Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

இலங்கையில் அருந்ததியர் நிலை - என்.சரவணன்

என்.சரவணன்
சரிநிகரில்18 வருடங்களுக்கு முன்னர் அருந்ததியன் என்கிற பெயரில் தொடராக எழுதி வந்த குறிப்பை மாந்திருக்க மாட்டீர்கள். அருந்ததியர் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதால். சென்ற முறை இலங்கை பயணம் பல கூட்டங்கள், சந்திப்புகள், செயற்பாடுகளால் மீண்டும் அவை புத்துயிர்ப்பு பெற்றுள்ளன. இம்முறை ஒரு மாநாட்டுக்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன. லண்டன் இலக்கிய சந்திப்பில் எடுத்த தலைப்பை முழுமையாக பேச நேரம் போதவில்லை. 20 நிமிடங்களில் என்னத்தை சொல்ல...? ஆனால் அந்த சந்தர்ப்பத்தை எடுத்துக்கொள்வது தான் எங்களுக்குள்ள வழி.

Video streaming by Ustream

மலையக தொழிலாளர்கள் வரலாற்றில் முதன் முறையாக கருப்பு மே தினம்!?


மலையக தொழிலாளர்கள் வரலாற்றில் முதன் முறையாக கருப்பு மே தினம்!?April 6, 2013  03:06 pmபுதிதாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தத்தில் 70 ரூபா அடிப்படை நாள் சம்பள உயர்வு உள்ளிட்ட 105 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

எனினும் தற்போது நாட்டில் இருக்கின்ற விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு மத்தியில் தொழிலாளர்களுக்கு இந்த சம்பள உயர்வு போதுமானதல்ல என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மை. 

கடந்த முறை கூட்டு ஒப்பந்த காலத்தில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள் (தொ.தே.ச, ஜ.தொ.கா, அ.இ.தோ.தொ.ச, இ.தொ.ஐ.மு, ம.ம.மு. உள்ளிட்ட) பல கூட்டு ஒப்பந்தம் நிறைவு பெறுவதற்கு முன்னரே, கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே 500 ரூபா அடிப்படை சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து போராட்டங்கள், எழுச்சிகள், கருத்தாடல்களை ஆரம்பித்திருந்தனர். 

இம்முறையும் அதேபோன்று தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்க கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கவென அரசாங்கம் மற்றும் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்க சம்மேளனம் ஒன்றை உருவாக்கினர். 

கூட்டு ஒப்பந்தம் காலாவதியாவதற்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் இருந்த நிலையில் இந்த தொழிற்சங்க சம்மேளனம் உருவாக்கப்பட்டது. 

அதன் பின்னர் இந்த தொழிற்சங்க சம்மேளனம் தங்களை முறையாக பதிவு செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்ததா? தனது மாநாட்டை கூட்டியதா? அதில் கூட்டு ஒப்பந்தம் குறித்து கதைத்ததா? தீர்மானம் நிறைவேற்றியதா? அத்தீர்மானத்தை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்திடம் கையளித்ததா? தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்த அவர்களிடத்தில் சென்று விழிப்புணர்வை கொடுத்ததா? அல்லது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களை உத்தியோகபூர்வமாக சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்ததா? இவ்வளவு சம்பள உயர்வு வேண்டும் இல்லையேல் போராட்டம் நடாத்தப்படும் என சம்மேளனத்தின் சார்பில் ஊடகவியலாளர் சந்திப்பு நடாத்தி எச்சரிக்கை அறிவிப்பு செய்ததா? இப்படி இன்னும் பல கேள்விகள் இந்த தொழிற்சங்க சம்மேளனத்தை நோக்கி வீசி எறியப்படுகின்றன. 

வெள்ளம் வருவதற்கு முன் அனைக்கட்ட வேண்டும் என்பார்கள். ஆனால் வெள்ளம் வரும் என்று தெரிந்தும் தொழிற்சங்க சம்மேளனம் அணைக்கட்ட தவறியது அல்லது தாமதமானது ஏனோ? பெட்டிகளை வாங்கிக் கொண்டு கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களை காட்டிக் கொடுத்துவிட்டன என்று கூட்டு ஒப்பந்த காலத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது வழமை. 

ஆனால் இம்முறை அந்த பெட்டிகளில் ஓரிரண்டு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள் பக்கமும் சென்றுவிட்டதோ என்ற சந்தேகம் இன்று பலர் மத்தியில் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. கூட்டு ஒப்பந்தம் செய்த பின்னர் இவர்கள் அறிக்கைகளை விட்டு எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்த எதிர்ப்பு கொள்கையை இவர்கள் சம்மேளனம் ஆரம்பித்த உடனேயே செய்திருந்தால் இவர்களுக்கான ஆதரவு படைபோல் திரண்டிருக்கும். அந்த ஆதரவு படையை திரட்ட மலையகத்தில் இருக்கின்ற இளைஞர்கள், கற்றார் சமூகம், சிவில் சமூகம் என பலரும் தயார் நிலையில் இருந்தனர். இலங்கை சர்வதேசத்திற்கு பேய் காட்டுவது போல் ஒரே இரவில் செய்துவிட முடியாது என இவர்கள் கருதுவார்களாயின் அது ஏற்றுக் கொள்ள முடியாதது. காரணம் இவர்களுக்கு இரண்டு வருட இடைவெளி இருந்தது. 

ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் சார்பு எனக் கூறிக் கொண்டு சம்மேளனம் உருவாக்கியவர்கள் தங்கள் கடமையைச் செய்ய தவறிவிட்டனர். மறுபக்கம் எதிர்ப்பு அலை உருவாக்க போதிய கால அவகாசம் இல்லை என்று இவர்கள் கூறுவார்களாயின் அது அவர்களது இயலாமையை குறிக்கும். 

இருந்த போதும் மறுபுறத்தில் கூட்டு ஒப்பந்தம் செய்யும் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே தங்களது இளைஞர் அணி, மாவட்ட நிர்வாகிகள், தோட்டத் தலைவர்கள் என பல தரப்பினரையும் அவர்களது இடத்திற்கே சென்று சந்தித்து சமூக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் கதைகளை கூறி அவர்களின் போராட்ட குணங்களை மலுங்கடித்துவிட்டனர் என்பது திரைக்கு பின்னால் நடந்ததை. 

இன்னும் நான்கு வருடங்களில் தோட்டங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது. அரசியல் செய்து வெறுத்துப்போய்விட்டது. நிலைமை மோசமாக இருக்கிறது. கம்பனிகள் மூடப்படும் நிலை உள்ளது.. போன்ற தொழிலாளர்களை பலவீனப்படுத்தும் கருத்துக்கள் அந்த கூட்டங்களிலே சொல்லப்பட்டதாக கூட்டங்களுக்கு சென்று வந்தவர்களே சொல்லி நொந்து கொண்டதை கண்டிருக்கிறோம். 

அவர்கள் இவ்வாறு கூட்டங்கள் போட்டு கதைத்தது கட்டாயம் மற்றைய தொழிற்சங்கங்களுக்கு தெரிந்திருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அப்படி தெரியாது என்று சொல்வார்களாயின் இவர்களது தொழிற்சங்கம் அடிமட்ட மக்கள் மத்தியில் செயல்படுகின்றதா என்ற கேள்வி எழுவது நியாயமே. 

கூட்டு ஒப்பந்தம் சாராத தொழிற்சங்கங்கள் தங்கள் வலுவான எதிர்ப்பு கொள்கையில் இருந்திருந்தால் இன்று கிடைத்துள்ள 70 ரூபா அடிப்படை சம்பளம் குறைந்தது 80, 90, 100 என உயர்ந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் சென்று தைரியமாகக் கதைக்க இவர்களுக்கு திராணியும் இருந்திருக்கும். 

இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் 70 ரூபா அடிப்படை சம்பள உயர்வு தொழிலாளர்களுக்கு கிடைக்க கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட மூன்று தொழிற்சங்கங்களுக்கு மாத்திரமே பங்கு உள்ளது. ஏனைய தொழிற்சங்கங்களின் பங்கு துளிகூட இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். 

இருந்த போதும் 70 ரூபா சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்துவிட்டோம் என்று என்று ஊர் ஊராகச் சென்று தப்படித்து சொல்லிக் கொள்வதற்கு கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை. மனசாட்சி அடிப்படையில் 70 ரூபா இன்றைய காலத்திற்கு போதுமானதா என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட மூன்று தொழிற்சங்க தலைவர்களும் கண்ணாடி முன் நின்று தங்களையே கேள்வி கேட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை ´நீங்கள் எல்லாம் உண்மையான மக்கள் பிரதிநிதிகள்தானா´ என்று கண்ணாடி கூட கேள்வி கேட்டு ஏலனமாகச் சிரிக்கக் கூடும். 

புதிய கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் சரியாக வேலை செய்யும் தொழிலாளி ஒருவருக்கு கிடைக்கும் 15000 ரூபாவில் ஒரு மாத உணவு, அத்தியாவசிய பொருள், பிள்ளைகளின் கல்வி, சுகாதார செலவு என .... பட்ஜேட் போட்டால் வரவுக்கு மீறிய செலவு வருமே தவிர வரவுடன் கூடிய சேமிப்போ வரவுக்கு ஏற்ற செலவு வந்து சேராது. இதை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்கள் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். 

சரி இனி யாரையும் பேசுவதில், விமர்சிப்பதில், திட்டுவதில், ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதில் பயனில்லை. 

70 ரூபா அடிப்படை சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளர்களுக்கு போதுமானதல்ல என்பது அடிப்படை உண்மையாகிவிட்டது. தொழிலாளர் நலனில் சிறுதுளியும் அக்கறை காட்டாது செய்து கொள்ளப்பட்ட இந்த கூட்டுச்சதி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது எப்படி? கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களும் ஏனைய தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது என்பதை நிரூபிப்பது எப்படி? 

புதிய செய்தி வந்திருக்கிறது... கூட்ட ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன் தங்களுடைய எதிர்ப்புக்களை, போராட்டங்களை வெடிக்க வைக்கத் தவறிய கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத ஏனைய தொழிற்சங்கங்கள் இம்முறை வரவிருக்கும் மே தினத்தில் தங்களது பூரண எதிர்ப்பை வெளிப்படுத்த தயாராகி வருகின்றனர் என்பதுதான் அந்த புதுச்செய்தி. 

இலங்கை வரலாற்றில் ஒருபோதும் கண்டிராத மே தினம் ஒன்றை இலங்கை மக்கள், ஆட்சியாளர்கள், சர்வதேசம் காணப்போகிறது என்ற செய்தி தற்போது ஒவ்வொருவர் காதுகலுக்கும் மெல்ல மெல்ல சென்று கொண்டிருப்பதாக அறியக்கிடைக்கிறது. 

கூட்டு ஒப்பந்தத்தில் அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களுக்கு போதிய நியாயம், நிவாரணம் கிடைக்காததால் தொழிலாளர்கள் புரட்சியின் மூலம் உருவான மே 1ம் திகதி தொழிலாளர் தினத்தை மலையகமெங்கும் ´கருப்பு மே தினமாக´ அனுஷ்டிக்க தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத முக்கிய தொழிற்சங்கங்களான தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இம்முறை கருப்பு தொழிலாளர் தினத்தை அனுஷ்டிக்க ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக இந்த தொழிற்சங்கங்களின் உறுதிப்படுத்தப்படாத உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலே கூறப்பட்டது போன்று மலையகத்தில் கருப்பு தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்பட்டால் அது வரவாற்று பதிவாகும். மேலும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள் தற்போது தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கூட்டுச் சதி குற்றச்சாட்டில் இருந்து கருப்பு மே தினத்தை அனுஷ்டித்தாவது வெளியேற முயற்சிக்கட்டும். அதன் மூலம் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களிடம் இருந்து நல்லதொரு வரலாற்று பாடத்தை கற்றுக் கொள்ளட்டும். 

(பழனி விஜயகுமார்)

நன்றி - அததெரண

அழைப்பிதழ் - புதிய செல்நெறி நோக்கி...



அழைப்பிதழ்

புதிய செல்நெறி நோக்கி...

மலைநாட்டு எழுத்தாளர் மன்றம், கனடா தாய்வீடு சஞ்சிகை இணைந்து நடத்தும்

அமரர்என்.எஸ்.எம்.ராமைய்யா நினைவு
சிறுகதை, கவிதைப்போட்டி

பரிசளிப்பு விழா மற்றும் பதுளை சேனாதிராஜாவின்

குதிரைகளும் பறக்கும்
சிறுகதைத் தொகுதி வெளியீடு

பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி மண்டபம்
சனிக்கிழமை காலை மணி

பிரதம அதிதி: கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ்
(இலங்கை திறந்த பல்கலைக்கழகம்)

தலைமை : தெளிவத்தை ஜோசப் – தலைவர் ம.எ.ம

மலையகத் தியாகிகளை நினைவு கூருவோம்!



இந்நாட்டின் வரலாற்றில் 1866 ஆம் ஆண்டு மாபெரும் மாற்றத்தை உண்டாக்கினார் ஜேம்ஸ் டெய்லர் என்ற ஆங்கிலேயர் கண்டி மாவட்டத்தில் ஹேவாஹெட்ட லூல் கந்துர தோட்டத்தில் முதன் முதலாக தனது காணியின் பத்து ஏக்கரில் தேயிலை பயிர்ச் செய்கையை ஆரம்பித்தார்.

இப் பயிர்ச் செய்கையை பரீட்சார்த்தமாக மேற்கொள்வதற்காக இந்தியாவின் அசாமிலிருந்து தேயிலை விதைகளை தருவித்து பயிரிட்டார். இதில் பெரிய வெற்றியையும் கண்டு பெரியதோர் மாற்றத்தையும் கொண்டு வந்தார். ஜேம்ஸ் டெய்லரின் லூல் கந்துர பங்களாவிலேயே சிறிய தொழிற்சாலையையும் உருவாக்கினார். இந்தத் தொழிற்சாலையில் தனது காணியிலிருந்து பெறப்படும் தேயிலைக் கொழுந்தை உலர்த்தி தூளாக்கி லண்டனுக்கு அனுப்பினார். இவரின் தேயிலைத் தூளுக்கு லண்டன் மாநகர வர்த்தக மையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

சிலோன் தேயிலைக்கு பெரும் வரவேற்பும், ஆதாயமும் கிடைப்பதை பலர் தெரிந்து கொண்டனர். இதன் காரணமாக பிரித்தானியர், ஸ்கொட்டிசார் ஐரிஸ்காரர்கள், வெல்ஷ்காரர்கள் உட்பட பெருந் தொகையான ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வரத் தொடங்கினர். இவ்வாறு வந்த இவர்கள் அன்றைய கண்டி, நுவரெலியா பிதேசங்களை பார்வையிட்டனர். பெருங்காடுகளையும், கற்பாறைகளையும் கொண்ட இப்பிரதேசத்தின் காணியில் ஒரு ஏக்கர் ஒரு பவுணுக்கு வெள்ளைக்காரர்களின் ஆட்சி வழங்கியது. இந்த விலைக்கு ஒவ்வொரு வெளிநாட்டு வெள்ளைக்கார கம்பெனிகளும் பல ஏக்கர்களை விலைக்கு வாங்கின. கமம்பெனிகாரர்களுடன், போட்டி போட்டுக்கொண்டு தனியாரும் காணிகளை கொள்முதல் செய்வதில் பெரும் ஆர்வம் காட்டினர்.

வெள்ளைக்காரர்கள் காடு நிறைந்த காணிகளை செப்பனிட முதன் முதலில் சிங்களத் தொழிலாளர்களை பயன்படுத்தினர். பெரும் காடுகளில் அட்டைகள், விஷபூச்சிகள், பாம்புகள், மிருகங்கள், தொல்லைகளாலும் கடுங்குளிரினாலும் பெரிதாகப் பாதிக்கப்பட்ட இவர்கள் வெள்ளைக்காரர்களிடம் கூலிகளாக வேலை செய்ய மறுத்தனர். அவர்களுடன் முரண்பட்டனர். முக்கியமாக சிங்களவர்களுக்கு ஆங்கிலமும், ஆங்கிலேயர்களுக்கு சிங்களமும் தெரியாதமையினால் மொழிப்பிரச்சினையும் ஏற்பட்டது.

ஏற்கனவே தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்து கோப்பித் தோட்டங்களில் தொழிலாளர்களாக இருந்து வந்த பலர் தேயிலைத் தோட்டங்களில் இணைந்தனர். அப்போது கோப்பி மரங்களில் நோய் பரவவே கோப்பித் தொழிலில் மந்தநிலை நிலவியது. இலங்கையின் தேசாதிபதியாகவிருந்த சேர் ஹெர்க்குயூலெஸ் ஜோர்ஜ் றோபர்ட் ரொபின்ச (1865- 1873) னின் உதவியோடு தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களை வரவழைக்க வெள்ளைக்கார துரைமார்கள் திட்டம் தீட்டினர். இவர்களின் முயற்சிக்கு எற்கனவே இங்கு தென்னிந்தியா விலிருந்து வருகை தந்தோரும் உடந்தையாகினர். துரைமார்களின் திட்டத்துக்கு தேசாதிபதி றோபர்ட் ரொபின்சன் பெரிதும் உதவினார்.
சிவனு லட்சுமணன்
சிவனு லட்சுமணன்
மிகவும் தந்திரவழி வகைகளை கையாண்டு தமிழ் நாட்டிலிருந்து திருச்சி, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து தமிழ் மக்களை பாம்பன் தனுஷ்கோடியினூடே கடல் மார்க்கமாக இலங்கையின் வடபகுதி தலைமன்னாருக்கு அழைத்து வந்து மலையகத்தில் குடியேற்றம் செய்தனர். இவர்கள் கடுமையாக உழைத்தனர். காட்டில் கொடிய மிருகங்களுடன் போராடி அட்டைக் கடிக்கும், கொசுக்கடிக்கும் பயம் கொள்ளாது காடுகளை அழித்து செப்பனிட்டார்கள் எமது முதாதையர்கள். வெள்ளைக்காரர்களால் எமது மூதாதையர்கள் இந்நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருக்காவிட்டால் இன்று மலையகம் எனப்படும் பிரதேசம் காடாகவும் கற்களாலுமே மூடப்பட்டிருக்கும். எமது மூதாதையர்களே காட்டையும், கற்களையும் வெட்டி ஒதுக்கி வீதிகளையும், பாதைகளையும் அமைத்து பாறை நிலத்தில் தேயிலைச் செடிகளை நாட்டி, தேயிலைச் செடிகளால் மலைகளை மூடி அழகு பார்த்தனர்.

180 வருட வரலாற்றைக் கொண்ட இம் மக்களின் துயரங்கள், அவலங்கள், இன்றும் தீர்ந்ததாக இல்லை. இம் மக்களை மலையகத்து அரசியல் தொழிற் சங்கங்கள் இன்றும் வெள்ளைக்கார துரைமார்களை விட மோசமாக ஏமாற்றி வருகிறது. இன்று மலையகத் தோட்டத் தொழிலாளிகளின் வழி நடத்துபவர்களாக அறுபதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் தொழில் திணைக்களத்தில் பதிவாகியுள்ளன.

1939 முதல் 1979 வரை 36 மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொழிற் சங்க போராட்டங்களில் ஈடுபட்டு உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இவர்களின் வரலாறு எத்தனை மலையகத் தலைவர்களுக்குத் தெரியும். 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் மலையகத் தலைவர்களை நாடாளுமன்ற, மாகாணசபை, நகரசபை, பிரதேச சபைகள் மீது ஆசை ஈர்த்துவிட்டது. அதனால் கிடைக்கும் வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் நோக்கமாக உள்ளனரே தவிர தங்களை வளர்த்துவிட்ட மக்கள் மீது எவ்வித அக்கறையும் செலுத்துவதில்லை.

எதிர்காலத்தில் மலையகத் தலைவர்கள் அம் மக்களாலேயே ஓரங்கட்டப்படுவர் என்பது உண்மையாகும். அண்மையில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் இதனையே எடுத்தியம்புகின்றன.

இன்று மலையக அரசியல் தொழிற் சங்கங்களின் செயற்பாடு அம் மக்களின் எழுச்சிக்கு உந்து சக்தியாக அமைய வேண்டும். அந்த நிலைமை இன்று மலையக அரசியல் தொழிற் சங்க செயற்பாடுகளில் இல்லை. இது தொடருமானால் எதிர்வரும் பொதுத் தேர்தல் பலருக்கு அதிர்ச்சித் தோல்வியைத் தரக் கூடியதாக அமையலாம்.

அரசியல் அடக்குமுறைகள், தொழிற்சங்க தலைவர்களின் கெடுபிடிகள், அந்நியப்படுத்தல், எனப் பல அடக்கு முறைகள் இன்றும் இவர்கள் மீது பலவந்தமாக திணிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதலாம் திகதி மேதினம் கொண்டாடப்படுகிறது. இது வரை காலமும் மலையகத்தில் பல போராட்டங்களில் ஈடுபட்டு உயிர் நீத்த 36 தியாகிகளுக்கு எவ்வித மரியாதையையும் மேதினத்தில் வழங்காமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். மே தினத்தன்று மாபெரும் ஊர்வலமும், வெறுமனே கோஷமும், தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதால் எவ்வித பயனும் மக்களை சென்றடையப் போவதில்லை. மலையக மக்களின் உரிமைக்காகப் போராடிய 36 தியாகிகளதும் வாழ்க்கை வரலாறு நூல் வடிவம் பெற வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு அது முக்கியமாகும். மே தினத்தன்று 36 தியாகிகளும் நினைவு கூரப்பட வேண்டும். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட வேண்டும்.

  • கோவிந்தன் முல்லோயா தோட்டம், ஹேவாஹெட்ட, 1939,
  • வேலாயுதம் கந்தளா தோட்டம், புப்புரஸ்ஸ, 1942
  • வேலுசாமி கந்தனா தோட்டம், புப்புரஸ்ஸ, 19
  • வெள்ளையன் மீரியாக்கொட தோட்டம், சாமிமலை. 1950,
  • எட்லின் நோனா, என்கலவல தோட்டம், தெபுவான. 1953,
  • ஆதியப்பன், மல்கொல தோட்டம், நாவலப்பிட்டிய. 1953,
  • வேதன் லின்டல் தோட்டம், நேபொட. 1957,
  • வைத்திலிங்கம், டெவன் பனிய பத்தனை, தலவாக்கலை. 1957,
  • நடேசன் வெறேயர் தோட்டம், இரத்தினபுரி. 1957,
  • ஏப்ரஹாம் சிங்கோ, ரவுன்பங்களாத் தோட்டம், அக்கரப்பத்தனை. 1958,
  • ஐயாவு, பொகவந்தலாவ தோட்டம், பொகவந்தலாவை. 1958,
  • பிரான்சிஸ் பொகவந்தலாவை தோட்டம், பொகவந்தலாவை. 1958,
  •  கொம்பாண்டி, சென் மாக்ரட் தோட்டம், உடபுசல்லாவ. 1958,
  • பொன்னையா சென் மாக்ரட் தோட்டம், உடபுசல்லாவ. 1958,
  • கருமலை, நல்லதண்ணீர் தோட்டம், மஸ்கெலியா. 1959,
  • முத்துசாமி, காலகார, மாதென்ன தோட்டம், எல்கடுவ. 1959,
  • ஜேம்ஸ் சில்வா, கமாவளை தோட்டம், பசறை. 1959,
  • தங்கவேல், முகலாசேனை தோட்டம், இறக்குவானை. 1959,
  • சிதம்பரம், மல்வான தோட்டம், நிட்டம்புவ. 1960,
  • முனியாண்டி, வெத்திலையூர் தோட்டம், எட்டியாந்தோட்ட. 1960,
  • செல்லையா, லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961,
  • ஆராயி, லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961,
  • மாரியப்பன், லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961,
  • நடேசன், லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961,
  • விஜயசேன, எல்வதுரை தோட்டம், இங்கிரியா 1961,
  • சோலை, சின்ன கிலாபோக்கு தோட்டம், மடுல்கல. 1961,
  • அழகன், கந்தநுவர தோட்டம், எல்கடுவ. 1969,
  • ரெங்கசாமி கந்தநுரவ தோட்டம், எல்கடுவ. 1969,
  • இராமையா, சீனாக்கள தோட்டம், பதுளை. 1970,
  • அழகர் சாமி சீனாக்கல தோட்டம், பதுளை. 1970,
  • கந்தையா நாலந்த தோட்டம், மாத்தளை. 1970,
  • பார்வதி நாலந்த தோட்டம், மாத்தளை. 1970,
  • ஆறுமுகன் நாலந்த தோட்டம், மாத்தளை. 1970,
  • இராமசாமி, நாலந்த தோட்டம், மாத்தளை. 1970,
  • லெட்சுமணன் சிவனு யொக்ஸ்போர்ட் தோட்டம் வட்டகொட. 11.05.1977. 
  • பழனிவேல், பல்லேகலத் தோட்டம், கண்டி. 1979.


14-05-2005 இல் தியாகி சிவனு லெட்சுமணின் நினைவு தினத்தையொட்டி தலவாக்கலை மேல் கொத்மலைத் திட்டத்தை கைவிடுமாறு கோரி பல போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தை தலைமைதாங்கி நடத்தியவர் இறுதியில் அதே மின்சார அபிவிருத்தித் திட்டத்தில் உயர் பதவியேற்று வாகனமும் பெற்று சுக போகங்களை அனுபவித்து வருகின்றார்.

கே.பி.பி. புஷ்பராஜா
நன்றி- தினகரன்

மலையக அரசியல் வரலாற்று வளர்ச்சியும் முன்னகர்த்த வேண்டிய பணிகளும் - சி.அ.யோதிலிங்கம்


அ.லோரன்ஸ்
மலையக அரசியலின் வரலாற்று வளர்ச்சியையும் நகர்த்த வேண்டிய பணிகளையும் பற்றி சில கருத்துக்களைக் கூறலாம் என நினைக்கிறேன்.
நான் மலையக சமூகத்தைச் சேர்ந்தவனல்ல. அதற்கு வெளியில் தனது விடுதலைக்காகப் போராடும் வட-கிழக்கு சமூகத்தைச் சேர்ந்தவன். ஆனால் மலையக மக்கள் தொடர்பாக மிகுந்த அக்கறையுடையவன். முடிந்தவரை அவர்கள் தொடர்பான தேடல்களை மேற்கொண்டு வருபவன். வடக்கில் குடியேறிய மலையக மக்கள் மத்தியில் புனர் நிர்மாண பணிகளை மேற்கொண்டவர்களில் ஒருவன். எனினும் மலையக மக்களின் அபிலாஷைகளை அவர்கள் அனுபவித்து வெளிப்படுத்துவது போல ஒரு அகநிலை நின்று ஆக்கத்தினை கொணர முடியாது. எனவே ஒரு புறநிலையாளன் என்ற வகையிலேயே எனது கருத்துக்களை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துக்கள் எப்பொழுதும் முடிந்த முடிவுகளல்ல. விவாதங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் உரியவை. கருத்துக்கள் மோதுகின்ற போதுதான் உண்மைகளை தரிசிக்க முடியும். எனவே என்னுடைய கருத்துக்களையும் விவாதத்திற்கும் கலந்துரையாடல்களுக்கும் எடுத்துக் கொள்ளுமாறும் அதேவேளை தவறுகளை மன்னிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

மலையக மக்கள் வரலாற்று ரீதியாக ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஒரே தடவையில் வர்க்க ஒடுக்குமுறை, இன ஒடுக்கு முறை என்பவற்றை புற ரீதியாக எதிர் நோக்குகின்றனர். அதேவேளை மலையக மக்களில் பெரும்பான்மையினர் சாதி ரீதியான ஒடுக்கு முறை, உள்ளக வர்க்க ஒடுக்கு முறை என்பவற்றிற்கு அக ரீதியாகவும் முகம் கொடுக்கின்றனர். எனவே ஒரே சமயத்தில் இன விடுதலையையும் வர்க்க விடுதலையையும் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதாவது தேச அரசியலை முன்னெடுக்க வேண்டிய அவர்கள் அதே தருணத்தில் சமூக மாற்றத்திற்கான அரசியலையும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒரே நேரத்தில் புற ரீதியான ஒடுக்கு முறைகளுக்கும் அக ரீதியான ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக போராடுகின்ற போது போராட்ட தந்திரோபாயங்களில் அதிக கவனம் எடுக்க வேண்டியது தேவையாயிருக்கின்றது.

ஆனால் ஒரு தேசப் போராட்டம் என்பது அந்தத் தேசம் புறநிலையிலிருந்து வருகின்ற ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமாகும். இதனால் வர்க்க, சாதி, பிரதேச நிலைகள் கடந்து தேசத்தின் அனைத்துப் பிரிவினரையும் இணைக்க வேண்டிய கட்டாயத் தேவை இருக்கின்றது. அதுவும் சிங்கள தேசத்தினால் முற்றிலும் சூழப்பட்ட ஒரு தேசம் வெற்றியடைவதற்கு தனது முழு ஐக்கிய பலத்தையும் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது.

எனது இந்த உரை அக ஒடுக்குமுறை பற்றி அதிக கவனத்தினை குவிக்கவில்லை. மாறாக புற ரீதியான ஒடுக்குமுறையான இன ஒடுக்கு முறையிலேயே கவனம் செலுத்துகின்றது.

இன ஒடுக்கு முறை தொடர்பான மலையகத்தின் இன்றைய அரசியல் நிலையையும், எதிர்கால பணிகளையும் பற்றி முழுமையாக புரிந்துக் கொள்வதற்கு மலையக அரசியலின் வரலாற்று வளர்ச்சி, அது இன்று வந்தடைந்துள்ள கட்டம் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமானதாகும்.

மலையக மக்கள் சுமார் 87 வருடங்களாக நீண்ட போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர். அவர்கள் அமைப்பு ரீதியாக போராட தயாரான ஆண்டாக 1919ம் ஆண்டினைக் குறிப்பிடலாம். இந்த ஆண்டே சேர். பொன்னம்பலம் அருணாசலமும், பெரிசுந்தரமும் இணைந்து தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் என்ற அமைப்பினை உருவாக்கி மலையக மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்காக குரல் எழுப்பியிருந்தனர். 1919ம் ஆண்டிலிருந்து 1935 வரை மலையக அரசியலின் முதலாவது கட்டம் எனக் கூறலாம். அன்றைய கால கட்டத்தில் கொடூர ஒடுக்கு முறையாக இருந்த துண்டு முறையினை ஒழிப்பதற்காக இவர்கள் குரல் கொடுத்தார்கள் எனக் கூறப்படுகின்றது.

ஆனாலும் இக்கால கட்டத்தினை நகர்த்திய பெருமை நடேசையரையே சாரும். A.E குணசிங்கவின் தொழிற் சங்கத்தில் உபதலைவராக இருந்த அவர் குணசிங்கவின் இனவாத நடவடிக்கைகளால் அதிலிருந்து விலகி தோட்டத் தொழிலாளர்களுக்கென தனியான தொழிற் சங்கமாக இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்கி செயற்பட்டார். டொனமூரின் அரசாங்க சபையில் ஹட்டன் தொகுதி உறுப்பினராக 1936 தொடக்கம் 1947 வரை கடமையாற்றியும் இருந்தார். தோட்டங்களுக்கு வெளியார் செல்லக் கூடாது என்ற கட்டளையும் மீறிச் சென்று தொழிலாளர்களுக்கு விழிப்பூட்டினார்.

1935 தொடக்கம் 1947 வரை மலையக அரசியலின் இரண்டாவது காலகட்டம் எனக் கூறலாம். இக்காலக்கட்டம் இடதுசாரிக் கட்சிகள் மலையக மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்திய காலகட்டமாகும். இடதுசாரிகளே மலையகத்தில் வேலை நிறுத்தம் உட்பட பல போராட்டங்களை அறிமுகப்படுத்தியவர்களாவர். இவர்களால் நடாத்தப்பட்ட முல்லோயாப் போராட்டம் புகழ் பூத்த ஒன்றாகும். பிரஸ் கேடில் சம்பவமும் மலையக அரசியலை மையமாக வைத்தே நிகழ்ந்திருக்கின்றது. மலையகத்தின் முதல் போராளி கோவிந்தனும் முல்லோயாப் போராட்டத்திலேயே மரணமானார்.

1940 வரை மலையக அரசியலில் இன ஒடுக்கு முறை பெரியளவில் வளர்ச்சியடைந்திருக்கவில்லை. வர்க்க ஒடுக்கு முறையே பிரதானமாகத் தொழிற்பட்டது. இதனால் நடேசையரும், இடதுசாரிகளும் வர்க்க ஒடுக்கு முறைகளிலேயே அதிக கவனம் செலுத்தியிருந்தனர். ஆட்சி அதிகாரம் ஆங்கிலேயர் கைகளில் இருந்ததினால் இன ஒடுக்கு முறை பெரியளவிற்கு எழுச்சியடையவில்லை. ஆனாலும் கொழும்பு நகரத்தில் இந்திய வம்சாவழியினருக்கு எதிரான இனவாதம் 1920களிலேயே ஆரம்பித்து விட்டது.
அநகாரிக தர்மபால இந்திய வர்த்தகர்களுக்கு எதிரான இனவாதத்தினைத் தொடக்கி வைத்தார். A.E குணசிங்க கொழும்பில் வாழும் இந்திய தொழிலாளர்களுக்கு எதிரான இனவாதத்தினைத் தொடக்கி வைத்தார். அரச அதிகாரம் அரசாங்கத் தலைவர்களிடம் இல்லாததினால் அது பெரியளவிற்கு நடைமுறைச் செயற்பாட்டில் எழுச்சியடையவில்லை. எனினும் இந்தப் போக்கு நீண்டகாலம் நீடிக்கவில்லை.

1931இல் அறிமுகப்படுத்தப்பட்ட டொனமூர் அரசியல் யாப்புடன் இனவாத சக்திகள் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு தமது செயற்பாட்டினை முடுக்கிவிட்டனர். தமக்கு கிடைத்த அரைகுறை அதிகாரத்தை வைத்துக் கொண்டே நகரத்தில் பணியாற்றிய இந்திய வம்சாவழி அரசாங்க உத்தியோகத்தர்கள் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போன்றோரை பதவியிலிருந்து நீக்கினர். இந்நிலையில் இவற்றுக்கு முகம் கொடுப்பதற்காகத்தான் நேருவின் வழிகாட்டலில் இலங்கை-இந்தியர் காங்கிரஸ் 1939இல் உருவாக்கப்பட்டது. 1940இல் இதனுடைய தொழிற் சங்கம் மலையகத்தில் பணியாற்ற ஆரம்பித்தது.

இந்திய வம்சாவழியினருக்கு எதிரான இனவாதம் கொழும்பில் ஆரம்பித்தாலும் இக்காலத்தில் மலையகத்தில் முற்று முழுதாக நடைபெறவில்லையெனக் கூற முடியாது. 1937ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட உள்ளுராட்சிச் சபைச் சட்டம் இதற்கு நல்ல உதாரணமாகும். பண்டாரநாயக்கா உள்ளுராட்சி அமைச்சராக இருந்த போது கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தின் மூலம் உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை மலையக மக்களுக்கு இல்லாமற் செய்யப்பட்டது. இதைவிட அரசாங்க சபைத் தேர்தல்களில் கூட மலையக மக்களின் வாக்கு வீதத்தினைக் குறைப்பதற்காக வாக்குரிமைச் சட்டத்தில் பல கட்டுப்பாடுகள் 1936 தேர்தலின் போது கொண்டு வரப்பட்டன.

மூன்றாவது காலகட்டம் 1941ஆம் ஆண்டிலிருந்து 1977ம் ஆண்டுவரை வருகின்றது. 1947 இன் சோல்பரி அரசியல் யாப்பு அதன் பின்னர் 1948ல் வழங்கப்பட்ட சுதந்திரம் என்பனவற்றின் மூலம் இலங்கையின் ஆட்சி அதிகாரம் முழுமையாக சிங்களத் தலைமைகளின் கைகளுக்குச் சென்றது. ஆங்கிலேயர்கள் இலங்கைத் தீவின் பன்முக சமூகத் தன்மை கவனத்திலெடுக்காமல் ஒற்றையாட்சி அரசியலை அறிமுகப்படுத்திவிட்டுச் சென்றனர். பல்வேறு இனங்களும் நியாயமான வகையில் அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் தன்மை அதிகார கட்டமைப்பில் இருக்கவில்லை.

சிங்கள தலைமை தென் இலங்கையில் மலையக மக்களின் அரசியல் அடையாளத்தையே இல்லாமல் செய்யும் வகையில் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. இரு பிரஜாவுரிமை சட்டங்களின் மூலமும் வாக்குரிமைச் சட்டத்தின் மூலமும் மலையக மக்களின் அரசியல் அடையாளத்தை இல்லாமல் செய்தது. மலையக மக்கள் பலவந்தமாக தொழிற்சங்க அரசியலுக்குள் மட்டும் குறுக்கப்பட்டனர். மறுபக்கத்தில் அரசியல் அதிகாரத்தை முழுமையாக சிங்கள மயமாக்கும் முயற்சி நடைபெற்றது.

1950 இல் தேசியக் கொடி, 1956 இல் தனிச் சிங்கள சட்டம் என்பன சிங்கள மயமாக்கல் செயற்பாட்டில் பிரதான விடயங்களாக இருந்தன. ஏனைய இனங்களுக்கு பாதுகாப்பாக சோல்பரி யாப்பில் காணப்பட்ட 29வது பிரிவு, கோமறைக் கழகம் என்பன மலையக மக்கள் விடயத்தில் சிறிதளவு பாதுகாப்பினைக் கூட கொடுக்கவில்லை. பிரஜா உரிமைப் பிரச்சினையில் உலக நீதிக்குப் புகழ்பெற்ற கோமறைக் கழகமும் கையை விரித்திருந்தது.

இந்த அரசியல் அடையாளப் பறிப்பின் உச்சநிலை அம்சமாகவே 1964 இல் கைச்சாத்திடப்பட்ட ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் அமைந்தது. மலையக மக்களின் சம்மதமில்லாமலேயே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அரைவாசி இந்திய வம்சாவழி மக்கள் நாடு கடத்தப்பட்டனர். 1974ல் கைசாத்திடப்பட்ட ஸ்ரீமா-இந்திரா ஒப்பந்தமும் இந்த நாடுகடத்தலில் பங்காற்றியிருந்தது.

ஏற்கனவே டொனமூர் காலத்தில் நகர்புறங்களில் பணியாற்றியவர்கள் வேலை நீக்கப்பட்டதால் சுயமாக வெளியேறினர். பின்னர் வந்த ஒப்பந்தத்தின் மூலம் பலவந்தமாக நாடுகடத்தப்பட்டனர். இந்த இரு வகை வெளியேற்றங்களினால் 1940களில் இரண்டாவது பெரிய இனமாக 13வீதமாக இருந்த இந்திய வம்சாவழியினர் 1981இல் 5.5 வீதமாக மாறினர்.

சுதந்திரம் கிடைத்தவுடனேயே மலையக மக்களின் அரசியல் அடையாளத்தை பறித்த ஆட்சியாளர்கள் 1972இன் பின்னர் மலையக மக்களின் கூட்டிருப்பையும் இல்லாமல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  இதற்காக மேற்கொண்ட பிரதான நடவடிக்கையே மண்பறிப்பாகும். 1972 இன் காணி சீர்திருத்தச் சட்டம், 1975 இன் காணி உச்சவரம்புச் சட்டம் என்பன மலையக மக்களை அவர்கள் வளமாக்கிய நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தின. அத் தோட்டங்கள், பெருந்தோட்டத் துறையுடன் எந்தவித தொடர்புமற்ற சிங்கள கிராமவாசிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இதற்கு எதிரான போராட்டத்திலேயே டெவன் தோட்டப் போராளி சிவனு லட்சுமணன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இலங்கை - இந்திய காங்கிரசும் பின்னர் பெயர் மாற்றப்பட்ட இலங்கைத் தொழிலாளர் கங்கிரசும் இக்கால கட்டத்தினை நகர்த்திய முக்கிய அமைப்பாக இருந்தது. தொண்டமான் பிரதான தலைவராக விளங்கினார். ஏனைய பல தொழில் சங்கங்கள் தொழிற்பட்ட போதும் இன அரசியலை நகர்த்திய அமைப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையே குறிப்பிடலாம். மலையக ஆய்வாளர் காதர் இலங்கை - இந்திய காங்கிரசினையே மலையகத்தின் முதலாவது தேசிய இயக்கமாகக் குறிப்பிடுகின்றார். 1947 தேர்தலில் இவ்வமைப்பின் சார்பில் 6 பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

நான்காவது கால கட்டம் 1977 தொடக்கம் 2000 வரையிலான காலகட்டமாகும். இக்கால கட்டத்தில் மலையக மக்களின் நீண்ட போராட்டத்தின் வாயிலாக மலையக மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைத்தது. 1977ம் ஆண்டு தேர்தலில் நுவரெலியா - மஸ்கெலியா தொகுதியிலிருந்து மூன்றாவது அங்கத்தவராக தொண்டமான் தெரிவு செய்யப்பட்டார்.

அதேவேளை இக்கால கட்டத்தில்தான் வட-கிழக்கில் தனிநாட்டுப் போராட்டமும் முனைப்புடன் தொழிற்படத் தொடங்கியது. தமிழர் விடுதலைக் கூட்டணி 1977 தேர்தலில் தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு என பிரச்சாரம் செய்து போட்டியிட்டு வட-கிழக்கிலுள்ள 19 தமிழ்த் தேர்தல் தொகுதிகளில் 18இனைக் கைப்பற்றியது. அதேவேளை 1977, 1983 காலங்களில் இரு இன அழிப்பு சம்பவங்களும் நடைபெற்றன. இதில் வட-கிழக்குத் தமிழர்கள் மட்டுமல்ல. மலையகத் தமிழர்களும் அழிக்கப்பட்டனர். 1983ன் பின்னர் வட-கிழக்கில் பாராளுமன்ற அரசியலுக்கு முதன்மையான இடம் இல்லாமல் போனது. விடுதலை இயக்கங்கள் முதன்மையான இடத்தினைப் பெற்றுக் கொண்டன. மலையக இளைஞர்கள் பலரும் இயக்கங்களில் இணைந்து கொண்டனர்.

வட-கிழக்கு நிலைமைகள் மலையகத்திலும் விழப்புணர்வுகளைக் கொண்டு வரத் தொடங்கின. மலையகம், மலையகத் தமிழர் என்ற எண்ணக்கருக்களும் வளர்ச்சியடையத் தொடங்கின. மலையக விடுதலையை மையமாக வைத்த தீவிரவாத இயக்கங்களும் மலையகத்தில் தோன்றின. பாராளுமன்ற அரசியலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் போட்டிப் போடக் கூடியளவிற்கு மலையக மக்கள் முன்னணியும் எழுச்சியடைந்தது.

1978ல் மலையக அரசியல் வரலாற்றில் மலையக மக்கள் முன்னணியின் முக்கியத்துவம் தொழிற்சங்க அரசியலை இன அரசியல் தளத்திற்கு கொண்டு வந்தமையே ஆகும். 1978ல் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்திற்கான மலையகப் பிரதிநிதிகளையும் அதிகரிக்கச் செய்தது.

மலையக மக்களையும் பாராளுமன்ற அரசியலில் ஈடுபடச் செய்தமை, வடகிழக்குப் போராட்டத்தில் மலையக இளைஞர்களும் இணைந்து விடுவார்களோ என அஞ்சியமை போன்ற காரணங்கள் மலையக மக்களின் ஒடுக்கு முறைகளில் சிறிய நெகிழ்வுகளை ஏற்படுத்தின. இதன் காரணமாக நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. அம்பேகமுவ, நுவரேலியா பிரதேச சபைகள் மலையக மக்களின் தலைமையில் விடப்பட்டன. கிராம சேவகர், ஆசிரியர்கள் உத்தியோகங்கள் வழங்கப்பட்டன. பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்டம் மலையக மக்களின் கூட்டிருப்பினை வன்மையாக வெளிப்படுத்தும் மாவட்டமாக வளரத் தொடங்கியது. சிறிபாத கல்விக் கல்லூரி மலையக ஆசிரிய உருவாக்கத்திலும் பெரிய பங்கினை ஆற்றத் தொடங்கியது. ஆசிரிய சமூகம் மலையக சமூகத்தில் முக்கிய சமூக சக்தியாக மாறத் தொடங்கியது.

2000க்குப் பின்னர் மலையக அரசியலின் ஐந்தாவது கட்டம் வருகின்றது. இக்கட்டத்தில் வட-கிழக்குப் போராட்டம் அரசியல் தீர்வினை நோக்கி நகரும் தறுவாயில் இருக்கின்றது. முஸ்லீம் மக்கள் தங்கள் அடையாளத்தை நிலைநிறுத்தி இனப்பிரச்சினைத் தீர்வின் போது தங்களுக்கான தீர்வினையும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் மலையகத்தைப் பொறுத்தவரை மலையக அரசியற் தலைமைகள் இனப்பிரச்சினைத் தீர்வின்போது மலையக மக்களின் தீர்வினையும் வற்புறுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பதாகத் தெரியவில்லை. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இந்த விடயங்களை முன்னெடுப்பதற்கு மலையகத்தில் ஒரு எதிர்கட்சி அரசியலையும் நகர்த்துவதற்கு தயாராக இருக்க வேண்டும். அரசாங்கத்தில் இணைந்திருப்பதால் எதிர்கட்சி அரசியலை நடாத்தக் கூடாது என்றில்லை. ஏற்கனவே தொண்டமானும் முஸ்லீம் காங்கிரஸ் மறைந்த தலைவர் அஸ்ரப்பும் அவ்வாறான ஒரு அரசியலை நடத்தியிருக்கின்றனர்.

மறுபக்கத்தில் இனவாத ஒடுக்குமுறை மலையகத்தில் தற்போது புது வடிவத்தினை எடுக்கத் தொடங்கியுள்ளது. மலையகத்தின் உயிர் மையமாக இருக்கின்ற நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்களின் நிலத் தொடர்ச்சியை சிதைக்கும் வகையில் மேல் கொத்மலைத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது இன்னோர் வகை மண்பறிப்பாகும். இது மலையக மக்களின் கூட்டிருப்பின் ஆதாரத்தையே பலவீனப்படுத்தக் கூடியது. இவ்விவகாரத்தில் மலையக மக்களின் கைகள் பலவீனமடைந்து வருவது ஆரோக்கியமான ஒன்றாக எனக்குத் தெரியவில்லை.

வட கிழக்கில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் இந்த நீர்ப்பாசனத் திட்டங்களினால் ஏற்பட்ட சிதைவுகளை சரி செய்ய முடியாமல் தமிழர் தாயகம் இன்றும் திணறிக் கொண்டிருக்கிறது. அந்த நிலை மலையகத்தின் உயிர் மையமாக இருக்கும் நுவரெலியா மாவட்டத்திற்கும் வந்துவிடக் கூடாது என்பதில் மலையகத் தேசிய சக்திகள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அதேவேளை மலையக மக்கள் ஐதாக இருக்கின்ற இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை மாவட்டங்களில் மலையக மக்களின் இருப்புக்கான அச்சுறுத்தல்கள் தொடர்ந்துக் கொண்டேயிருக்கின்றன. நுவரேலியா மாவட்டத்தைப் பாதுகாப்பதன் மூலமே ஐதாக வாழ்கின்ற மக்களின் இருப்பினைப் பாதுகாக்க முடியும் அல்லது மாற்று நடவடிக்கை எதையாவது எடுக்க முடியும்.

இதுவரை மலையக மக்களின் வரலாற்று வளர்ச்சியைப் பார்த்தோம் இந்த வளர்ச்சிகளுக்கூடாக மலையக மக்கள் புதிய கட்டம் ஒன்றுக்கு வந்திருக்கின்றனர். தங்களுக்கான தேசிய அடையாளத்தை வரையறுப்பதும் அதன் வழி தேசிய அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான மார்க்கங்களை நாடுவதுமே இக்கட்டத்தில் அவர்களுக்கு முன்னால் உள்ள பணிகளாகும்.

இன அரசியல் பொதுவாக மூன்று கட்டங்களினூடாக வளர்வதே வழக்கமானதாகும். இன அரசியலை உருவாக்கும் கட்டம், இன அரசியலை தேசிய அரசியலாக வளர்க்கும் கட்டம், அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் கட்டம் என்பனவே அவ் மூன்று கட்டங்களுமாகும்.

மலையக அரசியல் தற்போது இரண்டாவது கட்டத்தில் உள்ளது. ஆனால் இரண்டாவது கட்டம் இன்னமும் பூர்த்தியாக்கப்படவில்லை. நான் ஏற்கனவே கூறியது போல தேசிய அடையாளத்தை வரையறுப்பது இக்கட்டத்தில் முக்கியமானதாகும். தேசிய அடையாளத்திற்கான கோரிக்கைகளை தெளிவாக வரையறுத்து அதனைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் போதே தேசிய அடையாளம் தெளிவாக வரையறுக்கப்படும். இதற்கான பிரதான வழி எதிர்க்கட்சி அரசியலை தொடர்ச்சியாக முன்னெடுப்பதேயாகும்.

மலையக முன்னணி சக்திகள் முதலில் தமது பிரதேசத்தில் மக்களை அறிவூட்டி அரசியல் மயப்படுத்தி ஒரு சக்தியாக மாற்றிக் கொள்ள வேண்டும். மலையக மக்களின் தொழிலாளர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், புலமையாளர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் ஆகிய ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் தங்கள் தளங்களில் நின்று கொண்டு மலையகத் தேசியத்திற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

மலையக மக்களை ஒரு சக்தியாக உருவாக்கி கொண்டபின் துணை சக்திகளையும் நட்புச் சக்திகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். மலையக மக்களுக்கு பிரதான துணை சக்தியாக இருக்கப் போகின்றவர்கள் வட-கிழக்கு மக்களே. வட - கிழக்கின் புதிய தலைமுறை மலையக மக்களை மிகவும் அக்கறையோடு நோக்குகின்றது. ஒரு தரப்பினுடைய அரசியல் அபிலாஷைகளை மற்றைய தரப்பு அங்கீகரித்து பரஸ்பர ஒத்துழைப்பினை நல்கின்ற நிலையினை உருவாக்குதல் வேண்டும். வட - கிழக்கில் நீட்சியாக இருக்கின்ற புலம் பெயர் மக்கள் மலையக மக்களின் அபிலாஷைகளை சர்வதேச மயப்படுத்தும் பணியில் பயனுள்ள பங்கினை ஆற்றமுடியும்.

இரண்டாவது துணை சக்தி தமிழக மக்கள். இவர்களுடன் உயிர்த்துடிப்பான தொடர்புகளை ஏற்படுத்த மலையக தேசிய சக்திகள் முன்வர வேண்டும். ஏற்கனவே நாடு கடத்தப்பட்டு இந்தியாவில் வாழும் மலையக வம்சாவழியினர் இது விடயத்தில் பயனுள்ள பங்கினையாற்ற முடியும்.

மூன்றாவது துணைச் சக்தி உலகெங்கும் பரந்து வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்கள். இன்று தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், மொரிசீயஸ், பிஜித் தீவுகள் என பல இடங்களில் இந்தியா வம்சாவழித் தமிழர்கள் வாழ்கின்றனர். இதைவிட பல கல்விமான்கள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் வாழ்கின்றனர். அவர்களுடனும் உயிர்த் துடிப்புள்ள தொடர்புகளை பேணுவது சர்வதேச மயப்படுத்துவதற்கும், பொருளாதார உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.

இவர்களை விட சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளும், உலகெங்கும் வாழும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் மலையக மக்களுக்கு நல்ல நட்பு சக்திகளாக இருப்பர்.

இவ்வாறு பரந்தளவில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போதே மலையக அரசியலை காத்திரமான நிலைக்கு கொண்டு வர முடியும். இவையெல்லாவற்றிற்கும் அடித்தளமாக இருப்பது முதலில் மலையக மக்கள் தங்களை சக்தியாக உருவாக்கிக் கொள்வதாகும்.

முடிவுரை
இறுதியாக மலையக அரசியல் தொடர்பாக அடிப்படையான சில கருத்துக்களை நான் முன்வைத்திருக்கின்றேன். மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை மலையக மக்களே தீர்மானிக்க வேண்டும். ஆனால் இன ஒடுக்கு முறைக்கு உள்ளான ஒரு சமூகம் ஏதாவது ஒரு வகையில் அரச அதிகார கட்டமைப்பில் சமூகமாக பங்கு பெறாமல் அச்சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பது பொதுவான உண்மையாகும். அதிகார வடிவங்களை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அச்சமூகங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம்.

மற்றைய சமூகங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஒவ்வொரு சமூகமும் தமக்கான அதிகார வடிவங்களை தீர்மானித்துக் கொள்வதற்கு அவற்றிற்கு மறுக்க முடியாத உரிமை உண்டு.
எனவே அந்த உரிமை மலையக மக்களுக்கும் உண்டு என்பதை எவரும் நிராகரிக்க முடியாது.

(அ.லோரன்ஸ் எழுதிய மலையகம் - சமகால அரசியல் - அரசியல் தீர்வு என்ற நூல் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்றபோது ஆற்றிய உரையின் தொகுப்பு)

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் தொகை குறைகிறது : நுவரெலியாவில் கூடுகிறது



கடந்த வருடம் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பதிவுகளின்படி, வன்னி தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகை ஆறிலிருந்து ஐந்தாகக் குறைக்கப்பட்டிருப்பதாக வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் கே.எஸ்.கருணாநிதி தெரிவித்துள்ளார். 

2001 ஆம் ஆண்டு இருந்த வாக்காளர்களிலும் பார்க்க 2012 ஆம் ஆண்டு இந்தத் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் தொகை 2213 வாக்காளர்களினால் குறைவடைந்திருப்பதையடுத்தே இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டு பதிவின்படி, 2 லட்சத்து, 21 ஆயிரத்து, 409 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. 2012 ஆம் ஆண்டு பதிவுகளின்போது, இது 2 லட்சத்து, 19 ஆயிரத்து, 196 ஆகக் குறைந்துள்ளது. இதனால் இந்த மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆறில் இருந்து ஐந்தாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, முந்திய வருடத்திலும் பார்க்க வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால் அந்தத் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் ஒன்று அதிகமாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருககின்றனர். 

வன்னி தேர்தல் மாவட்டத்தில் வவுனியாவில் கடந்த வருடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது வாக்காளர்களின் எண்ணிககை குறைவடைந்துள்ள அதேநேரம், மன்னார் மாவட்டத்தில் சிறு அளவில் அதிகரித்திருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 

வவுனியாவில் குடியிருந்த பலர், வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து சென்ற காரணத்தினால் இவ்வாறாக வாக்காளர் எண்ணிக்கை குறைவடைந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

மலையக பெண்களும் அரசியலும் - பொ. லோகேஸ்வரி



இம் மாதம் மார்ச் 8ம் திகதியானது பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட தினமாக உலகம் முழுவதும் பெண்கள் தமது விடுதலைக்காகவும் ஆணாதிக்கத்திற்கு எதிராகவும் போராடிய தினமாகும் இப்போராட்டத்திற்கான வெற்றிகள் மிகக்குறைவாகவே கிடைத்துள்ளது.

ஏனெனில் வளர்ந்த நாடுகளும் சரி வளர்முக நாடுகளும் சரி பெண்கள் தீர்மானம் எடுக்கும் இடத்திற்கு வருவதை அச்சமூகங்கள் தடுக்கின்றனர் அல்லது தடையாக இருக்கின்றனர் என்றே கூறவேண்டும். இது இவ்வாறாக இருக்க எமது நாட்டுப் பெண்களை சற்று நோக்குவோம்.

இன்றும் பெண் செயற்பாட்டாளர்கள் இலங்கையில் அரசியலில் 30மூ இட ஓதுக்கீடு தேவை என்று அல்லது சட்டமாக்கப்பட வேண்டுமென்று குரல் கொடுத்து வருகின்றனர். ஏனெனில் எமது அண்மைய நாடுகளான இந்தியா, நேபாலம் வங்காளதேசம், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் சட்டமாக்கப்பட்டுள்ளது. இவையெல்லா நாடுகளும் இலங்கையோடு ஓப்பிடுகையில் கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய நாடுகளாக காணப்பகின்றன. ஆனால் அங்கு பெண்களுக்கான சமத்துவம், அங்கீகாரம் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அந்த நாட்டு பெண்கள் தமக்கு அரசியலில் 50மூ ஒதுக்கீடு தேவையென குரல் கொடுத்து வருகின்றனர். 

இலங்கை கல்வியறிவில் 93மூ காணப்பட்டாலும் பெண்களுக்கான அரசில் பிரதிநிதித்துவத்துக்கான ஓதுக்கிடு இன்று வரையுமே எட்டாக்கணியாக காணப்படுகின்றது. ஆனால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு அல்லது மொத்த வரவு செலவு திட்டத்திற்கு வருமானத்தை இலங்கை சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் பெண்களும், தோட்டத் தொழிலாள பெண்களும், புலம் பெயர் தொழிலாள பெண்களுமே 50மூற்கும் அதிகமான உழைப்பினை அல்லது வருமானத்தினை வழங்குகின்றனர். ஆனால் இலங்கை வரவு செலவு திட்டத்தில் இப்பெண்களின் அபிவிருத்திக்கான ஒதுக்கீடு என்ன? இவ்வாறு உழைக்கும் பெண்களின் வருமானத்திலேயே அரசியலில் ஈடுப்பட்டுள்ள அனைத்து ஆண் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் சம்பளம் பெறுகின்றனர். பெண்கள் உழைப்பில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு தன்மானம் இருக்கின்றதா? இல்லையா? என எண்ணத்தோன்றுகின்றது.   

இவ்வாறான பிரச்சினைகள் இருப்பினும் சில பெண்கள் அரசியலில் ஈடுப்படுகின்றனர். அவர்களுக்கு ஆணாதிக்க தலைமைகளினால் ஏற்படும் தடைகளும் பிரச்சினைகளும் எண்ணிலடக்காதவை. அரசியல் கட்சிகளில் பெண்கள் எவ்வளவு உழைத்தாலும் அக்கட்சிகளின் இரண்டாம் நிலைப் பதவிகளுக்கு கூட எந்த அரசியல் கட்சியிலும் வழங்கப்படவில்லை. இதற்கு எமது சமூகத்தில் பெண்கள் சம்பந்தமான பால் நிலை சார் மனபாங்கும், பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுப்படுவதற்கான, தடைகள் இலங்கை அரசியல் ஆணாதிக்க அதிகார தன்மைகொண்ட கட்சி அமைப்புக்கள் போன்ற பிரதான விடயங்கள் பெண்கள் அரசியலில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கோ தலைமைத்துவ பொறுப்பை ஏற்பதற்கோ தடைக்கற்களாக காலம் காலமாக தொடர்கின்றன. 

இனி நமது பார்வையை மலையக பக்கம் திருப்பினால் தேசிய அரசியலிலும் சரி பிரதேச அரசியலிலும் சரி 'இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?' என்ற போக்கோடு மக்கள் காணப்படுகின்றனர். மலையகத்தில் அரசியல் தொழிற்சங்களில் பெண் தலைமைத்துவமோ அல்லது அரசியல் கட்சிகளில் பெண் வேட்பாளர்களின் பிரதிநிதித்துவமோ மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு அல்லது தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்ளவோ அவர்கள் வாழும் சூழல், கலாசாரம், ஆணாதிக்கம், வாழ்வாதாரம் போன்ற அனைத்துமே பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு மட்டுமன்றி அதைப்பற்றி சிந்திப்பதற்கு சுதந்திரமோ உரிமையோ அற்று காணப்படுகின்றனர்.

ஒரு நாட்டில் மக்களுக்கான அடிப்படை உரிமை அரசியல் உரிமையாகும். அதில் பிரதானமானது வாக்குரிமையாகும். ஆனால் மலையக மக்களைப் பொறுத்தவரை ஆயிரக்கணக்கானவர்களுக்கு அவ்வுரிமையை அனுபவிக்ககூடிய சந்தர்ப்பம் அல்லது சூழ்நிலை இல்லாதவர்களாக காணப்படுகின்றனர். தோட்டத் தலைவர்கள் யாருக்கு வாக்களிக் சொல்கின்றார்களோ அவர்களுக்கே பெண்கள் வாக்களிக்க வேண்டும். பெண்கள் தாம் விரும்பும் ஒருவரை தெரிவுசெய்வதற்கு அல்லது வாக்களிப்பதற்கு ஆணாதிக்க அரசியல் கலாசார கட்டமைப்பு தடைவிதிக்கின்றது. மலையக பெண்கள், அரசியல் என்பது ஆண்களுக்குரியது என்ற மரபு வழி மனபாங்குடனேயே இன்றும் காணப்படுகின்றனர். மற்றும் அடிப்படை ஆவணங்கள் பிரச்சினையால் வாக்குபதிவு, தேர்தல் நடக்கும் போது தம்மை உறுதிப்படுத்துவதற்கான அடையாள அட்டை அல்லது வேறு ஆவணங்கள் இன்மையும் அவர்கள் வாக்களிப்பதற்கும் அல்லது அவர்களது வாக்குரிமை மீறப்படுவதற்கும் சந்தர்ப்பங்களாக அமைகின்றது. இவ்விடயத்தில் மலையக அரசியல்வாதிளோ, தொழிற்சங்கவாதிகளோ அக்கறைக் காட்டவதாக தென்ப்படவில்லை.

மலையக தோட்டத் தொழிலாளர்களிலும் 50மூற்கு மேற்பட்டவர்கள் பெண்களாக இருக்கின்றனர். வாக்காளர் தொகையிலும் 50மூற்கு மேற்பட்டவர்கள் பெண்களே. மேலதிகமான பெண்களின் வாக்குகளைப் பெற்று அரசியலுக்கு வரும் அரசியல்வாதிகள் தமக்கு வாக்களித்த பெண்களின் அபிவிருத்திபற்றியோ உரிமைகள் பற்றியோ எவ்வித கரிசனையும் காட்டுவதில்லை. 

பெற்றோர்களேஇ மலையகப் பெண்களின் அரசியல் தலைமைத்துவத்திற்கு தடையாக விளங்குகின்றனர். பெற்றோர்கள் தமது குழந்தைகளை வளர்க்கும் போது ஆண் குழந்தைகளுக்கு வழங்கும் சுதந்திரங்களை பெண்களுக்கு வழங்குவதில்லை. மரபுகள், மூடநம்பிக்கைகள் என்பவற்றை காரணம் காட்டி ஒரு பெட்டிப்பாம்மபாகவே வளர்த்தெடுக்கின்றனர். காலங்காலமாக திருமணமான பெண்கள் தனது கணவனுக்கு அடிபணிபவர்களாக இருப்பதற்கு பழக்கியுள்ளனர்.  இத்தகைய நிலையில் இருந்து விடுப்பட்டு மலையக பெண்கள் அரசியல் தலைமைத்துவத்தை பெற வேண்டும் எனில் ஒவ்வொரு பெற்றோர்களும் சிறு வயதுமுதற்கொண்டு தமது பெண்குழந்தைகளை நல்ல தலைமத்துவப்பண்புடையவர்களாக, கல்வியறிவுடையவர்களாக, துணிவுடையவர்களாக மற்றும் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் திறனுடையவர்களாக வளர்க்க வேண்டும்.

மலையக் பெண்கள் வாய்மூடி மௌனிகளாக இருந்தது போதும். மூடநம்பிக்கைகளை தாழ்வு மனபான்மையை தகர்த்தெரிந்து மலையகத்தில் ஆற்றல் உள்ள பெண்கள் இருக்கின்றனர் என்பதை நாம் ஏனைய சமூகத்திற்கும் மலையக அரசியல்வாதிகளுக்கம் உணர்த்த வேண்டும். நமது உழைப்பில் தம்மை வளர்த்துக் கொண்டிருக்கும் ஆணாதிக்க அரசியல் போக்கை முறியடிக்க வேண்டும். பெண்கள் அரசியலுக்கு வந்தால் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலை ஏற்படுத்துவதற்கும் மலையக தோட்ட தொழில் செய்யும் பெண்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறவும் அவர்களின் சுகாதாரம் தேசிய நீரோட்டத்துடன் இணைக்கப்படுவதற்கு சக்தியும், ஆற்றலும், அறிவும், ஆர்வமும் நல்ல தலைமைத்துவ பண்புகளும் இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். 

ஏனெனில் மலையகம் இன்று மாலுமி இல்லாத கப்பல் போன்று இருக்கின்றது. அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் எண்ணிலடங்காத அளவிற்கு உருவாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றுக்கிடையில் பிரிவுகளும் பிரச்சினைகளும் யார் பெரியவர் என்ற ஆணவமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. தமக்கு வாக்களித்த மக்களை நட்டாற்றில் விட்டு தாம் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் பணத்திற்கும் விலை போய்க்கொண்டிருக்கின்றனர். எனவே திராணிபிரக்ஞை உள்ள தலைமைத்துவத்தை உருவாக்கவதற்கும் மலையக பெண்களின் வாக்கு பெண்களுக்கே என்ற தூரநோக்கோடு செயற்பட ஒவ்வொரு பெண்ணும் சிந்திக்க வேண்டும்.

பெண்கள் அரசியலில் தலைமைத்துவத்தினை பெறுவதென்பது இலகுவான ஒரு விடயயம் அல்ல. அதனைப் படிபடியாயகவே ஏற்படுத்த வேண்டும். முதலில் குடும்பத்தில் பெண்கள் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும். தான் சார்ந்த சமூகத்தில் தலைமைத்துவ பண்புடையயவர்களாக மாற வேண்டும். பின்னர் நாட்டின் அரசியலில் தலைமைத்துவத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மலையகப் பெண்கள் பல கடமைப்பொறுப்புக்களளை செய்ய வேண்டியுள்ளது. அவையாவன,

  • பெண்கள் பல்வேறு துறைசார் கல்வியில் தேர்ச்சி பெற வேண்டும்.
  • சுயமாகவே தலைமைத்துவப்பண்பை, ஆளுமையை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பெண்களுக்கு ஒரு விடயத்தை சிறப்பாக செய்ய முடியும் என்பதை பல்வேறு துறைகளிலும் நிரூபித்துக் காட்ட வேண்டும். 
  • தீர்மானம் எடுக்கும் சக்தியை வளர்க்க வேண்டும். 
  • எதிர்காலத்தில் மலையகப் பெண்கள் யாருடைய தலையீட்டினையும் கவனத்திற் கொள்ளாது சுயயமாக சிந்தித்து தேர்தல்களில் வாக்களிக்க வேண்டும்.
  • வாக்களிப்பதோடு மாத்திரம் நின்றுவிடாமல் பெண்கள் வேட்பாளர்களாகவும் போட்டியிடுவதற்கு முன்வரவேண்டும்.
  • தேர்தல் களத்தில் தமது கொள்கை பிரசாரங்களை அச்சமின்றி வெளியிடுவதற்கு முன்வர வேண்டும்.

இவ்வாறு மலையகப் பெண்கள் அரசியல் தலைமைத்துவத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு பெற்றோர்களும் அவர்கள் சார்ந்த சமூகமும் வழிசமைத்துக் கொடுக்க வெண்டும். அதற்கு ஆண்கள் சமூதாயம் சரியான அங்கிகாரத்தினை வழங்க வேண்டும்.

பதுளையில் லெனின் மதிவானனின் ஊற்றுக்களும் ஓட்டங்களும் வெளியீடு



பதுளை மாவட்ட கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் ஈழத்து இலக்கிய ஆய்வாளரும் விமர்சகருமான லெனின் மதிவானம் அவர்கள் எழுதிய ´ஊற்றுக்களும் ஓட்டங்களும்´ எனும் நூலின் அறிமுக விழா எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அமைப்பின் தலைவர் வை.தேவராஜாவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. 

இந்நூலின் அறிமுகவுரையை நூலின் பதிப்பாசிரியர் பாக்யா பதிப்பகத்தின் நிறுவுனர் மல்லியப்புசந்தி திலகர் அவர்களும், நூல் நயவுரையை எஸ்.சேதுரட்ணம் அவர்களும், கருத்துரையை கலை இலக்கிய வட்டத்தின் உப தலைவர் கே.திருலோகசங்கர் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர். 

இவ்வறிமுக நிகழ்வில் பதுளையிலுள்ள இலக்கிய ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தக பிரமுகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

இருபது இலக்கிய திறனாய்வு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பாக வந்திருக்கும் ´ஊற்றுக்ககளும் ஓட்டங்களும்´ (மீனாட்சியம்மாள் முதல் மார்க்ஸிம் கார்க்கி வரை) உயர்தரத்தில் தமிழ் மொழியை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கு மிகவம் பயனுள்ளது. அத்துடன் பல்வேறு இலக்கிய ஆளுமைகள் பற்றிய பதிவாகவும் இந்த நூல் அமைந்துள்ளது. 

துரைவி பதிப்பகம் 2012ம் ஆண்டு முதல் அதன் நிறுவுனர் அமரர் துரை.விஸ்வநாதன் நினைவு விருதினை அறிமுகப்படுத்தியுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆய்வு நூலுக்கான துரைவி விருதினை லெனின் மதிவானம் எழுதிய ஊற்றுக்களும் ஓட்டங்களும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் பதுளை கிளை அங்குரார்ப்பணம்



மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் பதுளை கிளை அங்குரார்ப்பணம் ஞாயிற்றுக்கிழமை, 03 மார்ச் 2013 15:29 0 COMMENTS -எம்.எப்.எம். தாஹிர் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் பதுளை கிளை அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை பதுளையில் இடம்பெற்றது. இலக்கிய எழுத்தாளர் இரா.சடகோபன் தலைமையில்; இடம்பெற்ற கிளை அங்குரார்;பன நிகழ்வில் இலக்கிய ஆர்வளரும் சட்டதரணியுமான சேனாதிராஜா மற்றும் பதுளை மாவட்ட இளம் இலக்கிய ஆர்வளர்களும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதன்போது மன்றத்தின் பதுளை கிளை புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றதோடு எதிர்கால பதுளை மாவாட்ட இலக்கிய செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.



தேசிய அடையாளமின்றி அரசியல் விபரீதங்களை சந்திக்கும் “இந்தியத் தமிழர்கள்” - மு.சிவலிங்கம்



இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் 2011 ம் ஆண்டு குடிசனத் தொகை மதிப்பீடு பற்றி விமர்சிக்கப்பட்ட இரண்டு ஆய்வு கட்டுரைகளை கடந்த சில வாரங்களில் வெளியான தேசிய பத்திரிக்கைகளில் வாசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவை பற்றிய எனது கருத்துக்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கு இக் கட்டுரையை எழுதுகின்றேன்.

ஓன்று, ஜனவரி மாதம் 13 ம் திகதி வெளிவந்த “சன்டே லீடர் பத்திரிக்கையில் “Up  country Tamils,  The Vanishing people?” என்ற கட்டுரையாகும்.   இந்த கட்டுரை   புது டெல்லியில் செயற்படும்   Observer Research Foundation   (ORF)  என்ற நிறுவனத்தின் பணிப்பாளர் என்.சத்தியமூர்த்தி அவர்களால் எழுதப்பட்டுள்ளது.

இக் கட்டுரையைப் போன்றே 20 ம் திகதி ஜனவரி மாதம் வெளிவந்த ஞாயிறு வீரகேசரியில்  கலாநிதி எஸ்.சந்திரபோஸ் அவர்கள் எழுதிய “மக்கள் தொகை கணிப்பீடும், மறைந்து செல்லும் இந்தியத் தமிழர்களும்” என்ற கட்டுரையும் பல முக்கியமான தகவல்களை  எடுத்துக் காட்டியுள்ளன. 

குடிசனத் தொகை கணிப்பீட்டாளர்கள் இனவாரியாகத் தகவல் சேகரித்ததில், எந்த முறையைக் கையாண்டுள்ளார்கள்  என்பது முக்கிய அவதானத்துக்குரிய விடயமாகும்.  இந்தக் கணிப்பீட்டை முற்று முழுதாக ஏற்றுக் கொள்ளாத முதல் கட்டுரையாளர் புள்ளி விபரங்கள்  முற்றிலும் பொய்யானவை  என்று ஆதங்கப்பட்டு எழுதியுள்ளார். 2011 ம் ஆண்டுக்குர்pய புள்ளி விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவை  எவ்வாறு தகவல்கள் தந்துள்ளன என்பதை கவனிப்போம்.

1981 ம் ஆண்டிலிருந்து 2011 ம் ஆண்டு வரையிளான  30 ஆண்டுகளுக்குரிய விபரக் கோவையாக இந்தத் தகவல்களை நாம் அறிகின்றோம்.. இந்த முப்பதாண்டு கால வளர்ச்சியில் இலங்கையின் மொத்த சனத் தொகை 20,263723 (இரண்டு கோடியே இரண்டு லட்சத்து அறுபத்து மூவாயிரத்து எழுநூற்று இருபத்து மூன்று)  என காட்டப்பட்டுள்ளது.

இத் தொகையில் இன வாரியாகக் காட்டப்பட்டுள்ள விபரங்களை அறியும் போது, சிங்கள மக்களின் குடிசனத் தொகை  1981 ம் ஆண்டில்  10,979400 (ஒரு கோடியே ஒன்பது லட்சத்து எழுபத்தொன்பதாயிரத்து நானூறு) ஆகவும் 2011 ம் ஆண்டில்  15இ173800  (ஒரு கோடியே ஐம்பத்தொரு லட்சத்து எழுபத்து மூவாயிரத்து எண்ணூறு)    ஆக வளர்ச்சியடைந்துள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.   அதன்படி கடந்த முப்பதாண்டு காலப் பகுதியில் 4,194400 (நாற்பத்தொரு லட்சத்து தொண்ணூற்று நாலாயிரத்து நாணூறு)  பேர் இயற்கை வளர்ச்சியை கொண்டுள்ளனர் எனக் காட்டப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் வளர்ச்சியை 1981 ம் ஆண்டு 18,86900 (பதினெட்டு லட்சத்து என்பத்தாறாயிரத்து தொள்ளாயிரம்) ஆகவும், 2011 ம் ஆண்டு 22,70900 (இருபத்திரண்டு லட்சத்து எழுபதாயிரத்துத் தொள்ளாயிரம்)  என வளர்ச்சிப் பெற்றுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.  

அடுத்து முஸ்லிம் மக்களின் குடிசனத் தொகையைக் காட்டும் போது, 1981 ம் ஆண்டு 10,46900 (பத்து லட்சத்து நாற்பத்தாறாயிரத்து தொள்ளாயிரம்)  எனவும்  2011 ம் ஆண்டில் 18,69800 ( பதினெட்டு லட்சத்து அறுபத்தொன்பதாயிரத்து எண்ணூறு)  என்றும், அதன்படி 8,22900       (எட்டு லட்சத்து இருபத்திரண்டாயிரத்துத் தொள்ளாயிரம்)  பேர் இயற்கை வளர்ச்சி கொண்டுள்ளனர் எனக் காட்டப்பட்டுள்ளது. 

அடுத்து, இந்திய வம்சாவளி தமிழர்கள் 1981 ம் ஆண்டு 8,18700 (எட்டு லட்சத்து பதினெட்டாயிரத்து எழுநூறு) பேர் என்றும்  2011 ம் ஆண்டில்  8,42300 (எட்டு லட்சத்து நாற்பத்திரண்டாயிரத்து முந்நூறு)  என்றும், அதன்படி  23,600 (இருபத்து மூவாயிரத்து அறுநூறு) பேர்கள் மட்டுமே கடந்த முப்பதாண்டுகளில்  இயற்கை வளர்ச்சி பெற்றுள்ளனர்  என்று காட்டப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பீட்டை எவ்வாறு ஏற்றுக் கொள்வது..?  இக் கணிப்பீட்டின்படி முப்பதாண்டு கால இயற்கை வளர்ச்சியில் 2.8மூ வீதமாகவும், மொத்த சனத் தொகையில் 4.2மூ ஆகவும் குறைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களின் கடந்த கால வளர்ச்சி வீதத்தை கீழே அவதானிக்கலாம். :

1945 ம் வருடம் 16%
1953 ம் வருடம் 12%
1963 – 1983 வரை 10.6% ,  9.4% ,  5.6%

இந்த வளர்ச்சியினை நோக்கும் அதே வேளை, 1953 ம் ஆண்டில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களைவிட குடிசனத் தொகையில் அதிகமாகவிருந்தனர்  என்பதையும் கருத்திற்கொள்ள வேண்டியுள்ளது.

2011 ம் ஆண்டு குடிசனக் கணக்கீட்டின்படி கடந்த முப்பதாண்டு கால வளர்ச்சியாக இந்த “23,600 பேர்”; எவ்வாறு சேகரிக்கப்பட்டனர் என்பது வியப்புக்குரிய கேள்வியாகும். கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்த யுத்தத்தின் மூலம் பல ஆயிரக்கணக்கான வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர்; வெளி நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். ஆயிரக்கணக்கானோர்  காணாமல் போயினர். அநேகமானோர் வசிப்பிடமின்றி எந்த வித தகவல்களுக்கும் அகப்படாமல் மறைந்து கிடக்கின்றனர்.  இந்த நிலைமையில்  இன்றைய கணக்கீட்டின்படி   22,70900 பேர் இருப்பதாகக் கொடுக்கப்பட்டிருக்கும்  தகவல்  ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. இந்திய வம்சாவளித் தமிழர்கள் தங்களை இலங்கைத் தமிழர் என்று பதிவு செய்து கொண்டதன் காரணமாக, இலங்கைத் தமிழர் பட்டியலில் அவர்களது தொகை சேர்க்கப்;பட்டிருக்கலாம் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. இல்லையெனில் ஏறக்குறைய பதினைந்து லட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்களுள் ஏழு லட்சம் பேர் எங்கே மறைந்தனர் என்ற அதிர்ச்சிக்குரிய கேள்விக்கு விடை தேட வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.

இந்த குழப்ப நிலைக்குக் காரணம், மலையகத் தமிழர் என்ற தேசிய அடையாளத்தையும், இந்திய வம்சாவளி என்ற அடையாளத்தையும், இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்தையும் மூன்று வௌ;வேறு நிலைப்பாட்டில் வைத்து இந்த சமூகத்தினர் தங்களை குழப்பிக் கொண்டிருப்பதேயாகும்..! இருநூறு ஆண்டுகளாகியும் தங்களது தேசிய அடையாளத்தை நிலைநாட்டிக்கொள்ள முடியாத இம் மக்களின் அரசியல் அறியாமை விசனத்துக்குரியதாகும்.

இச் சமூகத்தினர் பெருந் தோட்டத் தொழிலாளர்களாகவும், தலை நகரில் குடியேறியுள்ள வர்த்தக சமூகத்தினராகவும், ஆரம்ப காலம் முதல் கடை சிப்பந்திகளாகவும் வியாபாரத் தளங்களை அண்டியுள்ள ஊழியர்களாகவும், நகரத் தொழிலாளர்களாகவும் , பல துறைகளில்  தங்களை நிலைநாட்டிக் கொண்டவர்கள், தங்கள் விருப்பத்துக்கேற்ற தேசிய அடையாளங்களை அவ்வப்போது காட்டி வருகின்றனர். இவர்களது நிலைப்பாட்டில் எந்தவொரு அரசியல் சிந்தனை இல்லாமையும் இந்த நிலைமைக்கு காரணமாகும்.
கலாநிதி எஸ்.சந்திரபோஸ் அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போன்று இந்தியத் தமிழர்கள் என்றதும் அவர்கள் பெருந்தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் இவர்கள் மத்தியில் நிலவி வருகின்றது. பெருந் தோட்டங்களைத் தவிர்ந்து ஏனைய பிரதேசங்களில் வாழ்கின்றவர்கள் தங்களை இலங்கைத் தமிழர் என்று அடையாளம் காட்டிக் கொள்ள விரும்புகின்றனர்.

கொழும்பைப் போன்ற தலை நகரங்களில் வாழும் வர்த்தக சமூகத்தினர் இந்தியாவிலும் சொத்துரிமைகள் கொண்டு  வியாபாரத் தொடர்புகளும்  வைத்துள்ளவர்கள் தங்களை இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றனர். கோபியோ (Gopio) போன்ற ஸ்தாபனத்திலும் இவர்கள் நெருக்கமான உறுப்பினர்களாகவிருப்பதையும் நாம் அவதானிக்க முடிகின்றது.  இவர்களைத் தவிர்ந்த ஏனைய நகர்ப்புறங்களில்  குறிப்பாக கொழும்பு, நீர் கொழும்பு, புத்தளம், சிலாபம், மன்னார் போன்ற பிரதேசங்களில் வாழ்கின்ற இந்திய வம்சாவளியினர் தங்களை இலங்கைத் தமிழர்கள் என்று காட்டிக் கொள்ள விரும்புகின்றனர்.
இந்த இரு சாரார்களும் எந்த வித காரணத்தையும் முன்னிட்டு மலையகத் தமிழர் என்ற தேசிய அடையாளத்தின் கீழ் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புவதில்லை. மலையகத் தமிழர் என்ற அடையாளம் பெருந் தோட்ட மக்களையே சார்ந்தது என்ற அபிப்பிராயத்தில் இருந்து வருகின்றனர் .பெருந் தோட்ட மக்களோ இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னா,; தாங்கள் முகங் கொடுத்த அரசியல் பிரச்சினைகளை படிப்பினையாகக்கொண்டு, தங்களை மேலும் இந்த நாட்டில் “இந்தியத்  தமிழர்”; என்ற அடைமொழியோடு அந்நியப்படுத்திக் கொண்டு வாழ விரும்ப வில்லை. 

இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக  இந்த நாட்டில் வாழ்ந்துக் கொண்டு,  “இந்திய” என்ற இன்னொரு நாட்டின் பெயரை அடைமொழியாக  இணைத்துக் கொள்வதன் மூலம், தேசிய அந்தஸ்தை பெற முடியாது என்பதில் தெளிவாக இருந்து வருகின்றனர்.   சுதந்திரத்துக்குப் பின் இன்று வரை  65 ஆண்டுகளாக மலையகத் தமிழர் என்ற  தேசிய அடையாளத்தை தேசிய , சர்வதேச மட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். சர்வதேச சமூகமும் மலையகத் தமிழர் ஒரு தனியான  தேசிய சிறுபான்மை இனம் என்பதை அங்கீகரித்துள்ளன.

இந்த நிலைப்பாட்டுக்கான சான்றுகளை  இணைய தளங்களில் பரவலாக நாம் கண்டு கொள்ளலாம். மலையகத்  தொழிற்சங்க, அரசியல் தலைமைகளும், அரச சார்பற்ற சமூக நிறுவனங்களும், மலையகம் வாழ் அனைத்து சமூகப் பிரிவினர்களும் இந்த அடையாளத்தையே தங்களது தேசிய இன அடையாளமாக ஏற்றுக் கொண்டு வருகின்றன. களுத்துறை, மத்துகம, காலி, தெனியாய போன்ற பிரதேசங்களில் வாழ்கின்ற பெருந்தோட்ட மக்களும் இந்த நிலைப்பாட்டினையே கொண்டுள்ளனர்.

அரசியலில் நேரடியாகப் பங்குகொண்டு, இரண்டாவது தேசிய சிறுபான்மை இனமாக இருந்து, பின்னர் மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டு, இன்று நான்காவது தேசிய சிறுபான்மை இனமாக வீழ்த்தபட்டிருந்தாலும,; மலையகத் தமிழர் என்ற அடையாளம் நிரந்தரமாக்கப்பட்டிருப்பதை  நாம் எற்றுக் கொள்ள வேண்டும்.

ஆகையினால் மலையக மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்  “இந்தியத் தமிழர்”; என்ற அடையாளத்துக்குப் பதிலாக , “மலையகத் தமிழர்” என்ற தேசிய அடையாளத்தை  கொண்டு வரும் ஒரு திருத்தப் பிரேரணையை நாடாளு மன்றத்தில் முன் வைக்க வேண்டும். இந்த தேசிய அடையாளத்தின் கீழ் தங்களையும் இணைத்துக் கொள்வதற்கு, நாட்டில் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் முன்வர வேண்டும் என்ற அரசியல் விழிப்புணர்வை அவர்களிடம் உருவாக்க வேண்டும். இந்திய வம்சாவளி தமிழர்களில்  பெரும்பான்மையினராக வாழ்ந்து வரும் மலையகத் தமிழரின் அரசியல் நிழலில் அண்டி வாழ வேண்டிய கட்டாய நிலைமை எதிர் காலத்தில் இவர்களுக்கு ஏற்படும் என்ற உண்மையையும் உணர்த்த வேண்டும்.

இந்த இன அடையாளத்தின் மூலம்  தேசிய  அரசியலிலும், சர்வ தேசிய அரசியலிலும் நமது உண்மையான குடிசனத் தொகை மதிப்பீட்டை காட்டிக் கொள்ள முடியும். என்றும் இல்லாதவாறு தேசிய இனவாதம் கூர்மையடைந்து வருவதையும், சிங்கள பௌத்த பேரினவாத அடிப்படைவாதிகளின்  சக்தி பல வழிகளிலும் வளர்ச்சியடைந்து வரும் பேராபத்தையும், தங்களது  தேசிய அடையாளத்தில் முரண்படும் தமிழர்கள் உணர வேண்டும்.

இந் நாட்டின் பூர்வீகக் குடிகளான வடக்குக் கிழக்கு பிரதேசங்களில் வாழுகின்ற தமிழர்கள் தங்களது பூர்வீக நிலத்தையும், வீடு, உடைமைகளையும் இழந்து, விரட்டப்பட்டு அகதி முகாம்களிலும் கூட இல்லாமல், காடுகளில்  வசிக்கும் நடைமுறை நிலைமைகளை, சொந்த காணி, நிலம், வீடு உடைமைகள் இல்லாது உதிரிகளாக சிதறி வாழும் இவர்கள், தேசிய அடையாளத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். இல்லாது போனால்,  பர்மாவில் நடந்தது போன்று, இன்று மலேசியாவில் நடந்து கொண்டிருப்பது போன்று இந்திய எதிர்ப்புவாத நடவடிக்கைகள் எந்த சந்தர்ப்பத்திலும் இங்கே உருவாகலாம்.

குடிசன மதிப்பீட்டுத் திணைக்கள ஊழியர்களிடம் தமது தேசிய அடையாளத்தை முறையோடு வழங்கத் தவறியதால், பாதகமான முறையில் 2011 ம் ஆண்டில் எமது குடிசனத் தொகை குறைக்கப்பட்டிருப்பது, இன்றைய அரசியல் சூழலில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இனங்களின் சனத்தொகைக்கேற்ப பாராளுமன்றப் பிரதிநிதித்துவம், முன்னுரிமைகள், அங்கீகாரங்கள், விகிதாசாரத்துக்குரிய தொழில் வாய்ப்புகள்,  எனும் பல தேசிய நலன்களை இழக்க நேரிடலாம். இவ்வாறான  அரசியல் ரீதியிலான பாதிப்புக்கள் பற்றியே மேற் குறிப்பிட்டுள்ள கட்டுரையாளர்கள் அறியத் தந்துள்ளனர்.

இன்றைய சூழ்நிலையில் மலையகத் தமிழர்களின் இவ்வாறான சமூக, அரசியல் தகவல்களை , சமூக நலன் விரும்பிகள் பகிர்ந்து கொள்வது  மிக முக்கியமான அரசியல் பணிகளிலொன்றாகும். 


மலையகத் தலைமைகள் - அன்றும் இன்றும் - சட்டத்தரணி ச. ஜேசுநேசன், எல்எல்.பி.


மலையக மக்கள் எனும் போது பொதுவாக அது தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களையும் தொழிலாளர்களாக இல்லாது விட்டாலும் அவர்கள் வழிவந்தவர்களையும் இளைஞர்களையும் குறிக்கும். இன்று அவர்களுக்கு குடியுரிமை, வாக்குரிமை என்பன உண்டு. இதனால் அவர்கள் அவ்வப்போது இடம்பெறும் தேர்தல்களில் வாக்களித்து தமது உரிமையைப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்குக் கிடைத்த அரசியல் உரிமைகளில் இதை விட வேறெதுவும் அதிகமாகக் கிடைத்து விட்டதாகக் கூற முடியாது. தேர்தல் காலங்களில் இவர்களைத் தேடிவரும் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தேர்தல் முடிந்தபின் அடுத்த தேர்தல் வரும்வரை இவர்கள் இருக்கும் தோட்டப் பகுதிபக்கம் தலைவைத்துப் படுப்பதேயில்லை. இன்று இரத்தினபுரி மாவட்டத்தில் குக்குலேகம போன்ற இடங்களில் இடம்பெறும் சம்பவங்கள் தாம் பெற்ற அரசியல் உரிமைகளால் தோட்ட மக்கள் எந்தளவு பயன் பெறுகிறார்கள் என்பதைக் காட்டி நிற்கின்றன.

தோட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் எவ்வளவு தான் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்தாலும் அரசும் அவர்களிடம் வாக்குவாங்குவதற்கு வரிசையில் நிற்பவர்களும் அவர்களைக் குடிமக்களாகக் கருதுவதில்லை. அவர்களைத் தொழிலாளர்களாகவே பார்க்கின்றார்கள். எனவே வாக்குகளை வாங்கிய பின் அவர்களது பிரச்சினைகளைத் தோட்ட நிர்வாகம் கவனித்துக் கொள்ளட்டும் என்று வாளாவிருந்து விடுக்கின்றனர். ஆனால் தொழிலாளர்களோ தம்மைத் தொழிலாளர் என்று தாம் நினைப்பதைக் கூடத் தவிர்க்கப் பார்க்கிறார்கள். இதனால் அவர்களுக்கு ஏற்படும் இழப்போ மிகப் பெரியது.

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக மலையகத்தில் வாழ்ந்து வரும் தமிழ்த் தொழிலாளர் சமூகத்துக்கு நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் மிகப் பலமான அமைப்புகள் இருந்தன. அவர்களது நலன்களை சுதந்திரத்திற்கு முன்பு அவைதான் கவனித்தன.

சுதந்திரத்திற்குப் பிறகு ஒட்டுமொத்தமாக அவர்கள் நாடற்றவர்களாக்கப்பட்ட பிறகும் தொடர்ந்து நாற்பதாண்டுகளுக்கு மேல் அவர்களது நலன்களை அவைதான் கவனித்தன. இன்று பச்சை, நீலமென்று கலர்கலராக வரும் அரசியல் கட்சிகள் அவர்களின் வாக்குகளைக் கேட்டுப் பிச்சையெடுக்கும் கட்சிகள் அவர்கள் நாடற்றவர்களாக இருந்த காலத்தில் அவர்களை நாய்களாகக் கூட நினைக்கவில்லை. மலையகத் தோட்ட தொழிலாளர்களின் அன்றைய அமைப்புகள் மாபெரும் சக்தியாகத் திகழ்ந்தன. மலையகத்தின் எந்தப் பகுதியிலாவது தொழிலாளர்களுக்கு இன்னல் ஏற்படும் போது ஒன்றாகக் கிளர்ந்தெழுந்தன. அவர்களுக்கு அபயக்கரம் நீட்டின.

அவைதான் அன்று மலையகத்தில் மிகப் பலம் பொருந்தியவைகளாகத் திகழ்ந்த தோட்டத் தொழிற்சங்கங்கள். மலையகத்தில் ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து, பெரியவனாகி பிறகு வயது முதிர்ந்து சுடுகாட்டிற்குச் செல்லும் வரை சென்ற பின்பும் கூட அதன் எல்லா நலன்களையும் கவனித்தவை தோட்டத் தொழிற்சங்கங்களே.

அன்றைய மலையகத்தில் பல தொழிற்சங்கங்கள் இருந்தாலும் சில வேளை அவை ஒன்றுக்கொன்று முட்டி மோதிக்கொண்டாலும் தொழிலாளர்களுக்கு அவை துரோகம் செய்தன, தொழிலாளரை ஏமாற்றின என்று ஒட்டு மொத்தமாகக் கூறமுடியாது. ஏனெனில் அன்றைய தொழிற்சங்கங்கள் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்டவையாக இருந்தன. தொழிற்சங்கத் தலைவர்கள் பல தியாகங்களைச் செய்து தொழிலாளருக்கு வழிகாட்டினர். ஆரம்பகாலத் தொழிற்சங்கத் தலைவர்களாக கோ. நடேசையர், ஏ. அஸீஸ், கே. இராஜலிங்கம், எஸ். சோமசுந்தரம், எஸ். தொண்டமான் ஸி. வி. வேலுப்பிள்ளை, வீ. கே. வெள்ளையன், வி.பி. கணேசன், எம்.எஸ். செல்லச்சாமி, என். சண்முகதாசன், என். எம் பெரேரா, டாக்டர் எஸ். ஏ.விக்ரமசிங்க போன்ற மாபெரும் தொழிற் சங்கத் தலைவர்கள் தோட்டத் தொழிலாளருக்கு செய்த சேவையை மறக்கவோ மறுக்கவோ முடியாது. (செல்லச்சாமி மட்டும் இன்றும் உயிர் வாழ்கிறார்) அவர்களது காலத்தில் தோட்டத் தொழிலாளருக்கு ஒரு தெம்பு இருந்தது. தொண்டமான் இருக்கிறார். அஸீஸ் இருக்கிறார். சண் இருக்கிறார். வெள்ளையன் இருக்கிறார். என். எம். இருக்கிறார். நம்மைக் காப்பாற்றுவர் என்ற நம்பிக்கையோடு இருந்தார்கள்.

1948 க்கு முன்பு தேர்தல் காலங்களில் தமது வாக்குகளை அவர்களுக்கு அள்ளிக் கொடுத்தார்கள். தொழிற் சங்கத் தலைவர்கள் மீதும் தொழிற் சங்கங்கள் மீதும் ஒரு மதிப்பு இருந்தது. தொழிற் சங்கங்களையும் தொழிற் சங்கத் தலைவர்களையும் தமது ஆபத்பாந்தவர்களாக மலையக மக்கள் துதித்தனர். மலையக மக்கள் தமக்கு குடியுரிமை இல்லாவிட்டாலும் வாக்குரிமை இல்லாவிட்டாலும் ஒழுங்கான கல்வி வாய்ப்பு இல்லாவிட்டாலும் தொழில் வாய்ப்பு இல்லாவிட்டாலும் தாம் தொழிலாளர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். தொழிலாளர்கள், சுரண்டிப் பிழைப்பவர்கள் அல்லர். உழைத்துப் பிழைப்பவர்கள் என்று பெருமைப்பட்டவர்கள் இன்று அந்த மதிப்பிற்குரிய தலைவர்கள் யாவரும் மறைந்து விட்டார்கள். அவர்களை நினைவு கூருவதற்கு கூட யாரும் இல்லை. உயிரோடிருக்கும் செல்லச்சாமி போன்றவர்கள் கூட நேரடி தொழிற் சங்க ஈடுபாட்டிலிருந்து முதுமை காரணமாக ஒதுங்கி விட்டார்கள் அல்லது ஒதுக்கப்பட்டு விட்டார்கள்.

இன்று மலையகத் தொழிற் சங்கங்களின் நிலை என்ன? தலைவர்மாரின் தகைமை என்ன? அவர்களின் சேவை என்ன? அவர்களால் தோட்டத் தொழிலாளருக்கு ஏற்பட்ட நன்மை என்ன? என்றெல்லாம் ஒவ்வொன்றாக ஆராயும் போது மிகவும் வேதனையாக இருக்கின்றது. அன்றைய தலைவர்மாரின் செயல்கள் அவர்களை நாம் ஆராதிக்கச் செய்தன. இன்றையவர்களின் செயல்கள் அருவருப்பைத் தருகின்றன.

இன்று மலையகத்தில் புற்றீசல்கள் போல தொழிற் சங்கங்கள் தோன்றி விட்டன. மலையகத்தின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களாக வருகிறவர்கள் எதைச் சாதிக்காவிட்டாலும் இரண்டைச் சாதித்து விடுகின்றனர். முதலாவது மலையகத்தின் மூலைமுடுக்கெல்லாம் அவர்களின் பினாமிகள் பெயரில் சாராயக் கடைகளைத் திறந்து விடுகின்றனர். இரண்டாவது தமது தலைமையில் ஒரு தோட்டத் தொழிற் சங்கத்தை ஆரம்பித்து விடுகிறார்கள். அரசியல் பதவிகள் பறிபோனாலும் தொழிற் சங்கம் அவர்களுக்குச் சோறு போடும். மதுபானச்சாலைகள் பணம் சேர்க்கவும் தேர்தல் காலத்தில் வாக்காளப் பெருங்குடி மக்களுக்குப் போத்தல் போத்தல்களாக திறந்து வார்க்கவும் கைகொடுக்கின்றன. தாம் ஆரம்பித்த தொழிற் சங்கங்கள் தமது வாக்கு வங்கியைக் கொஞ்சமாவது பாதுகாக்கத் துணை புரிகின்றன.

முன்பு அர்ப்பணிப்புடனும் தூர நோக்குடனும் செயல்பட்ட கௌரவமிக்க தலைவர்களால் வழி நடத்தப்பட்ட பலம் வாய்ந்த தொழிற் சங்கங்கள் இன்று மானாப்புதூர் மைனர்களாலும் நாலாங் குறுக்குத் தெரு நாட்டாமைகளாலும் விலைக்கு வாங்கப்பட்டு விட்டன. அவர்கள் மலையக மக்களை கட்டி மேய்க்கின்றனர். அவர்களது செயற்பாடுகள் தமது தொழிற் சங்கப் பலத்தைக் காட்டி தொழிலாளருக்கும் தேவையானதைப் பேரம் பேசி அல்லது போராடிப் பெற்றுக் கொள்வதாக இருப்பதில்லை. அதைவிடுத்து ஆள்வோருக்கு ஆலவட்டம் வீசி அடிபணிந்து தொழிலாளர் வாக்குகளால் தாம் பெற்றுள்ள எம்.பி.பதவியை அடகுவைத்து அரசுப் பதவிகள், ஆலோசகர் பதவிகள் போன்றவற்றைப் பெற்று ஜமீன்தார் வாழ்வதற்காகத்தான் இடம் பெறுகின்றன. எஜமானின் எச்சில் தட்டில் எஞ்சிக் கிடக்கும் எலும்புத் தூண்டுக்காக நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் நாயின் நிலையை விட கேவலமானதாக இருக்கின்றது இவர்களின் நிலை. இவர்களோடு மின்னலாய் வந்து மலையக மக்களின் வாக்குகளைக் கன்னமிட்டவர்களும் சேர்ந்து மலையக மக்களைக் கன்னத்தில் கைவைத்து நிற்கச் செய்து விட்டார்கள்.

ஆளவந்தோருக்கு அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்த இவர்களால் அல்லல் படும் தோட்ட மக்களின் அவல நிலையைத் தீர்க்கமுடியாது. குக்குலேகமயில் மட்டுமல்லாது கொட்டகலையிலும் தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு அவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டாலும் இவர்களால் ஆவேசமாகக் கிளர்ந்தெழ முடியாது. ஏனெனில் இவர்கள் ஆளவந்தாரின் அடிமைகள். தொழிற்சங்கத் தலைவர்களாக இருப்பது தொழிலாளருக்கு நன்மை செய்வதற்கல்ல. மாறாக அவர்களை வைத்துப் பணம் பண்ணுவதற்குதான். ஏனெனில் இவர்கள் அடிப்படையில் வர்த்தகர்கள்.

மலையகத்தில் தமிழில் நிர்வாகமும் மலையக இளைஞர் வேலை வாய்ப்பும்

-சட்டத்தரணி ச. ஜேசுநேசன், எல்எல்.பி..
வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாவட்டம் நுவரெலிய மாவட்டமாகும்.இங்கு 59.76 விழுக்காட்டினர் தமிழர்களாவர்.நுவரெலியா மாவட்டத்தை அடுத்துள்ள பதுளை மாவட்டத்திலும் 27.59 விழுக்காட்டினர் தமிழர். கண்டி மாவட்டத்தில் 25.51 விழுக்காட்டினரும் தமிழர்களே.மாத்தளை மாவட்டத்தில் 19.48,கேகாலை மாவட்டத்தில் 14.30 மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 13.27 விழுக்காட்டினர் தமிழர்.முஸ்லிம் மக்களும் இத்தமிழ் பேசும் மக்களில் அடங்குவர்.இம்மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களில் 95 விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்கள் இந்தியவம்சாவளித் தமிழர்களாவர்.அவர்கள் சமீபகாலம் வரை இந்தியத் தமிழர்கள் அல்லது இந்தியர்கள் என்று அழைக்கப்பட்டுவந்தனர்.அரசியல் அடிப்படையிலும் அவர்கள் இந்தியத் தமிழர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.

ஆனால் படித்த இளைஞர் சமூகம் அவர்கள் மத்தியில் இன்று பலம் பெற்று வருகின்றது.இந்தச் சமூகத்துக்கு இந்தியா பற்றிய அக்கறை இல்லை.அவர்கள் எல்லோரும் இலங்கையில் பிறந்தவர்களாகவும் இலங்கைக் குடியுரிமை உள்ளவர்களாகவும் இருப்பதால் தம்மை இந்தியத் தமிழர்கள் என்று அழைப்பதை அவர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை.அவர்கள் தம்மை இலங்கைத் தமிழர் என்றே அழைக்கவேண்டும் என்று விரும்புகின்றனர்.

ஆனால் இலங்கைத் தமிழர் என்றொரு பிரிவு இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்துவருவதால் மத்திய மலை நாட்டில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களாக தம்மை "மலையகத் தமிழர்' என்று அழைக்கவேண்டும் என்று விரும்புகின்றனர்.

அது நியாயமாகவேபடுகின்றது.தாம் வாழும் பிரதேசத்தை மையப்படுத்தி தம்மை அப்பிரதேசத்தின் மக்களாகவே பார்க்கின்றனர்.இது இயல்பானதே. இதனால் தாம் வாழும் பிரதேசத்திற்கு ஏற்ப தம்மை "மலையகத்தமிழர்'என்று அழைக்கின்றனர்.மலையகத்தில் கற்றோர்,கல்லாதோர் யாவருமே தம்மை மலையகத் தமிழர் என்றே கடந்த அரை நுற்றாண்டுக்கும் மேலாக அழைத்துவருகின்றனர்.சிங்களவரில் கண்டிச் சிங்களவர் என்ற பிரிவு இருக்கின்றது.அதுபோல தமிழரில் மலையகத் தமிழர் என்ற பிரிவு இருப்பதில் எந்தவித தவறும் பின்னடைவும் இருக்க முடியாது.

அதனை ஏற்றுக்கொள்வதில் அரசுக்கு எந்தத் தயக்கமும் ஏற்பட வேண்டியதில்லை.

மலையகத் தமிழரின் வரலாறு இங்கு 150 ஆண்டுகளுக்கு மேற்பட்டது.ஆனால் 1815 இல் ஆங்கிலேயரிடம் வீழ்ந்த கண்டி இராச்சியத்தில் தமிழரின் வரலாறு 300 ஆண்டுகளுக்கு மேற்பட்டது.

இவர்களின் வரலாறு இந்த இடத்தில் தேவைப்படாததால் அதனை இத்துடன் நிறுத்திவிடுவோம்.

அமெரிக்க,அவுஸ்திரேலியக் கண்டங்களில் புகுந்த ஐரோப்பியர் 200 ஆண்டுகளுக்கு அக்கண்டங்களையே தமதாக்கிக் கொண்டனர்.ஆனால் இலங்கையில் மலையகத்திற்கு வந்த தமிழர்கள் 150 ஆண்டுகளுக்கு மேலாகியும் தம்மை இங்கு நிலைநிறுத்திக்கொள்ளமுடியாமல் இருக்கின்றார்கள்.அதற்கு முக்கிய காரணம் அவர்கள் நாடுபிடிக்கும் எண்ணத்தோடு இங்கு வரவில்லை.பிழைப்புக்காகத்தான் வந்தார்கள் என்பதைவிட அழைத்து வரப்பட்டார்கள் அல்லது இழுத்து வரப்பட்டார்கள் என்பது தான் பொருத்தமாக இருக்கும். பிழைப்புக்காக வந்ததால் பிழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.அதுவும் மந்தைகளைப்போல நடத்தப்படுகின்றார்கள்.குதிரைகளைக் கட்டிவைக்கும் இடம் குதிரைலாயம் எனப்படும்.இவை வரிசையாக இருக்கும். இதைப்போன்ற லயங்களில்தான் (ஃஐNஉகு) மலையக மக்களும் வாழ்கிறார்கள்.

இந்த 150 ஆண்டு வரலாற்றில் அவர்களின் லயத்து (ஃஐNஉ ஃஐஊஉ) வாழ்க்கை முறை இன்னும் மாறாவிட்டாலும் பல வித முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை.1948 ஆம் ஆண்டு வரை இலங்கையில் ஆங்கிலேயரின் ஆட்சி நடைபெற்றதால் இலங்கையின் ஏனைய மக்களோடு பிரித்தானிய குடிமக்கள் இருந்தார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கை அரசினால் அவர்கள் குடியுரிமை மற்றும் வாக்குரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக்கப்பட்டனர்.அவர்களின் மரபுவழித் தாயகமான தமிழ் நாட்டினரும் அவர்களை நாடற்றவர்களாகக் கருதினர். அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.மிகப் பெரிய வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் முற்போக்கு வாதியும் என்று கருதப்பட்ட அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு கூட அவர்களை நாடற்றவர்களாகவே கருதினார். அவர்கள் தமது மரபுவழித்தாயகமான தமிழ்நாட்டுக்குத் திரும்பி வருவதை தான் 1964 மே 27 இல் இறக்கும் வரை அவர் அனுமதிக்கவில்லை.அவர் அதற்குப் பல காரணங்களை முன்வைத்தார். அவற்றில் மனிதாபிமானம் உள்ளடக்கப்படவில்லை. எங்கோ 2000 மைல்களுக்கு அப்பால் உள்ள காஷ்மீரின் பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு,தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்குச் சென்றோர் திரும்பிவருவதை அனுமதிக்காதிருந்ததும்,அவரைத் தட்டிக்கேட்கத் திராணியற்று தமிழகத் தலைமைகள் இருந்ததும் இன்றும் அது போலவே நடந்துகொள்வதும் தமிழரின் "விதி' என்றே கூறலாம்.

நேருவின் பரம்பரையினர் தான் இன்றும் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கின்றனர்.அவர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள் என்பதை மலையகத் தமிழர்கள் என்றோ மறந்துவிட்டனர். ஆனால் என்ன புதுமை! இந்திய ஆட்சியாளர்கள் தம்மைக் காப்பாற்றுவார்கள் என்று வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். புதுமையான குருட்டு நம்பிக்கை!.

சரியோ தவறோ நேருவின் மறைவிற்குப் பிறகு இந்தியப் பிரதமராக வந்த லால்பகதுர் சாஸ்திரியினால் தான் இலங்கையில் நாடற்றவர்கள் எனப்பட்ட மக்களுக்கு விடிவு காலம் பிறந்தது.  1964 டிசம்பரில் அவர்களை 7:4 (ஏழிற்கு நான்கு) என்ற விகிதத்தில் பங்கு போட்டுக்கொள்ள அவரோடு அன்றைய இலங்கைப் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க ஒப்பந்தம் செய்தார்.

உண்மையில் அடிப்படை உரிமை,மனித உரிமை போன்ற அனைத்துலகக் கோட்பாடுகள் இவ் ஒப்பந்தத்தின் போது கவனிக்கப்படவில்லை.17ஆம் 18ஆம் நுற்றாண்டுகளில் ஆபிரிக்க மக்களைப் பொருட்களாகக் (பண்டம்) கணித்து அமெரிக்காவுக்கு பண்டமாற்றம் செய்தது போல சிறிமாவும் சாஸ்திரியும் மலையக மக்களைப் பண்டங்களாகக் கருதிதொகையை நிர்ணயித்துக்கொண்டனர்.எதுவாயினும் இவ்வொப்பந்தம் ஒரு முடிவின் ஆரம்பமாக அமைந்தது.

1948 இல் ஆரம்பமான நாடற்றவர் பிரச்சினை ஓரளவு திருப்தியுடன் முடிவடைய 40 ஆண்டுகள் சென்றன.எனவே மலையகத் தமிழ் மக்கள் நாட்டின் ஏனைய சமூகத்தினைவிட 40 ஆண்டுகள் பின்தங்கி நிற்கின்றனர்.(வடக்குகிழக்கில் ஏற்பட்டிருந்த விடுதலைப் போர் காரணமாக அவர்களுக்கு 30 ஆண்டுகள் பின்தங்கி நிற்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.)

இன்று மலையகத் தமிழ் மக்கள் பலவழிகளிலும் முன்னேறி வருகின்றனர். 1970 களில் விரல் விட்டு எண்ணக் கூடியதாக இருந்த அவர்கள் ஆசிரிய சமூகம் இன்று ஆயிரக்கணக்கானோராக வளர்ந்திருக்கின்றது. ஆசிரியத்துறை தவிர்ந்த வேறு அரசதுறைகளில் அவர்களில் விழுக்காடு மிக மிகக்குறைவு.

இதற்கான காரணம் மலையகத்தில் பெரும்பாலான பிரதேச சபைகளில் சிங்களத்தோடு தமிழும் சரிநிகரான நிர்வாக மொழியாக அரசாங்க வர்த்தமானிகள் ஊடாகப் பிரகடனப்படுத்தப்பட்டும் இன்று வரை அவற்றில் எதிலுமே தமிழிலும் நிர்வாகம் நடைபெறுவதில்லை.

இதில் அக்கறை கொள்ளவேண்டிய மலையகத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மலையகத் தொழிற்சங்கங்கள், அரசியற்கட்சிகள் அத்துடன் மலையக சமூகப் பணி நிறுவனங்கள் ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள், தலைவர்கள் ஆகியோரின் வசதிக்காக குறிப்பிட்ட அரசாங்க வர்த்தமானிகளின் விபரங்களைக் கீழே தருகின்றேன்.

1. அரசாங்க வர்த்தமானி இல.1105/25 திகதி 12.11.1999

டி) நுவரெலியா மாவட்டம் முழுதும்: அதாவது இம்மாவட்டத்தினுள் அடங்கும் அனைத்து அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் சகல நிர்வாக நடவடிக்கைகளும் தமிழிலும் இடம்பெறவேண்டும்.

அரச நிறுவனங்கள் எனும்போது மாவட்ட செயலகம், அதன் உபபிரிவுகள், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், கிராம அலுவலர் பிரிவு என்பனவற்றையும் அரச சார்பு நிறுவனங்கள் என்னும் போது அரசு கூட்டுத்தாபனங்கள், அரசாங்க வங்கிகள் போன்றவற்றைக் குறிக்கும்.

டிடி) பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை, எல்லை, அல்துமுல்லை, அப்புத்தளை, ஆலிஎலை, மீசாகியுள மற்றும் பசறைப் பிரதேச செயலகப் பிரிவுகள்.

2. அரசாங்க வர்த்தமானி இல.1283/3 திகதி 07.04.2003.
டி) பதுளை மாவட்டத்தில் பதுளை, லுணுகலை, வெலிமடை மற்றும் சொரணதோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகள்.

டிடி) கண்டி மாவட்டத்தில் அக்குறணை, தெல்தோட்டை, பன்விலை, பஸ்பாகே, கோராளை மற்றும் உடபலாத்த பிரதேச சபைப் பிரிவுகள்.

அத்துடன் அதே வர்த்தமானிக்கமைய காலி மாவட்டத்தில் நான்கு கிராவெட்ஸ் (ஊணிதணூ எணூச்திஞுtண்), களுத்துறை மாவட்டத்தில் பேருவளை, புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி, முந்தல், புத்தளம், வண்ணாத்திவில்லு ஆகிய பிரதேச சபைப் பிரிவுகளிலும் தமிழில் அரச நிர்வாகம் நடைபெறல்வேண்டும்.

14.02.2001 திகதி 1171/18 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானிப்படி கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச சபைப் பிரிவுகளிலும் தமிழில் அரச கருமங்கள் நடைபெறல் வேண்டும். ஆனால், என்ன பரிதாபம்! வடக்கு, கிழக்கிற்கு வெளியேயுள்ள இந்த 29 பிரதேச சபைப் பிரிவுகளில் ஒன்றிலாவது தமிழிலும் அரச நிர்வாகம் நடைபெறுவதில்லை. தமிழ் பேசும் மக்கள் என்ன பாவம் செய்தார்கள். தமிழில் நிர்வாகம் நடத்தாமல் இருப்பது சட்ட முரணானது என்று முறையிட்டு யாருமே இன்று வரை நீதிகேட்டு நீதிமன்றம் செல்லவில்லை. 1956 இற்குப் பிறகு இன்று வரை ஒரு "கோடீஸ்வரனாவது' பிறக்கவில்லை.

மேலே குறிப்பிட்ட பிரதேசச் செயலகங்களிலும் அவற்றினை உள்ளடக்கும் மாவட்டச் செயலகங்களிலும் சிங்களத்தோடு தமிழிலும் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இதற்கான நடவடிக்கையை மேலே குறிப்பிட்ட மக்கள் பிரதிநிதிகள் எடுக்கவேண்டும். ஏனெனில் இது "உரிமை' பற்றியது. இவ்வாறான உரிமைகளைக் காக்கவும் இவற்றுக்காகப் போராடவும், போராடிப் பெற்றவைகளை நடைமுறைப்படுத்தவுமே இவர்களை மக்கள் தெரிவு செய்கிறார்கள். அதனைவிடுத்து தமக்குக் கிடைக்கும் பன்முக வரவுசெலவுத்திட்ட நிதியிலிருந்து கலாசார மண்டபம், பாடசாலைக் கட்டிடம், நினைவுத்தூபிகள் கட்டுவதும் கோவில் மணிகள், வாத்தியக் கருவிகள், கூரைத்தகரங்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை வழங்குவதும் தாம் தமது கடமையென்று மக்கள் பிரதிநிதிகள் திருப்தியடைந்து விடமுடியாது.

இவை அவர்களது இயலாமைக்கும் ஏமாற்றுத் தனத்துக்கும் சாட்சிகளாகவே அமைகின்றன.

மேலே குறிப்பிட்ட அலுவலகங்களில் தமிழிலும் நிர்வாகம் நடைபெறுமானால் ஆயிரக்கணக்கான படித்த மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் பிள்ளைகளுக்குத் தொழில்வாய்ப்பு கிடைக்கும்.

ஆசிரியத் தொழிலை மட்டுமே நம்பிக்கொண்டிருக்க முடியாது. அஃது எல்லோருக்கும் கிடைத்து விடவும் மாட்டாது.

மலையக மக்கள் என்பவர்கள் யார்?



இந்தியாவும் இலங்கையும் பிரிட்டிசாரின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தபொழுது இலங்கை மலைப் பகுதியில் கோப்பி, தேயிலை, இரப்பர் போன்ற பணப்பயிர்கள் உற்பத்தி செய்வதற்காக, ஐரோப்பிய முதலாளிகளால், தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள்தான் மலையக தோட்டத் தொழிலாளர்கள்.

தமிழகத்திலிருந்து இம்மக்கள் அழைத்துச் செல்லப்படக் காரணமாக இருந்த அன்றைய தமிழகச் சூழல்
கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து பருவ மழை பெய்யவில்லை, இதனால் விவசாயத்துக்கான நீர் ஆதாரம் இல்லாமல் போனது. உணவு உற்பத்தியில் தேக்க நிலை தொடர்ந்ததால், பஞ்சத்தின் பிடியில் இருந்து விடுபட மாற்று வழியின்றித் தவித்த நிலை. இத்தோடு பிரிட்டிஸ் ஆட்சியாளர்களின் நிலவரி, பாசனவரி போன்ற வரி விதிப்புகளைக் கட்ட இயலாமல் தங்கள் நிலங்களை இழக்க நேரிடும் நிலை; ஐரோப்பிய ஆட்சியாளர்கள் இந்தச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பிரிட்டிஸ் காலனிய நாடுகளுக்குக் குறைந்த கூலிக்குப் பணியாற்ற இக்காலப்பகுதியில் தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என்பது வரலாறாகும்.

இந்திய வம்சாவழித் தமிழர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் 
இந்திய வம்சாவழித் தமிழர்கள் எண்ணிக்கை இன்று முப்பது இலட்சமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் 1964 இல் நிகழ்ந்த சிரிமாவோசாஸ்திரி உடன்படிக்கையால் இன்று இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் பதினைந்து இலட்சம்தான் இருக்கும். இன்று இம்மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினை என்பதை விட இருநூறு ஆண்டுகளாக இவர்களின் முன்னோர்களும், இன்று வரை இவர்களும் பிரச்சினைகளை மட்டுமே சந்தித்து வருகிறார்கள் என்றே கூற வேண்டும். 1817ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் துவங்கிய பயணம், பின் கங்காணி மற்றும் தரகர்கள் அழைத்துச் சென்று பெருந்தோட்ட உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டதற்குப் பின், தாயகம் திரும்ப முடியாத நிலை; மலேரியாக் காய்ச்சலாலும், உணவின்றியும் பல்லாயிரக் கணக்கானோர் மாண்டு போனார்கள். தோட்டங்கள் சிறைக்கூடங்களாக ஆக்கப்பட்டு, முழுமையான கொத்தடிமைகளாக ஆனதும், எல்லாவிதமான மனித உரிமை மீறல்களுக்கும் உள்ளாக்கப்பட்டதும் வரலாறு ஆகும்.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்டு உழைத்த இம்மக்களின் சந்ததிகள் இன்று எதிர் கொள்ளும் பிரச்சினைகள் என்பது ஒன்றா, இரண்டா என்று கூற இயலாது. இலங்கையின் அந்நிய வருவாயில்(1 ). 26 % ஈட்டித்தரும் இம்மக்கள், இன்றும் இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்தப்படும் நிலை, (2). 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைமை வாய்ந்த குடியிருப்பு , (3). ஏனைய சமூக மக்களின் வாழ்க்கைத் தரத்தோடு ஒப்பிடுகையில், போசாக்கற்ற உணவும் தரமற்ற குடியிருப்புகளும், (4). குறைந்த நாள்கூலி, உத்தரவாதமற்ற வாழ்க்கை,(5). கல்வியில் பாகுபாடு, (6). அரசு வேலை வாய்ப்பில் பாகுபாடு, (7). பெருந்தோட்டங்கள் துண்டாடல், சிங்களக் குடியேற்றங்கள், தமிழ்ப்பகுதியில் புத்தகோயில்கள்,(8). பால்வாடி(குழந்தை பராமாரிப்பு) நிலையங்களில் தமிழ்க் குழந்தைகளைப் பராமரிப்பதற்காகத் தமிழ்த் தெரியாத சிங்களப் பணியாளர்கள் நியமனம்,( 9). தகுதி வாய்ந்த மாணவர்களுக்கும் உயர்கல்வி பெற முடியாத நிலை, (10). பலவந்தக் கருத்தடை, (11). சுகாதாரச் சீர்கேடு, போதிய மருத்துவ வசதியின்மை, (12). நில உரிமை மறுப்பு, கொத்தடிமைத் தொழில்முறை, தோட்டப்பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் உருவாக மறுப்பது, படித்த இளைஞர்களையும் தோட்டத் தொழில் செய்ய நிர்பந்திக்கும் அவலம், (13). இரண்டு நூற்றாண்டுகளாகத் தக்க வைத்து வந்த மொழி, பண்பாட்டை இழக்கும் நிலை., (14). பெருந்தோட்டங்கள் பராமரிப்பின்மை, (15). மறுக்கப்பட்டுவரும் சனநாயக உரிமைகள், (16). இனக்கலப்புத் திருமணங்கள், (17). தொழிலாளர்களுக்கான வேலை நாள் குறைப்பு போன்ற பிரச்சினைகளை இன்றும் எதிர்நோக்கியுள்ளார்கள். மேலும் மலையகத் தமிழ் மாணவர்களுக்கென தனிப் பல்கலைக்கழகத்தை உருவாக்க மறுப்பது போன்ற அடிப்படையான கல்விப் பிரச்சனைகளும் தொடர்வதைக் காணலாம்.

நில உரிமை, மொழி உரிமைகள்  மறுக்கப்படுவது பற்றி
கடந்த 1972இல் பெருந்தோட்டங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன. இத்தோட்டங்களில் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக மூன்று, நான்கு தலைமுறைகள் வாழ்ந்து வந்தவர்கள் அம்மண்ணில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டனர். துரத்தப்பட்டவர்கள் நிற்கதியாக்கப்பட்டனர். வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித்தரும் இவர்களின் உழைப்பு ஏனைய சமூக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தச் சகல துறைகளுக்கும் பயன்படுத்தப்பட்டபொழுது இவர்கள் தெருக்களில் அவலக்கோலத்தில் ஒரு வேலை உணவிற்குக் கையேந்தி நின்றார்கள். அரசு கையகப்படுத்திய பல தேயிலைத் தோட்டங்கள் துண்டாடப்பட்டுச் சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. இப்படி வழங்கப்பட்ட நிலங்களில் தமிழ்த் தொழிலாளியான ஒரு தோட்டத் தொழிலாளிக்குக் கூட நிலம் வழங்கப்படவில்லை. இம்மக்கள் நில உரிமை பெறுவதையே பெருந்தேசிய ஆதிக்கவாதம் அனுமதிக்கவில்லை. இதுவும் ஒருவகைப் பெருந்தேசிய இன ஒடுக்குமுறை என்றே கூறலாம்.

மொழி உரிமை என்பது கடந்த 1956இலேயே பறிக்கப்பட்டுச் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியாக்கப்பட்டது. பூர்வீகத் தமிழர்களின் தொடர் போராட்டங்கள், வடக்கு, கிழக்கில் தமிழ் இளைஞர்கள் முன்னெடுத்த ஆயுதப்போராட்டங்கள் ஆகியவற்றின் விளைவாக 2006ம் ஆண்டு இலங்கை அமைச்சரவை தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளையும் ஆட்சி மொழியாக அங்கீகாரம் அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள அரசுத் துறைகளில் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. மலையகத்தமிழர்கள் 62% வாழும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிவோர்களில் 80% சிங்களவர்களாகும். பதுளை நகரமக்கள் தொகையில் 26.3% தமிழர்களாகும். ஆனால் பதுளை மாநகரச் சபையில் பணியாற்றுவோர்களில் 450 பேரில் ஒருவர் மட்டுமே தமிழ்த் தெரிந்தவராகும். கண்டி, இரத்தினபுரி, மாத்தளை, பதுளை அப்புத்தளை போன்ற தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் இதே நிலை நீடிக்கின்றது. ஒரு மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையில் 12% தமிழர்கள் வாழ்வோர்களானால் நிர்வாக மொழியாகத் தமிழும் இருக்கவேண்டுமென இலங்கை அரசியல் அமைப்பு உறுதி செய்துள்ளது. ஆனால் பெருந்தேசிய இன ஆதிக்க ஆட்சியாளர்களால் எழுதப்பட்ட சட்டங்கள் அனைத்தும் எழுத்து வடிவில் மட்டுமே பதிவுகளாகியுள்ளனவே தவிர நடை முறைப் பயன்பாட்டுக்கு உதவாத ஒன்றாகவே உள்ளதை அறியலாம்.
மலையகத் தமிழர்கள் எவ்வாறான அமைப்புகளின் கீழ் அணி திரட்டப்பட்டுள்ளார்கள்?

பெருந்தோட்ட உருவாக்கத்துக்குப் பல்லும், சில்லுமாக இருந்த இம்மக்களைக் கொத்தடிமைகளாகவே தோட்ட, நிர்வாகம் வைத்துக் கொண்டது. தோட்டங்களில் வாழும் இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கம் தோன்ற நூறு ஆண்டுகளுக்கும் மேலானது. நாட்டில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருந்த போதும் இவர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க இன்று வரையும் இவர்களுக்கான அரசியல் கட்சி உருவாகவில்லை. மாறாக, எழுபது ஆண்டுகளுக்கு முன் உருவான தொழிற்சங்கங்களின் கீழும் இந்தத் தொழிற்சங்கத் தலைமையோடு முரண்பட்டு வெளியேறும் தலைமைகள் உருவாக்கும் தொழிற்சங்கங்களின் தலைமையின் கீழுமே இம்மக்கள் அணிதிரட்டப்பட்டுள்ளார்கள்.                                             

மலையகத் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக அரசியல் கட்சி ஒன்றை உருவாக்காமல் இருப்பதற் கான காரணம என்ன ?
இம்மக்கள் பணியாற்றும் பெருந்தோட்டத் தொழில் என்பது, தோட்ட நிர்வாகத்தோடு எழும் பிரச்சினைகளோடு சம்பந்தப்பட்டதாகும் . இப்பிரச்சினைகளைக் கையாள்வது தொழிற்சங்கங்கள்தான். தொழிற்சங்கங்களோடு இணைந்த இவர்களின் வாழ்க்கையில் மாற்றுச் சிந்தனைகள் உருவாக, அல்லது உருவாக்க முயல்வோர்களால் தொழிற்சங்கத் தலைமைக்கு ஆபத்து நேரிடும் எனச் சங்கத் தலைமைகள் எண்ணுகின்றன. இத்தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகள் போலவே தங்களை எண்ணுகின்றன. தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் போலவே செயல்பட்டுவருகின்றன. இம்மக்களின் பிரச்சினைகளை அரசியல் ரீதியாக முன்னெடுக்கும் அமைப்புகள் உருவாகாமல் இருப்பதற்கு இத்தொழிற் சங்கத்தலைமைகளே தடையாக இருந்து வருகின்றன. 1980களுக்குப் பின் உருவான சில அரசியல் கட்சிகளும் மலையக மக்களை முழுமையாக அடையாளப்படுத்துவதாக இல்லை.

மலையகத் தமிழர்கள் வாழும் மாவட்டங்கள் அங்குள்ள நிலைமைகள் 
பெருந்தோட்டத்தைச் சார்ந்தவர்கள் பதினொரு மாவட்டங்களில் வாழ்கிறார்கள். கொழும்பிலும், நுவரெலியாவைத் தவிர இதர மாவட்டங்களிலும் சிறிய அளவிலும் 1958க்குப்பின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் குடியேறிய இம்மக்கள் வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலும் வாழ்கிறார்கள். மலையகப் பகுதி என்பது , சிங்களக் கிராமங்களால் சுற்றி வளைக்கப்பட்ட பகுதிகளாகும். சில பகுதிகளில் உள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிங்களக் கிராமங்களை கடந்தே நகரங்களுக்குச் செல்ல வேண்டும்

1964 இல் சிரிமா சாஸ்திரி உடன்படிக்கை உருவானதற்கான வரலாற்றுக் காரணம் 
1920இல் சர்வசன வாக்குரிமை வழங்கும் அரசியல் சட்டச் சீர்திருத்தங்கள் பற்றிய விவாதங்கள் நடைபெறத் தொடங்கியவுடனே, இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கெதிரான நிலைப்பாட்டை சிங்கள ஆட்சியாளர்களே தீர்மானித்தனர். “தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் பொருளாதாரத்துக்கு இன்றியமையாதவர்கள்; ஆனால் அரசியல் செயல்பாட்டுக்கு அல்ல” என்ற பிரச்சாரத்தை முன்வைத்தவர்கள், “இவர்கள். உழைப்பதற்காக மட்டுமே உள்ள அடிமைகள்” என்ற கருத்தோட்டத்தைக் கொண்டிருந்தனர். ஆனால், பிரிட்டிஸ் ஆளுமைக்குக் கீழ் இலங்கை இருந்தபடியால் சர்வசன வாக்குரிமை இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கும் கிடைத்தது. நாட்டுவிடுதலைக்கு முன் நடைபெற்ற 1931ஆம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தல்களில் இரண்டு உறுப்பினர்களை மலையகத் தமிழர்கள் தெரிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அடுத்து வந்த தேர்தலிலும் இரு இந்தியர்களான எஸ். பி. வைத்திலிங்கம், கே. நடேச ஐய்யர் ஆகியவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

1947இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் இருந்து ஏழு தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். 1948இல் நாடு விடுதலை அடைந்தது. இதைத் தொடர்ந்து இந்தியத் தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை மேற் கொண்டவர்களில் ஒருவரான டி.எஸ். சேனநாயக்காவைப் பிரதமராகக் கொண்டு மந்திரிசபை உருவானது. சிறுபான்மைப் பலத்தோடு அதிகாரத்துக்கு வந்த சேனநாயக்கா அதிகாரத்துக்கு வந்த ஆறுமாதத்திலேயே குடியுரிமை பறிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தச் சட்டத்தை எதிர்த்து 35 அங்கத்தினர்களும், ஆதரித்து 55 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன் மூலம் பத்து இலட்சம் இந்திய வம்சாவழித் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. முழுமையான மனித உரிமை மீறலான இச்சட்டத்தைத் திரும்பப் பெறப் போராட்டங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். அது நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து முறையாக இம்மக்களைத் தலைமைகள் வழி நடத்தாத காரணமும், பெருந்தேசிய இன ஆதிக்கத்தின் செயல்பாடுகளும்தான் இவ்வொப்பந்தம் உருவாகக் காரணங்களாகும்.

குடியுரிமை பறிக்கப்பட்டபோது தோட்டப்பகுதிகளில் பலம் வாய்ந்த தொழிற்சங்கங்களாக இருந்தவைகள்
தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் நூறு ஆண்டுகளுக்குப் பின் கோ. நடேச ஐயரால் முதல் தொழிற்சங்கமான இந்தியத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் தொடங்கப்பட்டது. தோட்டங்கள் உள்ளே வெளியார் யாரும் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்த காலம். அத்து மீறி யாரும் சென்றால், சிறைத் தண்டனை விதிக்கப்படும் அளவில் சட்டங்கள் இருந்தன. விற்பனைப் பொருள்களைத் தலையில் சுமந்து செல்லும் சிறு வியாபாரிகளுக்கு இச்சட்டத்தைத் தோட்ட நிர்வாகம் பயன்படுத்துவதில்லை. இந்நிலையில் துணி வியாபாரியைப் போல் தன்னை மாற்றிக் கொண்ட நடேச ஐய்யர், துணிமூட்டையைச் சுமந்து கொண்டு, தோட்டத்தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கத்தின் தேவையைப் பற்றி பிரச்சாரத்தைத் தொடங்கினார். தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறைகளையும் சட்ட மீறல்களையும் துண்டறிக்கைகள் மூலம் படிப்படியாக வெளியில் கொண்டு வந்த முதல் மனிதர் அவரே ஆவார்.

இதைத் தொடர்ந்து தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் 1935இல் செயல்படத் தொடங்கிய இடது சாரிகளின் தொழிற்சங்கம் இரண்டாவது தொழிற் சங்கமாகும். இச்சங்கத்தின் தலைமைகள் தோட்ட நிர்வாகத்தின் அடக்கு முறைக்கெதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்தின. இப்போராட்டங்களில், வரலாற்றுப் பதிவாயிருப்பது முல்லோயா போராட்டமாகும். ஆங்கிலேயத் தோட்ட நிர்வாகத்துக்கெதிராக நடைபெற்ற இப்போராட்டத்தில், கோவிந்தன் என்ற தொழிலாளி காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். முல்லோயாவில் நடைபெற்ற இப்போராட்டம் இடதுசாரிகளைப்பற்றிய அச்சத்தை ஐரோப்பியத் தோட்ட முதலாளிகள் மத்தியில் உருவாக்கியது.

1930ல் நகரப்பகுதிகளில் குறிப்பாக இலங்கைத் தலைநகர் கொழும்பு நகரத்தில் பணியாற்றிய இந்தியத் தமிழ், மற்றும் மலையாளிகளுக்கெதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றும்படியான நிலை உருவானது. இக்காலப் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கானோர் இந்தியர்கள் நாடு திரும்பினார்கள். இந்தியர்களுக்கெதிரான பிரச்சாரங்களை, ஏ.ஈ.குண சிங்க போன்ற தொழிற்சங்கத் தலைவர்களும், சிங்கள பூர்ஷ்வாக்களும் இணைந்து மேற்கொண்டார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் 1939இல் ஜவஹர்லால் நேரு அவர்கள் இலங்கைப் பயணத்தை மேற் கொண்டார்.

இலங்கையில் நடைபெற்று வந்த சில்லறை வணிகத்திலும், மொத்த வியாபாரம், மற்றும் ஏற்றுமதியிலும் இந்திய முதலாளிகளின் மூலதனம் 90% இருந்த காலம் அது. மார்வாடிகளின் தொழில் நிறுவனங்கள் கனிசமான செல்வாக்கைச் செலுத்தியது. குண்டன் மால்ஸ் போன்ற துணி ஆலைகள், மார்வாடிகளுக்குச் சொந்தமானவைகளாக இருந்தன. இவ்வணிகர்களை ஒட்டுமொத்தமாக இணைக்கும் அமைப்புகள் எதுவும் இருக்கவில்லை. சிங்களவர் மத்தியில் உருவான இந்தியர் எதிர்ப்பு நிலையை எதிர்கொள்ள வேண்டுமென்றால் இந்தியர்கள் அமைப்பு ரீதியாக அணிதிரட்டப்பட வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு அவர்கள் எண்ணி இருக்க வேண்டும். ஆகவேதான் கொழும்பு நகரத்தில் இருந்த வணிகர்களான லெட்சுமணன் செட்டியார், அசீஸ், தேசாய், வோரா போன்றவர்களை உள்ளடக்கிய இலங்கை இந்தியக் காங்கிரஸ் என்ற அமைப்பு உருவானது. இதுவே 1940இல் இலங்கை இந்தியர் தொழிலாளர் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் செல்லத் தொடங்கியது.

மேலே தெரிவித்துள்ளதைப் போல 1947இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு ஏழு உறுப்பினர்கள் இத்தொழிற்சங்கத்தின் மூலமாகத் தெரிவாகிச் சென்றார்கள். இத்தேர்தலில் இலங்கை இந்தியக் காங்கிரஸ் போட்டியிடாத தொகுதிகளில் இம்மக்களின் வாக்குகள் இடதுசாரிக் கட்சியில் பதினான்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்ய உதவியது. ஆக மலையகத்தின் பலம் வாய்ந்த தொழிற்சங்கமாக அன்று முதலிடத்தை வகித்த சங்கம் இலங்கை இந்தியர் தொழிற்சங்கமாகும், இரண்டாம் இடத்தில் இடதுசாரிக் கட்சியின் தொழிற்சங்கம் இருந்தது.

இலங்கையின் வெளிநாட்டு வருவாயில் 60% மேல் ஈட்டித் தருவதில் முதுகெலும்பாக உள்ள மக்களின் குடியுரிமைப் பறிப்புக்கெதிரான போராட்டம் 
தோட்டப் பொருளாதாரத்தைக் கொண்டுதான் நாட்டின் பெரும்பகுதியான தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். இப்பொருளாதார வருவாயில் தேக்கநிலை ஏற்பட்டால், நாட்டை ஆளும் தலைமை, பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துத் தன் ஆட்சியை இழக்க நேரிடும். அத்தோடு பெரும்பாலான பெருந்தோட்டங்கள் ஐரோப்பியக் கம்பனிகளுக்குச் சொந்தமானதாக இருந்தன. தேயிலை பறிப்பதில் நாள்கள் தாமதமானாலே தேயிலைத் தளிர்களைப் பறிக்க இயலாமல் போய்விடும். இதனால் பெரும் இழப்புகளை நிர்வாகம் சந்திக்கும். அரசு இயங்குவதிலும் நெருக்கடிகள் உருவாகும். இப்படியான சூழ்நிலை இருந்தும், இலங்கை இந்தியக் காங்கிரஸ் ஒரு வலுவான போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. இடதுசாரிகள் தங்கள் பங்கிற்கு 1952 இல் ஒரு கண்டனக் கூட்டத்தோடு தங்கள் எதிர்ப்பை நிறுத்திக் கொண்டனர்.

பத்து இலட்சம் மக்கள் மீது திணிக்கப்பட்ட மனித உரிமை மீறல் சட்டத்தையும் இதன் விளைவால் பத்து இலட்சம் பேர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதையும் எவ்வளவு சாதாரண விடையமாக இத்தலைமை எண்ணியது. இப்படி எண்ணக் காரணமென்ன என்பது இன்றும் கேள்வி வடிவத்திலே உள்ளதால்தான் இலங்கை மலையகத்தில் இன்றும் அது தனது வாரிசுச் சங்கக்கொடியை உயரப் பறக்க வைத்துள்ளதை அறியலாம். இத்தலைமையின் துரோகத்தனத்தை வெளிப்படுத்தாத வரை இந்திய வம்சா வழித் தமிழர்கள் சரியான தலைமையைத் தெரிவு செய்வதில் இன்னும் பல ஆண்டுகளைக் கடக்க நேரிடும்.

இம்மக்களின் குடியுரிமைப் பறிப்பின் போது பூர்வீகத் தமிழ்த் தலைவர்களின் நிலைப்பாடு 
பூர்வீகத் தமிழர்களை முன்னிலைப்படுத்திய தமிழ்க் காங்கிரஸ் கட்சித் தலைமை என்பது நில உடைமைச் சமூக அமைப்பின் சிந்தனையைக் கொண்டவர்களாகவே (பெரும்பாலானோர்) இருந்தது. இவர்கள் தமிழ் உணர்வாளர்களா என்றால் அது ஆய்வுக்குரியது. மலைநாட்டுத் தமிழர்களைக் கூலிகளாகவும் அந்நியர்களாகவும் பார்த்த பார்வையின் விளைவுதான், சுந்தரலிங்கம், சிற்றம்பலம் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியுரிமைப் பறிப்பை ஆதரித்து வாக்களித்தது. ஜி. ஜி. பொன்னம்பலம் தலைமையிலிருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். ஆனால், இந்தியர் குடியிருப்போர் சட்டத்தைப் பொன்னம்பலம் ஆதரித்து வாக்களித்தார். தந்தை செல்வா அவர்கள் எதிர்த்து வாக்களித்தார். தந்தை செல்வா அவர்கள் இந்நிகழ்வைக் கண்டித்துத் தமிழ்க் காங்கிரசிலிருந்து வெளியேறினார் என்பதெல்லாம் வரலாறாகும்.

வாக்குரிமைப் பறிப்புக்குப் பின் மலையகத் தமிழர்கள் மத்தியில் பூர்வீகத் தமிழர்களுக்கெதிரான கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. இதில் உண்மை எதுவாக இருக்க முடியும்? சுந்தரலிங்கமும் ,சிற்றம் பலமும், ஆளும்கட்சியில் அமைச்சர்களாக இருந் தார்கள். ஐக்கிய தேசியக் கட்சி தலைமை கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த பின், ஆளும்கட்சியில் இருந்து சுந்தரலிங்கம் வெளியேறினார். ஜி.ஜி.பொன்னம்பலம் அமைச்சரானார். குடியுரிமைப் பறிப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து விவாதம் நடந்தபொழுது, தொண்டமான் அவர்கள் நாடாளுமன்றத்துக்கே செல்லவில்லை. இரண்டு வடக்குத் தமிழ் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித் ததும் ஜி.ஜி.பொன்னம்பலம் ஆதரித்து வாக்களித் ததும் ஏற்கத்தக்கதல்ல.

ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் தலைவராகத் திகழ்ந்த திரு. தொண்டமான் அவர்கள், நாடாளுமன்றத்திற்குச் செல்லாதிருந்தது எந்த வகையில் சரியாகும்? குடியுரிமைப் பறிப்புச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி இலங்கையின் பொருளாதாரத்தை முடக்கும் போராட்டத்தை அப்பொழுது மேற்கொண்டிருந்திருக்க வேண்டும். பிரிட்டிஸ் ஆட்சியாளர்களால் அழைத்துச் செல்லப்பட்ட இம்மக்கள் குடியுரிமை இழக்கும் பிரச்சினையில் பிரிட்டிஸ் ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்க வேண்டிய நேரத்தில், அதனைச் செய்யாமல் இத்தலைமை நழுவ விட்டதேன்?

இப்படியான ஒரு போராட்டத்தை முன்னெடுத்திருந்தால், ஐரோப்பிய முதலாளிகளின் கைகள் பிரிட்டிஸ் நாட்டின் ஆட்சிக் கதவைத் தட்டியிருக்கும். இந்திய அரசும் இம்மக்கள் சம்பந்தமான பொறுப்பும் கடமையும் இருப்பதை உணர்ந்து, இதில் சம்பந்தபட்டிருக்கும். இடதுசாரிகள், இப்போராட்டத்திற்கு முழுமையான ஆக்கப்பூர்வமான ஆதரவை தந்திருப்பார்கள். மறுபுறம் புத்த மதத் துறவிகள் மத்தியில் இருந்து, சிறு அளவிலான ஆதரவு கிடைக்கும் வாய்ப்பும் இருந்தது. பூர்வீகத் தமிழ்த் தலைவர்களில் பலர் இப்போராட்டத்திற்கு ஆதரவை வழங்கி இருப்பார்கள். புற நிலைமைகள் சாதகமாக இருந்தபோதும், மலையகத் தமிழ் தலைமை ஏன் இதைச் செய்யவில்லை? மலையகத்தில் உள்ள அறிவு ஜீவிகள் இதை எண்ணிப் பார்க்க மறுப்பதேன் ? பூர்வீகத் தமிழ்த் தலைவர்கள் செய்த தவறுகளை மட்டும் பேசும் இவர்கள் தங்களை வழி நடத்திச் சென்ற இத்தலைமையின் மாபெரும் தவறின் விளைவுகள் பெரும் பாதிப்புகளை உருவாக்கி விட்டன என்பதை இவர்கள் இன்றும் ஏற்க மறுப்பதேன்? தாயகம் திரும்பியோர்களில் சிலரிடம் இன்றும் இந்நோய் தொத்திக் கொண்டிருப்பதைக் காணலாம். தவறுகள் எல்லாப் பக்கங்களிலும் நிகழ்ந்துள்ளன. அதைச் சற்று அளவீடு செய்து பார்ப்பதன் மூலம் நமது கருத்து நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வாய்ப்புகள் கிட்டும்.

பாட்டாளி மக்கள் விடுதலைக்குக் குரல் கொடுக்கும் இடது சாரிகள் தலைமை இப்போராட்டத்தை முன்னெடுக்காமை பற்றி
இடதுசாரிக் கட்சிகள், பூர்வீகத் தமிழர்களின் உரிமைகளுக்கும், இந்திய வம்சாவழித் தமிழர்களின் பிரச்சினைகளுக்கும் பின்வரும் தீர்வுகளை 1940களில் முன் வைத்தனர்: பூர்வீகத் தமிழர்கள் சுயநிர்ணய உரிமை உள்ள அரசியல் அதிகாரத்தைப் பெறுவது, இந்திய வம்சாவழித்தமிழர்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது. குடியுரிமைப் பறிப்பு வரை இக்கொள்கைகளில் அவர்கள் உறுதிபட இருந்தவர்கள்.

குடியுரிமைப் பறிப்புக்குப்பின் வாக்கு வங்கி அரசியல் காற்று வீசத் தொடங்கியது. வடக்கு கிழக்கில் உள்ள தமிழர் அமைப்புகள் மொழியை முன்னிலைப்படுத்தினார்கள். இதனால், வர்க்க அரசியல் எடுபட மறுத்தது. மலையகப் பகுதிகளில் தொழிற்சங்கத்தின் தேவைகள் அதிகரித்து வந்தகாலம். இலங்கைத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமை தமிழராக இருந்ததால், அதிக எண்ணிக்கையில், மலையகத் தமிழர்கள் இத்தலைமையின் கீழ் அணிதிரண்டார்கள். இந்நிலையில் வாக்குரிமைப் பறிப்புக்குப்பின், வாக்குரிமை அற்ற மக்களிடம், வாக்கு வங்கி அரசியல் பயன்படாது என்ற எண்ணம் கருக்கொண்டது. அத்தோடு, இம்மக்கள் கோரிக்கைகளை ஆதரித்தால், பெரும்பான்மை மக்களாக இருக்கும் சிங்களவர்களிடம் தாங்கள் தனிமைப்பட நேரிடும் என இவர்கள் எண்ணி இருக்க வேண்டும். 194 தொடக்கம் 1952 வரை தன் குரலை உயர்த்தியவர்கள், 1952 தேர்தலுக்குப் பின் இம்மக்களின் உரிமைக்காகப் போராடுவதிலிருந்து தங்களைப் படிப்படியாக விலக்கிக் கொண்டார்கள் என்றே கூறலாம். ஆக மலையகத் தமிழர்களும் இடதுசாரிகள் தலைமையை முழுமையாக ஏற்கவில்லை. பூர்வீகத்தமிழர்களும், இத்தலைமையை முழுமையாக ஏற்கவில்லை. ஒரு வேளை இந்த இரண்டு பகுதிகளில் உள்ள தமிழர்கள் இடதுசாரித் தலைமையின் கீழ் அணிதிரட்டப்பட்டிருந்து, இடது தலைமை இனவாத பக்கம் சாயாது இருந்திருப்பின் 1940 காலப்பகுதிகளில் எடுத்த தீர்மானம் நடை முறைப்படுத்தப்படும் சூழ்நிலை உருவாகி இருக்கலாம். இப்பொழுது நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கும், துயரங்களைத் தமிழ்ச் சமூகம் சந்திக்காமல் இருந்திருக்கலாம்.

அதே வேளை இரண்டு தமிழ்ச் சமூகங்கள் மத்தியிலும் தங்களுக்கு முழுமையான ஆதரவு இல்லை என்பதால் இடது தலைமைகள் எடுத்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை எந்த வகையிலும் நியாயப்படுத்த இயலாது. வாக்குவங்கி அரசியல் இவ்வாறான சந்தர்ப்பவாத அரசியலுக்கு வழிவகுக்கும். அத்தோடு நாட்டுமக்கள் மத்தியிலிருந்து தனிமை படுத்தப்படும் அவலத்திற்கும் தள்ளப்படுவார்கள் என்பது வரலாறு கற்றுத்தரும் படிப்பினையாகும் .இதை இடது தலைவர்கள் உணர்வார்களா என்றால் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

சண்முகதாசன் தலைமையில் 1967 காலங்களில் மலையகப் பகுதியைக் குலுக்கிய செங்கொடிச் சங்கத்தின் செயல்பாடுகள் 
ஏனைய சங்கங்களின் செயல்பாட்டைவிட மாறான செயல்பாட்டை அது மேற்கொண்டது. மார்க்கீயச் சிந்தனையைத் தோட்ட இளைஞர்கள் மத்தியில் கொண்டு சென்றது. “மலையக மக்கள் பிரச்சினைக்கு புரட்சி ஒன்றே தீர்வு” என்ற முழக்கத்தை முன்வைத்தது தொழிற்சங்க அரங்கக் கூட்டங்களில் இக்கருத்தை அது வலியுறுத்தியது. ஆனால் இலங்கையில் உள்ள ஏனைய சமூகங்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் இடையே நிலவும் அரசியல் உரிமை சம்பந்தமான வேறுபாடுகள் என்ன என்பதை அது காணத் தவறியது. குடியுரிமைப் பிரச்சினை தீராதநிலை, வாக்குரிமை இல்லாமல் இருப்பவர்கள், கல்வி, மருத்துவம், தொழில் சமூக வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு, நிரந்தரக் குடியிருப்பு, நில உரிமை மறுப்பு, நாடற்றோர் பிரச்சினையில் தள்ளாட்டம், இப்படிப் பல பிரச்சினைகளைச் சுமந்து நிற்கும் இவர்கள் மத்தியில் “புரட்சி ஒன்றே தீர்வு” என்ற முழக்கம் எவ்வளவு அபத்தமானது! இம்மக்களை இந்நாடு முழுமையாக ஏற்காத காலம், சிங்களப் பெருந்தேசிய இனவாதம் தங்கு தடையின்றி வேரூன்றி முன்னெடுக்க இயக்கங்கள் புதிய வடிவம் (ஜே.வி.பி.) பெற்றுச் செயல்பட்ட காலத்தில் இம்முழக்கம் எவ்வாறு நடைமுறைச் சாத்தியம்? அதுமட்டுமல்ல, புரட்சி என்ற சொல்லாடல் மட்டுமே மலையகப் பகுதிகளில் உலாவந்தனவே தவிர, புரட்சிக்கான தயாரிப்புகள் அல்ல.

1971 இல் மக்கள் விடுதலை முன்ணணி (ஜே.வி.பி.) நடத்திய ஆயுதக் கிளர்ச்சியின் போது ஜே.வி.பி. இயக்கத்தில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத மலையக இளைஞர்கள் காவல் துறையினரால் சித்திரவதைப் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள், அதே வேளை இச்சங்கம் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்க உரிமைகளை வென்றெடுப்பதில் ஏனைய சங்கங்களை விட முன்மாதிரியாக இருந்தது என்று கூறலாம்.

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates