Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

செக்கு மாடாகும் பெருந்தோட்டத் தொழிற்துறை - சதீஸ் செல்வராஜ்

தோட்டத் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலில் உருவாக்கப்பட்டு, உலக அரங்கில் ஆச்சரியக் குறியாய் நிமிர்ந்து நின்ற இலங்கைப் பெருந்தோட்டங்கள்; இன்று வலு விழந்து வளைந்து கூனிக்குறுகி கேள்விக் குறியாய் நிற்கின்றன. தேயிலைப் பயிர்ச் செய்கையின் ஆரம்பக் கட்டம் படிப்படியாக வளர்ந்து பிரமாண்ட வளர்ச்சியைக் காட்டி, பெருந்தோட்ட கம்பனி பண முதலைகளுக்கு இலாபத்தை அள்ளிக் கொட்டுவதாகவும், தோட்டச் சிறையில் அடைக்கப்பட்ட கூலித் தொழிலாளர்களுக்கு வறுமையையும் ஏழ்மையையும் பரிசாக வழங்குவதாகவும் அமைந்திருந்தது.

1871ம் ஆண்டில் இருந்த 995 பெருந்தோட்டங்கள் 1901 இல் 1857 ஆகின. 1921ம் ஆண்டாகியபோது 2367 ஆக உயர்ந்தன. 10 வருடங்களின் பின்னர் அவ்வெண்ணிக்கை 3288 ஆக அதிகரித்துப் போயின. பெருந்தோட்டம். என்றாலே, பணப் பயிர்களில் இருந்து செல்வத்தை அறுவடை செய்யக்கூடிய நிலை உருவாகியிருந்தது. வியர்வை சிந்தி, இரத்தம் சிந்தி அறுவடை செய்தவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் ஆயினும், அறுவடையின் பலாபலன்கள் அவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. இன்று வரையிலும் அந்தக் கனி கைக்குக் கிட்டாமலேயே இருக்கின்றது.

வர்க்க எழுச்சிகளும், உரிமைப் போராட்டங்களும் கால ஓட்டத் திசையினை தீர்மானித்திட, அதில் அகப்பட்ட பெருந்தோட்டங்கள் ஒரு கட்டத்தில் அரசுடமையாக்கப்பட்டன. ஆனால், அன்றைய ஆட்சியாளர்களால் தேயிலைத் தேசத்து மக்கள் நாடற்றவர்களாகினர். குடியுரிமை இழந்து போயினர். இரத்தச் சொந்தங்களைப் பிரிந்து வாடினர்.

இலங்கை அரசியலிலும், பொருளாதார கொள்கையிலும் பிரிக்க முடியாத இடத்தைப் பிடித்திருந்த பெருந்தோட்டங்கள் 1992ம் ஆண்டு அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாச இருந்தசமயம், தோட்டத் தொழிற்சங்கங்களினதும், மலையக அரசியற் தலைமைகளினதும் பூரண அனுசரணையுடனும், ஒத்தாசையுடனும் 22 பல்தேசியக் கம்பனிகளுக்கு 55 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டன. உண்மையில் அதை ''தாரைவார்த்தனர்" என்று கூறுவதே பொருத்தமானதாகும். குத்தகைப் பணமாக 609.5 மில்லியன் ரூபாவை அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பெற்றுக் கொண்டது. பெற்றுக் கொண்ட இப்பணத்தில் அன்று தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதிய எந்தவொரு வேலைத்திட்டமும் மேற்கொள்ளப்படவில்லை.

அரச தோட்டங்கள் தனியார் தோட்டங்களாகின. அதே நேரம், பல்தேசிய கம்பனிகள் தங்களது சொந்தப் பெயர்களை மறைத்து போலியாக உள்ள பெயர்களை வைத்துக் கொண்டன. குறிப்பிட்டுச் சொன்னால், மஸ்கெலியா பிளான்டேஷனானது, போபர்ஸ் என்ட் வர்க்ஸ் கம்பனிக்கு உரித்தானது. மல்வத்த வெளிபிளான்டேஷனானது, மெஸ்கவ் கம்பனிக்கு உரித்தானது. இந்த இரு கம்பனிகளும் அமெரிக்காவிற்கு சொந்தமானது. அன்றைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் துணையோடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏகாதிபத்திய நிறுவன வர்க்கம் மலையகம் வரை ஊடுருவியிருந்தது. அன்றைய மலையக இடது சாரிகளின் எழுச்சியையூம் நசுக்கிக் கொண்டிருந்தது. இப்பெருந்தோட்டக் கம்பனிகள் பெருந்தோட்டங்களைக் கவனிக்காது கைவிட்டனர். பெருந்தோட்டங்கள் தந்த இலாபத்தினை பிறநாடுகளில் முதலீடு செய்து வேறு வகையிலும் இலாபத்தைத் தேடினர். இன்று வரையிலும் இந்த நிலைமையில் மாற்றமில்லை.

தற்போது பல்தேசிய கம்பனி தனது கொழும்புத் தலைமையகத்தின் காரியாலயத்திற்கு 100 மில்லியன் ரூபாயை ஒதுக்குகிறது. கிரிக்கட் விளம்பரத்திற்காக மாத்திரம் வருடமொன்றிற்கு 25 மில்லியன் ரூபாயை ஒதுக்குகிறது. இங்கு தோட்டத் தொழிலாளர்களின் நிலை என்ன? அதுதான் நான் எழுத்துச் சமரின் ஆரம்பத்திலேயே கேள்விக்குறியில் தொடங்கினேன்.

பல்தேசியக் கம்பனிகள் உடன்பட்டிருந்த உடன்படிக்கைகளை தற்போது மறந்துள்ளன. உதாரணமாக, ''கட்டாயமாவே 3 சதவீதம் மீள்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட வேண்டும்." என்ற நிபந்தனை இருக்கின்ற பொழுது, ஆரம்பத்தில் மாத்திரம் (1992 - 1994) 0.3 சதவீதம் மீள்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அது கைவிடப்பட்டது.

அது மட்டுமல்லாது, பெருந்தோட்டங்களில் காணப்பட்ட சவுக்கு மரங்கள், நீரை சேமிக்கும் வாகை மரங்கள், நம் நாட்டு தேசிய மரங்களை அழித்து விற்பனை செய்ததோடு, வெள்ளையர்களால் கொண்டு வரப்பட்ட தேப்பன்டைன், கம் ட்ரீஸ் போன்ற வர்த்தக மரங்களை நாட்டியதன் மூலம் பெருந்தோட்டம் பாலை நிலமாகிக் கொண்டிருக்கிறது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தை (1999 இற்கு பின்னர்) நிபந்தனைகள் அடிப்படையில், முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற் சங்கங்களுக்கிடையில் கூட்டமைத்து நாட் கூலி சம்பள முறையைக் கொண்டு வந்து, தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உரிமையையும் பறித்தெடுத்தனர்.

தோட்டத் தொழிலாளர்களின் நாட்கூலியை அதிகரிக்க இரு வருடத்திற்கு ஒருமுறை அவர்களே ஒன்று கூடி அவர்களே முடிவெடுத்தும் கொள்கின்றனர். இதுதான் உறுதியும் அறுதியும் இறுதி முடிவாகிறது. அண்மையில் கூட்டு உடன்படிக்கை ஒன்றுகூடலில், பெருந்தோட்டம் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி இலங்கை அரசாங்கம், மலையக தலைமைகள், தொழிற்சங்கங்கள் என்பவற்றின் அரவணைப்புடன் தோட்டத் தொழிலாளர்களுக்கான நாட்சம்பளத்தை கம்பனி மட்டுப்படுத்தியது.

2006 இற்கு பின்னர், இலங்கை தேயிலை ஏற்றுமதியில் பாரிய நட்டம் ஏற்பட்டபோது, தேயிலைத் தொழிற்றுறையும், இலங்கை அரசும் அதனை மீளக் கட்டி யெழுப்ப வேலைத்திட்டங்களை மேற்கொள்ளாததன் காரணத்தால் ''சிலோன் டீ'' யால் உலகச் சந்தையில் பிரகாசிக்க முடியாமல் போனது.

1999ம் ஆண்டு, கூட்டு உடன்படிக்iயின் பிரகாரம் ஒரு தோட்டத் தொழிலாளியின் நாட்சம்பளம் 101 ரூபாயாக காணப்பட்டது. தற்போது அதாவது, 2019 இல் நாட் சம்பளம் 700 ரூபாயாகக் காணப்படுகிறது. ஆக, 20 வருடங்களில் 599 ரூபாய் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 30 ரூபாய் மாத்திரமே சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், வரி, வாழ்க்கைச் செலவு மற்றும் இதர செலவு என அனைத்தும் சம்பள உயர்வை விடபல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நாளொன்றுக்கு 1 சதம் சம்பள உயர்வாக அதிகரிக்கப்பட்டதே இதுவரையில் மலையகத் தலைமைகளினதும், தொழிற் சங்கங்களினதும் பெரும் சாதனையாக இருக்கின்றது. இதற்கு வழிசமைத்துச் சென்றவர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் ரணசிங்க பிரேமதாச ஆவார்.

இன்று பெருந்தோட்டக் கம்பனிகளானது தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறுகிறது. அத்தோட்டங்களை அரசாங்கத்திடம் மீளவழங்க கம்பனிகள் தயாரில்லை. அதற்கு பதிலாக ஆணைக்கொய்யா, கறுவா, கோப்பி, இறப்பர், செம்பனை, பழப்பயிர்கள், மரக்கறிகள், பூஞ்செடிகள் போன்ற மாற்றுப் பயிர்களை பயிரிட தயாராகி வருகின்றனர். ''கோப்பி அடிமைக்காலம் முடிந்தது! தேயிலை அடிமைக் காலம் முடியப் போகிறது! மீளவும் இந்தக் கொத்தடிமைக் காலத்துக்கே போகப் போகிறோமா? அல்லது எதிர்காலத்தை திருத்தி எழுதப் போகிறோமா?" என்ற கேள்வியை பெருந்தோட்டமக்களிடமே விட்டு விடுகிறேன்.

மாற்று பயிர்ச் செய்கையோடு இணைந்த மற்றொருமாற்றுத் திட்டத்தையும் பல்தேசியக் கம்பனிகள் ஆரம்பிக்க 'ஸ்கெட்ச்' போட்டுள்ளது. அதாவது, மலை
நாட்டு நீர் வளங்களை சுவீகரித்து இலாபம் பார்த்தல் ஆகும்.

இது இவ்வாறிருக்க, இலங்கைப் பெருந்தோட்டத்தை நிர்வகிக்கும் முன்னணி நிறுவனமான அக்கரைப் பத்தனை மற்றும் கொட்டகலை பிளான்டேசன்கள் (நிஜப் பெயர் லென்கெம் நிறுவனம்) நட்டத்தில் இயங்குவதாகக் கூறிக்கொண்டு, தோட்டங்களை இனி பராமரிக்க முடியாது என்ற நொண்டி சாட்டை முன்வைக்கிறது. அதன் எதிர் விளைவாக, அக்கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியை குறிப்பிட்ட நேரத்தில் வைப்பில் இடாமல் இருக்கிறது. சம்பள அதிகரிப்பின் 40 சதவீதத்தை வழங்காமல் நட்டத்தைக் காட்டுகிறது.

ஆனால், அக்கம்பனிகள் காட்டும் நட்டம் உள்ளூர் பெருந்தோட்டங்களில் ஏற்பட்ட நட்டமல்ல! இலங்கைப் பெருந்தோட்டத்தில் பெற்ற இலாபத்தில் லென்கம் கம்பனி வியட்நாமில் பாரிய செம்பனை (Palm oil) திட்டத்தை ஆரம்பித்தது. அதில் லென்கம் கம்பனி பாரிய நட்டத்தையும், பின்னடைவையும் அடைந்தது. இந்த நட்டத்தையே அக்கரப்பத்தனை மற்றும் கொட்டகலை பிளான்டேசன்கள் தோட்டத் தொழிலாளர்களின் தலையில் போட்டுள்ளது.

இன்று அந்த தோட்டத்தின் மக்கள் நடுத் தெருவுக்குவரும் நிலை ஏற்பட்டுள்ளது. E P.F , E .T .F கிடைக்காத நிலைமையும் காணப்படுகிறது. ரணசிங்க பிரேமதாச முதல் அதன் பின் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரி - ரணில் அரசாங்கம் அனைவரும் பெருந்தோட்டங்களின் மக்களுக்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளாது அவர்களைக் கைவிட்டனர்.

ஆக, எதிர்வரும் காலங்களில் அனைத்து பெருந்தோட்டங்களுக்கும் இந்த நிலைமை தோன்றலாம். தோட்டத் தொழிலாளர்கள் நடுத் தெருவில் நிறுத்தப்படலாம். இதற்கெதிராக குரலெழுப்பவேண்டிய கட்டாயம் மலையக புத்திஜீவிகள், கலைஞர்கள், இளைஞர் யுவதிகள், சமூக நலன் விரும்பிகள் உட்பட எம் அனைவரிடமும் உண்டு. இதுவரை பயணித்த அதிகார வர்க்கத்தின் ஆட்சிப் பாதைக்கு பதிலாக மாற்று வழியை தேர்ந்தெடுக்க வேண்டிய கடப்பாடும் அனைவருக்கும் உண்டு.

இவ்விடத்தில் தோட்டத் தொழிலாளர்கள் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து சிந்தித்து செயற்படு வார்களாயின், மலையகம் நமதே! மலையகம் உழைக்கும் மக்களினதே! நம் அடுத்தடுத்த நகர்வுசரியாக அமைந்தால் முழு இலங்கை தேசமும் பாட்டாளிகளினதே!

நன்றி - தேசம்

பண்டாரநாயக்க கொலையில் CIA (பண்டாரநாயக்க கொலை - 5) - என்.சரவணன்


மாபிட்டிகமே புத்தரக்கித்த தேரர் (1921-1967), தல்துவே சோமராம தேரர் (1915-1962) ஆகிய பிக்குமாரே கொலை செய்தார்கள் என்பது வரலாறு. அதன் அடிப்படையில் அன்றைய உள்துறை - வீடமைப்புத்துறை அமைச்சர் விமலா குணவர்தனவின் கூட்டில் இந்த கொலை அரங்கேறியது என்பது மிகப் பிரபலமான வாதம். அதே வேளை இவர்களையும் கொலைச் சதி வலையில் சிக்கவைத்தது அமெரிக்க சீ.ஐ.ஏ என்கிற வாதம் இன்றும் நிலவுகிறது. அதை அப்படியே ஏற்று நம்பும் பலர் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள். அதற்கான வாய்ப்புகளையும் கூட பலமாக முன்வைக்கப்படுவதை காண முடியும்.

சீ.ஐ.ஏ இக்கொலையை செய்தது என்று கூறுவதற்கான நேரடி ஆதாரங்களைக் காட்ட முடியாத போதும், பண்டாரநாயக்கவை இல்லாமல் செய்வதில் அமெரிக்காவுக்கு அந்த நேரத்தில் இருந்த தேவை என்ன? அமெரிக்கா அதே காலப்பகுதியில் உலகில் தனக்கு இசைவான ஆட்சிகளை நிறுவதற்காகவும், தனக்கு சாதகமில்லாத சக்திகளை களையெடுப்பதற்காகவும் செய்த சதிகள் உலக அளவில் அம்பலப்பட்ட செய்திகளே. கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோவைக் கொல்வதற்கு கூட 638 தடவைகள் அமெரிக்கா முயற்சி செய்தது என்பது பிரபலமான செய்தி. அப்படிப்பட்ட சதிகள் அனைத்துமே நேரடி ஆதாரங்கள் காட்ட முடியாமல் போனவை தான். ஆனால் உலகின் பலம் வாய்ந்த உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ அந்நிய  நாடுகளில் மேற்கொண்ட நாசகார பணிகள் இரகசியமானவை அல்ல. உலக நாடுகளின் அரசியல், பொருளாதார நிகழ்ச்சி நிரலைக் கட்டுபடுத்துவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட, மேற்கொண்டு வரும் திகிடுதத்தங்கள் உலகம் அறியாதது அல்ல.

மேட்சனின் நூல்
2012 ஆம் ஆண்டு வேய்ன் மேட்சன் (Wayne Madsen) என்கிற பிரபல புலனாய்வுப் பத்திரிகையாளர் சுவாரசியமான ஒரு நூலை வெளியிட்டிருந்தார். “ஜனாதிபதியை உற்பத்தி செய்தல்” (The Manufacturing of a President) அந்த நூலின் தலைப்பு. உலக நாடுகள் பலவற்றில் அமெரிக்க உளவுச் சேவை தமக்கு தேவையான, தமக்கு வசதியான ஆட்சிகளை நிறுவதற்காக செய்த சூழ்ச்சிகள், ஆட்சிக் கவிழ்ப்புகள், படுகொலைகள் குறித்து எழுதப்பட்ட நூல் அது. அமெரிக்க இரகசிய ஆவணங்கள், முக்கியஸ்தர்களின்  நேர்காணல்கள், சர்வதேச விசாரணைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு ஆராய்ந்து வெளியிடப்பட்ட நூல் அது.

சேர் ஜோன் கொத்தலவலவை பலமடையச் செய்வதற்காக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென நிதிகளைக் கொடுத்து ஊக்குவித்த போதும் அவை ‘சோஷலிச’ பண்டாரநாயக்கவை தோற்கடிப்பதற்கு போதுமானதாக இருக்கவில்லை என்றும் பண்டாரநாயக்க கொலையின் பின்னணியில் சீ.ஐ.ஏவின் வகிபாகம் குறித்தும் அதில் எழுதுகிறார்.

இந்தோனேசியாவின் ஆன்மீகத் தலைவராக கொண்டாடப்படும் பாபக் (Bapak அல்லது Pak Subuh என்றும் அழைப்பார்கள்) இந்தோனேசியாவில் கொம்யூனிஸ்டுகளை ஒழிப்பதற்காக அமெரிக்க சீஐஏ வின் ஏஜென்டாக இயங்கியதாக பிற்காலத்தில் அம்பலப்படுத்தப்பட்டவர். அவர் இலங்கைக்கும் வந்திருக்கிறார்.

1958 ஆம் ஆண்டு பாபக் இலங்கை வந்தார்.  “Subud” என்கிற ஆன்மீக இயக்கத்தை நிறுவ அவர் இலங்கை வந்திருந்தார். (சுபுட் இயக்கம் இன்றும் இலங்கையில் இயங்கி வருகிறது) இலங்கையில் பௌத்த மதத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கிற இயக்கம் என்று கூறி அவரை 48 மணித்தியாலங்களுக்குள் இலங்கைத் தீவை விட்டு வெளியேறும்படி கட்டளையிட்டார் பண்டாரநாயக்க. இந்த கட்டளையை பிறப்பித்த சில நாட்களில் பண்டாரநாயக்க சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் படுகொலையின் பின்னணியில் சீ.ஐ.ஏ இருக்கிறது என்கிற வாதமும் சந்தேகமும் இன்று வரை வலுவாக நிலவிவருகிறது.

இந்த விபரங்களை மேற்படி நூலில் வேய்ன் மேட்சன் விபரித்துச் செல்கிறார்.
அமெரிக்க அதிபர் Dwight Eisenhower  உடன்
பண்டரநாயக்காவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு
1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க ஆட்சியமைத்தபோது சுதேசியம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, கொம்யூனிச ஆதரவு போன்ற நிலைப்பாடுகளை எடுத்தவர். அதுபோல மேற்கு நாடுகளால் வெறுக்கப்பட்ட இலங்கையின் இடதுசாரி கட்சிகளுடன் அவர் கூட்டு சேர்ந்து இயங்கினார். கூட்டு சேர்ந்து ஆட்சியையும் அமைத்தார். இலங்கை சுதந்திரம் அடைந்தும் பிரித்தானியப் படைகள் இலங்கையில் நிலைகொண்டிருந்தன. பிரித்தானியா தனது பிடியை தொடர்ந்தும் வேறு வடிவங்களில் தக்கவைத்துக்கொண்டிருந்தது. பண்டாரநாயக்க ஆட்சியேறியதும் இலங்கையில் இருந்த பிரித்தானிய படை முகாம்களை அகற்றினார். பற்பல துறைகளை அரசமயமாக்கினார். குறிப்பாக பொதுப்போக்குவரத்துத் துறை, துறைமுகம், பெருந்தோட்டத்துறை, எண்ணெய் கூட்டுத்தாபனம் என்பனவற்றை அவர் அரசமயமாக்கியமை முதலாளித்துவ சக்திகளின் எரிச்சலையும், வெறுப்பையும், எதிர்ப்பையும் அதிகரிக்கச் செய்தது.
1956 இல் ஐ.நா தலைமையகத்தில் 
1956இல் பண்டாரநாயக்க ஆட்சி அமைத்ததும் அவரின் அமைச்சரவையில் டீ.பீ.சுபசிங்கவை வெளியுறவு அமைச்சராக்கினார். டீ.பீ.சுபசிங்க அன்றைய பலமான இடதுசாரிக் கட்சியாக இருந்த லங்கா சமசமாஜ கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவர். பண்டாரநாயக்கவின் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தளவில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் கைகோர்த்தார். அதற்கு முன்னர் டீ.எஸ்.சேனநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல போன்றோர் மேற்கத்தேய முதலாளித்துவ சார்பு வெளியுறவுக் கொள்கையையே கடைபிடித்துவந்ததுடன் அச்சக்திகளுக்கு இணக்கமாகவே ஆட்சி செலுத்திவந்தார். சுதந்திரம் அளிக்கப்பட்டு எட்டே வருடத்தில் சோஷலிச முகாமுக்கு சாதகமாக இலங்கை தன்னை ஆக்கிக்கொள்வதை அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ முகாம் நல்ல சகுனமாக பார்க்கவில்லை.

இதே காலப்பகுதியில் உலகில் சோசலிசத் தலைவர்களையும், சோசலிச சார்பு கொண்ட தலைவர்களையும் களையெடுக்கும் பணிகளில் அமெரிக்கா தனது சீ.ஐ.ஏ நிறுவனத்தை இயக்கி வந்தது. கொங்கோவில் லுமும்பாவை படுகொலை செய்தமை, இந்தோனேசியாவில் சுகர்னோவை இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு செய்து சாகும்வரை சிறையில் வைத்தமை, கியூபாவில் பீடல் காஸ்ட்ரோவை கொல்வதற்கு பல தடவைகள் எடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லாவற்றையும் இந்த வரிசையில் நோக்குவது இங்கு பொருத்தமாகும்.
அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தின் போது
பண்டாரநாயக்கவின் வேகமான சுதேசிய கொள்கையாலும், அரசியல் நடவடிக்கைகளாலும் வெறுப்புற்றிருந்தவர்கள் மேற்கு நாடுகள் மட்டுமல்ல அமெரிக்காவும் தான். வேகமாக மாறிவரும் உலக ஒழுங்கை தமக்கேற்றவாறு தகவமைப்பதில் சிக்கல் தரும் நாடுகளைக் கையாளும் பணிகளில் அமெரிக்கா தீவிரமாக இயங்கிவந்த காலம் அது.

புத்தரக்கித்த தேரர், சோமராம தேரர் ஆகிய இருவரும் இந்தக் கொலைக்கு தூண்டப்பட்டவர்களேயொழிய; அவர்கள் இருவரும் நேரடியான சூத்திரதாரிகள் இல்லை என்பதே விசாரணையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் மாப்பிட்டிகம புத்தரக்கித்த தேரர்; பிரதமர் பண்டாரநாயக்கவை கொலை செய்வதற்கான வலுவான நேரடிக் காரணம் இன்று வரை வெளியானதில்லை. புத்த ரக்கித்த தேரர் சிறையிலேயே இறந்துபோனார். அவர் இறக்கும்போது அவரின் வயது 46 மட்டுமே. அவரின் இறப்பும் ஒரு மர்மத்துக்குரியதாகவே பேசப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோன் கென்னடி கொலையில் தண்டனை பெற்றுவந்த சொலொமன் மிலோசெவிக் சிறையில் மர்மமான முறையில் இறந்ததை சந்தேகிப்பதைப் போல தான் புத்த ரக்கித்த தேரரரின் இறப்பையும் காண்கிறார்கள்.

இந்தக் கட்டுரைக்காக இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்திலிருந்து சீ.ஐ.ஏக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் சிலவற்றை கண்டெடுக்க முடிந்தது. அதில் 12.10.1959 அன்று சீ.ஐ.ஏ வெளியிட்ட இரகசிய அறிக்கையில் இலங்கையின் உயர் அரசியல் வட்டாரத்தில் பண்டாரநாயக்க கொலை பற்றி அமெரிக்கா மீது சந்தேகம் கொள்வதை குறிப்பிட்டு காட்டுவதுடன் அந்த இரகசிய அறிக்கையின் முக்கிய சில வரிகள் வெள்ளைநிறம் தீட்டப்பட்டு மறைக்கப்பட்டிருக்கிறது.

இன்னொரு அறிக்கையில் அமெரிக்க உளவுத்துறை இக்கொலையின் பின்னணியில் இருப்பதாக என்.எம்.பெரேரா குற்றம் சாட்டியிருப்பதை பதிவு செய்திருக்கிறார்கள்.  (02.05.1972)

CIA இரகசிய அறிக்கைகள்
27.06.1960 சீ.ஐ.ஏ அனுப்பிய அறிக்கையில்; புதிய அரசாங்கத்தில் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்ட இடதுசாரிக் கட்சிகளைப் பற்றியும் அக்கட்சியின் தலைவர்களைப் பற்றியும் விபரங்களையும் பட்டியலிடுகிறது. மேலும் முன்னரை விட அதிகமாக சர்வதேச கொம்யூனிஸ்ட் முகாமுடன் நெருங்கிய உறவை சிறிமா அரசாங்கம் பலப்படுத்திவருதையிட்டு எச்சரிக்கிறது.

இதே வேளை “சீ.ஐ.ஏ. வில் யாரின் யார்?” (Who’s who in the CIA) என்கிற பரபரப்பான நூல் 1968இல் வெளிவந்தது. இதை எழுதியவர் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் டொக்டர் ஜூலியஸ் மாடெர் (Julius Mader). இந்த நூலில் அமெரிக்க உளவுச் சேவையின் உலகலாவிய வலைப்பின்னலில் 120 நாடுகளில் அப்போது இயங்கிக்கொண்டிருந்த 3000 உளவாளிகளை பெயர்களின் பட்டியல்களையும் அவர்கள் இயங்குகின்ற நாடுகளும் வெளியிடப்பட்ட்டது. அந்தப் பட்டியல் இருந்த பலருக்கு அந்தந்த நாடுகளில் அளிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்த விபரங்களும் கூட அதில் இடம்பெற்றன. இதில் இலங்கையில் 15 பேர் இயங்கிக்கொண்டிருந்ததையும் கூட வெளியிட்டிருந்தார். இதில் அப்போதைய மூன்று முக்கிய சம்பவங்களுடன் தொடர்பிருக்க வாய்ப்பிருப்பதாக அந்த நூலில் குறிப்படப்பட்டிருந்தது.
  1. பண்டாரநாயக்க கொலை
  2. சிறிமா பண்டாரநாயக்கவின் ஆட்சியின் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புச் சதி முயற்சி
  3. சிறிமா ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக நிகழ்ந்த கட்சித் தாவல் நடவடிக்கை.

இந்த நூலில் வெளியான விபரங்களைப் பற்றி விபரங்களை “Forward” என்கிற பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையை ஆதாரம் காட்டி சீ.ஐ.ஏ நிறுவனம் ஒரு இரகசிய அறிக்கையை தயாரித்தது.

அந்த அறிக்கையில்; இதே காலப்பகுதியில் அதுவரை எண்ணெய் கொள்வனவை பிரித்தானிய கம்பனியொன்றிடமும், இரு அமெரிக்க கம்பனியிடம் இருந்தும் மேற்கொண்டிருந்த இலங்கை சோவியத் யூனியனிடம் இருந்து கொள்வனவு செய்த்தான் மூலம் அமெரிக்காவை அதிருப்தியடையச் செய்தமை குறித்தும் குறிப்பிட்டிருகிறது.

இலங்கையில் அமரிக்க எதிர்புவாதமும், சோஷலிச சார்பு நிலையும் தலைதூக்கிவருவதை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தையே கூட்டு தமக்கு ஒரு இடைஞ்சலாகவும் அச்சுறுத்தலாகவுமே பார்த்தது.

இந்தக் கட்டுரைக்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அன்றைய காலப்பகுதியில் வெளியிட்ட வெளியுறவுத் துரை சார்ந்த ஆவணங்களின் தொகுப்பைத் தேடி இந்த நிலைமைகளுடன் பொருத்திப் பார்க்க முடிந்தது.

1955-1957 தென்னாசியாவுக்கான வெளியுறவுத்துறை அறிக்கையில் 15.03.1957 தினத்தன்று அனுப்பிய குறிப்புகளில் இப்படி காணப்படுகிறது.
“பிரதமர் பண்டாரநாயக்கவின் மார்க்சிய சொல்லாடல்களால் “முற்போக்கு சக்திகளின்” ஒத்துழைப்புக்கு அரைகூவல் விடுத்திருக்கிறது. கொம்யூனிஸ்டுகள் மற்றும் சிங்கள தீவிரவாத சக்திகளின் மேற்கத்தேய எதிர்ப்புக் கருத்துக்களால் பிரதமரின் சிந்தனை விஷமேற்றப்பட்டுள்ளது.
பிரதமர் பொருளாதார, அரசியல் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டால் மேலும் மோசமான சக்திகளின் கைகளுக்கு ஆட்சி மாறலாம். அப்படி ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டால் கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு இனக்கலவரங்கள் ஏற்படலாம்.”
15.10.1957 அன்று திருகோணமலை கடற்படைத்தளத்தில் இருந்து பிரித்தானியாவிடம் இருந்து மீள பறித்துக்கொண்ட போது
வெளியுறவுத்துறை 24.07.1957 தினத்தன்று அனுப்பிய குறிப்புகளில் இப்படி காணப்படுகிறது
“6. வாய்ஸ் ஒப் அமெரிக்கா”வுக்கு எதிரான பொறுப்பற்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அமெரிக்க பேராசிரியர்கள் உளவு பார்ப்பதாக குற்றம் சுமத்தப்படுகின்றனர். அரசாங்கத்துக்குள் பலமடைந்துவரும் இடதுசாரித் தீவிரவாதிகள், அதி தீவிர தேசியவாதிகள் போன்றோரின் எதிர்ப்புகளை அமெரிக்க ஒப்பறேசன்கள் எதிர்கொள்ளநேரிட்டுள்ளது...”
8b. இந்தியாவும், இலங்கையும் அமெரிக்க அணுவாயுத பரீட்சைகளை எதிர்த்து வருகின்றன.
8c. ... சீனா, ரஷ்யா போன்ற கொம்யூனிச நாடுகளுடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களை இலங்கை தீவிரப்படுத்திவருகிறது.
10b.கடற்படைத்தளம், விமானத் தளம் குறித்து பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி திருகோணமலையிலுள்ள கடற்படைத் தளத்தையும், நீர்கொழும்பிலுள்ள விமானப்படைத்தளத்தையும் இலங்கையிடம் மீள கையளிப்பதாக 07.06.1957 அன்று உடன்பாடு காணப்பட்டுள்ளது. மீள கைப்பற்றும் நடவடிக்கை 1957 ஒக்டோபர், நவம்பர் அளவில் ஆரம்பித்து மூன்று ஆண்டுகளுக்குள் முழுமையாக அத்தளங்கள் பிரித்தானியா கைவிட்டுவிடும் என்று உடன்பாடு காணப்பட்டுள்ளது. இந்த நிலைமையால் பிரித்தானியாவுக்கு மட்டும் பாதகம் ஏற்படப்போவதில்லை. அமெரிக்காவின் பாதுகாப்பு கட்டமைப்புத் திட்டத்தையும் பாதிக்கும்.”
10c. ...கொம்யூனிஸ்ட் சீனாவுடம் அரிசி-இறப்பர் பண்டமாற்று ஒப்பந்தத்தை இந்த வருட இறுதியில் இலங்கை மேற்கொள்ளப் போகிறது. கொம்யூனிஸ்ட் சீனாவுடன் இத்தகைய வர்த்தக உறவுகளை எற்படுத்திக்கொள்ளும்பட்சத்தில் அமெரிக்க பொருளாதார உதவிகளை வழங்குவது குறித்து மீள் பரிசீலனை செய்யப்படவேண்டும்...
தலாய் லாமா CIA கைக்கூலியா?
தீபெத்தில் தலாய் லாமா நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் 1998 ஆம் ஆண்டு ஒரு அதிர்ச்சிமிக்க தகவலை வெளியிட்டிருந்தார்கள். அதாவது தமது நிர்வாகம் 1960களில் சீ.ஐ.ஏ மூலம் வருடாந்தம் 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்று வந்தது என்பது தான் அந்தத் தகவல். இதனை உலகப் பிரபல சஞ்சிகையான நிவ்யோர்க் டைம்ஸ் (02.10.1998) வெளியிட்டிருந்தது. இந்தப் பணம் தீபெத் அரசாங்கத்துக்கு எதிராக போராடிவரும் சீன சார்புக் குழுக்களை ஒடுக்குவதற்காக வழங்கப்பட்ட நிதி என்று தீபெத்திலிருந்து வெளியேறிய முன்னை நாள் நிர்வாகத்தினர் போட்டுடைத்திருந்தனர். 1950களில் சீன அரசின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராடிய தீபெத்தின் தலைவர் தலாய் லாமா அந்த ஆக்கிரமிப்பை தாக்குபிடிக்க இயலாமல் 1959 ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறினார். தலாய் லாமாவின் சீனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு சீ.ஐ.ஏ அந்த காலப்பகுதியில் நிதியுதவிகளை செய்திருக்கிறது.

பண்டாரநாயக்க கொலையாளிகளும் இந்த நிதிகளின் மூலம் இயக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என்கிற கோணத்திலும் இந்த சதியை நோக்குகின்ற ஆய்வாளர்களும் உள்ளார்கள்.

செப்டம்பர் 25ஆம் திகதி காலை அன்றைய அமெரிக்க உயர்ஸ்தானிகர் பேர்னார்ட் கப்லர் (Bernard Gufler உயர்ஸ்தானிகராக பதவியேற்று ஒரு மாதத்தில் நிகழ்ந்த சந்திப்பு இது.) பண்டாரநாயக்கவை அவரது றோஸ்மீட் இல்லத்தில் சந்தித்து உரையாடிவிட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தான் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

சோமராம தேரர் ஏன் கொள்ள வேண்டும்?
கொலையில் நேரடியாக ஈடுபட்ட புத்த ரக்கித்த, சோமராம ஆகிய இருவருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. பௌத்த மதம் குறித்து பண்டாரநாயக்க கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றாததே பண்டாரநாயக்காவின் மீது தனக்கு இருந்த கோபம் என்று சோமராம தேரர் கூறியிருக்கிறார். ஆனால் சோமராம தேரர் தூக்கிலிடப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னர் சோமராம தேரர் கிறிஸ்தவ முறைப்படி ஞானஸ்தானம் பெற்று “பீட்டர்” என்கிற பெயரை சூட்டிக்கொண்டு ஒரு கத்தோலிக்கனாக மாறித் தான் தூக்குமேடை ஏறினார் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். பௌத்தத்தின் மீது இருந்த தீவிர அபிமானத்தால் தான் பண்டாரநாயக்கவை வெறுத்ததாகக் கூறப்பட்ட கருத்தின் நம்பகத் தன்மை என்ன என்கிற கேள்வி நமக்கு எழுகின்றது. அப்படியென்றால் இந்தக் கொலையின் உண்மையான உள்நோக்கம் என்ன என்கிற கேள்வி நமக்கு எப்படி எழாமல் இருக்க முடியும்.

சுதந்திரம் கிடைத்து 6 வருடங்கள் ஐ.நா உறுப்புரிமைக்கு இலங்கை காத்திருக்க வேண்டியிருந்தது. 1955 டிசம்பரில் தான் இலங்கைக்கு ஐ.நா உறுப்புரிமை கிடைத்திருந்து. அமெரிக்காவில் நியுயோர்க்கில் நடக்கவிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே பண்டாரநாயக்க செப்டம்பர் 28 அன்று புறப்படுவதற்கு ஆயத்தமாக இருந்தார். ஆனால் அதற்கு இரு நாட்களுக்கு முன்னர் அவர் கொல்லப்பட்டார்.

பண்டாரநாயக்க கொல்லப்படுகிற காலகட்டத்தில் அவரோடு இருந்த இடதுசாரி அணிகள் பெரும்பாலும் வெளியேறியிருந்தார்கள். அந்த ஆட்சியில் இருந்த பலமான தலைவர்களில் ஒருவரான பிலிப் குனவர்தனாவின் அமைச்சுப் பதவியையும் பறித்து அவரும் வெளியேற்றப்பட்டார். அவரோடு எஞ்சியிருந்த சக்திகள் சிங்கள பௌத்த வலதுசாரி தேசியவாதிகள் தான். அவை தற்செயலான அரசியல் நிகழ்சிகள் அல்ல என்று சந்தேகிக்கவும் முடியும்.

பண்டாரநாயக்கவை பஞ்சமகா சக்திகள் ஒன்று சேர்ந்து பதவியிலமர்த்தினர் என்பார்கள். அதாவது “சங்க, வெத, குரு, கொவி, கம்கரு” – மதகுருமார்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் என்கிற ஐந்து சக்திகள். பண்டாரநாயக்கவை கொலை செய்ய திட்டம் தீட்டிய புத்தரக்கித்த தேரர் ஒரு பௌத்த மதகுரு, கொலை செய்த சோமராம தேரர் ஒரு ஆயுர்வேத வைத்தியர். அதிலும் அவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் ஒரு தற்செயல் நிகழ்வு தானா?

தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கத் தவறியதற்காகவே பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டார் என்கிற கருத்து பலமாக இருக்கிறது. வலதுசாரி முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்கு பொருந்தக் கூடியவர் இல்லை அவர் என்கிற கருத்தும் மறுப்பதற்கில்லை.

பண்டாரநாயக்கவின் கொலை சுதந்திரத்தின் பின் தொடக்கிவைக்கப்பட்ட முதல் அரசியல் படுகொலை. அதற்கடுத்ததாக வரப்போகிற பல அரசியல் படுகொலைகளை ஆரம்பித்துவைத்த கொலை அது.

நன்றி - தினக்குரல்


மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை : அலட்சியத்துடன் செயற்படும் நிர்வாகம்

மலையகம்

கடந்த அக்டோபர் 3 ஆம் திகதி மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு அதிகாலை 5 மணிக்கு மருத்துவ பரிசோதனைக்கு வருகைத்தந்த நோயாளியொருவர் பரிசோதனைக்கு காத்திருந்தவேளை அவ்விடத்திலேயே விழுந்து உயிரிழந்திருந்தார். அதேவேளை 9.15 மணிவரையும் மருந்து வழங்குபவரும் வருகை தராமையால் நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. இவ்வாறு ஒரு முகப்புத்தகப் பதிவினை அண்மையில் காணக்கூடியதாகவிருந்தது. மஸ்கெலியா பிரதேச பெருந்தோட்ட மக்களின் மருத்துவ சிகிச்சைகளுக்கு பாரிய பங்களிப்புச் செய்ததில் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு முக்கிய பங்குண்டு. மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள பெருந்தோட்ட மக்கள் தூர பிரதேசங்களுக்குச் சென்று சிகிச்சை பெறும் சிரமத்தையும் இவ் வைத்தியசாலை போக்கியது. ஆனால் சமீப காலமாக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிலவும் வளப்பற்றாக்குறை, ஆளணிப் பற்றாக்குறை, பராமரிப்பின்மை, ஊழியர்களின் அசமந்தப்போக்கு, நோயாளர்களை கவனிக்காமை போன்ற காரணங்களினால் தனக்குரிய தனித்துவத்தை இழந்து வருவதுடன் இவ் வைத்தியசாலையை நம்பியிருந்த மக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளனர்.

பழைய மஸ்கெலியா நகரத்தில் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட வைத்தியசாலை நீர்த்தேக்கத்தின் உருவாக்கம் காரணமாக இல்லாமல்போன நிலையில் மஸ்கெலியா புதிய நகர உருவாக்கத்தின் பின்னர் அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் மஸ்கெலியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எட்மண்ட் விஜேசூரியவின் வேண்டுகோளுக்கிணங்க மஸ்கெலியா பிரதேச மக்களுக்காக 165 படுக்கை வசதிகளையும் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறுவதற்கென தனியான படுக்கை வசதிகளை கொண்ட 6 அறைகளையும் கொண்ட ஆதார வைத்திய சாலை உருவாக்கப்பட்டிருந்தது.

1972 ஆம் ஆண்டு மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்கு மஸ்கெலியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஆரியதிலக மற்றும் அப்போதைய சுகாதார அமைச்சர் ஆரியதாச ஆகியோரினால் கையளிக்கப்பட்டது. அப்போது அவ்வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகூடம், பல் லைத்தியர் கூடம், மருந்தகம், வெளிநோயாளர் பிரிவு, 24 மணித்தியால சேவைக்கென வைத்திய பிரிவு, மாவட்ட வைத்திய அதிகாரி காரியாலயம், வைத்தியசாலை காரியாலயம், தேநீர்சாலை, அம்பியூலன்ஸ் வண்டி, வாகன தரிப்பிடம், சவச்சாலை, ஆய்வுகூடம், வைத்தியர்கள் வீடுதிகள், தாதியர் விடுதிகள் போன்ற பல்வேறு வசதிகளும் காணப்பட்டன.

ஆனால் தற்போதைய நிலைமை தலைகீழாக மாற்றம் கண்டுள்ளது. 10 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள இவ்வைத்தியசாலை முறையான பராமரிப்பின்றிய நிலையில் காடு மண்டிய நிலையில் காணப்படுவதுடன் சிகிச்சைபெற செல்லும் மக்கள் அமர்வதற்குகூட ஆசனங்கள் இல்லாத நிலையிலும் காகங்கள், குருவிகள், புறாக்களின் வாழ்விடமாகவும் மாற்றம் கண்டுள்ளது. தற்போது மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் முக்கிய பிரச்சினையாக ஆளணி பற்றாக்குறையே காணப்படுகின்றது. மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் தற்போதைய நிலைதொடர்பில் அறிந்து கொள்வதற்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தின் மூலம் பெற்றுக்கொண்ட (CPC/MH/RTI/1) தகவல்களின் அடிப்படையில் அட்டவணை 01 இல் தற்போது வைத்தியசாலையில் கடமைபுரியும் உத்தியோகத்தர் எண்ணிக்கையும் வெற்றிடம் நிலவும் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் 2015 ஆம் ஆண்டு 4471 நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் 2016 இல் 5042 பேரும், 2017 இல் 4553 பேரும், 2018 இல் 3969 பேரும், 2019.08.01 ஆம் திகதி வரை 2063 பேரும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அதேவேளை 2015 இல் 36767 பேர் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளதுடன் 2016 இல் 30184 பேரும், 2017 இல் 40480 பேரும், 2018 இல் 40498 பேரும், 2019.08.01 வரை 23498 பேரும் சிகிச்சை பெற்றிருக்கின்றனர். இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெறவரும் நிலையில் வைத்தியசாலை நிர்வாகம் அசமந்த போக்குடனும் நோயாளர்களை தரக்குறைவுடனும் நடத்தும் சூழல் காணப்படுகின்றது.
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக், கர்ப்பகால கிளினிக், நோய்தடுப்பு கிளினிக், N.ஊ.வு. கிளினிக், மனநல கிளினிக், பல்சிகிச்சை கிளினிக், வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, ஆண்கள் வார்ட் 2, பெண்கள் வார்ட் 2, மகப்பேற்று வார்ட் 1, குழந்தைகள் வார்ட் 1 போன்ற பல்வேறு சிகிச்சைகள் காணப்படுவதாக மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்திருக்கும் நிலையிலும் காலை 7 12 மணி வரையிலுமே கர்ப்பிணித் தாய்மார்கள் பரிசோதிக்கப்படுகின்றனர். பின்னர் அவர்களுடைய சொந்த கிளினிக்குகளிலேயே கடமையாற்றுகின்றனர். அத்துடன் கர்ப்பிணிப்பெண்கள் அனைவரும் மருத்துவ அதிகாரியின் சொந்த கிளினிக்கிலேயே பணம் செலுத்தி கர்ப்பகால சிகிச்சைகளை பெற வேண்டும். வேறு எங்கும் செல்ல முடியாது என்ற கட்டுப்பாடும் காணப்படுகின்றது. தற்போது மகப்பேற்றுப் பிரிவு மூடப்பட்டுள்ளதுடன் கர்ப்பிணி பெண்கள் மகப்பேற்றுக்காக கிளங்கன் வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால் கிளங்கள் வைத்திய சாலையில் நோயாளர்கள் துன்புறுத்தப்படுவதாக அண்மையில் கொட்டகலை பிரதேசசபை தலைவரினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இங்கு பல் சிகிச்சைக்கான கிளினிக்குகள் காணப்படுவதாக கூறப்பட்டாலும் வாரத்தில் இரண்டு நாட்களே பற் சிகிச்சை நிபுணர்கள் வருகைத்தருகின்றனர்.

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு 2015 ஆம் ஆண்டு 0.9 மில்லியன் ரூபா நிதி மத்திய மாகாண சுகாதார அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், 2016 இல் 3.2 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2017 - 2019 வரையான காலப்பகுதியில் வைத்தியசாலையின் செலவுக்காக ஒதுக்கப்பட்ட தொகையினை அட்டவணை 02 காண முடியும்.

தற்போதுள்ள வளங்களின் மூலம் மக்களுக்கு சேவையற்றக்கூடியளவான நிதியொதுக்கீடுகள் மாகாண சுகாதார அமைச்சால் வழங்கப்படுகின்ற போதும் மக்களுடைய தேவைகள் கருத்தில் கொள்ளப்படாமல் ஊழியர்களும் வைத்திய அதிகாரிகளும் செயற்படுகின்றமையானது, நோயாளர்களை சிரமத்துக்குள்ளாக்குவதுடன் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் மீது களங்கத்தையும் ஏற்படுத்துகின்றது.
அதேவேளை மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் சுற்றாடல் மிகவும் மோசமான நிலையில் பராமரிப்பின்றிய நிலையில் காணப்படுகின்றது. இதனால் ஆபத்தான காட்டு விலங்குகள் ஊடுறுவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் போதியளவான சிகிச்சைகள் காணப்படாத நிலையில் கிளங்கன், நாவலப்பிட்டி, நுவரெலியா, கண்டி போன்ற வைத்திய சாலைகளுக்குச் செல்ல வேண்டி ஏற்படுவதால் நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். எனவே இவை தொடர்பாக மத்திய மாகாண சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும். மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை மத்திய மாகாணத்துக்குச் சொந்தமானது அதனால் ஏனைய அரசியல்வாதிகள் தலையிடக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. மத்திய மாகாணத்துக்குச் சொந்தமான வீதிகளை புனரமைக்க உரிமையுள்ளபோது மக்களுக்கு மிகவும் அவசியமான வைத்தியசாலை தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும். தோட்ட வைத்தியசாலைகள் தேசிய கட்டமைப்புக்குள் வரும்வரையிலாவது, இவற்றின் சேவைகள் தொடர வேண்டும்.

இலங்கையை ஆளும் விஜேவர்தன பரம்பரை - (பண்டாரநாயக்க கொலை 4) என்.சரவணன்

பண்டாரநாயக்க கொலைவழக்கில் 6வது சந்தேகநபராக குற்றம் சாட்டப்பட்டவர் விமலா விஜேவர்தன ((1908–1994). இலங்கையின் முதலாவது பெண் அமைச்சர் என்கிற வரலாற்றுப் பதிவு அவருக்குரியது. பண்டாரநாயக்கவின் கொலையில் அவர் வலிந்து இழுக்கப்பட்டவர்.

பெருந்தோட்டத்துறையில் பெரும் செல்வாக்கு மிக்க செல்வந்தரான கட்டானை கரோலிஸ் த சில்வாவின் மகள் அவர். பெரும் பிரமுகராக அறியப்பட்ட டீ.சீ.விஜேவர்தன (Don Charles Wijewardene) தனது மனைவியின் இறப்பை அடுத்து மனைவியின் தங்கையான அழகான 16 வயதுடைய விமலாவை திருமணம் முடித்துக்கொண்டார்.

விஜேவர்தன பரம்பரை இலங்கையின் அரசியலிலும், ஊடகத்துறையிலும், செல்வந்தத்திலும் இன்று வரை பெரிய அளவில் செல்வாக்கு செலுத்தி வரும் பரம்பரை. விஜேவர்தன குடும்பத்தினர் தான் கடந்த ஒரு நூற்றாண்டாக இலங்கையின் மைய அரசியலைத் தீர்மானிப்பவர்களாக இருந்து வருகிறார்கள் என்றால் அது மிகையில்லை.

டீ.சீ.விஜேவர்தன 1953இல் எழுதி வெளியிட்ட “பன்சலையில் கிளர்ச்சி” (The Revolt in the Temple) என்கிற நூல் இன்றளவிலும் இலங்கையின் முக்கிய நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சிங்கள இனத்துக்கும் களனி விகாரைக்கும் இருக்கின்ற பாரம்பரிய முதுசம் என்ன என்பது பற்றியும், நாட்டின் அரசியலைத் தீர்மானிப்பதில் களனி விகாரையின் வகிபாகம் என்ன என்பது குறித்தும் அந்த விகாரையை பாதுகாத்து வந்த பரம்பரை பற்றியும் எழுதப்பட்ட நூலாக இருந்தாலும் அதன் உள்ளடக்கம் பலமான அரசியல் விவாதங்களுக்கு இட்டுச் சென்றது.

1956 சிங்கள பௌத்த எழுச்சியைப் பற்றி பேசுபவர்கள் இந்த நூலின் அன்றைய வகிபாகத்தைப் பற்றிப் பேசத் தவறுவதில்லை.
இந்தப் படத்தை அழுத்தி பெரிதாகப் பாருங்கள்.

இலங்கையை கோலோச்சும் விஜேவர்தன குடும்பம்
களனி பன்சலையின் வருவாய்க்குப் பொறுப்பான தர்மகர்த்தாவாக விஜேவர்தனவின் தாயார் ஹெலனா நீண்ட காலம் இருந்து வந்தார். 1575 இல் போர்த்துகேயரால் நாசப்படுத்தப்பட்ட களனி விகாரையை பெரும்செலவில் புதுப்பித்தவர் ஹெலனா விஜேவர்தன. 1937 ஆம் ஆண்டு தமது பரம்பரைச் சொத்தில் ஏராளமானவற்றை களனி பன்சலைக்கு எழுதிக் கொடுத்து அந்த விகாரையை மகா சங்கத்திடம் ஒப்படைத்தார் ஹெலனா.  களனி பன்சலையின் நிதிநிலைமை ஸ்திரமாக இருப்பதற்காக தனது 250 ஏக்கர் வயல் காணியைக் கொடுத்ததுடன் தனக்குப் பின் தனது நகைகள் அனைத்தும் களனி பன்சலைக்கு சேரும் வண்ணம் உயில் எழுதிவைத்துவிட்டுப் போனார் ஹெலனா. ஹெலனாவுக்கு 9 பிள்ளைகள் இரண்டாவது மகள் அக்னஸ் ஹெலன். அக்னஸ்ஸின் மகன் தான் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்தன.
ஹெலனா களனி விகாரைக்கு கொடுத்த சொத்துக்கள் குறித்து களனி விகாரையில் உள்ள ஓவியம்.
ஹெலெனாவின் ஏழாவது மகன் தான் டீ.சீ.விஜேவர்தன. புத்தரக்கித்த தேரரை களனி விகாரையின் பிரதான விகாராதிபதியாக நியமிப்பதில் முக்கிய பாத்திரம் ஏற்று இருந்தவர் டீ.சீ.விஜேவர்தன. ஹெலனாவின் நான்காவது மகன் தான் இலங்கை பத்திரிகைத் துறையில் ஜாம்பவனாக இருந்த டீ.ஆர்.விஜேவர்தன. டீ,ஆர்,விஜேவர்தனவின் பேரன் தான் (மகள் நளினி விஜேவர்தனவின் மகன்) இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

ரணில் – மைத்திரி ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த ருவன் விஜேவர்தன டீ.ஆர்.விஜேவர்தனவின் பேரன். இன்னும் சொல்லப்போனால் ரணில் விக்கிரமசிங்கவின் மைத்துனர் ருவன்.

டீ.ஆர்.விஜேவர்தன இலங்கை பத்திரிகைத்துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர். அவர் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர். அது போல இலங்கையின் பிரதான சிங்கள தனியார் பத்திரிகை நிறுவனங்களாக கோலோச்சுக் கொண்டிருக்கும் உபாலி நிறுவனத்தின் (The Island, திவயின உள்ளிட்ட பல பத்திரிகைகள்) நிறுவனர் உபாலி, Sunday Times, Daily Mirror, Lankadeepa, Tamil Mirror உள்ளிட்ட பல பத்திரிகைகளை வெளியிட்டுவரும் விஜய பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர் ரஞ்சித் விஜேவர்தன. ரணிலின் அண்ணன் ஷான் விக்கிரமசிங்க இலங்கையின் முதலாவதுதொலைக்காட்சி சேவையை (ITN) அறிமுகப்படுத்தியவர்.

இவர்கள் அனைவரும் இந்த பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அதுபோல சேனநாயக்க குடும்பம், (சிறிமா) ரத்வத்த குடும்பம் அனைவருமே இந்தக் பரம்பரையின் நெருங்கிய திருமணங்களால் இணக்கப்பட்ட பரம்பரை. மேலே உள்ள மர வடிவிலான படத்தில் விஜேவர்தன குடும்பத்தைப் பற்றிய நேரடியானவர்களை மாத்திரம் குறிப்பிட்டிருக்கிறேன். இதன் விரிவாக்கத்தை வேறு சந்தர்ப்பத்தில் பகிர்கிறேன்.

விஜேவர்தன குடும்பம் பௌத்தர்களாக பிற்காலத்தில் தான் மதம் மாறினார்கள். அதற்கு முன்னர் போர்த்துகேயர் காலத்தில் கத்தோலிக்க மதத்தவர்களாகவும், ஒல்லாந்தர் காலத்தில் கிறிஸ்தவ புரட்டஸ்தாந்து மதப் பிரிவான கால்வின் மதத்தவராகவும், ஆங்கிலேயர் காலத்தில் அங்கிலிக்கன் மதத்தவராகவும் மதம் மாறியிருந்தவர்கள். பௌத்தர்களாக ஆனதும் தீவிர சிங்கள பௌத்தர்களாக மாறி சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கே தலைமை கொடுக்கும் சக்தியாக விஜேவர்தன குடும்பத்தினர் ஆனார்கள்.

ரணிலும் களனி விகாரையும்
களனி விகாரையை தமது பரம்பரை சொத்தாக மாற்றிகொண்டிருந்த விஜேவர்தன குடும்பத்தினரின் “பரம்பரை செல்வாக்கு” குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. அதன் பின்னர் ஜே.ஆர். தொடங்கி இன்றைய ரணில் விக்ரமசிங்க வரைக்கும் அந்த செல்வாக்கு நீண்டது. களனி விகாரையின் நிறைவேற்று சபையின் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை கடந்த 01.09.2019 நீக்கி விட்டதாக அதன் நிர்வாகம் அறிவித்தது. அத்தோடு விஜேவர்தன குடும்பத்துக்கு அதுவரை இருந்த உறவு முடிவுக்கு வருவதாக ஊடகங்களில் பேசப்பட்டதையும் இங்கு நினைவுக்கு கொண்டு வரவேண்டும். 

களனி விகாரையை மீட்டெடுத்த ஹெலனாவின் பேரன் ஜே.ஆர். ஜே.ஆரின் மருமகன் தான் ரணில் விக்கிரமசிங்க. இன்னும் சொல்லப்போனால் ஹெலனாவின் கொள்ளுப்பேரன் தான் ரணில் விக்கிரமசிங்க.

சந்திரிகா ஆட்சியின் போது 24.08.1994 அன்று எதிர்கட்சித் தலைவரை தீர்மானிக்க வாக்கெடுப்பு நடந்தபோது ரணில் இரண்டு வாக்குகளால் தோல்வியுற்றார். காமினி வென்றார். அப்போது ரணில்; தனக்கு எது இல்லாமல் போனாலும் களனியின் தலைமைப் பதவி இருக்கிறது என்று ஊடகங்களுக்கு தெரிவித்தார். அன்று எதிர்க்கட்சி பதவி கூட இழந்தபோது களனியின் தலைமையை பெற்றிருந்த ரணில், இன்று நாட்டின் பிரதமராக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் காலத்தில் களனி கைவிட்டுப்போனமை வரலாற்று முரண்நகை.

D.A.ராஜபக்ச (மகிந்த ராஜபக்சவின் தகப்பனார்), பண்டாரநாயக்க, பிலிப் குணவர்தன ஆகியோருடன் விமலா விஜேவர்தன - 1958இல் சந்திரிகா குளத்தைத் திறப்பதற்கான நிகழ்வின் போது
ஜே.ஆருக்கு எதிராக விமலா களத்தில்
ஆரம்பத்தில் கொம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக இருந்த டீ.சீ.விஜேவர்தன பின்னர் ஒரு சிங்கள பௌத்த தேசியவாதியாக தன்னை ஆக்கிக்கொண்டவர். அதுபோல விமலா விஜேவர்தனவும் கொம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாட்டாளராக நெடுங்காலம் இருந்து வந்தார். அவர் கொம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் முன்னணியில் தீவிரமாக இயங்கிவந்தவர்.  பிற்காலத்தில் பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து 1958ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் திகதி பிக்குமார் ஊர்வலமாக வந்து ரோஸ்மீட் இல்லத்தின் முன்னால் ஒப்பந்தத்தைக் கைவிடும்படி ஆர்ப்பாட்டம் நடத்திய போது அந்த ஒப்பந்தத்தை உள்ளே இருந்து எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தவர் விமலா விஜேவர்தன.

விமலாவை ஜயவர்தன - சேனநாயக்கக்களுக்கு எதிராக தேர்தலில் களமிறக்கியது புத்தரக்கித்த தேரர் தான். புத்தரக்கித்த தேரரின் இரகசிய காதலியாக இருந்த விமலாவை அரசியலில் இறக்கி தனது வியாபார வர்த்தக நலன்களை சாதித்துக்கொள்ள புத்தரக்கித்த தேரர் திட்டமிட்டார்.

மாமன் ஜே.ஆருடன் மருமகன் ரணில் விக்கிரமசிங்க
ஜே.ஆரை விட வயதில் குறைந்தவராக இருந்தார் அவரது மாமியார் விமலா. 1952இல் இலங்கையின் இரண்டாவது பொதுத் தேர்தல் நடந்த போது ஜே.ஆருக்கு எதிராக அவரின் மாமியார் விமலாவை களனி தொகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட வைத்தார் புத்தரக்கித்த தேரர். அத் தேர்தலுக்கு சுதந்திரக் கட்சிக்காக லட்சக்கணக்கான பணத்தை செலவளித்திருந்தார் விமலா. அத் தேர்தலில் 6235 வாக்குகளால் தோல்வியடைந்தார் விமலா. ஜே.ஆர் ஏற்கெனவே களனி தொகுதியில் செல்வாக்கு பெற்ற இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவராக வளர்ந்து கொண்டிருந்தவர். 1956 ஆம் ஆண்டு தேர்தலில் விமலா களனியில் போட்டியிடவில்லை ஆனால் அதற்கருகில் உள்ள மீரிகம தொகுதியில் போட்டியிட வைத்தார் புத்தரக்கித்த தேரர். விமலா விஜேவர்தன 36,193 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அது அத்தொகுதியின் மொத்த வாக்குகளில் 72.25% வீதமான வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலைச் சதியில் விமலா
யூன் மாதம் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டபோது முதலில் விமலா விஜயவர்தனவுக்கு சுகாதார அமைச்சு தான் வழங்கப்பட்டது. அனுபவமிக்க அரசியல் தலைவர்கள் இருந்தும் கூட அரசியலுக்கு புதியவரான விமலாவுக்கு சுகாதார அமைச்சுப் பதவி வழங்கப்படுவதற்கு புத்தரக்கித்த தேரரின் நிர்ப்பந்தம் முக்கிய காரணம். அமைச்சுக்களைப் பகிர்வதற்கான உராயாடல் நிகழ்ந்துகொண்டிருந்தபோது தாமதமாக வந்து சேர்ந்த சிரேஷ்ட அரசியல் தலைவர் I.M.R.A.ஈரியக்கொல்லைக்கு உள்துறை பிரதி அமைச்சு பதவியைக் கொடுத்துவிட்டு, பின்னர் அமைச்சுக்களை மாற்றும்போது அமைச்சுப்பதவியை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். பின்னர் ஈரியக்கொல்லை அந்த பிரதி அமைச்சையும் தூக்கியெறிந்துவிட்டு சாதாரண உறுப்பினராக ஒதுங்கிக்கொண்டார்.

புத்த ராக்கித்த தேரர் தனது கப்பல் கொம்பனியின் வியாபார நடவடிக்கையிலும் விமலாவை இணைத்துக் கொண்டிருந்தார். உணவு தானிய இறக்குமதிக்கான அனுமதியை தமக்கு வழங்கும்படி புத்தரக்கித்த தேரர் பண்டாரநாயக்கவை அணுகியபோது; அத்தகைய நடவடிக்கைகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் பண்டாரநாயக்க.

அரசாங்கத்துக்குள் ஏற்பட்ட பிளவுகளைத் தொடர்ந்து 1959 யூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது விமலா விஜேவர்தனவிடம் இருந்த சுகாதார அமைச்சுப் பதவி மீளப்பெறப்பட்டு அதற்குப் பதில் அவருக்கு உள்துறை மற்றும் வீடமைப்புத்துரை அமைச்சு வழங்கபட்டது. விமலா விஜேவர்தனஅமைச்சரவை அந்தஸ்து பெற்ற இலங்கையின் முதலாவது இலங்கைப் பெண்.

புத்தரக்கித்த தேரர் சுதந்திரக் கட்சியின் ஏனைய தலைவர்களைக் கொண்டு பண்டாரநாயக்கவை தலைமையிலிருந்து நீக்குவதற்கான முன்னெடுப்புகளை செய்தார். 1959 இல் திட்டமிடப்பட்டிருந்த கட்சியின் சம்மேளனத்தில் அவரை நீக்குவதற்காக ஆதரவாளர்களையும் ஏற்பாடாக்கியிருந்தார். இந்த சதிகளை அறிந்த பண்டாரநாயக்க அந்த மாநாட்டு உரையில் ”நான் மாக்ஸியத்தையும், ஏகாதிபத்தியத்தையும், கொம்யூனிசத்தையும் எதிர்க்கிறேன்” என்று முழக்கமிட்டார். பிலிப் குணவர்தனவையும் அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கினார். தனது நோக்கம் திட்டமிட்டவகையில் நிறைவேறாத புத்தரக்கித்த தேரர் பண்டாரநாயக்கவை தீர்த்துக்கட்டுவது என்கிற முடிவுக்கு வந்தார் என்பதே வழக்கிலும் வெளிவந்த முடிவு.

டீ.சீ.விஜேவர்தன 1956 ஆம் ஆண்டே இறந்தும் போனார். அதன் பின்னர் புத்தரக்கித்த தேரர் அதிகமாக வாசம் செய்தது விமலாவின் ‘புல்லர்ஸ் லேன்’ வீட்டில் தான். அங்கு தான் பண்டாரநாயக்க கொலைக்கான திட்டங்களும் திட்டப்பட்டன.

ஒரு முறை இத்தாலியில் நிகழ்ந்த சர்வதேச சுகாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக விமலா பயணமானபோது அவரை வளியனுப்ப பண்டாரநாயக்கவும் சென்றிருந்தார். அந்தப் பயணத்தில் விமலாவுடன் புத்தரக்கித்த தேரரும் சேர்ந்து தான் பயணமானார்கள்.

பண்டாரநாயக்க 26.09.1959 இல் கொலை செய்யப்பட்ட பின்னர் ஒக்டோபர் 21 அன்று கைது செய்யப்பட்டார். கூடவே அவரின் அமைச்சுப் பதவியும் பறிக்கப்பட்டது.

பௌத்தம் துறந்து கிறிஸ்தவர் ஆனார்
15.07.1960 இல் விமலா நிரபராதி என விடுவிக்கப்பட்டபோதும் அவர் தனது அரசியல் பயணத்துக்கு முடிவுகட்டினார்.

வழக்கில் 6வது சந்தேகநபராக இருந்த விமலா முதற்கட்டவிசாரணையின் பின் வழங்கப்பட்ட தீர்ப்பிலேயே குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டபோதும், சகல மேன்முறையீட்டு விசாரணைகளின் போதும் வழக்குகளுக்கு அழக்கப்பட்டுக்கொண்டே இருந்தார். அந்த விசாரணைகளின் போது அவருக்கும் புத்தரக்கித்த தேரருக்கும் இடையில் இருந்த காதல் உறவு திரும்பத் திரும்ப வெளியானது.

விமலாவை நீதிமன்றங்கள் நிரபராதி என்று தீர்ப்பளித்தாலும் பண்டாரநாயக்க கொலையை விசாரணை செய்த ஆணைக்குழு விமலாவுக்கு அக்கொலையுடன் நெருங்கிய தொடர்புண்டு என்று அறிக்கையிட்டது.

விமலா விஜேவர்தன இறுதியில் பௌத்த மதத்தைக் கைவிட்டு புரட்டஸ்தாந்து மதத்தைத் தழுவிக்கொண்டார். எந்த பௌத்ததனத்துக்காக வாழ்க்கையில் பெரும் விலை கொடுத்தாரோ அதே பௌத்தத்தை கைவிட நேர்ந்ததன் உளவியல் நிர்பந்தம் என்பது அரசியல் விளைவு என்று தான் கூற முடியும். பண்டாரநாயக்கவை சுட்டுக் கொன்ற சோம ராம தேரோவும் தூக்கில் தொங்குவதற்கு முதல் நாள் தனது பெயரை பீட்டர் என்று மாற்றிக்கொண்டு ஆங்கிலிக்கன் மதத்தை தழுவியதைஅறிந்திருப்பீர்கள்.

ஏராளமான சொத்துக்களுக்கு உரிமையாளராக இருந்த அவர் விஜேவர்தன குடும்பத்தின் பரம்பரைச் சொத்தாக இருந்த ஹப்புத்தளை எடிசன் பங்களா (50க்கும் மேற்பட்ட அறைகளுடன் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பிரமாண்டமான பங்களா) உள்ளிட்ட பல சொத்துக்களை அந்த புரட்டஸ்தாந்து மத நிறுவனத்துக்கே எழுதிக் கொடுத்தார் விமலா. பொது வெளியில் பகிரங்கமாக உலவுவதைத் தவிர்த்துக்கொண்ட விமலா ஊடகங்களைக் கூட சந்திப்பதை தவிர்த்தார்.

ஆரம்பத்தில் மிகுந்த ஆதரவையும் வரவேற்பைப் பெற்றிருந்த விமலா இறுதியில் அவப்பெயருடன் வாழ்ந்து 27.01.1994 அன்று மரணமானார்.


சமுர்த்தியற்ற சமூகம் ? - க.பிரசன்னா

மலையகம்

2019 ஆம் ஆண்டு வரவு - செலவுத்திட்டத்தில் சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை 6 இலட்சமாக உயர்த்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இதன்படி ஜூன் மாதம் 15 ஆம் திகதி பதுளை மாவட்டத்தில் 23306 பேருக்கு சமுர்த்தி உரித்துப் படிவம் வழங்கும் நிகழ்வில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் சமுர்த்தி உரித்துப் படிவம் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போதைய நிலையில் பெருவாரியான தோட்டத் தொழிலாளர்களை சமுர்த்தி கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.

சமுர்த்தி கொடுப்பனவு என்றாலே கிராமப்புறங்களுக்கு மாத்திரமே என்ற மாயை பெரும்பாலானோரிடத்தில் இருந்தது. அதற்கேற்றாற் போலவே பெருந்தோட்டத் தொழிலாளர்களை சமுர்த்தி கட்டமைப்புக்குள் உள்வாங்குவதற்கான வேலைத்திட்டமோ அல்லது தெளிவுப்படுத்தல் நிகழ்ச்சிகளோ அமைச்சினாலும் சமுர்த்தி உத்தியோகத்தர்களாலும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் பெரும்பாலான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சமுர்த்தி இல்லாமலேயே காலத்தைக் கடத்தினர்.

தற்போது அரசாங்கத்தின் ஆறு இலட்சம் சமுர்த்திப் பயனாளிகளின் சேர்க்கையிலும் பெருவாரியாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உள்வாங்கப்பட்டதாக தெரியவில்லை. அவற்றை விளங்கிக் கொள்ளுமளவுக்கு அவர்களிடம் தெளிவும் இல்லை. இந்நிலையில் கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய பெருந்தோட்ட மக்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் காணப்படும் சமுர்த்திப் பயனாளிகள் தொடர்பில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலமாக (RTI/2018/020) தகவல் கோரியிருந்த நிலையில் சில விடயங்களை பெற்றுக்கொள்ள முடிந்தது.

அட்டவணை 01 இல் (2019/04/30 ஆம் திகதி வரையில்) சமுர்த்திப் பயனாளிகள் தொடர்பிலான விபரங்கள் கூறப்பட்டிருந்தாலும் பெருந்தோட்டப்பகுதி பயனாளிகள் எனத் தனியாக இனங்காணமுடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. சமுர்த்தி நிவாரணத்திற்காக விண்ணப்பிக்கின்ற குடும்பம், பொருளாதார ரீதியில் பலம்பெறச்செய்யும் திறனும் இருத்தல் வேண்டும் என்பதோடு அந்த திட்டத்துக்காக செயலூக்கத்துடன் பங்களிப்புச் செய்யும் திறனும் இருத்தல் வேண்டும் என்பதோடு விண்ணப்பதாரர்/ குடும்ப உறுப்பினர்கள், சமுர்த்தித் திட்டத்தில் செயற்படுகின்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக செயலூக்கத்துடன் பங்களிப்புச் செய்வதன் மூலம் தமது குடும்பத்தின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக ஈடுபாடு மற்றும் திறனும் இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்படுகின்றது.

18 வயதுக்கும் மேற்பட்ட தனியாக குடித்தனம் நடத்தும் பிரதான குடியிருப்பாளர்கள் பட்டியலின் கீழ் வாழும் ஆட்கள் சமுர்த்தி முத்திரையைப் பெற்றுக்கொள்ள தகுதியான வயதெல்லை கொண்டவர்கள். இதற்கும் மேலதிகமாக மதகுருமார், சிறுவர் இல்ல, மாற்றுத்திறனாளிகள் காப்பகங்களில் உள்ள 18 வயதிற்குக் குறைந்த தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளவர்களுக்கு ரூபா 1500 இற்கான சமுர்த்தி நிவாராண கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. 2019/04/05 ஆம் திகதியிடப்பட்ட 2077/55 என்ற இலக்கத்தினுடைய விசேட வர்த்தமானியின் மூலம் வெளியிடப்பட்ட 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் பிரகாரம் கல்வி, சுகாதாரம், பொருளாதார நிலை, சொத்துக்கள், வீட்டின் நிலை, குடும்ப கட்டமைப்பு போன்ற சுட்டிகளை பகுப்பாய்வு செய்து சமுர்த்தி நிவாரண உதவிகளை வழங்குவதற்குப் பொருத்தமான ஆட்களை தெரிவு செய்து கொள்ளல் வேண்டும்.

பெருந்தோட்டப் பகுதிகளில் வாழுகின்ற பெரும்பாலான மக்கள் மேற்குறிப்பிட்ட பல சுட்டிகளில் பலவீனமான முறையில் இருக்கின்ற நிலையிலும் அவர்கள் எந்தவொரு நிவாரணக் கொடுப்பனவு முறையிலும் உள்வாங்கப்படாத நிலையிலேயே இருக்கின்றனர். சமுர்த்தி விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது தகைமையுடைய குடும்பங்களை அறிவூட்டி அதற்காக அவர்களை ஈடுபடுத்துவதற்கு குறித்த பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு தகைமை இருப்பதாக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்திருந்த நிலையிலும் எந்தவொரு அரசியல் தலைமைகளும் இவற்றை முன்னெடுப்பதாகத் தெரியவில்லை.

மேடைகள் ஏறினாலும், மக்கள் கூட்டங்களை கூட்டினாலும் எதிர்த்தரப்பின் குறைகளைக் கூறுவதற்கும் அவர்களை மோத அழைப்பதற்குமே அவைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றார்களே தவிர மக்களை தெளிவுப்படுத்தவோ, விழிப்புணர்வூட்டவோ முன்வருவதில்லை. சமுர்த்தி உத்தியோகத்தர்களும் இவ்விடயத்தில் திருப்திகரமான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரியவில்லை. அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் 756 சமுர்த்தி உத்தியோகத்தர்களும் பதுளையில் 976 சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கண்டியில் 1940, மாத்தளையில் 861, இரத்தினபுரியில் 992, கேகாலையில் 926 சமுர்த்தி உத்தியோகத்தர்களும் காணப்படுகின்ற நிலையிலும் சமுர்த்தி பயனாளிகளின் தொகை பெருந்தோட்டப்பகுதிகளில் கடந்த 2015 - 2019 வரையான காலப்பகுதிகளில் பாரிய மாற்றமில்லாமலேயே பயணித்திருக்கின்றது.

அரச ஊழியர் அல்லாத குடும்பமொன்றின் மாத வருமானம் 4 உறுப்பினர்கள் அல்லது அதற்கும் மேற்பட்டதாயின் 24000 ரூபாவுக்கும் குறைவாகவும் 3 உறுப்பினர்களெனில் 18000 ரூபாவை விட குறைவாகவும் 2 உறுப்பினர்களெனில் 12000 ரூபாவுக்கும் குறைவாகவும் 1 உறுப்பினரெனில் 6000 ரூபா அளவில் இருப்பதாயின் அக்குடும்பம் சமுர்த்தி நிவாரணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு தகுதியுள்ளதாகக் கருதப்படும். இவ்வாறான குடும்பங்கள் 2019 ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்கள். ஆனால் எத்தனை பேர் முறையாக அதனை நிறைவேற்றியிருந்தார்கள் என்பது தெரியவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் தலவாக்கலை சமுர்த்தி வங்கிக் கிளை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 15 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான சமுர்த்தி உதவித்தொகை பெறும் குடும்பங்களுக்கான கூப்பன் விநியோகத்திட்டத்தில் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2033 பேர் சமுர்த்தி கூப்பன் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்த போதிலும் அவர்களில் 353 பேருக்கு மாத்திரமே கூப்பன்கள் வழங்குவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் எஞ்சிய 1680 பேரின் நிலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம், 1120 பேர் சமுர்த்திக் கூப்பன்களுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் அக்குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே இவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவர் சமுர்த்திப் பயனாளியாக அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் பின்வரும் தொகையிகை நிவாரணமாகப் பெற்றுக்கொள்ள முடியும். 4 அல்லது அதிலும் மேற்பட்ட அங்கத்தவரை கொண்ட குடும்பத்துக்கு 3500 ரூபாவும் 3 அங்கத்தவரை கொண்ட குடும்பத்துக்கு 1500 ரூபாவும் வலுவூட்டப்பட்ட குடும்பங்களுக்கு 420 ரூபாவும் மாதாந்தம் வழங்கப்படும்.

அதேவேளை சமுர்த்திப் பயனாளிகளுக்கு அவர்களுக்கு வழங்கப்படும் முழுத்தொகையும் கிடைக்கப்பெறுவதில்லையென்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. (உதாரணமாக 2000 ரூபா அரசாங்கத்தால் வழங்கப்பட்டாலும் பயனாளிகளுக்கு 1900 ரூபாவே சென்றடையும் நிலை காணப்படல்.) ஆனால் நிவாரணக் கொடுப்பனவு வழங்கும் முறையில் ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டே கொடுப்பனவு வழங்கப்படுகிறது. நிவாரணக் கொடுப்பனவு பிரிந்து செல்கின்ற விதத்தினை அட்டவணை 02 இன் மூலம் அறிந்து கொள்ளமுடியும். நிவாரணம் கிடைக்கப்பெறாத ஆட்கள் பொதுவாக கவனத்தில் கொள்ளப்படுவதுடன் பெருந்தோட்டப்பிரதேச மக்கள் அல்லது அவ்வாறானல்லாதவர்கள் எனக் குழுக்களாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தால் பிரிக்கப்படுவதில்லையெனவும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

2016 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இலங்கையின் வறுமைச்சுட்டெண் 4இ1 வீதமாக காணப்படுகையில் நகர்புறங்களில் 1.9 வீதமாகவும் கிராமப்புறங்களில் 4.3 வீதமாகவும் தோட்டப்புறங்களில் 8.8 வீதமாகவும் காணப்படுகிறது. நாட்டில் அதிகமான வறுமையாளர்கள் தோட்டப்புறங்களில் இருப்பதாகக் கூறப்படுவதற்கு அவர்களின் வருமானம் பிரதான காரணமாக இருக்கலாம். எனவே வருமானப்பற்றாக்குறையை ஓரளவுக்கு குறைக்கும் வகையிலாவது சமுர்த்திக் கொடுப்பனவுகள் தகுதியானவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும்.

ஏதேனும் சமுர்த்தி நிவாரணம் ஒன்றினைக் கோருவதாயின் அக்கோரிக்கைகளுக்குரிய பிரிவுப் பொறுப்புக்களில் செயற்படும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலகத்திற்கு, மாவட்ட செயலகத்திற்கு இல்லது திணைக்களத் தலைமை காரியாலயத்திற்கு சமர்ப்பிக்க முடியும். அதற்கமைய அந்த விண்ணப்பம் தொடர்பில் கவனத்திற்கொண்டு பிரதேச செயலாளரின் சிபாரிசின் பிரகாரம் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் தலைமையதிபதியின் அங்கீகாரத்தின்படி சமுர்த்தி நிவாரணத்தினை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - தினக்குரல்

தேர்தல் ஆணைக்குழுவே! ஊடக அறிக்கைகள் தமிழில் ஏன் இல்லை?


கடந்த  செப்டம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து இன்று ஒக்டோபர்  8ஆம் திகதி வரையில் மொத்தம் 24 ஊடக அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்தல் திணைக்களத்தால் மூன்று மொழிகளிலும் இவை வெளியிடப்படுவதாக கூறப்பட்டபோதும் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் சகல ஊடக அறிவித்தல்களும் வெளியிடப்பட்டுள்ள போதும் தமிழில் அத்தனையும் வெளியிடப்படுவதில்லை. இது மிகப் பெரும் அநீதி. 

இது வரை வெளியான ஊடக அறிக்கைகளில் 5 அறிக்கைகள் இது வரை தமிழில் இல்லை.ஊடக அறிக்கைகளின் இலக்கங்கள் MR/25, MR/23, MR/16, MR/09, MR/02 ஆகியனவே அந்த அறிக்கைகள். தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் கூட தரவிறக்கும் இணைப்பில் தமிழ் மொழி அறிவித்தல்களுக்குப் பதிலாக சிங்களத்திலும், ஆங்கிலத்திலுமே அந்த ஐந்து அறிக்கைகளும் உள்ளன. இதில் நேற்று ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்மனுத் தாக்கல் செய்தவர்களின் பட்டியல் கூட தமிழில் மட்டும் கிடையாது.


நேற்று தேர்தல் ஆணையாளர் வேட்பாளர்கள் மத்தியில் ஆற்றிய உரையில் பல்வேறு பரிந்துரைகளைச் செய்திருந்தார். அதில் இனப் பாரபட்சம் காட்டக்கூடாது என்பதும் அடங்கும். ஆனால் தேர்தல் ஆணைக்குழுவே இது போன்ற மொழிப் பாரபட்சங்களை மீறி வருகிறது. இதை எவரும் கண்டு கொள்ள மாட்டார்கள், எவரும் முறையிட மாட்டார்கள், ஊடகங்கள் கூட கண்டுகொள்ளாது என்கிற அலாதி நம்பிக்கையின் வெளிப்பாடு தான் இவை.

தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவித்தல்கள், செய்திகள், ஆவணங்களில் உள்ள மொழிப் பாரபட்சங்கள் பலவற்றை அவதானிக்க முடிகிறது. அரசகரும மொழிகள் அமைச்சும் அதற்கென்று ஒரு தமிழ் அமைச்சரும் இருந்தும் கூட இது போன்ற மொழிப் பாரபட்சங்களை கண்காணித்து சரிசெய்யும் பொறிமுறை இல்லாதது நாட்டின் அவலம்.

நாட்டு மக்கள் தம்மை ஆள்பவர்களைத் தீர்மானிக்கின்ற தேர்தல்கள் பற்றி கூட பாரபட்சமன்றி விபரங்களை அறியும் உரிமை மறுக்கப்படுவது என்பது மிகப்பெரும் ஜனநாயகக் கோளாறு.

இவற்றைப் பற்றி எந்த தமிழ் ஊடகங்களும் உரிமைப் பிரச்சினையை எழுப்பாமல் இருப்பது வியப்பாக உள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து அறிக்கைகளும், அறிவித்தல்களும், செய்திகளும் தமிழிலும் கிடைப்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவும், அரசகரும மொழிகள் அமைச்சும், அரச நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும்.

பெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்

இன்று நோர்வேயின் பிரதான ஏழு கட்சிகளில் ஐந்து கட்சிகளின் தலைவர்கள் பெண்கள் என்கிற செய்தி வியப்பாக இருக்கலாம். ஆனால் அதன் பின்னால் பெண்களின் பெரும் போராட்ட வரலாறு உள்ளார்ந்திருக்கிறது.

2013 ஆம் ஆண்டு “பெண்களுக்கு வாக்குரிமை” அளிக்கப்பட்டு 100 ஆண்டுகளைக் கொண்டாடியது. ஆம் ஏறத்தாழ 30 வருட அயராத போராட்டத்தின் விளைவாக நோர்வே பெண்கள் 1913 ஆம் ஆண்டே (20.06.2013) பெண்களுக்கும் ஆண்களுக்கு சமமான வாக்குரிமையைப் பெற்றுவிட்டார்கள்.

பெண்கள் வாக்குரிமைச் சங்கம்
தமக்கும் ஆண்களுக்கு நிகராக வாக்குரிமை வேண்டும் என்கிற கோரிக்கையை முதன் முதலில் 1880இலேயே வைத்துவிட்டார்கள் நோர்வே பெண்கள். நோர்வேயின் முதலாவது பெண்கள் அமைப்பு “நோர்வே பெண்கள் சங்கம்” (Norsk kvinnesaksforening - NKF) 1884இல் உருவாக்கப்பட்டது. ஜீனா குரோக் (Gina Krog), ஹாக்பார்ட் பார்னர் (Hagbard Berner), ஆகிய இரு பெண்கள் இதனை ஆரம்பித்தனர். பார்னர் இதன் தலைவராக செயற்பட்டார்.

அதன் விளைவாக 1885ஆம் ஆண்டு பெண்கள் வாக்குரிமைச் சங்கம் (Kvinnestemmerettsforeningen -KSF) நோர்வேயில் தொடக்கப்பட்டது. இதன் தலைவியாக ஜீனா குரோக் (Gina Krog) தெரிவானார். இந்த சங்கத்தில் 1902 ஆம் ஆண்டளவில் மொத்தம் 357 உறுப்பினர்கள் அங்கம் வகித்திருக்கிறார்கள்.

1898ஆம் ஆண்டு 25 வயதுக்கு மேற்பட்ட வசதிபடைத்த ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 1901ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைகளில் வாக்கிடுவதற்கு பெண்கள் உரிமை பெற்றிருந்தாலும் அது வரி செலுத்தும் பெண்களுக்கும், வரிசெலுத்தும் ஆணை திருமணம் புரிந்தவருக்கும் மட்டுமே வாக்களிப்பதற்கும், வேட்பாளராக போட்டியிடுவதற்கும் உரிமை பெற்றிருந்தார்கள்.

வாக்குரிமைப் போராட்டத்தின் வெற்றி
1910 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலிகளில் சர்வஜன வாக்குரிமை சகல பெண்களுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் 1913 இல் தான் பொதுத் தேர்தலிலும் அனைத்துப் பெண்களும் ஆண்களுக்கு சமமாக வாக்களிக்கும் உரிமையைப் பெற்றார்கள். அதன்படி 1915 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தான் பெண்கள் அனைவரும் முதன் முதலில் வாக்களித்தார்கள்.

நோர்வேஜிய பாராளுமன்றத்தின் முதலாவது பெண் பிரதிநிதியாக அன்னா குரோக் தெரிவானார் (1911இல்).

அன்னா
ஆரம்பத்தில் பெண்கள் வாக்களிப்பதிலும், வாக்குரிமையைப் பெறுவதிலும், அரசியலில் பங்குபெறுவதற்கும் அக்கறை காட்டவில்லை. சில பெண்கள் வாக்குரிமையை எதிர்க்கவும் செய்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் நாடளாவிய ரீதியில் பெண்களுக்கு வாக்குரிமை ஏன் அவசியம், அரசியலில் பங்குபற்றுவதன் முக்கியத்துவம் என்ன என்பது பற்றி அவர்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை பெண்கள் வாக்குரிமைச் சங்கம் முன்னெடுத்தது. ஜீனா குரோக், அன்னா ரோக்ஸ்தாத் (Anna Rogstad) ஆகியோர் பல கூட்டங்களை நடத்தி விரிவுரையாற்றினர்.

1897ஆம் ஆண்டு இந்த சங்கம் பிளவடைந்தது. அதற்கான காரணம் ஆணாதிக்க, தேசியவாத, வலதுசாரிகள் பெண்களுக்கு வாக்குரிமையளிப்பதை எதிர்த்து நின்றபோது பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தின் பிரதித் தலைவியாக இருந்த அன்னா ரோக்ஸ்தாத் வரையறுக்கப்பட்ட வாக்குரிமைக்கு இணங்கி சமரசம் செய்துகொண்டார். அதாவது 800 குறோணர்களுக்கு அதிகமான வருமானமாகக் கொண்ட நகர்ப்புறத்தைச் சேர்ந்த பெண்களுக்கும், 500 குரோனர்கர்களுக்கு அதிகமான வருமானத்தைப் பெறுகிற கிராமப்புற பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்கலாம் என்பதற்கு அவர் இணங்கினார்.   இறுதியில் முழு அளவிலான சமத்துவமான வாக்குரிமைக்காக போராடிய அச்சங்கத்தின் தலைவி ஜீனா குரோக் தலைமையிலான குழு வெளியேறியது.
ஜீனா
ஜீனா குரோக் தொடர்ந்தும் “நோர்வே பெண்கள் சங்கத்தின்” தலைவியாக செயற்பட்டுக்கொண்டிருந்தார். அந்த சங்கம் பின்னர் நோர்வே தொழிற் கட்சியின் பெண்கள் பிரிவுடன் சேர்ந்து தொழிற்படத் தொடங்கியது. அச்சங்கம் அன்றைய “வெள்ளையின அடிமை வர்த்தகத்தை” எதிர்த்து காத்திரமான பங்கை ஆற்றியிருந்தது. 1904 இல் “பெண்களின் வாக்குரிமைக்கான தேசிய சங்கம்” (Norske Kvinders Nasjonalråd) என்கிற சங்கத்தை ஆரம்பித்து தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்தார் ஜீனா குரோக். இந்த அமைப்பு பல்வேறு பெண்கள் அமைப்புகளை இணைத்த ஒரு வலையமைப்பாக இயக்கப்பட்டது.

1890 ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை கோரி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டபோது அந்த கோரிக்கை 70க்கு 44 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. குறிப்பாக சக வலதுசாரி தேசியவாத கட்சிகளும் எதிர்த்து வாக்களித்து தோற்கடிக்கச் செய்தன. உலகெங்கினும் சகல நாடுகளிலும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது என்று விடாப்படியாக எதிர்த்திருப்பவர்கள் வலதுசாரி தேசியவாத சக்திகள் தான். மாறாக வாக்குரிமைக்காக போராடிய சக்திகள் அனைத்தும் இடதுசாரிக் கட்சிகள் தான். இலங்கையிலும் அது தான் நடந்தது என்பதை இந்த இடத்தில் நினைவுகொள்ள வேண்டும்.

நோர்வேயில் வாக்களிக்கும் வயது 18 வயதாக ஆக்கப்பட்டது 1978 இல் தான். அதுபோல மூன்று வருடங்களுக்கு மேல் நோர்வேயில் வாழ்ந்தவர்களுக்கு (அவர்கள் குடியுரிமை பெறாவிட்டாலும்) வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் என்கிற நடைமுறையை 1983 இல் இருந்து கொண்டுவந்தார்கள்.
நோர்வே பாராளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்தவிதம்
பெண்களின் ஆட்சி
உலகில் முதன் முதலாக 1893இல் பெண்களுக்கு சர்வஜன வாக்குரிமையை பெற்றுக்கொடுத்தது நியூசீலாந்து.நோர்வே பெண்கள் வாக்குரிமையைப் போராடிப் பெற்ற காலத்தில் அமெரிக்கா கூட பெண்களுக்கு வாக்குரிமை அளித்திருக்கவில்லை. அமெரிக்காவில் வாழ்ந்த வாழ்ந்த நோர்வேஜியப் பெண்கள்; 1913ஆம் ஆண்டு நோர்வேயில் கிடைத்ததைப் போல அமெரிக்காவிலும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவேண்டும் என்று பெண்களின் வீதியில் இறங்கிப் போராடினார்கள். அமெரிக்காவில் 1920இல் தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

நோர்வேயில் முதலாவது பெண் அமைச்சராக 1945ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டவர் கிறிஸ்டின் ஹன்ஸ்டீன். அவர் நோர்வே கொம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். முதலாவது தடவையாக 1974 இல் ஒரு கட்சியின் தலைவியாக தெரிவு செய்யப்பட்ட பெண் ஏவா கொல்ஸ்தாத். நோர்வேயின் முதலாவது பெண் பிரதமராக 1981இல் ப்ருன்ட்லாந் (Gro Harlem Brundtland) தெரிவு செய்யபட்டார். மூன்று தடவைகள் பிரதமராக பதவி வகித்தவர் அவர். அவரது ஆட்சியின் போது அமைச்சரவையில் 18பேரில் 8 பேர் பெண் அமைச்சர்களாக இயங்கினார்கள். பின்னர் ப்ருன்ட்லாந் உலக சுகாதார அமைப்பின் தலைவியாக பதவி வகித்தார். 2011 ஆம் ஆண்டு யூலை 22 அன்று வலதுசாரிப் பயங்கரவாத தாக்குதலில் பிரதானமாக குறி வைக்கப்பட்டவர் ப்ருன்ட்லாந். சற்று தாமதமாக வந்ததால் அவர் அந்த படுகொலையில் இருந்து உயிர் தப்பினார்.
புடைசூழ வரும் அமைச்சர்களில் முன்னணியில் வருபவர்கள் : சீவ் ஜான்சன் - நிதி அமைச்சர் (முன்னிலை கட்சியின் தலைவி), ஆர்ன சூல்பார்க் – பிரதமர் (வலது கட்சியின் தலைவி), திரீன ஸ்கை கிரான்ட – கலாசார அமைச்சர் (தாராளவாத கட்சியின் தலைவி)
இன்றைய நோர்வேயில் பிரதமர் ஒரு பெண். தற்போதைய கூட்டரசாங்கத்தின் பிரதான மூன்று கட்சிகளின் தலைவர்களும் பெண்களே. 22 அமைச்சர்களில் 10 அமைச்சர்கள் பெண்கள்.  நிதி அமைச்சு, வெளியுறவு அமைச்சு, கல்வி அமைச்சு, கலாசார அமைச்சு ஆகிய முக்கிய அமைச்சுகள் பெண்களின் கைகளில். தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக் காலம் இது. கடந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சும் பெண்ணின் கையில் தான் இருந்தது. இன்றைய பாராளுமன்றத்தில் 41.1% வீதம் (69/169)பெண்கள் அங்கம் வகிக்கின்றனர்.

பல உள்ளூராட்சி சபைகளில் ஆண்களை விட பெண்களே அதிகமாகப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். பெண்களுக்கு அரசியல் தலைமையையும், ஆட்சி தலைமை கொடுக்கப்படுவதால் ஒரு நாடு எந்தளவு முன்னேற்றப் பாதையில் செல்லும் என்பதற்கு உலகின் சிறந்த உதாரணமாக நோர்வே திகழ்கிறது.

நன்றி - தினகரன்

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates