்தை எழுதி அனுபியிருக்கிறார். சீனர்களை தொழிலுக்கு அமர்த்துவதில் உள்ள பிரதானமான நான்கு காரணங்களை அவர் அதில் முன் வைக்கிறார்.

  1. இரண்டு மூன்று தமிழர்கள் (மலபாரிகள்) உண்ணும் உணவை இரண்டே இரண்டு சீனர்கள் உண்டு விடுவார்கள். 
  2. தமிழர்களுக்கு அவசியப்படாத ஆடம்பரத்தேவைகள் சீனர்களுக்கு  இருக்கிறது.
  3. சீனாவிலிருந்து சீனர்களை இலங்கைக்கு கொண்டு போகும் செலவை அரசாங்கமோ, தோட்ட உரிமையாளர்களோ ஏற்க வேண்டிவரும். ஆனால் தென்னிந்தியத் தொழிலாளர்கள் அவர்களின் செலவிலேயே வந்து விடக் கூடியவர்கள்.
  4. இன்னொரு நான்காவது காரணத்தையும் அவர் குறிப்பிடுகிறார். அதாவது தமது மனைவி குழந்தைகளை விட்டு தூரத்துக்குச் சென்று பணியாற்றுவது சாத்தியமில்லை. 

சீனர்களை கொண்டு வரலாமா என்கிற வாதம் தொடர்ந்தும் இழுபறிபட்டது. அங்கிருந்து ஆண்களைக் கொண்டு வந்தால் அவர்கள் இலங்கை சிங்களப் பெண்களை திருமணம் முடித்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நிரந்தர வதிவிடமாக இலங்கையை ஆக்கிக் கொள்வார்கள். சீனர்கள் சிங்களவர்களை விடவும், இந்தியர்களை விடவும் உடல் உழைப்பில் திறமானவர்கள் என்றும் ஐரோப்பியர்களை விட வெப்பத்தைத் தாங்கக் கூடியவர்கள் என்றும் ரிக்ஸ் (C.R.Rigg) பரிந்துரைத்திருக்கிறார்.

கோப்பி பயிர்ச்செய்கை அமோகமாக வளரத் தொடங்கியபோது கண்டியில் பாதைகளை அமைப்பதற்காக தச்சர்கள், கொத்தனார்கள், கொல்லர்கள் என்போரை சீனாவிலிருந்து வரவழைக்கலாம் என்று (Provincial Road Committee) வீதி அமைப்பதற்கான கொமிட்டி அரசாங்கத்திடம் கோரியது.

1860 இல் சீனாவிலிருந்து கிழக்கிந்தியத் தீவுகளுக்கு சீனர்களை ஏற்றிக் கொண்டு முதலாவது கப்பல் புறப்ட்டுவிட்டது என்றும் ஏனைய இடங்களுக்கும் இந்தியத் தொழிலாளர்களுக்குப் பதிலாக சீனர்கள் அவசியப்படுகிறார்களா என்று The Examiner பத்திரிகை கேள்வி எழுப்பியது. அப்பத்திரிகைக்கு எழுதிய ரோவ்டன் பவர் (Rowdon Power)  "ஒரு சீனர் திறமையாகவும், விவேகமாகவும் கண்காணிப்பாளராக இருக்கக் கூடியவர் என்பதால் இரண்டு அல்லது மூன்று தமிழ் தொழிலாளர்களின் வேலையை ஒருவரே செய்யக் கூடியவர்" என்றார். China Mail என்கிற பத்திரிகையை ஆதாரம் காட்டி அப்பத்திரிகை வெளியிட்ட ஒரு அட்டவணையும் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதுவரை சீனாவிலிருந்து ஏனைய ஆங்கிலேயே காலனித்துவ நாடுகளுக்கு கூலித் தொழிலாளர்களாக அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை அது. (6)

சீனாவிலிருந்து அடிமைகள் :

  • போர்னியோ  350,000
  • ஜாவா 125,000
  • சிங்கப்பூர் 50,000
  • மலாக்கா 30,000
  • சியாம் 50,000
  • இந்தியா 5,000
  • ஆஸ்திரேலியா 70,000
  • கலிபோர்னியா 50,000

பெருந்தோட்டங்களுக்கு வெளியில்...

அன்றைய இலங்கையில், அரசாங்கத் துறைத் தொழிலாளர்களுக்கு பொதுவாக தங்குமிடங்கள் வழங்கப்பட்டன. ஆனால் கொழும்பு மற்றும் ஒரு சில பெரிய நகரங்களைத் தவிர, தொழிலாளர்கள் தங்கள் சொந்த தங்குமிடங்களைக் தாமாக தேடிக்கொள்ள நேரிட்டது. இருப்பினும் பிற்காலத்தில் இந்த நகர்ப்புற புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதை விட அதிகமாக இருந்தது. 1900களின் ஆரம்பத்தில் தொழிலாளர்கள் தொடர்பாக நிலுவையில் இருந்த அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டன, மேலும் 1922 ஆம் ஆண்டின் இந்திய குடியகல்வுச் சட்டத்தின் (IEA) VII படி இலங்கைக்கான ஒப்பந்த குடியேற்ற முறை அங்கீகாரத்தை இழந்தது. (7)

1795-ல் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு முறையான அரசுக் கட்டடங்களோ, முறையான சாலைகளோ இருக்கவில்லை. கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இருந்த கட்டிடங்கள் பெரும்பாலும் ஒல்லாந்தர்களால் கட்டப்பட்ட கோட்டைகளும் தேவாலயங்களும், தங்குமிடங்களும் தான். வீதிகள்; முக்கிய நகரங்களுக்கு இடையில் மட்டுமே இருந்தன, அவை காடுகள் வழியாக அகற்றப்பட்டு உருவாக்கப்பட்டவை. அவை வறண்ட காலங்களில் கரடுமுரடான போக்குவரத்திற்கு மட்டுமே ஏற்றவை. ஆனால் மழைக் காலங்களில் கடக்க முடியாதவை. இலங்கையின் முதலாவது ஆளுநரான பிரெடெரிக் நோர்த் 1800 ஆம் ஆண்டு முக்கிய பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது, அவருடன் 160 பல்லக்கு சுமப்பவர்களும், 400 தொழிலாளர்களும், இரண்டு யானைகளும், ஆறு குதிரைகளும், ஐம்பது காலாட்படை வீரர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். (8) இத்தனையும் இன்றி அப்படிப்பட்ட பயணம் அவரால் சாத்தியப்படவில்லை. அதற்கு முன்னிருந்த போர்த்துக்கேய, ஒல்லாந்து ஆளுநர்கள் கூட தமது கட்டுபாட்டுக்குள் இருந்த கரையோரத் தளங்கள் அனைத்துக்குமே சென்று வந்ததில்லை. அப்பயணங்கள் அவ்வளவு இலகுவானதாக இருந்ததில்லை என்கிற உண்மையை நம்மால் உணர முடியும்.

1820 ஆம் ஆண்டு லெப்டினன்ட் ஜெனரல் ஜோன் பிரேசர் (Lieut. General John Fraser) தான் இந்த பாதை அமைப்புப் பணிகளைத் தொடங்கியவர். 1841-1867க்கும் இடைப்பட்டக் காலத்தில் தான் இலங்கை முற்றிலும் இராணுவவாத நிர்வாகத்திலிருந்து வணிக முக்கியத்துவம் வாய்ந்த காலனியாக மாற்றப்பட்டது. அதன் பின்னர் 1820 முதல் 1867 வரையான மேஜர் ஸ்கின்னர் காலத்தில் சுமார் 5000 கி.மீ வரையான சாலைகளை அமைத்ததில் பெரும்பங்கு வகித்திருந்தார். பாதைகளை இணைக்கும் சில பாலங்களும் இவற்றில் அடங்கும்.


முன்னோடி தொழிலாளர் படை

காடுகளையும் சதுப்பு நிலங்களையும் கடந்து, கடினமான மற்றும் வாழமுடியாத நிலப்பரப்புகளில் கட்டுமானத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு உள்ளூர் தொழிலாளர்கள் போதுமான அளவு கிடைக்கவில்லை. அது மட்டுமன்றி அவர்கள் வேலை செய்யவும் விரும்பவில்லை. இதன் விளைவாக, காலனித்துவ அரசாங்கம் 1821 ஆம் ஆண்டில் “முன்னோடி தொழிலாளர் படை” (Pioneer Labour Force (PLF)) என்று அழைக்கப்படும் அரை இராணுவமயமாக்கப்பட்ட ஒரு துணைப்படையை அறிமுகப்படுத்தியது. இப்படையை உருவாக்குவதன் மூலம் இந்தியாவில் இருந்து புலம்பெயர்வதை ஊக்குவிப்பதற்கான முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியது. (9)

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக தென்னிந்தியத் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதில் பி.எல்.எஃப் ஈடுபட்டது. கிழக்கிந்தியக் கம்பெனி (EIC) 'முன்னோடிகள்' (Pioneers) என்று அழைக்கப்படும் ஒப்பந்த இந்தியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது. அதுவரை இப்படியான துணைப்படையாக காஃபிர்களையே கிழக்கிந்திய கம்பனி பேணியது. காஃபிர்கள் என்றால் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் இருந்த போர்த்துக்கேய குடியேற்றங்களிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆப்பிரிக்க அடிமைகளையே குறிப்பர். அடிமை முறை ஒழிப்பின் பின்னர் காஃபிர்களை அடிமைகளாகவே பேண முடியாத நிலையில் பெருமளவு இந்திய கூலித்தொழிலாளர்களை அரை அடிமைகளாக பயன்படுத்த வாய்த்தார்கள். அடிமைகளின் இடத்தை இந்தியக் கொத்தடிமைகளைக் கொண்டு நிரப்பினார்கள் என்று நாம் கூற முடியும்.

முன்னோடி தொழிலாளர் படை (PLF) என்பது 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் (இப்போது இலங்கை) பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் பணியாற்றுவதற்காக 

இது பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் (EIC) ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இந்திய தொழிலாளர்களின் குழுவாகும். பிரித்தானிய காலனித்துவ ஆட்சியை விரிவுபடுத்துவதற்கும் இலங்கையில் வர்த்தகத்தை நிறுவதற்கும் வழிவகுத்த வீதிகள், பாலங்கள், ரயில் பாதைகள், நீர்ப்பாசன கால்வாய்கள் மற்றும் பிற பொதுப் பணிகளில் இந்த PLF ஈடுபட்டது. பிரித்தானியப் பேரரசுக்கு மிகவும் இலாபகரமாக விளங்கிய இலங்கையின் தேயிலை தொழிற்துறையை நிறுவுவதில் PLF முக்கிய பங்கு வகித்தது.

இந்தியாவிலும், பிற காலனி நாடுகளில் உள்ள அதன் தோட்டங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தொழிலாளர்களை வழங்க EIC பயன்படுத்திய ஒப்பந்த தொழிலாளர் முறையிலிருந்தே 1821 ஆம் ஆண்டு PLF உருவானது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, வழக்கமாக ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை, ஒரு குறிப்பிட்ட தொழில் நிபந்தனைகளின் அடிப்படையில் வேலை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டனர். காஃபிர் துருப்புகளுக்குப் பதிலாக 'முன்னோடிகள்' என்று அழைக்கப்படும் ஒப்பந்த இந்திய தொழிலாளர்களை EIC பணியமர்த்தியது.(10) முன்னோடிகள்; முக்கியமாக தென்னிந்தியாவின் தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் வகுப்பினரிடமிருந்து, குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்தே ஈர்க்கப்பட்டனர். அவர்கள் தங்கள் மண்ணில் ஏற்பட்ட வறுமை, ஒடுக்குமுறைகளையும் பாகுபாடுகளையும் எதிர்கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் நேர்மையற்ற முகவர்களாலும் கங்காணிகளாலும் (கண்காணிப்பாளர்கள்) ஏமாற்றப்பட்டோ அல்லது வற்புறுத்தப்பட்டோ, அவர்கள் முழுமையாக புரிந்து கொள்ளாத அல்லது ஒப்புக்கொள்ளாத ஒப்பந்தங்களில் கையெழுத்திடச் செய்யப்பட்டனர்.

PLF இல் இருந்தவர்களின் வாழ்க்கை நிலைமைகள் கடுமையானதாகவும் அதன் விளைவாக இலகுவாக சுரண்டக்கூடியதாகவும் இருந்தனர். அவர்கள் நீண்ட மணிநேர கடின உழைப்புக்கு உள்ளாக்கப்பட்டதுடன், போதிய உணவு, உடைகள் இன்றி, மோசமான வீடு மற்றும் சுகாதாரம் என்பவற்றின் காரணமாக அதிக இறப்பு விகிதத்தையும் எதிர்கொண்டார்கள். மலேரியா, கொலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் அடிக்கடி பெருந்துயரை அனுபவிக்க வேண்டியிருந்தது. அதே போல் இலங்கையின் சுதேசிய சிங்கள மக்களால் வெறுப்புக்கு உள்ளானார்கள். தமது நிலங்களை பறிக்க வந்தவர்களாக இம்மக்கள் பார்க்கப்பட்டார்கள். காலனித்துவ நிர்வாகத்தின் கீழ் PLF க்கு குறைந்தபட்ச சட்ட உரிமைகளோ அல்லது பாதுகாப்போ கூட இருக்கவில்லை.(11) இதிலிருந்து தப்பிப் போக எத்தனிபவர்களுக்கு அபராதங்களும் தண்டனைகளும் வழங்கப்பட்டன. அவர்களின் நடமாட்டம் கட்டுபடுத்தப்பட்டன. அவர்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் மத வசதிகள் ஆகியவை மறுக்கப்பட்டன.

ஆங்கிலேயர் ஆட்சியின் ஆரம்ப நாட்களில் திறமையான தொழிலாளர்களுக்கு பெரும் பற்றாக்குறை இருந்தது, மேலும் கிடைக்கக்கூடிய தொழிலாளர்கள் பெரும்பாலும் கடினமான மாவட்டங்களில் இத்தகைய பணிகளின் கஷ்டங்களை அனுபவிக்க தயாராக இல்லை. இதனால் தான் தென்னிந்தியாவில் இருந்து தொழிலாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. 1867 ஆம் ஆண்டில் இந்த “முன்னோடிப் படை” 4000 பேரைக் கொண்ட வலுவான தொழிலாளர் துணைப் படையாக இருந்தது . அதன் பின்னர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. 1942இல் 30,000 கி.மீ பிரதான வீதிகளும், மாட்டு வண்டில்கள் செல்லக் கூடிய பாதைகளும், 13,000 கி.மீ நீளமுள்ள இரயில் தண்டவாளப் பாதைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

நவீன இலங்கையின் உருவாக்கத்தில் இந்தியத் தொழிலாளர்களின் பங்கானது நிரந்தர வருமானமீட்டும் பெருந்தோட்டத்துறையில் மாத்திரமல்ல, நாடளாவிய உட்கட்டமைப்பின் உருவாக்கத்திலும் பெரும்பங்கு வகித்திருப்பதை நாம் உறுதியாக உணர வேண்டியிருக்கிறது. ஆறேழு தலைமுறைகளாக மலையகத்துக்கு வெளியில் வாழ்ந்துவரும் இவர்கள் நமது ஆய்வுக்கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டும்.

ஆக இலங்கையில் இந்திய வம்சாவளியினர் ஆங்கிலேயர்களால் முதன் முதலில் கொண்டு வரப்பட்டது பெருந்தோட்டத்துறைக்கும் அல்ல. மத்திய மலைநாட்டுப் பகுதிக்கும் அல்ல. 1823இலும் அல்ல.

பிற்காலத்தில் கோப்பி, கொக்கோ, தேயிலை, இறப்பர் போன்ற பயிர்ச்செய்கைக்காக பெருவாரி தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டபோது பெரும்பாலும் மத்திய மலைநாட்டுப் பகுதியில் நிலைகொள்ளச் செய்யப்பட்டதாலும் அவ்விடங்களில் செறிவாக இருந்ததாலும் அங்கு தான் அச்ச்சமூகத்துக்கான ஒன்றுபட்ட பண்பாட்டையும் அரசியலையும் கொண்டு நடத்த முடிந்தது. தொழிற்சங்கங்களின் வளர்ச்சியானது அரசியல் இயக்கமாக வடிவெடுத்ததிலிருந்து, சமய, கலாசார, உணவு, பழக்கவழக்க, மொழிப் பேணுகையும், அதனூடாக இந்திய அடியொற்றிய பண்பாட்டைப் பேணவும் ஈற்றில் அரசியல் அபிலாசைகளையும் உரிமைகளையும் கோரவும் முடிந்தது. எனவே அங்கே தான் இந்திய வம்சாவளியினருக்கான தனித்துவமான இலக்கியம் பிறக்கவும், பேணப்படவும், கொண்டிழுக்கவும் சாதகமானது.

ஆனால் இந்த மத்திய மலைநாட்டுக்கு வெளியில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினருக்கு இந்த வாய்ப்பு எட்டவில்லை. அவர்கள் சிங்களவர்கள் செரிவாக வாழ்ந்த பகுதிகளிலெல்லாம் உதிரிகளாகப் பரந்து வாழ நேரிட்டது. தோட்டப்பகுதிகளில் தமது சமயப் பண்பாட்டு அம்சங்களைப் பேண கிடைத்த சூழலும் வாய்ப்பும் இவர்களுக்கு அதே அளவில் இருக்கவில்லை. தமது தொழில்சார் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுவான தொழிற்சங்கம் இருக்கவில்லை. தமது பொது அரசியல் அபிலாசைகளை கோருவதற்கான குறைந்தபட்ச அரசியல் தலைமை கூட இருக்கவில்லை. பல இடங்களில் தமது கல்வியைத் தொடர்வதற்கு தமிழ் பாடசாலைகள் கூட இருக்கவில்லை. இலங்கையின் தென் மாவட்டங்களிலும் வட மேல் மாகாணத்திலும், மேல் மாகாணத்தில் களுத்துறை, கம்பஹா போன்ற மாவட்டங்களிலும், ஊவா, சப்பிரகமுவா மாகாணங்களின் தென் பகுதிகளிலும் சிங்களப் பாடசாலையில் சிங்கள மொழியில் கல்வி கற்கும் தெரிவுக்கு தள்ளப்பட்டமையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அப்பிரதேசங்களில் இன்றைய தலைமுறையில் ஏராளமானோர் சிங்களவர்களை மணமுடித்து சிங்களவர்களாகவே ஆகிவிட்டமைக்கு யாரிடம் நோக முடியும். அது என்ன அவர்களின் விருப்பத் தெரிவா? அல்லது மாற்று தெரிவு அற்று நிர்ப்பந்திக்கப்பட்டதன் விளைவா?

அது மட்டுமன்றி பிரஜாவுரிமைச் சட்டங்களுக்கு பலியானவர்கள் இவர்களும் தான். மலைநாட்டுக்கு வெளியில் வாழ்ந்த இவர்களில் ஏராளமானவர்கள் நேரு - கொத்தலாவல, சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தங்களின் போது நாடு கடத்தப்பட்டார்கள். அச்சட்டங்கள் நாடு கடத்துவதற்காக பெயர் பட்டியல் இட்டு தேடித்தேடி திரிந்தபோது பல வருடங்களாக ஓடி ஓடி ஒளிந்து வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஈற்றில் முடியாத நிலையில் சரணடைந்து இந்தியா திரும்பியவர்கள் இருக்கிறார்கள்.(12) 1958, 1977, 1983 போன்ற கலவரங்களில் இவர்களும் தாக்கப்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள், சொத்துக்களை இழந்தார்கள். தமிழ் நாட்டுக்கு அகதிகளாக திரும்பிச் சென்றார்கள்.

இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் பெருந்தோட்டப் பகுதிகளின் இன்னல்களுக்கு கிடைத்த கவன ஈர்ப்பு கூட இவர்களின் அவலங்களுக்குக் கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே பிற்காலத்தில் இவர்கள் பற்றிய பரவலான அறிதலும் இலங்கைச் சமூகத்தில் இல்லாது போனது. எப்படி மலையகப் பிரச்சினைகள் பற்றி ஏனைய இலங்கைச் சமூகத்தினருக்கு போய்ச் சேரவில்லை என்று காலாகாலமாக புலம்பிவந்தோமோ; அதைவிட மோசமாக இந்திய வம்சாவளியினரின் இன்னொரு பெரும் பகுதியினர் குறித்து ஏனைய சமூகங்களுக்கு மாத்திரமல்ல மலைநாடு வாழ் சொந்த தொப்புள் கோடி உறவுகள் மத்தியில் கூட கவன ஈர்ப்பை பெற்றதில்லை என்கிற கசப்பான உண்மையை ஏற்றுகொள்ள எத்தனை பேர் இன்று தயார்?

இவர்களில் ஒரு பகுதியினர் இலங்கையிலேயே மோசமான சாதிய அசமத்துவத்துக்கு ஆளாகிய அருந்ததியர் சமூகமும் உண்டு. மலையக தோட்டங்களில் உள்ள லயன்களை விட மோசமான குடியிருப்புகளில் நெடுங்காலமாக வாழ்ந்து வந்தவர்கள். இன்னும் அப்படி பல இடங்களில் நாட்டில் உள்ளன.

கல்வியறிவு, மாற்றுத் தொழில்கள், சமூக நீதி என்பவற்றை மிகச் சமீப தசாப்தங்களில் தான் அவர்களில் கணிசமானோர் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நெடுங்காலமாக அரசியல் தலைமையற்றவர்கலாக வாழ்பவர்கள். இந்திய வம்சாவளியினருக்கான எந்த குறைந்தபட்ச சலுகைகளும் எட்டப்படாதவர்கள். இலங்கைக்கான இந்திய தூதரகம் உருவாகி இந்த நூற்றாண்டு காலப்பகுதிக்குள் இந்தியவம்சாவளியினருக்கு வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான புலமைபரிசில்களில் ஒன்றைக்கூட காணாதவர்கள். இன்னும் சொல்லப்போனால் இந்தியத் தூதரகத்தின் கணக்கில் கூட அகப்படாத உதிரிகளாக வாழ்ந்து வந்தவர்கள். சகல இன்னல்களையும் தாமே போராடி எதிர்கொண்டு மீண்டுகொண்டிருப்பவர்கள்.

இலக்கியங்களை படைக்குமளவுக்கு வசதிகளையோ, வாய்ப்புகளையோ அடையாததற்கு காரணம் அவர்கள் சமூக திரட்சியாக வாழ வழியற்றவர்களாக இருந்தமை. சிதறி வாழ்ந்து வந்ததால் அவர்கள் பேரம் பேசும் வலுவற்ற அரசியல் அனாதைகளாக இருந்தார்கள். செறிவான வாக்கு வங்கியாக இராததால் பல அரசியல் கட்சிகளும் அவர்களை பயன்படுத்திவிட்டு கடப்பவர்களாக இருந்தார்களேயொழிய சமூகமாக அடையாளம் காணவில்லை. எனவே அரசியல் தலைமையை கட்டியெழுப்பும் திராணியில்லாதவர்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

80களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கொழும்பில் தலைமையகம் அமைத்து இந்திய வம்சாவளியினரின் ஏகபோக அமைப்பாக நிறுவ முயற்சித்தது. ஆனால் மீண்டும் மேல்மாகாண தமிழ் வாக்குகள் மலைநாட்டிலிருந்து வந்திறக்கபட்ட இதொகா தலைவர்களுக்கு பயன்பட்டதேயொழிய மேல்மாகாணத்தவர்களின் நேரடி பிரதிநிதிகளாக அவர்கள் இருக்கவில்லை. அதன் விளைவு இ.தொ.க தொடர்ந்தும் பெருந்தோட்டத்துறை மக்களின் தலைமையாக நீடித்ததே தவிர மேல்மாகாண மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடையாளம் கண்டு தீர்க்கும் அமைப்பாக அக்கிக்கொள்ளவில்லை. செல்லச்சாமி, பி.பி.தேவராஜ், யோகராஜன் ஆகியோர் கூட இம்மக்களின் நேரடிப் பிரதிகள் அல்லர். இன்னும் சொல்லப்போனால் கொழும்பு உள்ளிட்ட மேல்மாகாண தமிழ் மக்களின் நேரடி பிரதிநிதிகளாக பாராளுமன்றத்துக்கு இதுவரை வரலாற்றில் எவரும் தெரிவு செய்யப்பட்டது கிடையாது. மனோ கணேசனையும் சேர்த்துத் தான் இங்கே குறிப்பிடுகிறேன். ஆனால் அம்மக்கள் தமது பிரதிநிதிகளாக அவர்களை தெரிவு செய்ததன் ஒரே நோக்கம் அவர்களின் அரசியல் தலைமையாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கையில் தான். 

அவர்கள் நிச்சயம் இம்மக்களின் பிரதிநிதிகளாக இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் இம்மக்களின் அரசியல் தலைமையாகவோ, அரசியல் அபிலாஷைகளை (சலுகைகள், நிவாரணங்கள், தொண்டு நடவடிக்கைகள் அல்ல) நிறைவேற்றுபவர்களாக இருந்தார்களா? அம்மக்கள் உதிரிகளாக சிதறியிருக்கிற போதும் தனித்துவமான அரசியல் சக்தியாகவும், தனித்துவமான அரசிய அபிலாஷைகளைக் கொண்டவர்களாகவும் அடையாளம் கண்டு அதற்குரிய அரசியல் திட்டத்துடன் இயங்கிய எவரும் இருந்திருக்கிறார்களா. இல்லை! மாறாக வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். மனோ கணேசன் இந்த வாக்கு வங்கியை கவனமாக அடையாளம் கண்டவர்களில் ஒருவர். ஆரம்பத்தில் அவரிடம் சில புரிதலும், குறைந்தபட்ச வேலைத்திட்டமும் இருந்ததை அறிவோம். ஆனால் அவரும் சற்று அகலக் கால் வைத்து அரசியல் செய்ய நேரிட்டதும்; இந்த தனித்துவமான பிரச்சினையும் தூர எறியப்பட்டுவிட்டது என்றால் அது மிகையாகாது.

விரும்பியோ விரும்பாமலோ இலங்கைத் தீவு என்பது பல்வேறு அடையாளங்களைக் கொண்ட குழுமங்களைக் கொண்ட தேசமாக இருக்கிறது. இனத்துவம், சாதித்துவம், மதத்துவம், பிரதேசத்துவம், என அடையாளங்களுக்குள் அடையாளங்களாக பெருகி, விரிந்து போயிருக்கிற தேசம். சமூக அடையாளங்கள் எனும்போது ஒன்றில் ஆதிக்க சமூகம் அதிகாரத்துவதுக்காக தன்னை ஒரு பேரடையாளமாக ஆக்கிக் கொள்கிறது. மறுபுறம் ஏனைய சமூகங்கள்; குறிப்பிட்ட அடையாளத்தைக் கொண்டிருப்பதாலேயே ஆதிக்க அடையாளங்களால் அநாதரவாக ஆக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்த்தவும், ஈடு செய்யவும் தமது அடையாளத்தை அறிவிக்க நிப்பந்திக்கப்படுகின்றனர். இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம், மலையகம் என்கிற நான்கு தேசிய இனங்களுக்குள் உள்ளடங்காத/உள்ளடக்கப்படாத இன்னொரு பெருவாரி மக்கள் கூட்டமொன்று; ஐந்தாவது தேசிய இனம் என்கிற அடையாளத்தை நிறுவ நிர்ப்பந்திக்கபடுகிறதா என்று பகிரங்கமாக இன்று கேள்வி எழுப்பும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

இந்திய வம்சாவளி என்கிற பதத்துக்கு மாற்றுப் பதமாக “மலையகம்” என்கிற பதம் மலைநாட்டு வாழ் இந்திய வம்சாவளியினரின் விருப்பாகவும், அலங்காரமான பதமாகவும் இருக்கக் கூடும். ஆனால் அது ஒட்டுமொத்த இந்திய வம்சாவளியினருக்கும் பொருந்துகிறதா என்பதே அடிப்படைக் கேள்வி. மலைநாட்டுக்கு “மலை” என்று பொருந்துகிறது என்று வாதத்துக்கு கூறும் போது மலையகத்துக்கு வெளியில் உள்ளவர்களுக்கு எந்த வாதத்தால் பொருந்துகிறது?

இதனால் “மலையகம்” என்கிற அடையாளத்தையோ, பதத்தையோ மறுப்பதாகவோ, நிராகரிப்பதாகவோ எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. 90களில் மலையக மக்கள் முன்னணி மலையகத் தேசியம், மலையகத்துக்கான சுய நிர்ணய உரிமை, மலையக அதிகார அலகு என்றெல்லாம் முன்னெடுத்த வேளை இந்த அடையாளம் பற்றிய பிரச்சினை எழுந்தது. இறுதியில் “மலையகம்” என்கிற அடையாளத்துக்குள் அனைத்து இந்திய வம்சாவளியினரையும் இணைப்போம் என்று அவர் தெரிவித்தார். அதனை நடைமுறை சாத்தியப்படுத்துவீர்களா? என்கிற கேள்விக்கு நிச்சயமாக மேற்கொள்வதாக கூறினார். 

அன்று தொடக்கம் இந்திய வம்சாவளி என்கிற பதத்தை கைவிட்டு; கொழும்பு வாழ் இந்திய வம்சாவளியான நானும் என்னை மலயகத்தவனாகவே அடையாளப்படுத்தி வந்திருக்கிறேன். ஆனால் அதில் ஆனதொன்றும் கிடையாது. என்னை மலையகத்தவனாக என்னைச் சார்ந்தாவர்கள் ஏற்றுக்கொண்டார்களோ என்னவோ, ஆனால் குறைந்தபட்சம் மலையகத்தைச் சேர்ந்தவர்கள் கூட என்னை மலையகத்தவனாக ஏற்றுக்கொள்ளவுமில்லை. சேர்த்துக்கொள்ளவுமில்லை. நான் தான் அதை சொல்லிக்கொண்டு திரிகிறேன் என்பதை உணர்ந்துகொண்டேன். 

அதுபோல எழுத்துக்களிலும் கூட மலையகம் என்றே பயன்படுத்தி வந்திருக்கிறேன். மலையகத்துக்கான முதலாவது இணையத்தளத்தை “நமது மலையகம்” என்கிற பெயரில் தொடங்கினேன். அதன் உள்ளடக்கக் கனதி காரணமாக சிறந்த இணையத்தளத்துக்கான ஜனாதிபதி விருதை 2018இல் பெற்றுக்கொடுத்தது இன்னொரு கதை கதை.

மலையக மக்கள் முன்னணி மேற்படி அக்கருத்தாக்கத்தை பலப்படுத்தவும், பரப்பவும் தவறியது. “மலையகம்” என்கிற அடையாளத்தை ஒட்டுமொத்த இந்திய வம்சாவளியினருக்கான பதமாக அவர்கள் முன்னெடுக்கத் தவறியதன் விளைவு “மலையகம்” என்றும், “இந்திய வம்சாவளி” என்றும் இருவித போக்குகள் தொடர்ந்தும் நீடித்தன. மலையகத்துக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவளியினர் மலையகத்தினரை விட அதிகமாக தம்மை இலங்கைப் பிரஜைகள் என்று பதிவு செய்துகொண்டார்கள் என்று நிச்சயமாகக் கூற முடியும். இப்போது அவர்களைத் தான் “மலையகத்தவர்” என்று பதியுங்கள் என்று கூறப்போகிறோம்.

இப்போது என்ன! 5% வீதத்துக்கும் அதிகமாக எண்ணிக்கையைக் காட்டுவதற்காக இவர்கள் தேவைப்படுகிறார்களா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. இதயசுத்தியுடன் சொல்லுங்கள். இதுவரை மலையக அரசியல் நிகழ்ச்சிநிரலில் சேர்த்துக்கொள்ளப்படாத இவர்களை இன்று பிரக்ஞையாகவே சேர்த்துக்கொள்வதற்காகத்தான் இந்தப் அடையாளப் பெயரிடலை முன்மொழிகிறீர்களா? இன்று எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டுவதற்காக அடையாளப் பெயர் கோர கிள்ளுக்கீரையாக பயன்படுத்திவிட்டு; அதன் பின்னர் கைவிட எடுக்கப்படும் முஸ்தீபா?

“இந்திய வம்சாவளி” என்கிற பதம் “இந்திய அடையாளத்தை” சுமக்க வைத்துக்கொண்டிருப்பதால் அதனை கைவிடலாம் என்கிற வாதத்தை ஏற்றுக்கொள்ள பலர் தயாராகவே இருக்கிறார்கள் என்பது உண்மை தான். ஏனென்றால் அவர்களை இந்தியர்களாகவும், இந்திய நிகழ்ச்சிநிரலின் “பிடி”என்றும்; சிங்கள பெருந்தேசிய சக்திகள் தமது அரசியல் வசதிக்காக பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்கள் என்பது உண்மையே. அதற்காகவே அவர்கள் “மலையகம்” என்கிற அடையாளத்தை விட “இலங்கையர்” என்கிற அடையாளப் பதிவையே தொடரப் போகிறார்கள் என்பது எனது கணிப்பு. மலையகம் அல்லது இந்திய வம்சாவளி என்கிற பதங்களால் அவர்களுக்கு ஆகப்போவதென்ன என்கிற யதார்த்தக் கேள்விக்கு இதனை முன்னெடுப்பவர்கள் மேற்சொன்ன விபரங்களில் இருந்து அரசியல் புரிதலை எட்ட வேண்டும்.


கொழும்பு வாழ் இந்திய மேட்டுக்குடிகளின் கோரிக்கை என்கிற திரிபு

மலையகத்தில் பொதுவான ஒரு உளவியல் புரிதல் வெகுஜனமட்டத்தில் கட்டமைக்கப்பட்டு பரப்பப்பட்டு வந்திருக்கிறது.

அதாவது “மலையக மக்கள்” என்கிற அடையாளத்தை மறுத்து “இந்திய” அடையாளத்தை வலியுறுத்துபவர்கள் யார் என்கிற ஒரு புனைவு கற்பிதமாக பரப்பப்பட்டு நம்பவைக்கப்பட்டு வந்திருக்கிறது. கொழும்பில் வாழும் இந்தியர்கள் என்போர்;

  • உயர் வர்க்க வியாபார வர்த்தகர்களே
  • உயர் சாதி மேட்டுக்குடியினரே
  • இந்திய தூதரகத்துடனும், இந்தியாவுடனும் நெருக்கமான உறவைப் பேணி இந்திய நலன்களை அனுபவித்து வருபவர்களே
  • இலங்கையில் ஒரு காலும், இந்தியாவில் ஒருகாலும் வைத்துக்கொண்டு இரண்டையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களே

இவர்கள் தமது உயர்குடி நலன்களுக்காக “இந்தியர்” என்கிற அடையாளத்தை விட்டுகொடுக்கத் தயாரில்லையாம்.

இந்த வாதம் ஒரு பத்தாம்பசலித்தனமானதும், மிகுந்த அறிவுப் பஞ்சம் உள்ள வாதமும் கூட. சிலர் அறியாமையால் இதை முன்வைக்கிறார்கள். புத்திஜீவிகள் என அடையாளப்படுத்திக்கொள்ளும் இன்னும் பலரோ அறிவதில் அக்கறையே இல்லாமல் இதனை பிரச்சாரப்படுத்திக் கொண்டு வருகின்றனர். 

1971 ஜேவிபி கிளர்ச்சிக் காலத்திலும் கூட தமது ஐந்து முக்கிய வகுப்புகளில் ஒன்றாக இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் தரகுக் கூட்டமாக இந்திய வம்சாவளியினரைக் கூறியது. அவர்கள் சுட்டிக்காட்டியதும் மேற்படி பட்டியலைத் தான். அந்தப் பட்டியல் ஒட்டுமொத்த இந்திய வம்சாவளியினருக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஜே.வி.பியினர் இந்திய வர்த்தக – வியாபார சக்திகளைத் தான் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் கொழும்பு வாழ் இந்திய வம்சாவளியினர் இவர்கள் மட்டும் தானா? ஒட்டுமொத்த கொழும்பு வாழ் இந்திய வம்சாவளியினரில் இவர்களின் வீதம் என்ன?

இன்றும் கொழும்பு வாழ் உழைக்கும் வர்க்க இந்திய வம்சாவளி மக்களை  இந்திய தரகுமுதலாளித்துவ மேட்டுக்குடிகளாக நிறுவ முற்படுவதும் ஜே.வி.பி போன்ற சக்திகள் கொண்டிருந்த முட்டாள்தனமான அணுகுமுறைக்கு ஒப்பானது.

மேற்படி “இந்திய வம்சாவளி” அடையாளத்தை பேண முனையும் சக்திகள் இல்லாமலில்லை. ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் மிகச் சிறுபான்மையினரே. ஆனால் மலையகத்துக்கு வெளியில் (குறிப்பாக கொழும்பைச் சூழ) வாழ்ந்து வரும் பெருவாரி இந்திய வம்சாவளி மக்கள் என்ன பணக்காரர்களா? உயர் சாதியினரா? வியாபார/வர்த்தகர்களா? அல்லது இந்திய தொடர்பைத் தான் பேணுபவர்களா?

நிச்சயமாக இல்லை. மலையகத்துக்கு வெளியில் வாழும் லட்சோப இந்திய வம்சாவளி மக்கள்; சாதாரண உழைக்கும் வர்க்கத்தினர், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக கொழும்பு வாழ் மக்களைக் குறிப்பிடலாம். இந்தியத் தொடர்பற்றவர்கள். இவர்களில் நாடளாவிய ரீதியில் அனைத்து நகரங்களிலும் வாழ்ந்து வரும் அருந்தியர்களும் அடங்குவர். அதைவிட, கொழும்பு வாழ் பரதவர் சமூகமும், மலையாள சமூகமும் கூட உள்ளடங்குவர். இந்த உண்மையை வசதியாக மறைத்து மேற்கொள்ளும் தர்க்கங்களால் மலையகத்துக்கு எதைப் பெற்றுக் கொடுக்க முடியும்?

இந்திய வம்சாவளியினராக மலையகத்தில் இருந்த பல அரசியல் பிரச்சினைகளும் வாழ்வாதாரப் பிரச்சினைகளும் இவர்களுக்கும் இருந்தது. பிரஜாவுரிமை பறிப்பு, வாக்குரிமைப் பறிப்பு, நாடற்றவர்களாக ஆக்கப்பட்டமை, நாடுகடத்தும் ஒப்பந்தங்களின் மூலம் நாடு கடத்தப்பட்டமை, கலவரங்களில் பாதிக்கப்பட்டமை, அதன் காரணமாக அகதிகளாக ஆனமை, இடம்பெயர்வு, அகதிகளாக இந்தியா திரும்பியமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இவர்களும் அதே அளவில் எதிர்கொண்டவர்கள்.

மேலதிகமாக, பெருவாரி சிங்களவர்கள் வாழ்ந்த பகுதிகளில் அங்கே தமிழ் மொழிப் பாடசாலை அற்ற நிலையும், தமது சமய பண்பாட்டை வளர்த்துக் கொள்ள வழியின்றியும் தமக்கான பண்பாட்டை பேண வழியின்றி தமது அடையாளத்தை இழந்து சிங்களவர்களாக கரைந்துவிட்டவர்களும் கணிசமான எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறார்கள்.

பெருவாரி மக்கள் சேரிகளிலும் முடுக்குகளிலும் வாழ்பவர்கள். குறிப்பாக அரசியல் ரீதியில் அநாதரவாக நீண்ட காலம் தனித்து விடப்பட்டவர்கள். வேறு வழியின்றி சிங்களப் பெரும்பான்மை அரசியல் சக்திகளில் தங்கியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். மலையக அரசியல் நிகழ்ச்சிநிரலில் இருந்து நெடுங்காலமாக அக்கறை காட்டப்படாதவர்களும் கூட. அதனால் ஏனைய சமூகங்களுடன் கலந்துவிட்டவர்கள். கணிசமானவர்கள் சிங்களவர்களாகவே ஆகிவிட்டவர்கள். மேல்மாகாணத்தில் தமிழ் பாடசாலைகள் மூடப்பட்ட வேளையிலும், அதன் வசதிகள் குறைக்கப்பட்ட வேளைகளிலும் எந்த தமிழ் தரப்பும் வந்தும் மீட்டதில்லை. மிக அரிதான சந்தர்ப்பங்களை வேண்டுமென்றால் கூறிக்கொள்ள முடியும். ஆனால் ஒரு கூட்டு அரசியல் பிரக்ஞையாக அது நிகழ்ந்ததில்லை. 80களின் பின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொழும்பில் தளமமைத்து பணியாற்றியதை எவராவது உதாரணத்துக்கு காட்டக்கூடும், ஆனால் அது கூட ஒட்டுமொத்த இந்தியவம்ம்சாவளியினரை அரசியல் ரீதியில் இணைக்கின்ற அரசியல் திட்டமாக நிகழவில்லை. ஏனோ தேர்தல் அரசியலுக்கு தேவைப்படுகிற வாக்குவங்கிக்காக சில சேவைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதை உறுதியாகக் கூற முடியும். 

மலையகத்துக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவளியினர் தமக்கான பண்பாட்டையோ, மொழியையோ, மரபையோ, அபிலாசைகளையோ பேணுவதற்கான அரசியல் சக்தியாகவோ, சமூகத் திரட்சியாகவோ இருக்க முடியாமல் போனதற்கு காரணங்கள் என்ன? கூட்டாக சமூக சக்தியாக தம்மை தக்கவைத்துக் கொள்வதற்கு அரசியல் தலைமையோ, வழிநடத்துவதற்கு ஒரு அரசியல் திட்டமோ, நிழ்ச்சிநிரலோ இருந்தது கிடையாது என்பதை “மலையக அடையாளம்”கோரும் சக்திகள் சுயவிமர்சனமாக ஏற்றுக்கொண்டாக வேண்டும். மலையக அரசியலானது தொழிற்சங்க அரசியலில் இருந்து, தேசிய அரசியலுக்கு பரிமாற்றம் அடைந்த காலத்தில் இதை சரிசெய்ய இ.தொ.கா தவறிவிட்டது என்று தப்பிவிடத்தான் முடியுமா?

சிங்களத் தரப்பின் முதலாவது துரோகம் தொடங்கிய இடம்:

ஒன்றை இங்கு முக்கியமாக நினைவிற் கொள்ள வேண்டும். இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றில் முதலாவது துரோகம் எனப் பார்க்கப்படுவது 1918 ஆம் ஆண்டு இலங்கை தேசிய சங்கம் ஆரம்பிக்கும் போது அருணாச்சலத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம். மேல்மாகாணத் தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதித்துவத்தை தருவதாக ஒப்புக்கொண்டுவிட்டு பின்னர் ஏமாற்றிய கதையையும், அதனால் இலங்கை தேசிய காங்கிரசின் முதல் தலைவரான சேர்.பொன் அருணாச்சலம் அதில் இருந்து விலகிய கதையையும் நாம் அறிவோம். அந்த மேல் மாகாண மக்கள் யார். இந்த பெருவாரி இந்திய வம்சாவளி மக்கள் அன்றி வேறு யார்.

அந்தளவுக்கு நூறாண்டுக்கு முன்னரே இம்மக்களின் எதிர்காலம் பற்றிய சர்ச்சை அரசியல் களத்துக்கு வந்திருக்கிறது. தேசிய காங்கிரசின் துரோகத்தோடு அந்த விவகாரமும் நெடுங்காலமாக கைவிடப்பட்டிருக்கிறது. 2000 ஆம் ஆண்டுகளில் இந்த அரசியல் இடைவெளியை நிரப்பவென வந்த மனோ கணேசனின் நிகழ்ச்சி நிரலும் காலத்துக்கு காலம் வெவ்வேறு அரசியல் நிகழ்ச்சிநிரலால் மடைமாற்றப்பட்டதால்; இம்மக்களின் அரசியல் அப்படியே நீர்த்துப் போனதுடன் கூடவே; இலங்கைவாழ் சகல இந்திய வம்சாவளி மக்களையும் இணைக்க கிடைத்த வாய்ப்பும் தவறவிடப்பட்டிருக்கிறது.

இன்றைய நிலையில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் இலங்கையர்களாக பதிவு செய்யப்பட்டுவிட்டார்கள் என்கிற கருத்தை சமீபத்தில் பேராசிரியர் சந்திரபோசும் குறிப்பிட்டிருந்தார். இதில் பெருவாரி மக்கள் நிச்சயம் மலையகத்துக்கு வெளியில் வாழ்பவர்களாக இருக்க நிறைய வாய்ப்புண்டு. உண்மைதான் “இந்திய வம்சாவளியினர்” என்கிற அடையாளத்தை சுமக்க மலையகத்துக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவளியினர் விரும்பவில்லை என்பதை எவரிடம் உரையாடினாலும் உணர்ந்துகொள்ள முடியும். அப்படி அவர்கள் தள்ளப்பட்டதற்கு கடந்தகால “நாடுகடத்தல்” பற்றிய அச்சமும் ஒரு காரணம் என்பது முக்கிய காரணம் தான். ஆனால் அதே வேளை அவர்களுக்கு இருந்த மாற்றுத் தெரிவு தான் என்ன?

“மலையகத்தவர் என்று அவர்கள் ஏன் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கக்கூடாது” என்று கேட்கும் அந்த “எல்லாம் அறிந்த அறிவாளிகள்” யார்?

பெருந்தோட்ட தமிழர்களை மலையகத் தமிழர் என்றால், மற்றவர்களை நகரத் தமிழர்கள் என்றும், ஏனையோரையும் அந்தந்த பிரதேசத்துக்குரிய அடைமொழியுடன் அழைப்போமா என்று சமீபத்தில் ஒரு வலைத்தளத்தில் கேட்கப்பட்டிருந்த கேள்வியில் உள்ள ஆழத்தையும் உணரவேண்டியிருக்கிறது.

“மலையக மக்கள்” என்கிற சொல்லாடலுக்கான அர்த்தத்தை மலையகத்துக்கு வெளியில் வாழும் மக்களிடம் விளக்கி ஒப்புதலை பெறட்டும். மலையகத்துக்கு வெளியில் ஒரு ஆயிரம் பேரின் ஒப்புதலைக் கூட பெறுவது இலகுல்ல. ஒரு இன அடையாளத்தை திணித்து வென்றதாக உலகில் எந்த வரலாறும் இல்லை. அப்படி ஒரு புதிய வரலாற்றை எவராலும் படைத்துவிடவும் முடியாது. அவர்களுக்கு வெளியில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு அடையாளத்தை அவர்களுக்கு சூட்டுவது அறிவுபூர்வமான காரியமா? நடைமுறை சாத்தியமான காரியமா? அப்படி செய்வதாக இருந்தால் கூட அதனை ஏற்கச் செய்வதற்கான படிநிலை முயற்சிகள் பலவற்றைத் தாண்ட வேண்டுமல்லவா? இது எதுவுமல்லாமல் இன்று கும்பல் பாணியில் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெகுஜன ஒப்புதலற்ற தன்முனைப்பிலான ஒரு ஆர்வக்கோளாறு முயற்சி நடக்கிறது.

தொகைமதிப்பிலிருந்து இன அடையாளம் நீக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது என்கிற பீதியைக் காட்டியே இந்த முயற்சி நடக்கிறது. அந்த அச்சம் நியாயமானதே. அதற்கு இந்த குறுக்குவழி தீர்வாகிவிடமுடியுமா?

“இந்திய வம்சாவளி” என்கிற அடையாளத்துக்கு ஒரு “மாற்று” அவசியம் என்பது உண்மையே. அந்த “மாற்று” அனைத்து மக்களும் எற்கக்கூடியதும், விஞ்ஞானபூர்வமானதுமாக இருத்தல் முன்நிபந்தனை அல்லவா?

இலங்கையில் “தமிழர்” அடையாளம்

இந்திய வம்சாவளித் தமிழரென்றால் அது மலையகத்தில் உள்ளவர்கள் தான் என்றும், பெருந்தோட்டத்துறைக்கு வந்தவர்கள் மட்டும் தானென்றும் ஒரு கருத்து மிக ஆழமாக பலர் மத்தியில் குறிப்பாக மலையகத் தமிழர் மத்தியில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது.

அது மட்டுமன்றி மலையகத்துக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவளியினர் என்போர் வியாபார வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் உயர் வர்க்கத்தினர் என்றும், உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்கிற கருத்தும் பிரச்சாரப்படுத்தப் பட்டுவந்திருக்கிறது. இவர்களின் சொத்துக்களைப் பேணிக்கொண்டு இந்தியாவுடன் வர்த்தக நலன்களை அனுபவித்துக்கொண்டு இந்தியாவினதும், இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் சலுகைகளை அனுபவிப்பதற்காக அவர்களுக்கு இந்திய அடையாளம் தேவைப்படுகிறது என்கிற கதையையும் பரப்பி வருகிறார்கள்.

இந்த புனைவுகளைப் பரப்பிவருபவர்களின் பத்தாம்பசலித் தனமான கருத்துக்களுக்கு இப்போது “மலையக அடையாள”த் தேடல் பற்றிய உரையாடல் களம் அமைத்துக் கொடுத்துள்ளது.

1. பேராசிரியர் சிவத்தம்பியின் கருத்தை திரித்தல்

2023 யூலை 22 அன்று கொழும்பில் நிகழ்ந்த மலையகம் 200 தொடர்பான ஆய்வரங்கமொன்று கொழும்பில் நிகழ்ந்தது. நான் அங்கே இதே மலையக அடையாளம் பற்றிய உரையை ஆற்றினேன். (13) எனது உரைக்கு பின்னர் அங்கே உரையாற்றியவர்களில் இதைவிட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜாவும் ஒருவர். அங்கே எனது உரைக்கு பதிலளிக்குமுகமாக திலகராஜா மலையக அடையாளத்துக்கான அவரின் கருத்துக்களையும் முன்வைத்திருந்தார். அந்த கருத்துக்களுக்கு எனக்கு பதில் அளிக்கும் வாய்ப்பு அந்தக் கூட்டத்தில் இருக்கவில்லை. இதே கருத்தை அப்படியே ஓகஸ்ட் 15ஆம் திகதி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் ஆற்றிய உரைக்குப் பின்னர் அவர் வெளியிட்டிருந்தார். அங்கேயும் பதில் வைப்பதற்கான சூழல் அமையவில்லை. அவரின் உரை பின்னர் “அபத்தம்”  இதழிலும்(14) 2013 சாகித்திய விழா மலரிலும் கட்டுரையாக வெளிவந்திருந்ததாலும் அதற்கு எதிர்வினை இல்லாவிட்டால் அக்கருத்தை பலர் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருப்பதாலும் அக்கருத்தை இங்கே முன் வைக்கிறேன்.

பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிட்ட ஒரு கருத்தை முதலில் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

“இலங்கைத் தமிழ் வழக்கில் இன்று மலையகம்" எனும் தொடர் இலங்கையின் மலைப் பிரதேசங்களிலுள்ள பெருந்தோட்டங்களிலும் அவற்றைச் சார்ந்த நகரங்களிலும் வாழும் இந்திய வம்சாவழித் தமிழரைக் குறிப்பதாகும். மலையகப் பகுதிகளைச் சாராத பகுதிகளிலுள்ள பெருந்தோட்டங்களில், அதாவது மேல், தென் மகாணங்களைச் சார்ந்த றப்பர் பெருந்தோட்டங்களில் காழ்ப்வர்களையும் மலைசார் பகுதிகளிலிருந்து சென்று வடகிழக்கு பகுதியின் வெசாயப் பிரதேசங்களிலும் (கிளிநொச்சி, வவுனியா, மாவட்டங்களில்) கொழும்பிலும் வாழ்பவர்களையும் கூட "மலையகத் தமிழர்” என்ற தொடர் கொண்டே சுட்டும் மரபு இன்று வழக்கிலுள்ளது.” நான் சொல்லவில்லை பேராசிரியரே கூறிவிட்டார்"

என்று அங்கே அவர் குறிப்பிட்டார்.

இங்கே பேராசிரியர் முடிக்கும் போது அவரின் கருத்தாகக் குறிப்பிடவில்லை. “சுட்டும் மரபு இன்று வழக்கிலுள்ளது” என்கிறார். "வழக்கில் உள்ளது" என்று தான் அவர் குறிப்பிடுகிறார். அந்த நூலை அவர் எழுதிய 90களின் ஆரம்பம் என்பது மலையக வரலாற்றிலேயே மலையகத் தேசியம் குறித்த கருத்தாக்கம் எழுச்சியுற்ற காலம், மலையகத் தேசியம், மலையக அதிகார அலகு, மலையக சுய நிர்ணய உரிமை என்கிற கருத்தாக்கம் பரவலாக்கப்பட்ட காலம். இதனை முன்னெடுத்தவர்களில் பிரதானமானவர்கள் மலையக மக்கள் முன்னணியினர். அதன் தலைவர்கள் அப்போது தான் சிறையில் இருந்து வெளியேறிய காலம். அவர்களின் ஆதரவாளனாக பணியாற்றிய காலம் அது. சந்திரசேகரனும் நானும் தனிப்பட மலையகத்துக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவளியினரின் தேசிய அடையாளம் பற்றி உரையாடிய போது இறுதியில் அனைவரையும் மலையக அடையாளத்துக்குள் கொண்டு வருவதே சரியானது என்கிற கருத்தை வலுவாக முன்வைத்த போது அது சரி என நம்பினேன். அதையே நாம் இனி வலியுறுத்த வேண்டும் என ஒப்புகொண்டமைக்குக் காரணம் அக்கருத்தாக்கத்தை விரைவில் பரவலாக்கி அனைவரையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு நிலை உருவாகி விடும் என்று உறுதியாக அன்று நம்பியது தான். அதனை அவர்கள் முன்கொண்டு செல்வார்கள் என்று நம்பியது தான்.

அக்கருத்தை அரசியல் களத்துக்கு முதலில் இழுத்துக்கொண்டு வந்த போதும் வந்த வேகத்தில் அவர்கள் மலையகம் பற்றிய உறுதியான நிலைப்பாடுகளில் இருந்து செயலிழந்து போனார்கள். அக்கட்சி வேகமாக பலவீனமானது போலவே அவர்களின் எழுச்சிகர கருத்துக்களும் காற்றோடு கரைந்தது.

நாங்கள் நம்பியது போலவே அன்று பேராசிரியர் சிவத்தம்பியும் அக்கருத்துக்களின் செல்வாக்குக்கு ஆட்பட்டார் என்றே கொள்ள வேண்டும். அக்கருத்து இன்றுபோல அன்றும் ஒரு விவாதப் பொருளாக ஆகியிருந்தால் அந்த விவாதத்தில் பேராசிரியர் சிவத்தம்பி வேறு நிலைப்பாட்டையும் எடுத்திருக்கக் கூடும்.

அதற்கு ஒரு உதாரணத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும். அதே 90களின் நடுப்பகுதியில் அருந்ததியன் என்கிற பினைபெயரில் “தலித்தின் குறிப்புகள்” என்கிற தலைப்பில் சரிநிகர் பத்திரிகையில் ஒரு தொடர் பத்தியை எழுதத் தொடங்கினேன். தொடங்கியபோது “தலித்” என்கிற பதம் இலங்கைக்கு அவசியமா என்கிற கருத்தை என்னிடம் முன்வைத்தார். எனது தரப்பு விளக்கத்தையும் அவரிடம் முன்வைத்தேன். ஆனால் அடுத்தடுத்து வந்த அப்பத்தியின் தொடரை வாசித்த அவர். அப்பதத்தின் இலங்கைப் பயன்பாட்டில் தவறில்லை என்று ஏற்றுக்கொண்டார்.

இவ்வாறு உரிய தர்க்கம் கிடைத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடிய மதிப்புமிக்க புலமையாளர் அவர். அவர் “சுட்டும் மரபு இன்று வழக்கிலுள்ளது” என்பதை அன்று வெளியில் உள்ள கருத்தாடலை வைத்துத் தான் முன்வைத்தார்.

அது மட்டுமல்ல, திலகராஜா வசதியாக அதே நூலில் மேற்படி பந்திக்கு அடுத்தபந்தியை ஏன் மறைத்தார், இருட்டடிப்பு செய்தார் என்கிற கேள்வியை இங்கே எழுப்ப விரும்புகிறேன். பேராசிரியர் அடுத்ததாக என்ன பதிவு செய்தார் என்பதை இதோ பாருங்கள்.

"மலையகத் தமிழர் என்ற இத்தொடர்," பொதுப்படையாக, பெருந்தோட்டங்களில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் யாவரையும் குறிப்பிடுகின்றதெனினும், சற்றுக் கூர்ந்து நோக்கும் பொழுது, அது உண்மையிற் பெருந்தோட்ட உற்பத்தி முறையோடிணைந்துள்ள மூன்று முக்கிய "குழுவினரை" ஒருங்கு இணைத்துள்ள ஒரு பதமென்பது தெரிய வரும்.

  1. பெருந்தோட்டங்களில் வேலைபார்க்கும் தொழிலாளிகளான இந்திய வம்சாவழித் தமிழர்கள் (கங்காணிளும் தொழிலாளர்களும்),
  2. பெருந்தோட்டங்களில் நிர்வாக அலுவலகங்களில் உத்தியோகத்தர்களாகக் கடமையாற்றும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் (இவர்களுள் ஆசிரியர்களையும் சேர்த்துக் கொள்வர்),
  3. பெருந்தோட்டங்களைச் சார்ந்த நகரங்களிலும் வணிக முயற்சிகளிலிடுபட்டுள்ள இந்திய வம்சாவழித் தமிழர்கள்,

ஆகியோரே அந்த மூன்று குழுவினருமாவர். (15)

ஆக அவர் “மலையகத் தமிழர்” என்று பெருந்தோட்ட இந்தியவம்சவளியினரையே இங்கே வரையறுக்கிறார் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.

2. அடுத்ததாக திலகராஜா சாரல் நாடனை ஆதாரத்துக்கு அழைக்கிறார்.

“மலையகம் என்ற சொல் இன்று பரந்துபட்ட அர்த்தத்தில் வழக்கில் இருக்கிறது. இலங்கை வாழ் இந்திய வம்சாவழித் தமிழரை இலங்கையின் எந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தாலும் மலையகத் தமிழர் என்று குறிப்பிடும் வழக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. பூகோள எல்லைகளை மீறிய விதத்தில் உணர்வுபூர்வமாக ஒரு சமுதாய மக்களை இனம் காட்டும் முறையே இது” (16) 

திலகராஜ் “எனவே “மலையகம்” என்பது புவியியல் எல்லைகளைக் கடந்த ஓர் இனக்குழுமத்தின் “உணர்வு” என்பதாகப் புரிந்து கொள்வதே அவசியமானதாகும்.” என அக்கருத்தை சாராம்சப்படுத்துகிறார்.

இங்கே “ஓர் இனக்குழுமத்தின் உணர்வு” என்று சொல்லும் போது ஏன் அந்த இனக்குழுமத்துக்குள் மலையகத்துக்கு வெளியில் உள்ளவர்களின் உணர்வையும் சேர்க்கவில்லை என்பதே இங்கே எழும் கேள்வி. மலையகத்தில் “மலையகம்” என்கிற அந்த உணர்வு வளர்த்தெடுக்கபட்டபோதும், அதற்கு வெளியில் உள்ளவர்களின் உணர்வும் கருத்தும் இது தானா? இல்லை என்பதை அடித்துச் சொல்லலாம். முடிந்தால் ஒரு கருத்துக் கணிப்பை மலையகத்துக்கு வெளியில் எடுத்துப் பார்க்கட்டும் என்றே கூற வேண்டியிருக்கிறது.

மேலும் ஒரு ஆழமான கருத்துருவாக்க விவாதத்துக்கு இப்படி தனிநபர்களின் “மேற்கோள்களை” விட களத்தில் உள்ள மக்களின் கருத்துக்களும் உணர்வுகளும், அவர்களின் நியாயங்களும், தர்க்கங்களுக்குமே அதிக வலுவுள்ளது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


தொண்டமான் பரிந்துரைத்த கண்டி அடையாளம்:

1948 குடியுரிமை சட்ட விவாதத்தின் போது தொண்டமான் ஒரு பரிந்துரையை வைத்தார். இனி இந்தியத் தொழிலாளர்கள் என்பதற்குப் பதிலாக "கண்டித் தமிழர்கள்" என்று அழையுங்கள் என்றார். கண்டியில் தான் தேயிலை பயிர்ச்செய்கை முதற் தடவையாக தொடங்கப்பட்டது. அங்கே தான் தேயிலையை மையப்படுத்திய தொழிலாளர்களின் குடியேற்றமும், குடியிருப்புகளும் ஆரம்பமாகின. கண்டிச் சீமைக்குப் போகிறோம் என்று பொதுவாக தமிழகத்தில் அப்போதைய தொழிலாளர்கள் கூறுவார்கள். வாய்மொழிப் பாடல்களும், இலக்கியங்களும் கூட கண்டியையே தோட்டத் தொழிலாளர்களின் குறியீட்டு மையமாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் கண்டி என்பது தோட்டத்தொழிலாளர்களின் மையமாகவும் குறியீடாகவும் இருந்தது உண்மை.  மலையகத்துக்கு வெளியே; இந்திய வம்சாவளியினரின் வாழ்விடமாக பொதுத்தளத்தில் “பொதுப்புத்தியில்” அறியப்பட்ட இடமும் கண்டி தான். எனவே தொண்டமான் “கண்டித் தமிழர்கள்” என்று அடையாளப்படுத்த முயன்றதை இந்த அர்த்தத்தில் புரிந்துகொள்ளமுடியும்.

இன்று "மலையகத் தமிழர்", இந்திய வம்சாவழித் தமிழர்", இந்தியத் தமிழர், "இலங்கை வாழ் இந்திய வம்சாவழித் தமிழர்" என்கிற பல நாமங்கள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்ற இந்த வேளை, அன்று "கண்டித் தமிழர்" என்கிற பதம் நிலைபெற்றிருக்குமானால் அதன் எதிர்காலம் எவ்வாறு அமைந்திருக்கும் என்று இன்று கேட்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் வாழும் இந்திய வம்சாவழித் தமிழரையும் "மலையகத் தமிழர்" என்கிற நாமத்தை சூட்ட வேண்டும் என்பவர்களிடம் இந்த விடயத்தை அழுத்தி நினைவுறுத்த வேண்டியிருக்கிறது.

இலங்கையில் கண்டியச் சிங்களவர் கரையோரச் சிங்களவர் என்பது சிங்கள சமூகத்துக்குள்ளேயே உப இன அடையாளமாக இருந்தது உண்மை தான். கண்டி ராஜ்ஜியம் கடைசியாக வீழ்ந்த ராஜ்ஜியம். அதாவது சிங்கள சமூக பண்பாட்டு அம்சங்களை இறுதி வரை தக்கவைத்துக்கொண்டிருக்கும் வாய்ப்பைக் கொண்டிருந்த சமூக அமைப்பு அது. எனவே கனடியப் பெருமிதம் என்பது “தூய” சிங்கள சமூகத்தின் பெருமிதமாக தம்மை உணர்ந்து வந்தது. 1815 ஆம் ஆண்டு கண்டி ஆங்கிலேயர்களிடம் வீழ்ந்த பின்னர் கூட தம்மை ஏனைய சிங்களவர்களிடம் இருந்து தனித்த அம்சங்களைக் கொண்ட சமூகமாக அவர்கள் தம்மை அடையாளப்படுத்தி வந்தார்கள். ஆங்கிலேயர்களும் அதனை கணக்கிற் கொண்டார்கள். எனவே தான் அரசியல் யாப்பு சீர்திருத்தங்களின் போது கண்டிப் பிரதிநிதிகள் என தனியான சமூகமாக அவர்களின் பிரதிநிதித்துவத்தைப் பேணினார்கள்.

எப்படியோ! இறுதியில் கண்டிச் சிங்களவர்களும் கரையோரச் சிங்களவர்களும் நாளடைவில் “கண்டி” என்றோ “கரையோரம்” தனியொரு பிரதேச அடையாளத்துக்குள் தங்களை சுருக்கிக் கொள்ளவில்லை. மாறாக “சிங்களவர்” என்கிற பொது இன அடையாளத்துக்குள் தான் இறுதியாக வந்து சேர்ந்தார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. 

ஒரு சமூகத்தின் பெயரை ஒரு புவியியல் பிரதேசத்தை அடைமொழியாகக் கொண்ட அடையாளத்தை சூட்டுவதில் பல்வேறு சமூக, பண்பாட்டு இடையூறுகள் உள்ளன. அப்படி சூட்டுவது யதார்த்தத்துக்கும், விஞ்ஞானபூர்வத்துக்கும், நடைமுறைக்கும் கொஞ்சமும் அருகில் வர முடியாத அணுகுமுறை.

நான்கு வீதத்துக்கு குறைந்ததன் காரணிகள்

1950கள் வரை இரண்டாவது பெரும்பான்மை இனமாக இருந்தவர்கள் எப்படி நான்கு வீதமாக சுருங்கி நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டு, ஒரு இனம் என்கிற அடையாளத்துக்குள் அடங்க முடியாதவர்களாக ஆக்கப்பட்டதன் பின்னணியை நாம் அறிதல் வேண்டும். அது தற்செயல் நிகழ்வல்ல.

  1. பிரஜாவுரிமை பறிப்போடு வாக்குரிமையும் பறிபோய் நாடற்றவர்களாக ஆகி மீள நாடு திரும்பியவர்கள் கணிசமானோர்.
  2. நேரு கொத்தலாவல, சிறிமா சாஸ்திரி, சிறிமா இந்திரா ஆகிய ஒப்பந்தங்களின் பேரம் பேசல்களுக்கு ஊடாக நாடு கடத்தப்பட்டவர்களும், நாடு திரும்பியவர்களும்,
  3. இனக்கலவரங்களின் பாதிப்பால், உடமைகளை இழந்தும், சொந்தங்களின் உயிர்களை இழந்தும், நம்பிக்கை இழந்தும் தமிழ்நாடு திரும்பியவர்கள்.
  4. இந்த நிலைமைகளின் காரணமாக இந்திய வம்சாவளி என்று பதிவு செய்யாமல் இலங்கைத் தமிழர்களாக தம்மைப பதிவு செய்து கொண்டமை
  5. நாடளாவிய ரீதியில் ஏனைய சமூகங்களோடு கலந்து இந்திய வம்சாவளி என்கிற அடையாளத்தை செயற்கையாக இழந்தமை.
  6. “இந்திய வம்சாவளி” அடையாளத்தை நீக்கிவிட்டு “இலங்கைப் பிரஜை” என பதிவு செய்துகொண்டமை.
  7. தோட்டப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட கருத்தடைத் திட்டங்களால் உருவான’ செயற்கை இனப்பெருக்க குறைப்பு
  8. குறைந்த வாழ்வாதார வசதிகளின் காரணமாகவும், வறுமை காரணமாகவும் தாமாகவே குடும்பக் கட்டுப்பாடுகளை செய்து கொண்டு பிறப்பு வீதத்தை மட்டுப்படுத்திக் கொண்டமை.

காலனித்துவக் காலப்பகுதியில் இலங்கையில் குடியேறிய மற்றும் குடியேற்றப்பட்ட இனங்களையும் சேர்த்து ஏறத்தாள முக்கியமாக இருபது இனங்கள் இலங்கையில் இன்று அடையாளம் காட்டப்படுகின்றன. ஆனால் குடித்தொகைக் கணக்கெடுப்பில் ஒரு இனமாக அடையாளம் காண்பதற்கு உரிய வரைவிலக்கணங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு ஊடாக (RTI) 27.10.2022 அன்று எஸ்.விஜயகுமார் கோரியிருந்த கேள்விகளுக்கு இலங்கை புள்ளிவிபரத் திணைக்களத்திற்கூடாக திரட்டி அளிக்கப்பட்ட பதில்களிலிருந்து புரிதலுக்காக இங்கே விபரங்களைத் தர வேண்டியிருக்கிறது.

புதிய வரைவிலக்கணத்தின் பிரகாரம் இந்திய வம்சாவளி மக்கள் அந்தப் பிரதான பட்டியலில் இருந்து அகற்றப்படக்கூடிய ஆபத்து இருப்பதை இன்று உணர முடிகிறது.

1901ஆம் ஆண்டு வரை தாம் எந்த தேசிய இனம் (Nationality) என்பதை அறிவித்துக்கொள்ளும் உரிமை இலங்கை மக்களுக்கு இருந்தது. 1901 முதல் 1953 வரையான காலப்பகுதியில் “இனம்” (Race) எது என்பது பற்றிய விபரங்களை தனிபர்கள் சுயமாக அறிவிக்க இயலுமானதாக இருந்தது. ஆனால் 1963 இலிருந்து “இனக்குழு” ( Ethnic Group) என்று அட்டயாளப்படுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதேவேளை 1971 ஆம் ஆண்டு புள்ளிவிபரத் தயாரிப்பின் போது இனங்களை வகைப்படுத்தும் போதும் பதிவு செய்யும்போதும் அவர்கள் கொண்டிருக்கிற சதவீதங்களைக் கருத்திற்கொண்டு பாகுபடுத்தப்பட்டனர். அதுமட்டுமன்றி அந்தத் தொகைமதிப்பின் போது தான் முதற் தடவையாக வேடர்களும், ஐரோப்பியர்களும் இனக்குழுக்கள் என்கிற அடையாளத்தை இழந்தார்கள் என RTI தெரிவிக்கிறது.

அதுமட்டுமன்றி அதே 1971 தொகைமதிப்பின் பிரகாரம் புதிதாக இரு இனக்குழுக்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். “பரத” (பரதவர்), “இலங்கை செட்டிகள்” ஆகிய இரு பிரிவினரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

1971 இல் வேடர்களும், 1963இல் ஐரோப்பியர்களும் நீக்கப்பட்டதற்கு அவர்கள் 5% வீத மக்கள் தொகையை எட்டாதது தான் காரணம் என்கின்றனர். ஆனால் இந்த வரையறைகளை சர்வதேச குடித்தொகை கணக்கெடுப்பு பரிந்துரைகளின் படியும், நியமங்களின் படியும்தான் மேற்கொண்டதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

5% வீதத்துக்கு குறைகிற இனக்குழுக்கள் தேசிய இனம் என்கிற அடையாளத்தை இழந்து வேறு இனங்கள் (Others) என்கிற அடையாளத்துக்குள் தள்ளப்பட்டுவிடுகின்றனர்.

இன்றையை இந்திய வம்சாவழித் தமிழர்கள்  எதிர்கொள்ளும் உடனடி ஆபத்தான பிரச்சினை இது தான். புதிய கணக்கெடுப்புகளின்போது 5% வீதத்துக்கும் குறைவாக அவர்கள் கணிக்கப்பட்டுவிட்டால் அது அவர்கள் தனியொரு இனமாக அடையாளப்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுவிடும். அது அவர்களின் தேசிய அடையாளத்தையும் இல்லாது செய்வதுடன், அவர்களின் அரசியல் அபிலாசைகளையும், அரசியல் கோரிக்கைகளையும், ஈற்றில் அரசியல் இருப்பையும் எதிர்காலத்தையும் கடுமையாக பாதிக்க வாய்ப்புண்டு.

அரசியல் ரீதியான காப்புறுதியை இழக்க நேரிடும் ஆபத்தின் விளிம்பில் மலையக மக்கள் இருப்பதால் தான் ஒட்டுமொத்த இந்திய வம்சாவளியினரையும் ஒரே இன அடையாளத்தின் கீழ் கொண்டுவருவதற்கான கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஆனால் அப்படியான ஒரு முயற்சி நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலோ, உரிய மக்களுக்கு தெரியாமலோ, அவர்களின் கண்களைக் கட்டிவிட்டோ மேற்கொள்ளப்படுவதில் உள்ள ஆபத்தை பலரும் உணருவார் இல்லை.

இந்திய வம்சாவளி மக்களின் அடையாளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உரையாடல்கள் அவ்வப்போது மேலெழுவதும் அப்படியே அமுங்கி விடுவதுமான போக்கே சில தசாப்தங்களாக தொடர்ந்து வந்திருக்கிறது. அந்த உரையாடல் பக்கசார்பான விவாதங்களுக்குள்ளேயே சுற்றி சுற்றி வந்தது. உறுதியான முடிவுக்கு வருவதாயின் அந்த உரையாடல், ஜனநாயக பூர்வமானதும், ஒரு பன்முகப்பட்டதுமான உரையாடலாக வளர்த்தெடுக்கப்பட்டு முடிவுக்கு வராவிட்டால் அது நிச்சயம் வெற்றி பெறப்போவதில்லை என்பதை உறுதியாக கூறி வைக்கலாம். இது அவரவர் சுய இன்பத்தை தீர்த்துக் கொள்வதற்கான உரையாடல் அல்ல. மாறாக சம்பந்தப்பட்ட மக்கள் உரிய முறையில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டிய உரையாடல். விஞ்ஞானபூர்வமாக தீர்க்கவேண்டிய பிரச்சினை.

அடிக்குறிப்புகள்:
  1. ராமையா சடகோபன், மலையக தமிழ் மக்களின்  இன அடையாளம், வீரகேசரி - 04.12.2022.
  2. K.L. Gillion, A History Of Indlan Immigration And Settlement In Fiji, Thesis Submitted For The Degree Of Doctor Of Philosophy In The Australian National University. March 1958
  3. Shanta S. K. Davie, The Power and Plasticity Of Accounting: A Story Of Indian Indentured Labour To Britain’s Sugar Colonies, Discussion Papers in Management and Accounting History 2008.
  4. Donovan Moldrich, Bitter Berry Bondage: The Nineteenth Century Coffee Workers of Sri Lanka, Co-ordinating Secretariat for Plantation Areas, 1989
  5. SLNA Despatches 5/113 No 174 of20 November 1826 (, Bitter Berry Bondage இலிருந்து)
  6. Ceylon Examiner, 18 January 1860 (Bitter Berry Bondage)
  7. Gwyn Campbell & Alessandro Stanziani, The Palgrave Handbook of Bondage and Human Rights in Africa and Asia, Centre National de la recherchescientifique (CNRS), ris, France, 2019.
  8. Rodney Ferdinands, Proud & Prejudiced: The story of the Burghers of Sri Lanka, R. Ferdinands Melbourne 1995
  9. ‘Recruitment of Coolies for the Pioneer Labor Force in Ceylon,’ Department of Commerce and Industry, Emigration Branch, NAI; Edward Jackson, Report of a Commission on Immigration into Ceylon (printed and confidential), 1939.
  10. Ritesh Kumar Jaiswal , Mediated (Im)mobility: Indian Labour Migration to Ceylon under the Kangany System (c. 1850–1940), "The Palgrave Handbook of Bondage and Human Rights in Africa and Asia", pp 157–188. Centre National de la recherche scientifique (CNRS) Paris, France, 2019
  11. ‘Recruitment of Coolies for the Pioneer Labor Force in Ceylon,’ Department of Commerce and Industry (hereafter C&I), Emigration Branch, NAI; Edward Jackson, Report of a Commission on Immigration into Ceylon (printed and confidential), 1939, Department of Education, Health, and Lands (hereafter EHL), L&O Branch, NAI
  12. இந்தக் கதைகளில் கணிசமானவற்றை நான் எழுதிய “தலித்தின் குறிப்புகள்” நூலில் விபரங்களுடன் பதிவு செய்திருக்கிறேன்
  13. சமூகநீதி கட்சி நடத்திய “மலையகம் 200” ஆய்வரங்கம், 22 யூலை 2023, கொழும்பு WERC யில் நடத்தப்பட்டது.
  14. அபத்தம், ஆடி, 2023, கனடா, 
  15. பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, இலங்கை மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்துநிலையும் - தொகுதி I, 1993, உதயம் வெளியீடு.
  16.   சாரல் நாடன், மலையகம் வளர்த்த தமிழ், துரைவி, 1997.
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates